“தூக்கம் வருது தர்ஷி. ரொம்ப டயர்ட்…” என கண்களுக்கு மேல் கையை வைத்தவன் உறங்க முற்பட தானும் அவனருகில் வந்துவிட்டாள்.
அவள் உடை மாற்றவில்லை என்பதையும் கவனியாமல் சற்று நேரத்தில் உறங்கி போனான் திருமொழி.
நன்றாக திரும்பி படுத்தவனின் தலையிலிருந்து தலையணை நழுவ உறக்கம் கலைந்தது அவனுக்கு.
“ப்ச், எவ்வளோ உயரம்?…” என அந்த புதிய தலையணையை எடுத்து மீண்டும் தலைக்கு வைக்க போக நிதர்ஷனாவின் தலையணைக்கு கீழ் அந்த கையடக்கமான சின்னஞ்சிறிய டைரி.
நிதர்ஷனாவை பார்க்க அவளிடம் அசைவில்லை. அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம். அதிலும் தனது இடது கையை பிடித்தபடி குழந்தையாய் அவள் உறங்கும் அழகை கண்டவன் முகத்தில் கோடி பூக்கள்.
அடுத்து எங்கே உறங்க? தலையணையை நிமிர்த்தி வைத்தவன் சாய்ந்து அமர்ந்துகொண்டு டைரியை எடுத்து பிரித்தான்.
“எடுத்தத எடுத்த இடத்துலயே வைங்கடா அப்பரசண்டிங்களா. உங்களை எந்த நேரத்துல ம்மீ சரஸு பெத்துச்சோ?…” என முதல் பக்கத்திலையே மனைவியின் கைவண்ணம்.
படித்ததும் குபீரென பொங்கிய சிரிப்பை இதழ் கடித்து அடக்கிக்கொண்டவனுக்கு உள்ளே படிக்கலாமா வேண்டாமா என்றொரு யோசனை.
ஒரு நொடிதான். உடனே அதனை மாற்றிக்கொண்டவன் அடுத்த பக்கத்தை பிரித்தான்.
சின்ன சின்னதாய் அவளின் புகைப்படங்களை எல்லாம் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஒட்டி வைத்திருந்தாள்.
எல்லாமே சிறுவயதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம். குறும்பு கூத்தாடும் விழிகளுடன் இதழில் எப்போதும் போல புன்னகை.
“நான் செம்ம க்யூட்ல. ஆனா அண்ணனுங்களுக்கு எப்பவும் குட்டிச்சாத்தான் நான் தான். எனக்கும் அது தான் பிடிக்கும்…” என எழுதியிருந்தாள்.
அடுத்த பக்கத்தில் அண்ணன்கள் இருவரையும் அலங்கோலமாய் வரைந்து தன்னை மட்டும் அழகாய் வரைந்து,
“இந்த அழகு பொண்ணின் அண்ணனுங்களா இவனுங்க? விதி விளையாடிருச்சுப்பா….” என எழுத்துக்கள் புன்னகையை பற்ற வைத்தது.
திரும்பி நிதர்ஷனாவை பார்க்க அப்பாவி களை அவள் முகத்தில். இத்தனை சேட்டை செய்வாள் என யாருமே நம்ப முடியாத முகம்.
அதன்பின் அடுத்தடுத்த பக்கங்களில் எல்லாம் வீட்டினர் அவளுக்கு கொடுக்கும் கைசெலவுக்கான பண வரவுகள்.
“இந்ததடவை வரப்போ இந்த பிரகாஷ் அண்ணா என்கிட்ட அவசரத்துக்கு ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு திருப்பி தரமாட்டேன்னு பாடா படுத்திட்டான். அப்பாக்கிட்ட சொல்லிக்குடுத்துட்டேன். நல்லா வாங்கி கட்டிட்டு பணத்தை குடுத்தான். யார்க்கிட்ட?…” என்று எழுதியிருந்தாள்.
“அடிப்பாவி…” என திருமொழி வாயில் கைவைத்துவிட்டான்.
ஒவ்வொரு பைசாவையும் எழுதி வைத்திருந்தாள். சேரும் பணத்திலிருந்து வீட்டினருக்கு அவளே பரிசு பொருட்கள் வாங்கி தருவதில் அத்தனை சந்தோஷம்.
அதை வேறு குறிப்பெடுத்து வைத்திருந்தாள் நிதர்ஷனா. ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என எழுதி வைத்து அதனை வாங்கி கொடுத்தாகிவிட்டதா என அருகில் டிக் மார்க்.
