கோமகள் சென்றதும் சங்கவையிடம் உடனே எதுவும் பேசாமல் இங்குமங்குமாய் அறைக்குள் நடந்தான் திருமொழிவர்ணன்.
மகனின் அமைதியில் சங்கவைக்கு தான் படபடப்பு அதிகமானது. பெரிதாய் எதுவும் சொல்லிவிடமாட்டான் தான்.
அதற்கும் இதனை இப்படியே விட்டுவிடவும் மாட்டான். போதாததிற்கு பார்த்த பெண்ணின் பேச்சுக்கள் வேறு அவனை கோபமேற்றி இருக்கும் என்பதனை மகனின் நடையிலேயே கண்டுகொண்டார்.
அவன் முகத்தில் அவ்வளவு ரௌத்திரம். அதனை குறைக்கும் முயற்சியில் தான் இங்குமங்குமான நடை.
கேட்ட வேகத்தில் பேசியிருந்தால் கண்ணாடியை கீழே வீசி எரிவதை போல வார்த்தைகள் கூர்மையுடன் வந்துவிடுமே.
அவனாக நிதானத்திற்கு வந்துவிட்டு பேசட்டும் என்று மகனை பார்த்தபடியே சாய்ந்திருந்தார் சங்கவை.
இந்தநேரம் பார்த்து கணவரும் ஊரில் இல்லை. இருந்திருந்தால் கூட தனக்கு ஆதரவாக இருக்குமே என மகனை பார்க்க சட்டென அவரின் முன் வந்து அமர்ந்து நெற்றியை நீவினான்.
“ஹ்ம்ம், என்னம்மா, என்ன இதெல்லாம்?…” என ஆயாசமாய் கேட்டவன் கைகள் பின்னங்கழுத்தை அழுத்தமாய் தேய்த்தது.
கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு வார்த்தைகளை அழுத்தாமல் கேட்க முயற்சி செய்கிறான் என்பது புரிந்தது சங்கவைக்கு.
“உனக்கும் வயசாகுதே திரு?…” என பொதுவாய் அவர் சொல்ல,
“வயசுன்னா? என்ன வயசாகுது? சொல்லுங்க….” என்று பட்டென்று சத்தமாய் கேட்க சங்கவை வாயை மூடிக்கொண்டார்.
“இந்த பேச்சு தேவையா? கேட்டீங்களா? என்ன வயசிருக்கும் அந்த பொண்ணுக்கு? எப்படி பேசியிருக்கு கேட்டீங்க தானே?…” என்றவன் முறைப்பில்,
“அது பாவம் சின்ன பொண்ணு, பொறுப்பில்லாம விளையாட்டா, அவசரப்பட்டு பேசிருச்சு. நீ எதுவும் அந்த பொண்ணை பேசிடாத திரு. நம்ம காலேஜ்ன்னு எதுவும்…” என சங்கவை கூட ஒரு வேகத்தில் வார்த்தையை விட்டுவிட்டார்.
“என்னை பார்த்தா எப்படி தெரியுது? எனக்கு கோபம் எல்லாம் அந்த பொண்ணு மேல இல்லை. அதுக்கு காரணமான உங்க மேல தான்…” என்றவன்,
“அந்த பொண்ணுக்கு இருக்கற புத்திசாலித்தனம் கூட உங்களுக்கு இல்லையேன்னு அவ்வளவு கோபம்…” என சொல்ல சங்கவை முகமே மாறிவிட்டது.
“பொறுப்பில்லையா? அந்த பொண்ணுக்கு இருக்கற பொறுப்பு உங்களுக்கு இருக்கா? பொறுப்பு இருக்க போய் தான் இவ்வளவு தெளிவா பேசியிருக்கு. இப்படி போய் கேட்டா யாருக்கும் வரக்கூடிய சந்தேகம் தானே அந்த பொண்ணுக்கும் வந்திருக்கு?…” என்றவன்,
“நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு எப்பவாச்சும் சொல்லியிருக்கேனா உங்ககிட்ட?…” என அவன் கேட்க, ‘இல்லை’ என தலையசைத்தார் சங்கவை.
