எதுவும் சிக்கவில்லை என்பதை விட எதுவும் கண்ணில் பதியவில்லை. ஒவ்வொன்றையும் கலைத்து போட்டு எதை எடுக்க என்று தெரியாமல் தேட கண்ணில் நீர் கட்டிவிட்டது.
“ப்ச், அழாத நிது. இந்த புருஷங்களுக்கே இந்த திமிர் தான். இதுல இன்னொருத்தி பின்னாடி சுத்தினான்னு தெரிஞ்சா இன்னும் கெத்தா இருப்பாங்க. அதுக்கு சான்ஸ் குடுக்கவே கூடாது…” என்று வேறு மனதிற்குள் பேசுவதாய் நினைத்தபடி புலம்பிக்கொண்டு கண்ணை துடைக்காமல் தேட எல்லாம் மங்கலாய் தெரிந்தது.
அத்தனை ஆசையாய் இருந்தாள் அண்ணனை, அவன் குடும்பத்தை பார்ப்பதற்கும், வீடு செல்வதற்கும்.
காலையில் ஸ்ரீதர் வேறு போன் செய்து அழைக்க வருவதாய் சொல்லியிருந்தான். தான் சொல்லும் பொழுது வந்தால் போதும் என திருமொழி கிளம்ப காத்திருந்தவளுக்கு மொத்தமாய் உடைந்து போனது.
“ப்ச், வீட்டுக்குள்ள இருக்க போட ஒரு ட்ரெஸ் கூட கிடைக்குதா?…” என்று அங்கேயே தலையில் கை வைத்து நின்றவள் முதுகில் கணவனின் பாரம்.
இடையை வளைத்து அணைத்தவன் தன் நெஞ்சோடு மனைவியை இறுக்கிக்கொள்ள இன்னுமே கோபம் தான் துளிர்விட்டது நிதர்ஷனாவிற்கு.
“ப்ச்…” என சலிப்புடன் விலக போக அவனின் இரு கைகளும் விலகவிடாமல் அவளை அணை கட்டியிருந்தது.
“நான் போகனும். விடுங்க…” என அவனின் கையை எடுக்க பார்க்க,
“அதுக்கு தான் ஷர்ட் தேடறேன்…” என மீண்டும் பழைய பல்லவியை அவன் படிக்க,
“உங்க ட்ரெஸ் எல்லாம் கட்டில்ல தானே எடுத்து வச்சிருக்கீங்க?…” என்ற கேள்வியில் சன்னமான புன்னகையுடன் தன் பக்கம் திருப்பினான் நிதர்ஷனாவை.
“அழுதா கூட நீ க்யூட் தான்…” என்றவன் அவளின் கண்களில் இதழ்களை ஒற்றி எடுத்து முகத்தில் ஊர்கோலம் வந்து மொழி வழியில் இளைப்பாறி விலகி,
“போய்ட்டு வா…” என்று மெல்லிய குரலில் சொல்லி செல்ல எங்கே காதில் விழுந்தது நிதர்ஷனாவிற்கு.
கண்களை மூடியபடி நின்றவளை விட்டு விலக முடியாமல் மீண்டும் அவளை இறுக்கமாய் அணைத்து விடுத்தவன் வேகமாய் கிளம்பி சென்றுவிட்டான் கல்லூரிக்கு.
நிதர்ஷனா தான் அறையிலேயே அப்படியே துவண்டு அமர்ந்துவிட்டாள். அவன் கிளம்ப சொல்லியது காதில் விழாமல் அண்ணன் கேட்டால் என்ன சொல்வது என்று யோசிக்க ஸ்ரீதரும் அழைத்துவிட்டான்.
“மணி என்னாகுது, நீ கால் பண்ணுவன்னு எவ்வளோ நேரம் வெய்ட் பண்ண? கிளம்பி வரட்டுமா?….” என ஸ்ரீதர் கேட்கவும்,
“இப்ப என்ன ண்ணா? வேலை. அவங்க கொஞ்சம் முன்னாடி தான் கிளம்பினாங்க. நானே கூப்பிடறேன். இன்னும் அத்தைக்கிட்ட சொல்லலை…” என்றதும் ஸ்ரீதர் அமைதியானான்.
