நிதர்ஷனா கன்னத்தில் வைத்தபடி அந்த லேப்டாப்பின் திரையை வெறித்துக்கொண்டிருக்க திருமொழிக்கு பொறுமை பறந்தது.
“அதான் பார்த்தாச்சுல. குடு…” என தன் பக்கம் திருப்ப முயன்றான்.
“எனக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலையே?…” என்றவளை பெருமூச்சுடன் பார்த்தவன்,
“எனக்கு வேலை இருக்கு தர்ஷி. யுஎஸ் போய்ட்டு வந்ததுல இருந்து நிறைய பார்க்கனும்…”
“அதான் வந்ததும் காலேஜ் போயாச்சே?…” என்று முனங்க,
“வாட்?…” என்றான் சிரிப்புடன் அவளை நெருங்கி.
தேனிலவு முடிந்து நான்கு நாட்களுக்கு முன்பு தான் இருவரும் ஈரோடு வந்து சேர்ந்திருந்தனர்.
வந்ததிலிருந்து திருமொழிக்கு ஓய்வென்பது இல்லை. கல்லூரியில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியிருந்தது.
அதில் நிதர்ஷனாவுடன் கூட நேரம் செலவழிப்பது குறைந்து போனது. பதினைந்து நாட்கள் தேனிலவில் மனைவியை முழுமையாய் தன்னுடனே கைக்குள் வைத்துக்கொண்டவனால் இங்கேயும் அதை தொடர முடியாதே?
ஆனால் அவள் எதிர்பார்த்தாள். எதிர்பார்க்கிறாள். எதிர்பார்க்க வைத்துவிட்டான். இதை தானே அவனுமே விரும்பியது.
தன்னோடு தேனிலவுக்கே வரமாட்டேன் என்ற பெண். நினைக்கையில் அப்படி ஒரு புன்னகை அவன் முகத்தில்.
அன்றும் வழக்கம் போல வீடு வந்து சேர்ந்தவன் இரவு உணவை முடித்துக்கொண்டு வந்து லேப்டாப்பை எடுத்திருக்க நிதர்ஷனா வங்கி தேர்வுக்கு படிக்க அமர்ந்திருக்க திருமொழி கண்ணில் என்னவோ உறுத்தியது.
“தர்ஷி, என்னன்னு பாரு. கண்ணு உறுத்துது…” என அவன் கண்ணை கசக்கவும் வந்து காற்றை இழுத்து ஊதிவிட்டவள்,
“நல்லா நிமிர்ந்து பாருங்க…” என அவன் முகம் நிமிர்த்தி லேப்டாப்பை நகர்த்திவிட்டு மீண்டும் கண்ணை கவனித்தாள்.
“ஹ்ம்ம், ஓகே பெட்டர்டா…” என சொல்லியவன் நன்றாக கண்ணை சிமிட்டி பார்த்துவிட்டு திரும்ப மனைவி திகைத்து அமர்ந்திருந்தாள்.
“ஹோய் தர்ஷி, என்னாச்சு?…” என அவளின் தலையில் லேசாய் குட்டு வைத்து லேப்டாப்பை இழுக்க,
“என்ன இது?…” என்றாள் நிதர்ஷனா அதனை காண்பித்து.
“பார்த்தா தெரியலை?…” அத்தனை இலகுவாய் கேட்டவன் அதை எடுக்க,
“இருங்க இருங்க. இன்னும் ஏன் எதுவும் என்கிட்ட சொல்லமாட்டேன்றீங்க? கல்யாணமாகி இவ்வளோ நாளாச்சு. இப்ப வரைக்கும் இந்த போட்டோ உங்க லேப்டாப் ஸ்க்ரீன்ல இருக்குன்னே நான் பார்க்கலை…” என பாவம் போல உதட்டை பிதுக்க,
“ஒன்னும் வேண்டாம். வேண்டாம்…” என தள்ளிவிட்டு லேப்டாப்பை தன் அருகில் வைத்துக்கொண்டாள்.
