அந்த விபத்தில் மட்டும் அவனுக்கு எதுவுமாகியிருந்தால்? நினைக்கவே குலை நடுங்கியது. கையில் வைத்திருந்த கப்பை இறுக்கமாய் அவள் பிடித்துக்கொள்ள திருமொழி திரும்பி பார்த்தான்.
“முடிஞ்சதா?…” என கேட்க,
“ம்ஹூம்…” என்று சொல்லியவள் விழிகள் அவனின் தலையை பார்த்தது.
“சரிப்பா நாங்க போய் கேஸை வாபஸ் வாங்கிட்டு வரோம்…” என இளங்கோவன் சொல்ல,
“மாமா நாளைக்குன்னு தானே மச்சானோட ப்ரென்ட் சொன்னார்?…” என பாலாஜி கேட்க,
“இருந்தாலும் போவோம் மாப்பிள்ளை. நாளைக்கு வரைக்கு எதுக்கு வெய்ட் பண்ணனும்? திரு வந்தாச்சு அடுத்து ஊருக்கு போறதை பத்தி யோசிப்போம். அங்க அப்படியே போட்டுட்டு கிளம்பி வந்துட்டோம்…” என்றார்.
“ஹ்ம்ம், ஆமா கிளம்புவோம்…” என்று நிதர்ஷனா முடிக்கும் முன்,
“மாமா ஊருக்கு போறதை பத்தி நைட் வந்து பேசிப்போம். வந்ததும் வந்துட்டோம். இப்ப சின்னதா ஒரு ஷாப்பிங் முடிச்சிருவோம். அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் அதுக்குள்ள…” என மாமனாரை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் பாலாஜி.
“திரு சாப்பாடு எங்களுக்கு வேண்டாம். நீங்க ஆடர் பண்ணிக்கோங்க…” என்று சொல்லி கதவை சாற்றிவிட்டு செல்ல இன்னும் நிதர்ஷனாவின் முகத்தில் மிரட்சி.
அவர்கள் இருவரும் செல்லவும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த திருமொழி கதவை பூட்டிவிட்டு வந்து மனைவியின் மடியில் தலைசாய்ந்தான்.
“போச்சு, காயம் வலிக்கும். எழுந்திருங்க…” என அவள் எழுந்துகொள்ள பார்க்க இடையோடு கையிட்டு வளைத்துக்கொண்டவன்,
“எனக்கே வலிக்கலை. உனக்கென்ன? கொஞ்ச நேரம் இரு தர்ஷி…” என சொல்லி அவளின் வயிற்றோடு முகம் புதைதத்தவன்,
“சும்மா காயத்தையே பார்க்காம என்னை பாரு. உனக்காக முழுசா திரும்பி வந்திருக்கேன். அதை யோசிக்கமாட்டியா?…” என்றான் தன் முகம் நிமிர்த்தி.
சில நொடிகள் அவனின் முகத்தில் விழிகளை பதித்தவள் கெஞ்சுதலாய் பார்த்தாள்.
“நாம ஊருக்கு போவோமே. எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு…” என்று சொல்ல,
“நோ…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டவன் படுக்கையறை செல்ல,
“எங்க போறீங்க? விட்டுட்டு போறீங்க…” என ஓடிவந்து பின்னிருந்து அவனை அணைத்துக்கொள்ள திருமொழியின் முகத்தில் மந்தகாச புன்னகை.
“முன்னாடி வா தர்ஷி…” என தன் முன் அழைத்து அவள் தோளில் கைகளை மாலையாக்கியவன்,
“எங்கயும் போகலை. போகவும் மாட்டேன். ஆனா நீ புரிஞ்சுக்கோ. உன்னோட இந்த டைம் எனக்கு வேற எப்பவும் கிடைக்காது. அதை நான் மிஸ் பண்ணவும் மாட்டேன்….” என இன்னும் தனக்கு நெருக்கமாய் கொண்டுவந்தவன்,
“அப்பாவும், பாலாஜியும் கிளம்பட்டும். இந்த பேட் மெமரீஸ்ஸோட நாம கிளம்ப வேண்டாம்…” என்றான்.