“சரி, இல்லைன்னா நாங்க உன்னை பார்க்க வர மாதிரி வந்துட்டு கூப்பிடறோம்…” என்று மெர்லின் சொல்ல,
“ஹப்பா அம்மா வீட்டுக்கு போக இத்தனை அக்கப்போரா?…” என அப்போதே கடுப்பாகிவிட்டது.
“திரும்பவும் இந்த சேர் கிட்ட பர்மிஷன் வாங்கனும். ஹப்பா கண்ணை கட்டுதே…” என புலம்பியபடி கணவனுக்கு அழைக்க அவன் கல்லூரியை பார்வையிட சென்றிருந்தான்.
நிதர்ஷனா அழைத்ததும் திரும்பவும் என்ன என்ற யோசனையும் காலை அவள் பேசியதும் ஞாபகம் வர புன்சிரிப்புடன் எதிர்பட்டவர்களுக்கு தலையசைத்து நடந்துகொண்டே அழைப்பை எடுத்தான்.
“ஹ்ம்ம், சொல்லு…” என கேட்க,
“அதான் சொன்னேனே. அம்மா வீடு…” என்று முதலில் இருந்து ஆரம்பித்தாள் நிதர்ஷனா.
“ஆமா உங்கம்மா வீடு. அதுக்கென்ன?…” என மெல்லிய குரலில் அவன் பேச,
“ப்ளீஸ் அண்ணா கால் பன்றாங்க. என்னை கூட்டிட்டு போக. இனிமே சொன்னா நான் உங்ககிட்ட உடனே சொல்லிடறேன். சரியா?…” என கொஞ்சலாக சொல்லவும் திருமொழி முகத்தில் இளநகை மின்னியது.
“அதான் போக சொன்னேன்ல தர்ஷி…” என்றவன் பார்வையும் நடையும் எப்போதும் போலவே இருக்க கவனமும் கூடியது.
‘இப்படி இந்தநேரம் அழைத்து சிணுங்கிக்கொண்டு பேசினால் தானும் தான் என்ன செய்வது?’ என அழைப்பையும் துண்டிக்காமல் நடந்தான்.
“அப்படியா? எப்போ? எனக்கு கேட்கலை?…” நிதர்ஷனாவின் துள்ளல் குரலில் இங்கே புருவத்தை விரலால் கீறியபடி,
“நல்லா யோசி. நான் கிளம்பறதுக்கு முன்னாடி சொன்னேன்…” என்றவன் கண்கள் சிரிப்பில் சுருங்கி இருந்தது.
“சொன்னீங்களா?…” என அப்போதும் நம்ப முடியாமல் கேட்க,
“ஆமா, ஆமா. போய்ட்டு வான்னு சொல்லிட்டேன். போதுமா? கிளம்பு. இப்ப போனை வைம்மா…” என்று வைத்த பின்னர் தான் மூச்சே விடமுடிந்தது.
திருமொழியின் முகத்தின் இளக்கம் கண்களில் தெரிய அதன் தாக்கம் இதழ்களில் மெல்லிய சிரிப்பை நெளியவிட்டிருந்தது.
அதனுடனே அன்றைய நாள் முழுவதும் அதன் இதம் தொலையாமல் வலம் வந்தான் திருமொழி.
மாலை வீடு வருவதற்குள் அன்றைய நாட்களை எல்லாம் குறுஞ்செய்தியாக நிதர்ஷனா அவனுக்கு அனுப்பி இருக்க,
“படுத்தறாளே. பேசாம இருந்தா கூட விட்டுடலாம் போல…” என அவள் மீதான தேடலில் தலையை பிடித்துக்கொண்டான் புன்னகையுடன்.
மாலை வீடு வந்ததும் அவளில்லா அறை. கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. எத்தனை அழுகை, எவ்வளவு புலம்பல்?
