ஒருமணி நேரம் சென்றிருக்கும், தலையில் ஒற்றை கையை வைத்து தாங்கியபடி சோபாவில் காலாட்டிக்கொண்டு புத்தகத்தில் வேண்டாவெறுப்பாய் லயித்திருந்தவள் வெளியே கேட்ட கார் சத்தத்தில் அட்டென்ஷனில் அமர்ந்தாள்.
கால்கள் கீழே போடப்பட்டு புத்தகத்தை சிரத்தையாக பிடித்துக்கொண்டு நேராய் நிமிர்ந்தமர சரஸ்வதியும் போனை வைத்துவிட்டு வந்துவிட்டார்.
சட்டை பட்டனை கழற்றிக்கொண்டே உள்ளே நுழைந்த கணேசன் மகளை பார்த்து புன்னகைத்து மனைவியின் புறம் திரும்பினார்.
மலர்ந்திருந்த முகத்தில் உடனடியாக கடுமை அவசர உடன்படிக்கை போட்டுக்கொண்டதை போல வந்தமர்ந்தது.
“சூடா காபி கொண்டுவா…” என்று கட்டளையாய் சொல்லிவிட்டு அவரின் அறைக்குள் சென்றுவிட்டார்.
“ஆலம்பனா…” என மெல்லிய குரலில் தாய்க்கு மட்டும் கேட்கும் விதமாக நிதர்ஷா கேலியாய் சொல்ல,
“உங்கப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சா என்னாகும்ன்னு பயமே இல்லைல?…” என மகளை பதிலுக்கு சீண்டிவிட்டு அவர் சென்றதும் திக்கென்றானது நிதர்ஷனாவிற்கு.
“ம்மீ, இது டூ மச்….” என மகளும் வேகமாய் அவரின் பின்னே செல்ல,
இது வழமை என்பதால் நிதர்ஷனாவும் கையில் ஒரு தம்ளரை வைத்துக்கொண்டு பாவமாய் பார்த்தாள்.
“படிக்கும் போது கல்யாணம் பேசறது தப்புன்னு தானே பேசினேன்…” என பரிதாபமாய் சொல்ல,
“ஆனா அதை நீ என்கிட்ட சொல்லியிருக்கனும். இன்னொருத்தர் முன்னாடி வாய்த்துடுக்கா பேசியிருக்கியே, நாளைக்கு என் மதிப்பு என்னாகறது? கணேசன் பொண்ணை இப்படி வளர்த்து வச்சிருக்கான்னு பேசுவாங்களேன்னு உங்கப்பா சொல்லுவாரே. அப்போ என்ன செய்வ நீ?…” என்றார் சரஸ்வதி.
“அப்போ நான் தான் தப்போ?…” நிதர்ஷனாவின் முகத்தில் சஞ்சலம்.
“ப்ச், உன்னோட விருப்பத்தையும், மறுப்பையும் சொல்லலாம் நிதுக்குட்டி. ஆனா அது எங்க வரையில தான். இன்னொருத்தரை கஷ்டப்படுத்தறது தப்பில்லையா? அவங்க என்ன நினைச்சு உன்னை கேட்டு வந்திருந்தாலும் உன் பேச்சு அவங்களுக்கு மரியாதை குறைவா தானே தோணிருக்கும்…” என்றவர்,
“அந்த நேரம் எனக்குமே படபடன்னு வந்திருச்சு. என்னடா இவங்க கேட்டு வந்திருக்காங்களேன்னு. இல்லைன்னா நீ பேசினதுக்கு உன் வாயிலேயே நாலு போடு போட்டிருப்பேன்…” என்றார் மகளை கண்டிக்கும் பாவனையில்.
“தர்ஷி அங்க என்ன பன்ற?…” என்ற கணேசனின் சத்தத்தில் கையில் வைத்திருந்த தண்ணீரை ஒரே மடக்கில் சரித்தாள் நிதர்சனா.