“எனக்கு தெரியும் உங்களுக்கு பிடிச்சு தான் என்னை கல்யாணம் செஞ்சீங்கன்னு. நீங்க தான் என்னை பொண்ணு கேட்க சொன்னது. இது எல்லாமே எனக்கு தெரியும்…”
“வாவ் குட்…” என்றான் அதற்கும் அலட்டிக்கொள்ளாமல்.
“ஆனா என்கிட்ட நீங்க சொல்லலை…” என்று முகத்தை சுருக்க,
“தெரிஞ்சதை என்ன சொல்ல? ஹ்ம்ம், ஆமா என்னை அவ்வளோ பேசின பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்க தோணினதும் உன் விவரம் தேடினேன். இந்த போட்டோ கிடைச்சது. இந்த பிக் பார்க்கும் போது இந்த பொண்ணா அவ்வளோ பேசுச்சுன்னு ஒரு தாட். அப்ப கோவமும் கூட…”
“ஆனா அதுலயும் உன்னோட எச்சரிக்கை இருக்கு பாரேன். ரொம்ப பிடிச்சது அதுதான். நீ சொன்ன விதம் வேணா தப்பா இருக்கலாம். ஆனா எல்லாருக்கும் ஒவ்வொரு பாயின்ட் ஆஃப் வியூ இருக்கும். ஒபீனியன் இருக்கும். உன் விருப்பம் நீ சொல்லிட்ட. நான் அம்மாவை தான் சத்தம் போட்டேன் ஏன் கேட்டீங்கன்னு…”
“அந்த விஷயம் அப்பவே முடிஞ்சது. அதுக்கப்பறம் அதை மனுசக்குள்ள கொண்டுவர வேண்டாம்ன்னு விட்டுட்டேன். ஆனா நீ எங்க விட்ட? சும்மா, சும்மா என் கண்ணுல பட்டுட்டே இருந்த…” என அவளின் கன்னம் கிள்ள அவனின் மனதின் ஆழத்தை ஆர்வமாய் கேட்டாள் நிதர்ஷனா.
“உண்மையை சொல்லனும்ன்னா நான் கவனிச்சு பார்த்த முதல் பொண்ணு நீ. இனி உன்னை கவனமா கவனிக்கவே கூடாதுன்னு நினைச்சு அந்த கவனம் தப்புன்னு ஒதுக்கி தள்ளினாலும் என் மனசு என் பேச்சை கேட்காம போனது அப்போ தான். விருப்பம்ன்னு நினைக்கலை. ஆனா அம்மா திரும்ப அலையன்ஸ் பார்க்கும் போது தான் ஜெர்க்காச்சு. உன்னை தான் ரொம்ப தேடினேன்…”
“உனக்கு படிப்பு முடியனும். நான் என்ன காரணம் சொல்லி வேண்டாம்ன்னு சொன்னேனோ அதுவே எனக்கு தடையா இருந்தது. அதான் வெய்ட் பண்ணினேன். திரும்ப உன்னையே கேட்கவும் சொன்னேன். கேட்டு உங்க வீட்டுல சரின்னு சொல்லி நிச்சயம் பண்ணவும் தான் இந்த பிக்சரை நான் சேவ் பண்ணிக்கிட்டதே…” என்றான் திருமொழி.
“ரொம்பத்தான் சேர்மனா இருந்திருக்கீங்க நீங்க…” என்று சிரித்தவள்,
“இதை என்கிட்டே சொல்ல இவ்வளோ கஷ்டம்…” என உடனே உதட்டை சுளிக்க,
“கொழுப்புடி. ரொம்ப கெஞ்சி கேட்டியேன்னு சொன்னா…” என அவளின் மூக்கை பிடித்து திருகினான்.