‘கெத்து காமிப்பேனாம், வா வச்சிக்கறேன் உன்னை’ என அறையில் இல்லாத அவளுடன் ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து பேசிக்கொண்டிருந்தவனிடம் வாகாய் தலையை கொடுத்து மாட்டிக்கொண்டாள் போன் செய்து.
மறுநாள் மாலை சென்று அழைத்துகொள்ளலாம் என பார்த்தால் அன்றிரவு இருக்கட்டும் கேக் வெட்ட வேண்டும், தங்கை இருக்கட்டும் என்று அண்ணன்கள் இருவரும் கேட்டுக்கொள்ள,
“எனக்குன்னே வருவீங்களாடா?…” என பல்லை கடித்தவன் வெளியில் சொல்லிவிட முடியாதே?
“வொய் நாட்?…” என இலகுவாய் சொல்லிவிட்டான் திருமொழி.
“நீங்களும் வாங்க, மிட்நைட்ல செம்ம ஜாலியா இருக்கும்…” என நிதர்ஷனா அழைக்க,
“இல்லை நான் மார்னிங் வரேன்…” என சொல்ல மனைவியின் முகத்தில் ஏமாற்றம் நிரம்பியது.
“ஹ்ம்ம், ஓகே…” என்றவள் அவனை வற்புறுத்தவில்லை.
தாய் வீடு வந்தவள் பிரகாஷ் வரவும் அவனை பார்த்துவிட்டு காலை கிளம்பிவிட்டு இரவு கேக் வெட்டும் பொழுது வரலாம் என நிதர்ஷனா நினைத்திருக்க பிரகாஷ் வந்த பின்னர் எங்கும் நகர முடியவில்லை.
“உன் புருஷன்கிட்ட நான் சொல்லிக்கறேன். அடுத்த லீவ் எப்ப வருமோ? ரெண்டு நாள் இருங்க இருக்கமாட்டியா?…” என்று சொல்லி திருமொழியிடமும் பேசிவிட அவனே மறுக்கவில்லை எனும் பொழுது தான் என்ன செய்வது?
பன்னிரெண்டு மணி நெருங்க இன்னும் அரைமணி நேரமிருக்க முதல் நாளை போல கணவனுக்கு செய்தி அனுப்பி பார்க்க எந்த பதிலும் வரவில்லை.
அவன் பார்ப்பது மட்டுமே தெரிந்தது. பார்த்தும் பதில் வராததில் நிதர்ஷனா முகம் கலங்கி போக பிரகாஷை அழைத்தவள்,
“ண்ணா கேக் கட் பண்ணி முடிக்கவும் என்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயேன்…” என கேட்க,
“அப்போ இது யார் வீடாம்? ம்மீ சரஸு, உம்மவள பார்த்தியா?…” என பிரகாஷ் கத்த,
“கொலை கேஸ்ல என்னை உள்ள போக வச்சிடாதடா தடியா…” என அண்ணனின் கழுத்தை பிடித்துவிட்டாள் நிதர்ஷனா.
“சரி, சரி சொல்லலை. விடு…” என கழுத்தை விடுத்துக்கொண்டவன்,
“கொண்டுபோய் விடறேன். அதுக்குன்னு முகத்தை இப்படி வைக்காத. சிரிச்ச மாதிரி இரு…” என்று அவளின் தலையில் கொட்டியவன்,
“நீ தான பொண்ணு பார்க்கற அன்னைக்கு உன் புருஷன்கிட்ட பேசமாட்டேன், கோர்த்து விட்டுடாதன்னு என் கால்ல விழுந்த?…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,
“அட பைத்தியமே. இதுக்கு அழுவாங்களாக்கும்? விடு கணேசன் கண்ணுல மண்ணை தூவிட்டு உன்னை உன் புருஷனோட சேர்த்து வைக்கவேண்டியது இந்த அண்ணனோட கடமை. என் கண்ணையே அவர்கிட்ட ஒப்படைக்கிறேன். சரிதான…” என பேச கண்ணீரை துடைத்துக்கொண்டு நிதர்ஷனா புன்னகைத்தாள்.
