நிதர்ஷனாவை காரினருகே அழைத்துவந்தவன் பாலாஜியின் அதிர்ந்த முகம் கண்டு தலையசைத்து வாயில் விரல் வைத்தான் திருமொழி.
“நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை…” என பாலாஜியிடம் சொல்லிவிட்டு காரில் ஏற இன்னும் தேம்பியபடியே தான் இருந்தாள் நிதர்ஷனா.
திருமொழியின் கைகளை விடவே இல்லை. அத்தனை இறுக்கம். விட்டால் எங்கும் சென்றுவிடுவானோ என பயத்துடன் இருந்தவள் மேல்மூச்சு வாங்க அவனை பார்க்கவும் முன்னிருந்தவர்களை பார்க்கவுமாக இருந்தாள்.
இன்னும் நம்ப முடியவில்லை. கனவாகிவிடுமோ என மருண்டு சட்டென திருமொழியின் கையை கிள்ளி வைத்துவிட,
“ஸ்ஸப்பா…” என்று கையை தேய்த்துவிட்டவன் பாவனையில்,
“நிஜமா தான்…” என்று சொல்லியவளால் புன்னகைக்கவும் முடியவில்லை.
“கனவில்லை…” என்று அவனின் கையை இன்னுமே பற்றிக்கொள்ள கண்ணீர் நிற்கவில்லை.
“என்னாச்சுப்பா திரு?…” என முன்னே அமர்ந்திருந்த இளங்கோவன் கேட்க,
“எதுவுமில்லை ப்பா…” என்றவன் தனக்கருகில் இருந்த பாலாஜியை பார்க்கவே இல்லை.
“நான் கவனிக்கலை…” என சிரிப்புடன் பாலாஜி சொல்ல திருமொழி முகத்திலும் புன்னகையே.
“வலிச்சிருச்சா?…” என அதற்கும் பாவமாய் கேட்ட மனைவியை தோளில் சாய்த்துக்கொண்டவன் எதுவும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டான்.
இன்னுமே தான் மீண்டு வந்த நிகழ்வில் அவனுமே அல்லாடித்தான் போயிருந்தான் திருமொழி.
வீடு வரும்வரை அசாத்திய மௌனம் அந்த வாகனத்தினுள். யாரும் எதுவும் பேசவில்லை. கேட்டுக்கொள்ளவில்லை.
வீட்டினுள் சென்றவன் என்னவென கேட்கும் முன் ‘டூ மினிட்ஸ்’ என வேகமாய் குளியலறை புகுந்துகொண்டான்.
“நிது நீ அவனுக்கு எதாச்சும் சாப்பிட ரெடி பண்ணும்மா…” என்று சொல்ல அவள் அறைக்குள் கணவனுடன் செல்லமுடியாமல் நின்றாள்.
“நீ போடா நிது. வந்து பார்த்துக்கலாம். திருவுக்கு என்ன வேணும்ன்னு பாரு…” என அவளை அனுப்பி வைத்த பாலாஜி,
“தவிச்சு போய் நிக்கிறா. எதுவும் வேணும்னா வெளில ஆடர் பண்ணிக்கலாம் மாமா…” என சொல்லியவன் அப்போது அனைவருக்கும் குடிக்க சூடாக தயாரிக்க செல்ல இளங்கோவனும் அவனுடன் சென்றார்.
திருமொழியை காணவில்லை என புகார் கொடுக்க சென்ற இடத்தில் திருமொழி நண்பன் குடும்பம் கிளம்பி சென்றிருக்க அவர்களுக்கு அழைத்து விவரம் சொல்ல மறுநாள் புகாரை திரும்பி பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் அவன்.
மாலை தான் வந்து பார்ப்பதாக சொல்லி வைக்க அதற்குள் பாலாஜி டீ போட்டு முடிக்க நிதர்ஷனா மூடப்பட்டிருந்த குளியலறை கதவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நிது போன்…” என அழைத்தபடி வந்துவிட்டான் பாலாஜி.
ஸ்வாதி தான் அழைத்திருந்தாள் கணவனுக்கு. அவன் பேசிவிட்டு நிதர்ஷனாவை அழைக்க கணவன் குளித்துவிட்டே வரட்டும் என வெளியே வந்து போனை வாங்கினாள்.
“என்னண்ணி? என்ன பண்ணி வச்சிருக்கீங்க எங்க அண்ணனை?…” என்று ஸ்வாதி சிரிப்புடன் கேட்க,
“இன்னும் பேசவே இல்லை. குளிக்கிறாங்க ண்ணி…” நிதர்ஷனா அவள் என்ன கேட்க வருகிறாள் என்றே தெரியாமல் பதில் கூறினாள்.
“அடடா, நான் அதை கேட்கலை. இருந்தாலும் காலேஜ் சேர்மன் செய்யிற வேலையா இது?…” என்று கிண்டல் பேச,
“அண்ணி எனக்கு புரியலை…” என்றாள் நிதர்ஷனா.
விழிகள் அறையின் வாசலையே தவிப்பும், தேடலுமாய் வட்டமிட்டது. இதில் அவன் உள்ளே இருக்கின்றான் என நொடிக்கொருதரம் உறுதிப்படுத்திக்கொண்டாள்.
ஸ்வாதி சொல்வது எல்லாம் மூளையில் ஏறவே இல்லை. குளியலறை கதவு திறந்துகொண்டதும் திருமொழி வெளியே வர,
“அண்ணி நான் அப்பறமா பேசட்டுமா?…” என கேட்டவள் குரலில் ஸ்வாதியே அழைப்பை துண்டித்தாள்.