சட்டென புரையேறிவிட குடித்த நீரில் பாதி உடையில் சிதறி அவளை நனைத்தது.
“போ போ. வாய்ஸ் சாதாரணமா தான் இருக்கு. அவரா கேட்கட்டும். எதையாச்சும் நீயா சொல்லி வைக்காத…” என எச்சரித்து மகளை அனுப்பினார் சரஸ்வதி.
நிதர்ஷனா வெளியே வந்ததும் தோளில் இருந்த டவலில் முகத்தை துடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவர் மகளை பார்த்தார்.
“என்ன பாப்பா இது?…” என தன்னருகே அவள் அமர்ந்ததும்,
“பார்த்து தண்ணி குடிக்கமாட்டியா?…” என்று சொல்லி மகளின் முகத்தை துடைத்துவிட்டார்.
அதில் இன்னுமே நிதர்ஷனாவிற்கு அச்சம் கூடியது. ‘இவர் சாதாரணமாவே இருக்கலாம்’ என படபடப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“படிச்சிட்டியா?…” என்றவர் மகளின் புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அவளுக்கான பரீட்சையை ஆரம்பித்தார்.
உண்மைக்கும் அது நிம்மதியானது நிதர்ஷனாவிற்கு. முகமும் தெளிவு கிடைக்க அவரின் கேள்விகளுக்கு சிலவற்றிற்கு தடுமாறினாலும் சிலதை சரியாய் கூறினாள்.
மகளை தன்னை போல வங்கி அதிகாரியாக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார் கணேசன்.
அதனைக்கொண்டு மகளுக்கான வங்கி தேர்வு எழுத வைக்கும் பயிற்சியை தானே தந்துகொண்டிருந்தார்.
இது வார இறுதி நாட்களில் எப்போதும் நடப்பது தான். இன்றும் அவர் மகளை கேள்விகளால் துளைக்க எப்போதடா முடியும் என்றானது நிதர்ஷனாவிற்கு.
கணேசன் சரஸ்வதி தம்பதிகளின் மூன்றாவது பெண்குழந்தை நிதர்ஷனா. முதல் இரண்டும் ஆண் மக்கள்.
அதிலும் மூத்தவன் ஸ்ரீதர் தான் விரும்பிய படிப்பை தான் படிப்பேன் என நின்று சாதித்து, கூடுதலாக காதலித்து கணேசனை மீறி திருமணம் செய்து பெங்களூரில் மனைவியுடன் வசித்து வருகிறான்.
இரண்டாமவன் படிப்பை மட்டும் தன் விருப்பமாக்கிவிட்டு திருமணம் பெற்றோர் விருப்பம் என்று சொல்லிவிட சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியில் மேலாளராக பணிபுரிகிறான்.
இரு மகன்களும் பெரிய வேலை, தேவைக்கு அதிகமாக வருமானம் என்றாலும் கணேசனுக்கு அது நிறக்கவில்லை.
தனக்கு பின்பு தன்னை போல தன் பிள்ளைகளில் ஒருவரேனும் இருக்கவேண்டுமே என நிதர்ஷனாவை இதற்கு படிக்க வைத்து தேர்ச்சிபெற வைக்காமல் விட போவதில்லை என்று சக்கையாய் பிழிந்துகொண்டிருந்தார்.
தன் பேச்சை மீறி சென்ற மகன்களிடம் பேச்சை சுருக்கிக்கொண்டவர் நேரில் பார்த்தால் ஓரிரு வார்த்தைகள் தான்.
மற்றபடி மனைவியிடம் கேட்டு தெரிந்துகொள்வதோடு சரி. அவ்வப்போது அத்தனை புலம்பல்கள் வேறு மனைவியிடம் மட்டுமே.