“திரும்பவும் ப்ரெண்ட்ஸ் கூப்பிட்டா என்னை தனியா விட்டுட்டு கிளம்பிருவீங்க…”
“நிச்சயமா இல்லை…”
“எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா?…” என மீண்டும் விசும்பியவளின் மீதான அணைப்பை இறுக்கியவன்,
“ஆமா, நீ என்ன இந்த நேரம் தூங்காம வெளில வந்திருந்த? அப்போ இனி பகல்லையும் நீ தூங்கமாட்ட. ரைட்?…” என்று சீண்டலுடன் கண் சிமிட்டி திருமொழி கேட்க அவனின் அதட்டலிலும் முறைப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டுகொண்டிருந்தாள் நிதர்ஷனா.
அவன் பேச பேச அவனின் முகத்தில் தான் அவள் கவனம் எல்லாம். ஆசையும், ஆர்வமுமாய் பார்த்துக்கொண்டிருந்தவளை கைகளில் அள்ளிக்கொண்டவன்,
“இன்னொரு கிளாரிபிகேஷன் தர்ஷி. எங்கயும் தனியா போக கூடாதுன்னா? எங்கையுமா? யூ மீன்…” என்று புன்னகைக்க,
“அச்சோ…” என அவன் சொல்லியதன் பொருளில் சிவந்து சிலிர்த்து அவன் கழுத்தில் கை கோர்த்து முகத்தை மறைத்தாள்.
“அப்பறம் என்னவோ சொல்லி கூப்பிட்டியே? திரும்ப சொல்லு கேட்போம்…” என கையில் அவளை ஏந்தியவாறே கட்டிலில் அமர்ந்தவன் தன் மடியோடு சேர்த்தணைத்துக்கொண்டான்.
“என்ன சொன்னேன்?…” நிதர்ஷனா யோசிக்க,
“மொழி…” என்றான் திருமொழி அவளின் மூக்கில் மென்மையாய் இதழ் பதித்து.
“அதுமட்டுமில்லை, இங்க இங்க இங்க எல்லாம்…” என அவளின் முத்தங்களை திருமொழியும் திருப்பி படித்துக்கொண்டிருக்க அதில் நெகிழ்ந்து குழைந்தாள்.
இந்த அணைப்பும், அருகாமையும் எங்கே மீண்டும் கிடைக்காமலே போய்விடுமோ என அவள் அஞ்சிய நிமிடங்கள் எல்லாம் இன்னும் மனதின் ஓரிடத்தில் கனமாய் நின்றது தான்.
ஆனாலும் இந்த நிமிடம் அவன் தன்னிடம் சேர்ந்துவிட்டத்தில் பேருவகை கொண்டிருந்தவள் சுபாவமும் திரும்பியிருக்க முகமெல்லாம் அகத்தின் நிறைவு.
“எங்க? மொழி சொல்லு….” என்றான் திருமொழி முகம் கொள்ளா புன்னகையுடன்.
“ம்ஹூம், நீங்க பெரியவங்க. கூப்பிடக்கூடாது…” என கண் சிமிட்டி குறும்புடன் நிதர்ஷனா சொல்ல,
“அடிங், நான் என்ன வயசனவனா? கொழுப்புடி உனக்கு…” என்றவன் அவள் இடையில் அழுத்தம் கூட்டினான்.
