இருவருமாய் சமைத்து உண்டுமுடித்து வெளியில் அருகில் செல்ல, செல்லும் இடங்களை எல்லாம் போட்டோ எடுத்து, அதனுடன் பேரையும் குறித்துக்கொண்டாள்.
“என்ன பன்ற தர்ஷி?…” என கேட்டவனிடம்,
“யாருக்கு தெரியும்? நீங்க எப்போ என்ன கேட்பீங்கன்னு. ஒருவேளை போன இடத்தை சொல்லி பேர் என்னன்னா? அதான் எடுத்து வைக்கறேன்…” என்று சொல்லி சிரிக்க,
“ஓஹ், அவ்வளோ உஷாரா நீ?…” என அவளின் தலையை பிடித்து ஆட்டினான் திருமொழி.
மூன்று நாட்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் ஓடிவிட அவளின் அனைத்துமாகி போனான் திருமொழி.
பகலில் சமைத்துவிட்டு உறங்குவதும், இரவெல்லாம் விழித்திருப்பதும், கிடைத்த நேரத்தில் வெளியில் சென்று வருவதும் என தேனில் ஊறிய பலாச்சுளையாய் தித்திப்பாய் சென்றது.
அன்றும் மதியம் போல நிதர்ஷனா உறங்கிவிட நண்பன் ஒருவனிடமிருந்து அழைப்பு வரவும் கிளம்பியவன்,
“தர்ஷி…” என அவளை எழுப்பினான்.
“ப்ரெண்டை மீட் பண்ணிட்டு வரேன். ஈவ்னிங் வந்திருவேன். நீ எழுந்து சாப்பிடு. நானும் போய் பார்த்துட்டு வந்திடறேன்…” என சொல்லி கிளம்ப,
“தனியா இருக்கனுமா? நானும் கூட வரவா…” என கேட்டவள் இதழில் இதழ் பதித்தவன்,
“வேண்டாம்டா. நீ எழுந்துக்கறதுகுள்ள வந்திருவேன். நீ தூங்கு…” என தலையை கோத எழுந்துவிட்டாள்.
“இல்ல தூக்கம் போயிருச்சு…” என நன்றாக விழித்துவிட,
“உதை வாங்குவ. இப்ப முழிச்சிட்டு நைட் தூக்கம் வருதுன்னு சொல்றதுக்கா? பேசாம தூங்கு. போரடிச்சா வெளில வந்து வாக் பண்ணு. ரொம்ப தூரம் போயிடாத. சரியா?…” என அவளின் கன்னம் தட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.
கண்விழிக்கையில் வீடே இருளடைந்து காணப்பட தனியாய் இருப்பதும், நாடு விட்டு நாடு வந்திருப்பதும் என உள்ளுக்குள் திகிலை பூசியது.
மெல்ல தடுமாறி எழுந்து போனை எடுத்து டார்ச் அடித்து பார்த்து விளக்குகளை ஒளிரவிட பொத்தென போன் கீழே விழுந்தது.
“ப்ச், இது வேற…” என எடுத்து பார்க்க முன்பகுதி லேசாய் கீறல் விட்டிருந்தது.
அதை சரி பார்த்துவிட்டு நிமிர்ந்தால் அங்கே நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.
“இவ்வளோ நேரமா வரலை? இல்ல வந்து உள்ள இருக்காங்களா?…” என உள்ளறைக்கு சென்று பார்க்க அங்கும் திருமொழி இல்லை.
அவன் வந்த சுவடே இல்லாமல் இருக்க கணவனின் எண்ணிற்கு அழைத்தாள் நிதர்ஷனா.
உயிரிழந்திருந்த எண்ணிற்கு எங்கே அழைப்பு செல்ல? மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தவளுக்கு பதட்டம் கூடியது.
“எங்க போய்ட்டீங்க?…” என அழைத்துக்கொண்டே இருந்தவள் கண்ணில் கண்ணீர் வழிய துவங்கியது பயத்தில்.
அந்தநேரத்தில் கதவை திறந்துகொண்டு வெளியில் செல்லவும் பயமாக நிதர்ஷனா நிலைகுலைந்து போனாள்.
வீட்டிற்கு அழைத்து சொல்லலாம் என்றால் என்னவென்று சொல்வது? ஒருவேளை திருமொழி வந்துவிட்டால்?