“திமிரெடுத்த புள்ளைகளை பெத்து வச்சிருக்கற. அதுல மூத்தவன் உன்னை மாதிரி அப்படியே. உன்னை என் தலையில கட்டின மாதிரி நீ உன் பிள்ளைங்களை என் கால்ல கட்டி வச்சிட்ட…” என
கணேசன் தன் வாய்க்கு வந்த வசைபாடுகளை ஆரம்பித்து அதற்கு வழக்கம் போல சரஸ்வதி எதிர்வினை புரியாமல் நகர்ந்து அந்த நமைச்சலில் புகைந்து போவார் கணேசன்.
வங்கியில் உயர் அதிகாரியாக இருப்பவருக்கு தன் சொந்த மாமன்மகளான சரஸ்வதியை கட்டாய திருமணம் செய்துவைக்க வெறுப்பில் ஆரம்பித்த உறவு கட்டாயத்தின் பெயரில் தான் நகர்ந்துகொண்டு இருந்தது.
கல்லூரியில் இரண்டு வருடங்கள் மட்டுமே படித்திருந்த சரஸ்வதி உடன்பயிலும் மாணவனை விரும்ப விஷயம் வீட்டிற்கு தெரிந்து அவர்கள் எடுத்த ஒரே முடிவு திருமணம்.
திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி கணேசன் மீது பிடித்தம் என்பது உள்ளதா என்று தேடவேண்டிய நிலை தான் சரஸ்வதிக்கு. அதற்கு கணேசன் மட்டுமே முழுமுதற்காரணம்.
“என் படிப்புக்கும், தகுதிக்கும் உன்னை போய் கல்யாணம் செஞ்சுட்டேனே?…” என சொல்லால் சாடுபவர் சரஸ்வதிக்கு மற்ற குறைகள் எதையும் வைத்ததில்லை.
“என் பொண்டாட்டின்னு உன்னை பார்க்கறவங்க பார்வைக்கு நீ மதிப்பா இருக்கனும் பார்த்துக்கோ. பழசை எல்லாம் தூக்கி கடாசிட்டு என் விருப்பப்படி நடந்துக்கோ…” என சொல்லி சொல்லியே அவருக்கு அனைத்தையும் செய்வார்.
“படிப்பை நிப்பாட்டிட்டாங்கன்னு இதுதான் சாக்குன்னு படிக்காம வெட்டியா பொழுதை போக்க நினைக்காத. ஒழுங்கா படி. படிச்சு எனக்கு சமமா இல்லைன்னாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போகனும் நீ….”
“என் காசுல படிக்க வைக்க போறேன். அரியர் வச்சு மானத்தை வாங்கிடக்கூடாது. ஒழுங்கா கவனத்தை படிப்புல வை. உனக்கு கல்யாணமாகி புருஷன் நானிருக்கேன்னு நினைப்பு வேணும்….”
இப்படி சொல்லால் சரஸ்வதியை மேலும் மேலும் காயப்படுத்த அவர் எதற்கும் பதில் சொல்லுவார் இல்லை.
வார்த்தைகளில் பேசாததை செயலில் காண்பித்தார். படிக்க நெஞ்சை முட்டும் ஆசையும், ஆர்வமும் இருந்தும் படிக்க செல்ல விரும்பவில்லை.
ஆசைப்பட்டு மனைவியின் முன்னேற்றத்திற்காக படிக்க வைப்பவராக இருந்திருந்தால் நன்றியோடு கூடுதலாக கணவன் மீது அன்பும் வந்திருக்குமோ என்னவோ?
தன் மதிப்பிற்காக, தன் கௌரவத்திற்காக தன்னை படிக்க வைக்க நினைப்பவரின் எண்ணத்தை பொய்யாக்கவேண்டும் என்றே வீட்டில் அடைபட்டுக்கொண்டார்.
அவருக்கும் இது தண்டனை தான். ஆனாலும் தன்னுடைய மறுப்பு கணேசனை வெறுப்பேற்ற அதில் மனதிற்குள் சிறு மகிழ்ச்சி.