“கடைக்கு போயிருந்தோம். இந்த மூத்தவனுக்கு அறிவே இல்லை. அவனுக்கு பிடிச்ச ஷர்ட்டை எடுத்துட்டு அண்ணி வேற ஷர்ட் காமிச்சு எடுக்கவும் சரின்னு வந்துட்டான். ஓகே, அடுத்த பர்த்டேக்கு அவனுக்கு அதுதான் வாங்கி தருவேன்…”
இப்படி ஒவ்வொன்றையும் எழுதி வைத்திருந்தாள் அவள். எத்தனை கலகலப்பாக இருந்ததோ அத்தனை கண்ணீரும் அதில் இருந்தது.
“பிரகாஷ் அண்ணாவுக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்காம். அவங்களுக்கு எப்படியாச்சும் இந்த பிசாசை பிடிச்சிடனும். நானும், பெரியண்ணாவும் பெட் கட்டியிருக்கோம். பெட்ல நான் ஜெயிச்சா ம்மீ அப்பாக்கிட்ட பேசி எப்படியாச்சும் கல்யாணத்தை அரேஞ்ச் பண்ண வச்சிடனும்…”
“அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை. சட்டுன்னு ஒரு நிமிஷம் என் வாழ்க்கையில எதுவுமே இல்லைன்ற மாதிரி போயிருச்சு. அம்மா இல்லைன்னா என்னாவேன்? இந்த ம்மீ ரொம்ப பயம் காட்டிட்டா. அதுக்கு பனிஷ்மென்ட் தான் உப்பு, உரைப்பில்லாம சாப்பாடு. அனுபவிக்கட்டும். ஆனா பாவம்ல…”
ஒவ்வொன்றும் மனைவியின் ஒவ்வொரு நேர பரிமாணங்கள். படிக்க படிக்க தீரவில்லை திருமொழிக்கு.
பக்கங்களை திருப்பிக்கொண்டே வந்தவன் அடுத்ததாக அவள் எழுதியதில் விழிகள் குவிந்து சிவந்தது.
“இப்படி திரும்பவும் சேர்மன் வீட்டுல பொண்ணு கேட்டு வருவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. ஏற்கனவே பேஸ்மட்டம் கடகடன்னு ஆடிட்டிருக்கு இந்த சின்ன பிசாசு லேப்டாப்பை கொண்டுவந்து குடுத்துட்டு போய்ட்டான். நடுங்கி போய்ட்டேன். விதி வலியதுன்னு சொல்லுவாங்களே? அது இதான் போல?…” என்றிருந்தாள் அதில்.
“மோதிரம் வாங்க வந்திருந்தாங்க சேர்மன். அதுவரைக்கும் இந்த கல்யாணம் சரியா வருமான்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா அப்போ தான் அவர் கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னேன்னு சொல்லும் போது ஒருமாதிரி சுருக்குன்னு வலிச்சிருச்சு. என்னை பிடிக்கலையா அவங்களுக்கு?…”
“எனக்கு பிடிச்சிருச்சு. ஆனா பயமா இருக்கே. என்ன செய்யறதாம்?…” என எழுதி வைத்திருக்க ஒவ்வொன்றும் திருமொழியை வசியம் செய்துகொண்டே இருந்தது.
“சேர்மன் நீங்க ரொம்ப பேசமாட்டீங்கன்னு சொன்னாங்க. ஆனா ரொம்ப பேசறீங்க போங்க…” என எழுதி கீழே, ‘நின் மொழி என் மொழி’ என இதயங்களுடன் வரையப்பட்டிருந்தது.
அவர்கள் திருமணத்திற்கு பின் பெரிதாய் அவள் எழுதவில்லை. ஆனால் ஆங்காங்கே மட்டும் எழுதியிருந்தாள்.
“என்ன காரியம் பண்ணீட்டீங்க சேர்மன்? இன்னும் ஒரு எக்ஸாம். அச்சோ. ஆனாலும் பிடிக்குதே…” என விட்டு விட்டு எழுதி இருக்க அவள் விடுபட்ட இடங்களை அவனே நிரப்பிக்கொண்டான்.
“இங்க ஒரு விஷயம் எழுதனும். ஆனா அதை எழுதி என்னோட வாழ்க்கைக்குள்ள எழுத்தா கூட அவங்க வரதை நான் விரும்பலை. கோ கோ அவே டெவில்…” என எழுதியிருக்க அது மிருதுளாவை பற்றி என்று புரிந்துபோனது திருமொழிக்கு.
“இந்த சேர்மன் கூட தனியா இருக்கவே முடியலை. பதில் சொல்ல முடியுதா? பேச முடியுதா? சட்டுன்னு எதாச்சும் கேட்க முடியுதா? இதென்னடி நிது உனக்கு வந்த சோதனை?…” என்றிருந்தாள் இறுதியாக.