இப்படியாக அவள் யோசித்துக்கொண்டே அவனுக்கு மட்டும் அழைத்தபடியே இருந்தாள்.
எங்கு சென்றானோ என்னவாகிற்றோ என்று அழுகை பீறிட இங்கே யாரையும் அழைக்கும் அளவிற்கு உதவிக்கும் ஆளின்றி போக ஸ்தம்பித்த நிலை தான் அவளது.
அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் தன் வீட்டிற்கு அழைக்க போனவள் வேண்டாம் என நினைத்து ஸ்வாதிக்கு தான் அழைத்தாள்.
“அண்ணி…” என்ற நிதர்ஷனாவின் அழுகையுடனான நடுக்கமான குரலில் ஸ்வாதி பயந்துவிட,
“என்னண்ணி?…” என கேட்டதும் நிதர்ஷனாவின் அழுகை கதறலாக மாற விஷயம் பாலாஜி, இளங்கோவனுக்கு சென்றது.
இளங்கோவன் வேறு யாருக்கும் தகவல் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
சங்கவையிடம் மட்டும் சொல்லியவர் ஸ்ரீதருக்கும், பிரகாஷிற்கும் அழைத்து சொல்லிவிட்டு உடனடியாக கிளம்பிவிட்டார் மருமகளுக்கு துணையாக மகனை பார்க்க.
ஸ்வாதி சங்கவைக்கு துணைக்கு வந்துவிட ஸ்ரீதரும், பிரகாஷும் வீட்டில் விஷயத்தை சொல்லவே இல்லை.
திருமொழி நல்லபடியாக வந்துவிட வேண்டுமென்ற வேண்டுதல் மட்டுமே அவர்களிடம்.
“எந்த இடம்ன்னு ஏதாவது சொன்னாங்களா?…” என ஸ்வாதி கேட்க
“எங்கன்னு எனக்கு தெரியலையே அண்ணி…” என சொல்லியவள் குரலே வருத்தியது.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணி….” என தனியே அந்த வீட்டில் அவள் இருக்க திருமொழியின் நண்பன் குடும்பத்தை இளங்கோவன் அனுப்பி வைத்தார் நிதர்ஷனாவிற்கு துணையாக.
பாலாஜியுடன் இளங்கோவன் அங்கே செல்வதற்குள் அரை உயிராகி போனாள் நிதர்ஷனா.
வாசலை பார்த்து கணவனுக்காக காத்திருந்தவளின் முகத்தை பார்த்ததும் நொறுங்கி போனார் இளங்கோவன்.
“ஒண்ணுமில்லடா. அப்பா இருக்கேன்ல…” என தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டவருக்கும் கண்ணீர் பொங்கியது.
பாலாஜி தாங்கள் வந்துவிட்டதாய் வீட்டிற்கு சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்வதென யோசிக்க காவல்துறைக்கு புகார் தருவது என்ற முடிவிற்கு வந்துவிட்டனர்.
அனைவரும் கிளம்பி புகார் அளித்துவிட்டு திரும்ப நிதர்ஷனாவின் விழிகள் அந்த அகண்ட வீதியில் அவனுடன் வலம் வந்ததை எண்ணி உருகியது.
“மாமா என்னை நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு போங்களேன்….” என்றவள் தனது போனில் திருமொழியுடன் சென்ற இடங்களை எல்லாம் காண்பிக்க அவளின் கதறல் பார்ப்பவரை உருக்கியது.
“சின்ன குழந்தைப்பா. படிச்சு முடிக்கட்டுமே. அப்பறம் பண்ணிக்கறேன். அதான் அவங்க வீட்டுலையும் சரின்னு சொல்லிட்டாங்களே?…” என எத்தனை காதலுடன் மகன் அவளுக்காக அன்று யோசித்தான்.
“தர்ஷியால தாங்கிக்கவே முடியலைப்பா. எப்படி பேசியிருக்கு அந்த பொண்ணு தர்ஷிட்ட? துடிச்சு போய்ட்டா. சொல்லமுடியாம அழறா. என்னை சும்மா விட சொல்றீங்களா? அதான் அவங்கப்பாவை வர சொன்னேன்…” என மிருதுளா விஷயத்தின் பொழுது மனைவிக்காக அவன் கொதித்தெழுந்தானே.