“ஊமையா இருந்துட்டு சாதிக்கிறியா நீ? பதில் சொல்லுடி…” என இயலாமையுடன் இரைபவரிடம் மௌனத்தை மட்டுமே பதிலாக்கினார்.
“சரஸு என் பேச்சை கேட்பியா மாட்டியா?…” என கேட்டு கேட்டு சலித்தவருக்கு ஒரே பதில் தான்.
“நம்பிக்கை இல்லாம என்னை நீங்க அனுப்ப தேவையில்லை…” என்பது.
அப்போதும் கூட அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிடமாட்டார் கணேசன்.
“ஏன் நீ கல்யாணத்துக்கு முன்னாடி மனசை அலையவிட்டவ தானே?…” என்ற குதர்க்கம் தான் வரும்.
கணேசனின் கோபம் எல்லை மீறும் பொழுது வார்த்தைகளும் தடிக்க அதற்கு பதிலுக்கு செய்கிறேன் என சரஸ்வதியும் செய்ய மாறி மாறி இருவருக்குள்ளும் இன்றுவரை இந்த பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
வீட்டிற்குள் ஆயிரம் சண்டைகள், சச்சரவுகள் இருந்தாலும் வெளியில் ஒரு துளி அதனை வெளியில் காண்பிக்கவிடமாட்டார் கணேசன்.
இப்போது மகளுக்கு திருமணம் என்ற பேச்சுடன் வந்து சென்றிருந்த கோமகள் கணேசனின் வங்கியில் அவருக்கு கீழ் பணிபுரிபவர்.
“நீ டீ குடிச்சியா தர்ஷி?…” என்று மகளிடம் கேட்டுக்கொண்டே காபியை உறிஞ்ச ஆரம்பித்தார்.
“அப்பறம் சரஸு, நைட்டுக்கு எனக்கு சாப்பாடு வேண்டாம். தர்ஷிக்கு என்ன வேணும்ன்னு கேட்டுக்கோ….” என்றவரை கேள்வியாய் பார்த்தார் சரஸ்வதி.
“இன்னைக்கு வெளில போனப்போ கொஞ்சம் லேட்டா சாப்பிட்டேன். அதுவே ஒருமாதிரி இருக்கு. அதான் வேண்டாம்ன்னு சொன்னேன்…” என்றார் மனைவியிடம்.
“பழம் இருக்கு. சாப்பிட்டு படுங்க. அப்பறம் சாப்பிடாம இருக்கறதுக்கு எதாச்சும் வந்துட போகுது…” என சொல்லிவிட்டு அவர் குடித்த கப்பை வாங்கிக்கொண்டு சென்றார் சரஸ்வதி.
“நீ என்ன இங்க பார்த்துட்டு இருக்க? படி…” என்று மனைவியின் மேல் வந்த கோபத்தை மகளிடம் காண்பிக்கவும் முடியாமல், காண்பிக்காமல் இருக்கவும் முடியாமல் ஒருவித குரலில் கூற தலையசைத்தாள் நிதர்ஷனா.
ஐந்து நிமிடம் சென்றிருக்கும், கணேசனின் அலைபேசி சப்தம் தர எடுத்து பார்த்தவர்,
“மறந்தே போய்ட்டேன் பாரேன்…” என்றபடி அழைப்பை ஏற்று காதில் வைத்துக்கொண்டே மகளை படிக்கும்படி கையசைத்துவிட்டு நகர்ந்து சென்றார்.
நிதர்ஷனாவிற்கு அப்போது தான் நிம்மதி பெருமூச்சே எழும்ப அப்படியே பேசிவிட்டு மெல்ல வரட்டும் என தானும் லேசாய் சாய்ந்து அமர்ந்தாள்.
“தர்ஷி…” என்ற காட்டு கத்தலுடன் மீண்டும் ஐந்து நிமிடத்தில் மகள் முன் ருத்ரமூர்த்தியாக நின்றார் கணேசன்.