“அப்பறம் ஏன் இந்த மாதிரி ஒரு விஷயம் பண்ணி வச்சீங்க? எவ்வளோ அசிங்கம்? அவங்க வீட்டுல என்ன நினைப்பாங்க நாம இப்படி போய் கேட்டு அவங்க வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு வச்சுக்கிட்டீங்களே?…” என எரிந்து விழுந்தான்.
“என்னவோ மனசே சரியில்லப்பா. உடம்புக்கும் முடியலையா? அதான் இப்படி. அவங்க வீட்டுல அந்த பொண்ணு இப்படி பேசுவான்னு நானும் நினைக்கலை…” சமாளிக்க முயன்றார் சங்கவை.
“பேசாம? நமக்கு சரிசமமான இடத்துல நாம நிக்காம இப்படி போய் கேட்டு நின்னா சந்தேகப்படத்தான் செய்வாங்க. எனக்கென்ன பொண்ணா கிடைக்காது? போயும், போயும்…” என்றவன் சட்டென கீழுதட்டை கடித்து வார்த்தைகளை நிறுத்தினான்.
இன்னும் அவனுக்கு ஆறவில்லை. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எந்தளவுக்கு கேலிக்கூத்தாக்கிவிடுவார்கள் என்ற எண்ணமே அவனை நிதானமிழக்க செய்தது.
“மூச், எதுவும் பேசாதீங்க. அந்த பொண்ணு நாளைக்கு காலேஜ்க்கு வந்து எல்லா அவ ப்ரெண்ட்ஸ்கிட்ட இப்படின்னு சொல்லி விஷயம் பரவுச்சுன்னா என்னென்ன பேச்சுக்கள் எல்லாம் வரும் தெரியுமா உங்களுக்கு?…”
“முதல்ல என்னை பேசுவாங்க. காலேஜ்க்கு படிக்க வந்த பொண்ணை பார்த்து கல்யாணம் பேசிருக்கான் அப்டின்னு பேசுவாங்க. அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிருச்சுன்னு தெரிஞ்சு அதையும் இவனுக்கு என்ன பிரச்சனையோ, இப்படி பொண்ணு கேட்டும் அவங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்கன்னு பேசுவாங்க…”
“நம்ம காலேஜ்க்கு பொண்ணுங்களை படிக்க அனுப்பறதை பத்தி கூட பேசலாம். நாம இருக்கற இடம் அப்படி. அங்க நேர்மையா, மனசு சுத்தமா இருந்தாலும் நமக்கு பிடிக்காதவங்க பல யூகத்தை கிளப்பிவிடுவாங்க. தேவையில்லாத வதந்தியை பரப்புவாங்க. என் பேரோட நம்ம காலேஜ் பேரும் அடிபடும்…”
“இதை எல்லாம் யோசிக்கமாட்டீங்களா நீங்க? ஸ்வாதிக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி ஒருவருஷம் தான் ஆகிருக்கு. அதுக்குள்ள என்ன எனக்கு? அவளுக்கு அடுத்தமாசம் வளைகாப்பு போட்டு கூட்டிட்டு வரனும். டெலிவரி முடியட்டும். அடுத்த வருஷம் பாருங்கன்னு நான் தான் சொல்லியிருந்தேன் தானே?…”
“அப்படி என்ன உடனே பார்க்கவேண்டிய அவசியம் வந்துச்சு? ஏன் நம்ம சொந்தத்துலையோ, நமக்கு சமமான இடத்துலையோ உங்களுக்கு பொண்ணு தேட முடியலையா? யாரோ யார் போட்டோவையோ காமிச்சு ஜாதகம் பொருந்தியிருக்குன்னா உடனே மேரேஜ் பண்ணிடனுமா?…”
கொந்தளித்துவிட்டான் திருமொழிவர்ணன். பேச பேச கோபம் அதிகமானதே தவிர குறையவே இல்லை.
“நாளைக்கு காலேஜ்ல அந்த பொண்ணு என்னை பார்க்கும்போது என்ன நினைக்கும்? எதார்த்தமா நான் பார்த்தா கூட அந்த பொண்ணுக்கு சங்கடமா இருக்காதா? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க?…” என தலையை கோதிக்கொண்டே இருந்தான்.
அமர முடியாமல் இங்குமங்குமாய் அவனின் நடை கூட அவனை அமைதிப்படுத்த முடியவில்லை.