‘திரு வந்திருப்பா. எங்க இருக்க? இங்க நிது முகத்தை பார்க்க முடியலைப்பா’ என மானசீகமாய் அவர் மருக பாலாஜிதான் அவரையும் கவனித்துக்கொண்டான்.
மூவருமாக நிதர்ஷனா காண்பித்த இடங்களுக்கு அன்றைக்கு செல்ல செல்லுமிடமெங்கும் அவனை மட்டுமே தேடியது அவளின் விழிகள்.
இதழ்கள் துடிதுடிக்க பரிதவித்து விழிகள் அலைபாய அவனை கண்டுவிடமாட்டோமா என தேட அத்தனை பிராத்தனைகளின் ஒட்டுமொத்த உருவமாய் அதோ அவனே தான்.
திருமொழி. அந்த வாகனத்தில் இருந்து இறங்கியவன் வேகமாய் போன் பூத்திற்குள் நுழையும் முன்,
“மொழி…” என்றவளின் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.
“தர்ஷிம்மா…” என்றவனின் விழிகளும் ஒளிர இளங்கோவனும், பாலாஜியும் நிதர்ஷனா ஓடிய திசையில் பார்க்க அவளை நோக்கி வந்தவனை பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்கள்.
“ஹோய் தர்ஷி…” என்றவன் புயலாய் அவளை தூக்கி சுற்றிவிட்டான் இருக்குமிடம் மறந்து.
அவளின் அணைப்பிலும், அழைப்பிலும் எத்தனை தூரம் தனக்கென தவித்து கரைந்திருப்பாள் என புரிந்துகொண்டவன் அணைப்புமே வலியை பொருட்படுத்தாமல் வலுத்தது.
அத்தனைபேரின் பார்வையிலும் தாங்கள் பதிகிறோம் என்ற எண்ணம் பிறக்க அவளை தூக்கிக்கொண்டு சுழன்றவன் மெல்ல கீழிறக்கினான்.
“பாப்பா பயந்துருச்சா?…” என இரு கைகளாலும் கன்னம் தாங்கி திருமொழி கேட்க,
“ரொம்ப. பாப்பா பாவம். தர்ஷி பாவம்…” என நிதர்ஷனா சொல்லி சொல்லி அழ,
“சரிடா. இனி எங்கயும் போகலை…” என மீண்டும் அணைத்துக்கொண்டான் தன் நெஞ்சத்திற்குள்.
இதனை அப்படியே வீடியோவாக எடுத்த பாலாஜி உடனடியாக மனைவிக்கு அனுப்பி,
“உன் அண்ணனை இப்படி பார்த்திருக்கியா நீ?…” என்றும் புன்னகையுடன் கேட்டு அனுப்பிவைத்தான்.
“திரு…” என அருகில் வந்த இளங்கோவனை பார்த்தவன்,
“அப்பா நீங்க எப்போ வந்தீங்க?…” என கேட்க,
“எல்லாம் வீட்டுக்கு போய் பேசுவோம்…” என்றார் இளங்கோவன்.
“நீ நிதுவோட வா…” என்று நெஞ்சை முட்டும் சந்தோஷத்துடன் முன்னே செல்ல பாலாஜியும் அவனை விசாரித்துவிட்டு நடந்தான்.
“ரொம்ப தேடிட்டியா நீ? தர்ஷி என்னை நம்ப வேண்டாமா? உன்னை விட்டு எங்கடா போவேன்?…” என நிதர்ஷனாவிடம் கேட்க அவளின் அழுத விழிகள் அப்போது தான் ஒளி பெற்றிருக்க,
“செத்துட்டேன்…” என்றாள் அவள் குரல் தழுதழுக்க.
அவளின் அந்த ஒற்றை வார்த்தையே திருமொழி உயிர் கருகி உயிர் பிழைக்க காரணியாகியது.
ஆதி என்பதும் அந்தம் என்பதும் காதல் இதில் ஏது
சேர்ந்து பறக்கும் அன்றில் வாழ்வில் தாகம் ஏது
ஏக்கமோ ஏராளம் தூக்கமோ இல்லை
உன்னை சந்திக்கும் வரை
என்னை கொன்றது இந்த வெண்ணிலா
நீ என் விழியில் மிதக்கிறாய்
என் நெஞ்சில் நடக்கிறாய்