“எனக்கு எங்கடா ஒரு டயலாக்கும் இல்லை. மூத்தவன் நான் ஒருத்தன் இருக்கேன்…” என ஸ்ரீதர் வர,
“அதானே என் க்ரைம் பாட்னர் நீ இல்லாமலா?…” என அண்ணனிடம் ஹைபை அடித்துக்கொண்டான் பிரகாஷ்.
“கூட்டுக்கு நம்ம சரஸு ம்மீயை சேர்த்துப்போமா?…” என்று ஸ்ரீதர் கேட்க,
“ஏன் மேனேஜர் தொந்தி கணபதி மட்டும் என்ன பாவம் பண்ணினார்? அவரையும் ஒரு தோள்ல தூக்கிட்டு போவோமே? காசா? பணமா?…” என மாற்றி மாற்றி அரட்டையில் இருக்க நிதர்ஷனாவின் போனில் திருமொழியின் அழைப்பு.
“உங்க அவர்…” என ஸ்ரீதர் ராகம் பாட,
“அப்படிலாம் சொல்லப்டாது. என்னானாலும் தங்கச்சி மாப்பிள்ளை இல்லையா?…” என்றவன் அடுத்து வாயை திறக்கும் முன்,
“போங்கடா…” என்று இருவரின் முதுகிலும் அடி வைத்து விலகி வந்தவள்,
“வேலையா இருந்தீங்களா? நான் மெசேஜ் பண்ணிட்டே இருந்தேன். நீங்க பார்த்துட்டு கூப்பிடலையா? அதான் பிஸியோன்னு நினைச்சேன்…” என்றாள் தன் அறைக்கு வந்து.
“வேலை எதுவும் இல்லை. சும்மா தான் இருந்தேன். பதில் அனுப்ப தோணலை…” என்று அவளை வெறுப்பேற்ற நிதர்ஷனாவுக்கு ஏன் தான் கேட்டோமோ என்றானது.
திருமொழிக்கு மனைவியின் முகம் இப்போது எப்படி இருக்கும் என நினைக்கவே அத்தனை சிரிப்பு.
“தெரியாம கேட்டுட்டேன். இனி மெசேஜ் பண்ணலை. வைக்கறேன்…” என சொல்லியதும் உடல் குலுங்க சிரித்தவன்,
“ஹோய் தர்ஷி, கிளம்பி வெளில வா…” என்று சொல்ல,
“என்ன?…” என்றாள் திகைத்து.
“வெளில வான்னு சொன்னேன். காதுல விழுந்துச்சா? இல்ல இன்னும் சத்தமா சொல்லவா?…” என ரகசிய குரலில் கேட்கவும் அறையிலிருந்து வெளியே வர ஸ்ரீதரின் மகனும் அத்தையை பின் தொடர போக,
“ஷிவ் குட்டி. இப்ப வேணாம்டா…” என அண்ணன் மகனை அள்ளிக்கொண்டான் பிரகாஷ்.
வீட்டை திறந்து வெளியே வந்தவள் கேட்டிலிருந்து எட்டி பார்க்க சற்று தள்ளி காருக்குள் அமர்ந்திருந்தான் திருமொழி.
பார்த்ததுமே வேக எட்டுக்களுடன் காரை நெருங்கியவள் கதவை திறந்துகொண்டு அவனருகே அமர்ந்து கைகளை கோர்த்துக்கொள்ள கோர்த்த விரல்கள் ஒவ்வொன்றிக்கும் தனித்தனியே முத்தங்கள் பதித்தான் திருமொழி.
“இப்படி தேடி வரவழைக்கிற நீ. உன்னை என்ன செய்யலாம்?…” என்று அதட்டலும், குழைவுமாய் கேட்க நிதர்ஷனாவின் விழிகளில் சந்தோஷ கண்ணீர் புன்னகையுடன்.