“போட்டோ பார்த்ததும் பொண்ணை ரொம்ப புடிச்சது திரு. அதான் பேச சொன்னேன். நாம என்ன இப்படி அந்தஸ்து பார்க்கறவங்களா? நல்ல இடம், நல்ல பொண்ணு இருந்தா போதுமேன்னு தான் பேச சொன்னேன்…” என்றார் சின்னதாகிவிட்ட குரலில்.
“எதுக்கு பார்க்கனுமோ அதுக்கு அந்தஸ்து பார்த்து தான் ஆகனும். எல்லாரோடையும் சரிசமமா பழகிட்டா எல்லாரும் ஒண்ணாகிட முடியுமா? எனக்கும் கூட தான் அந்த பேங்க் மேனேஜரை தெரியும். அது ஜஸ்ட் பிஸ்னஸ் லிமிட்ல தான்…” என்றவன்,
“இனி என்னை கேட்காம பொண்ணு பார்க்கறேன் அது இதுன்னு குட்டி கலாட்டா எதுவும் பண்ணி வச்சீங்க?…” என்றவனின் எச்சரிக்கையில் கலக்கமாக சங்கவை பார்க்க சில நொடிகள் அவரின் அந்த முகத்தை பார்த்து நின்றவன் அவரின் அருகில் வந்து அமர்ந்தான்.
“கல்யாணம் பண்ணிக்கனும். அவ்வளோ தானே? ஸ்வாதி டெலிவரிக்கு வந்துட்டு போகட்டும். அடுத்து பொண்ணு பார்க்கலாம். இனி பார்க்கறதாச்சும் நமக்கு ஒத்துவர மாதிரி பாருங்க. ஆனா நான் ஓகே சொல்லாம பொண்ண பிக்ஸ் பண்ணக்கூடாது…” என்று சொல்லியவன்,
“உங்களுக்கும் கால் முழுசா சரியாகட்டும். தங்கச்சியும் வந்துட்டு போகட்டும். நீங்க நல்லா நடமாடவும் கல்யாண பேச்சை எடுங்க. சரியா?…” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
மழையடித்து ஓய்ந்ததை போலிருந்தது சங்கவைக்கு. மகனின் பேச்சின் பின்பு இருந்த நியாயமும் புலப்பட்டது.
அவருக்கு ஒரு நம்பிக்கை, தங்களை எப்படி மறுத்துவிட முடியும் என்று. இப்படி பாதகங்களையும் யோசிக்காமல் விட்டுவிட்டோம் என இப்போது நொந்துகொண்டார்.
தான் தான் இதில் அவசரப்பட்டுவிட்டோம் என அவருக்கு புரிய கோமகளுக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
தாயிடம் கடுமையாக பேசிவிட்டு தன் அறைக்கு வந்தவன் இன்னுமே வெம்மை தணியாமல் தான் இருந்தான்.
எப்போதும் தான் எடுக்கும் முடிவுகளில் அத்தனை தெளிவும் கவனமும் அவனுக்கு இருக்கும்.
மேல்படிப்பு வெளிநாடு சென்று என்று முடிவெடுத்தவன் கல்லூரி பொறுப்பை ஏற்கும் முன்பே அதற்கு தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு தான் அதனை ஏற்றான்.
இத்தனை வருடத்தில் இதை இப்போது தான் செய்யவேண்டும் என்று திட்டமிடுதலில் எவ்வித சறுக்கலும் இருந்ததில்லை.
உடன்பிறந்த ஒரே தங்கையான ஸ்வாதியின் திருமணத்திற்கு முன்பே திருமணம் என்ற பெற்றவர்களிடம் ஸ்வாதிக்கு முதலில் பார்த்து முடிக்கும்படி சொல்லிவிட்டான்.
இப்படி ஒவ்வொன்றையும் யோசித்து செயல்பட்டவன் தன் திருமணத்திற்கு இருவருடங்கள் செல்லட்டும் என்று நினைத்திருக்க இப்படி ஒரு சம்பவத்தை நடத்திவிட்டார் சங்கவை.
என்னவோ புழுக்கமாக இருக்க எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தவன் தனது லேப்டாப்பை எடுத்து அமர்ந்தான்.