“ஆமா, நீங்க என்னை விட வயசு தானே? அதான் பேர் சொல்லமாட்டேன்…”
“அத்தனை பேர் பார்க்க மட்டும் சொன்னியே. அதென்ன?…” என்றதும்,
“அதுவா, அது வேற. பயத்துல வந்திருச்சு. இப்ப மாட்டேன், மாட்டேன்…” என பிடிவாதம் பிடிக்க,
“அப்போ திரும்ப நான் இல்லைன்னா சொல்லுவ?…” என கேட்டதும் அவனின் வாயில் சப்பென்று ஒரு அடி வைத்தவள்,
“நான் வேணா போயிறவா?…” என துரிதமாய் கொண்டுவிட்ட ஆவேசத்துடன் அவனின் வாயில் மீண்டும் அடித்தவள் கண்ணில் நீர் ததும்பிவிட்டது.
“தர்ஷி…” என அவளின் கன்னம் பற்ற போனவனின் கையை தட்டிவிட்டவள்,
“எதுவும் சொல்லவேண்டாம். நீங்க திரும்ப எல்லாம் அப்படி போனா திரும்பி வரும்போது நான் இருக்கமாட்டேன். போதுமா? போதுமா?…” என்றவள் அவனின் மார்பில் விழுந்து கதற திருமொழியின் சமாதானங்கள் எதுவும் எடுபடவில்லை.
விளையாட்டாய் சொல்லிய ஒரு வார்த்தை அவளின் காயங்களை கீறிவிட ஒவ்வொரு நாளும் தனிமையில் அங்கே தான் தவித்ததை சொல்லி சொல்லி தீர்க்க தீராதது அவனின் தவிப்பு தான்.
அதன்பின்னர் வெகுநேரம் அவளின் பேச்சுக்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்க அத்தனையும் திருமொழியின் கைவளைவில்.
நிதர்ஷனாவின் ஒவ்வொரு வார்த்தைகளையும் அவனை பிடித்திருந்த அவளின் கைகளும் பிரதிபலித்தது.
இறுக்கமும், தளர்வும், கோபமும் என அத்தனை உணர்ச்சிகள். எதிலும் அவன் இடையிடவில்லை.
எல்லாம் கொட்டி தீர்க்கட்டும் என்பதை போலிருக்க பேசி பேசி ஓய்ந்து இறுதியில் அங்கிருந்தாலே இப்படித்தான், கிளம்புவோம் என்று ஆரம்பித்துவிட்டாள்.
இனி விட்டால் இன்னும் அதற்குள்ளே தான் சுற்றுவாள் என தன்னை சுற்றவைக்க ஆரம்பித்த திருமொழி மொழி எல்லாம் அவள் வாசகமானது.
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இருவரின் வாழ்வியல் திருவாசகமாய் பொறிக்கப்பட்டது.
மனைவியை இயல்பாக்க முனைந்து இறுதியில் அவன் தான் தளர்ந்து கலங்கி அவள் தேடலில் முற்றிலும் தொலைந்து போனான்.
இளங்கோவனும் பாலாஜியும் இரவு வந்துவிட மறுநாள் அவர்களை மட்டும் வழியனுப்ப கிளம்பியவன் கையை அவர்களுடன் வந்த நிதர்ஷனா சுரண்டி அழைத்தாள்.
“இதை மாத்தவே மாட்டியா?…” என அவள் புறம் திரும்பி கேட்க,
“நாமளும் ஊருக்கு போவோமா?…” என மீண்டும் பழைய பல்லவியை துவங்க அழுத்தமாய் பார்த்தான் திருமொழி.
“நீ இப்பலாம் பகல்ல தூங்காம நைட்ல தூங்கிட்டு வர. அதனால நம்ம நாட்டு டைம்க்கு தூங்க பழகு. உடனே கிளம்பலாம்….” என விஷமமாய் முடித்துவிட்டான் திருமொழி.
அவன் முகமெல்லாம் ரகசிய புன்னகை இருக்க பதில் சொல்லமுடியாமல் விழித்தாள் நிதர்ஷனா.
“என்னம்மா அழற மாதிரி நிக்கிற? பேசாம எங்க கூட வாயேன்?…” என பாலாஜி வேண்டுமென்றே கேட்க,