சங்கவை அங்கே பரிதவித்தபடி இருந்தார். மகனுக்கு என்ன நடந்தது என கேட்டு தெரிந்துகொள்ளும் வேகம் அவரை இழுத்தாலும் பேசட்டும் என அமைதி காத்தார்.
இதில் பாலாஜி அனுப்பிய வீடியோ ஸ்வாதி மூலம் ஸ்ரீதர், பிரகாஷிற்கும் சென்றது.
பார்த்தவர்களுக்கு அப்போது தான் மூச்சே வந்ததை போலிருந்தது. அதில் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தங்கையின் தேடலும், கண்ணீரும், கதறலும் மட்டுமே.
தெரியாத நாட்டில் எத்தனை பயந்திருப்பாள்? இன்னும் விஷயம் வீட்டிற்கு தெரியப்படுத்தப்படவில்லை.
“வாயை மூடிட்டு அப்படியே இருங்க அண்ணனும், தம்பியும். அப்பறம் இங்க இருக்கறவங்களுக்கு பிரஷர் ஏறும்…” என மெர்லின் ஒரே அதட்டல் தான்.
கணேசன், சரஸ்வதியிடம் எதையும் சொல்லவேண்டாம் என முடிவுக்கு வந்துவிட்டனர்.
தங்கையின் அழைப்பு வருவதற்கு காத்திருக்க அங்கே திருமொழியை பார்த்ததும் சகலமும் மறந்து அவனிடம் சென்று ஒண்டிக்கொண்டாள் நிதர்ஷனா.
“ஹோய் தர்ஷி, இன்னுமா உனக்கு பயம் போகலை?…” என சிரித்தான் திருமொழி.
“நான் அழறேன். நீங்க சிரிக்கறீங்க…” என அவன் நெஞ்சில் அடிக்க,
“சரி சரி. சிரிக்கலை. நானும் அழவா?…” என கிண்டலாக கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“இன்னும் ஒருதடவை…” என்று சுட்டுவிரல் காண்பித்து கேட்க,
“என்னடா?…” என்றான் திருமொழி அவளின் கன்னம் தாங்கி.
“லைட்டா…” என சொல்லி அவனின் மீசையை பிடித்து இழுத்து,
“கனவில்லை…” என்று சொல்லி கலக்கம் குறைந்து புன்னகைக்க,
“ப்ரெட் எடுத்துக்கோ. ஒழுங்கா சாப்பிடவே இல்ல போல?…” என்று சொல்ல இளங்கோவன் மகனை புருவம் உயர்த்தி பார்த்தார்.
நிதர்ஷனாவிடம் அவன் முகமே வேறு என்பதை சிலநேரங்களில் அவர் உணர்ந்ததுண்டு தான்.
ஆனால் கண்கூடாக அவர் கண்டது இங்கே தான். அதட்டலுடன் எவ்வளவு அக்கறை என புன்னகையுடன் பாலாஜியை பார்க்க அவன் இதையும் வீடியோ எடுத்து அனுப்பிக்கொண்டிருந்தான்.
மகன் டீயை பருகி முடிக்கும் வரை தாங்கள் வந்ததை பற்றி சொல்லியவர் அவனிடம் கேட்க,
“ப்ச், அன்னைக்கு நான் போயிருக்கவே கூடாது….” என்றான் நெற்றியை பிடித்தபடி.
“இங்க கூட படிச்ச ப்ரெண்ட் அவனோட பேக்டரிக்கு இன்வைட் பண்ணியிருந்தான். என்னால இப்ப தான் போகமுடியும். இன்னொருதடவை அங்க போறது கஷ்டமேன்னு கிளம்பி போனேன். கொஞ்சம் லாங். அதான் தர்ஷியை கூட்டிட்டு போகலை…” என அவளை திரும்பி பார்த்தவன்,
“சாப்பிட்டுட்டே கேளு…” என்றான் முறைப்புடன்.
“நீ தான் சாப்பிடேன் ம்மா…” என பாலாஜியே சொல்ல நிதர்ஷனாவிற்கு தொண்டையில் இறங்கினால் தானே?
திருமொழியின் பின்னந்தலையில் தான் அவளின் பார்வை எல்லாம். எப்படி அடிபட்டிருக்கும்? காயம் ஆழமோ? எதனால் அடி? இப்படி யோசித்துக்கொண்டிருந்தாள்.
“அங்க போய்ட்டு அவனை மீட் பண்ணின இடத்துல ஒரு ஆக்ஸிடன்ட். அது கெமிக்கல் பேக்டரி. மிஸ் பயராகி பிரச்சனையாகிருச்சு. அந்த இடிபாடுல தப்பிக்க முயற்சி பண்ணி வெளில வரதுக்குள்ள மயங்கிட்டேன். போன் மிஸ்ஸாகிருச்சு…”
“அன்கான்ஷியஸாகிருப்பேன் போல. மூணு நாள் ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தேன். நிறையபேருக்கு இஞ்சூரியாகிருச்சு. நினைவு திரும்பின அப்பறம் தான் என்னால கிளம்பி வரவே முடிஞ்சது. வர வழில கால் பண்ணா வீட்டுல யாரும் கால் எடுக்கலை. அதான் நேர்ல பார்ப்போம்ன்னு உடனே கிளம்பிட்டேன்….”
“ஏர்போர்ட் கிட்ட வந்து திரும்ப கால் ட்ரை பண்ணலாம்ன்னு இறங்கினப்போ தான் தர்ஷியை பார்த்தேன்…” என்று அவன் அத்தனை இலகுவாய் சொல்ல ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தாள் நிதர்ஷனா.