குளிர்ந்த நீரில் இருந்ததனால் இப்போது மனதின் அனல் சற்று மட்டுப்பட்டதை போலிருந்தது திருமொழிக்கு.
கல்லூரியில் நடப்பதை இங்கிருந்தே கவனித்துக்கொண்டிருந்தவன் மூளைக்குள் வண்டென குடைந்துகொண்டிருந்தாள் அந்த பெண்.
‘என்னை பேசினாளாமா? எவ்வளோ தைரியம்?’ என்று கடுப்பானான் திருமொழி.
‘தாயிடம் தவறு தங்கள் பக்கம் என்று சொன்னாலும் மறுப்பை இப்படியா சொல்வது? வார்த்தைகளில் ஒரு வரைமுறை வேண்டாமா?’ என இதுவரை பார்த்திராதவள் மேல் ஒருவித எரிச்சல் மண்டியது.
அவனின் எண்ணப்போக்கு அவ்விடமே சுழல அதற்கு மேல் முடியாமல் ‘யார் அவள்?’ என பார்க்க மடிகணினியை தட்டினான்.
மாணவர்கள் பற்றிய விவரங்களின் பட்டியலில் கோமகள் சொல்லிய தகவலின் அடிப்படையில் தேட இதோ அவள் திருவின் மடிக்கணினி திரையை நிறைத்தாள்.
நிதர்ஷனா. எம்.காம் முதலாம் ஆண்டு என்னும் தகவலை தாங்கியபடி அவளின் புகைப்படம்.
சுடிதாரில் சிறு பெண்ணாய் இதழ்களில் கீற்றாய் மெல்லிய சிரிப்புடன், நெற்றியில் சந்தனக்கோடு அதன் கீழ் சின்னதாய் மெருன் வர்ண ஸ்டிக்கர் பொட்டு என அவனின் கண்களில் விழுந்தவள் ‘இந்த பொண்ணா அப்படி பேசுச்சு?’ என்ற ஆச்சர்யத்தையும் சேர்த்தே எழுப்பினாள்.
‘யார்ன்னே தெரியாத இவக்கிட்டையெல்லாம் இப்படி அசிங்கப்பட வச்சுட்டாங்களே இந்தம்மா?’ என்ற கடுப்புடன் மடிக்கணினியை அணைத்தான் திருமொழிவர்ணன்.
“ப்ச், இப்ப இது ரொம்ப முக்கியமா?…” என்ற நிதர்ஷனாவின் எரிச்சலில் சரஸ்வதிக்கு சிரிப்பு தான் வந்தது.
“இதை நீ பேசறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கனும். உன்னை யார் அப்படி பேச சொன்னது?…” என்று மகளின் எதிரே அமர்ந்தவர்,
“நீ நகம் கடிக்கிறதை உங்கப்பா பார்த்தா டிஸிப்ளின் இல்லையா பாப்பான்னு உடனே சதையோட நகத்தை மொத்தமா வெட்டிடுவார், பார்த்துக்கோ…” என மிரட்ட உடனே கையை துடைக்க போனவள் எழுந்து சென்று கையை கழுவிவிட்டு வந்தாள்.
“ஹ்ம்ம் அப்பான்ற வார்த்தைக்கு கூட எவ்வளோ மரியாதை?…” சரஸ்வதி நக்கலாக சொல்ல,
“அம்மான்ற வார்த்தைக்கு உங்க பசங்கட்ட இருக்கே அந்த மாதிரியாம்மா?…” என நிதர்ஷனாவும் நக்கல் பேச,
“இந்த வாய் மட்டும் இல்லைன்னா?…” என சிரித்தார் சரஸ்வதி.
“ம்க்கும், நாய் கூட இந்த வீட்டு வாசலுக்கு வராது உங்க புருஷன் இருக்கறதால…” நிதர்ஷனாவின் முகம் கடுகடுத்தது.
“என்னடா நிதும்மா?…” என மகளின் கன்னத்தை கிள்ளி கொஞ்ச சரஸ்வதியின் போன் வந்துவிட்டது.
“ரெண்டு தடிமாட்டுல எந்த மாடோ? போய் பேசுங்க. நான் புக்கை எடுத்து வைக்கறேன்…” என டீயை எடுத்துக்கொண்டு கூடத்திற்கு சென்று அமர்ந்தாள்.