அதன் பின்னான பக்கங்கள் எல்லாம் இன்னும் நிரப்பப்படாமல் இருக்க எடுத்ததை அப்படியே வைத்துவிட்டு சரிந்து படுத்தவன் உறங்கிக்கொண்டிருந்தவளை அள்ளி தன் மேல் நிரப்பி அணைத்துக்கொண்டான் திருமொழி.
சின்ன சின்னதாய் முத்தங்களால் குறுகுறுப்பூட்ட உறக்கம் கலைந்து கண்களை திறக்கமாட்டாமல் அவள் பார்க்க,
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா தர்ஷி?…” என்றான் அவன் முகம்கொள்ளா புன்னகையுடன்.
“இப்ப என்ன சொல்லனும்?…” என விழிக்க முயன்று கேட்டவள் நெற்றியில் முட்டியவன்,
“எதுவும் சொல்லவேண்டாம். தூங்கு…” என்று தட்டிக்கொடுக்க ‘என்னவாகிற்று இவனுக்கு?’ என்ற யோசனையுடன் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டாள்.
அதிகாலை வழக்கமான நேரத்திற்கு முன்பே திருமொழி எழுந்துகொள்ள அவன் அசைவில் நிதர்ஷனாவும் விழித்துவிட்டாள்.
“குட்மார்னிங் தர்ஷி…” என சொல்லியவன் முகம் கழுவிவிட்டு வந்து தனது டிஷர்ட்டை அணிந்துகொண்டான்.
“வீட்டுக்கு கிளம்பறோமா? இப்பவே?…” என அவள் கேட்கவும்,
“கிளம்பறோம் இல்லை. கிளம்பறேன். ஈவ்னிங் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன். அதுவரை இங்க இரு…” என்று திருமொழி சொல்ல,
“இன்னைக்கும் இருந்தா மூணு நாள் ஆகிடும். அத்தைட்ட ஒரே நாள்ல வந்திடறேன்னு சொன்னேன்…”
“உன் அத்தைட்ட நான் சொல்லிக்கறேன். நீ இரு…” என்று சொல்லிவிட்டு கதவை திறக்க,
“எல்லாரும் தூங்கறாங்க போல? இருங்களேன், காபி போட்டு தரேன்…” என்றாள் நிதர்ஷனா.
“நல்லது. எனக்கு இப்ப எதுவும் வேண்டாம். நீ சொல்லிக்கோ. ஈவ்னிங் நான் வரும் போதே ரெடியா இருக்கனும். புரியுதா?…” என சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் திருமொழி.
சொல்லியது போலவே மாலை அழைக்க வர அவனுடன் சங்கவையும் வந்துவிட்டார்.
அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம். ஸ்வாதி போனில் அழைத்து சரஸ்வதிக்கு வாழ்த்து சொல்லி,
“தம்பி தப்பிச்சு போயிருன்னு உங்களுக்கு சொல்லனும்ன்னு சொல்றீங்க போல டூட்? ம்மீ சரஸூ உன்னைய இன்னும் இந்த உலகம் நம்புது பாரேன்?…” என்றான் பிரகாஷ்.
ஸ்வாதி, பிரகாஷ் இருவருக்கும் ஒரு வயது என்பதால் இன்னும் இலகுவாய் பேச ஸ்வாதிக்கு அவர்கள் குடும்பத்தை இன்னுமே பிடித்தது.
இரு குடும்பங்களின் பந்தமும் எவ்வித வெளிப்பூச்சுகளும் இன்றி இயல்பாகவே ஒட்டிக்கொண்டது.
நிதர்ஷனாவை தங்களின் வீடு அழைத்து வந்துவிட்டான் திருமொழி. இனி எக்காலத்திலும் உள்ளூராகவே இருந்தாலும் பிரிந்து இருப்பதெல்லாம் வேலைக்கே ஆகாது என முடிவெடுத்து அதை அவளிடமும் சொல்ல,
“அப்போ நான் அங்க நைட் ஸ்டே பண்ண கூடாதா?…” என்றாள் நிதர்ஷனா அதிர்ந்து போய்.
“அப்படி சொல்லலையே? நானும் வருவேன்…” என்று அவள் நெஞ்சில் பாலை வார்த்தவன் அடுத்த பத்துநாளில் யுஎஸ் போக பயணச்சீட்டுடன் வந்துவிட்டான்.
பார்த்ததும் மனைவி சந்தோஷத்தில் துள்ளி குதிப்பாள் என்று அவன் நினைத்திருக்க,
“பதினைஞ்சு நாள் உங்களோட தனியாவா?…” என்றாளே பார்க்கலாம்.