“நான் கெஞ்சினேனா?…” என்று அவனின் கையை எடுத்தவள்,
“இன்னொரு விஷயம் சொல்லனும்….” என்றாள்.
“என்ன?…” என்றவன் அவள் தன் மீது வைத்த கவனத்தில் லாவகமாய் லேப்டாப்பை எடுத்துக்கொண்டான்.
“அந்த போட்டோ வேண்டாமே. நான் வேணா வேற போட்டோ தரவா?…” என திருமொழி முகம் பார்க்க,
“ஏன் இந்த போட்டோவுக்கு என்ன?…” என்றான் அவளின் எதிர்பார்ப்பு தெரிந்து தனக்குள் சிரித்துக்கொண்டே கவனிக்காததை போல.
“இல்ல அது நான் ப்ளஸ் டூ படிக்கும் போது எடுத்த போட்டோ. பாருங்க எவ்வளோ குட்டியா இருக்கேன்னு…”
“இப்ப மட்டும் வளர்ந்துட்டியா என்ன?…” என்றவன் கிண்டலில் சுருசுருவென்று வந்தது அவளுக்கு.
“இப்ப நான் ரொம்ப மெச்சூர்ட். தெரியுமா?…”
“அதான் யுஎஸ்ல என்னை காணும்ன்னு வீட்டுக்குள்ளயே உக்கார்ந்து அழுதியாக்கும்?…” என்று சொல்லவும் மௌனமாகிவிட்டாள் நிதர்ஷனா.
அந்நினைவுகளை மட்டும் மறக்க முடியவில்லை. அந்த மூன்றுநாட்கள் தன் வாழ்க்கையில் வராமலே போய்விடலாம் என்று நினைக்காத நாளில்லை.
இப்போது அதனை திருமொழி ஞாபகப்படுத்தியதும் முகத்தில் உற்சாகம் குறைந்து போனது.
“ஹோய் உடனே ப்யூஸ் போன பல்ப்பாகிடுவியே. உனக்கு எப்படியோ அந்த மூணுநாள் நீ என்னை தேடின பாரு. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் அது…” என்று கண் சிமிட்டியவன்,
“நான் விரும்பி கல்யாணம் பண்ணினாலும் நீ அப்படி இல்லையே. அப்போ என்னளவு உன்கிட்ட நானும் எதிர்பார்ப்பேன் தானே? அது அப்போ தான் கிடைச்சது. அந்த சூழ்நிலைக்காக கடவுளுக்கு தேங்க்ஸ்…” என்று சிரிக்க,
“இதை தான் சொன்னேன், இப்பவும் நீ இன்னும் வளரலைன்னு…” என கிண்டல் பேச,
“ப்ச், இது போதும். நீங்க சொல்லுங்க. இந்த போட்டோ வேண்டாம். வேற வைங்க…” என குரல் உயர்த்த,
“பார்ரா, மாத்த முடியாது. என்ன செய்வ?…” என்றான் திருமொழி திமிரழகுடன்.
“என்ன செய்யறதா?…”
“இந்த போட்டோ பார்த்தா தான் நீ என்னை கேட்ட கேள்வி எல்லாம் ஞாபகத்துலையே இருக்கும். அதான் அந்த ஞாபகார்த்தத்துக்கு தான் வச்சிருக்கேன். என்னோட பர்ஸ்ட்வொய்ப் பத்தி ஞாபகம் இருக்கனும் இல்லையா?…” என்று அவளை சீண்டிக்கொண்டே இருந்தான் திருமொழி.
தேனிலவிலும் வெளியில் சென்ற இடங்களில் கூட இதையே தான் செய்தான். ‘என் வொய்பை தேடுறியா தர்ஷி?’ என பாடாய் படுத்திவிட்டான் அவன்.
அந்த சீண்டல் அவளின் வாழ்நாள் முழுவதும் தொடரும் என அறிந்துகொண்டவள் அந்த நேரங்களில் விழி பிதுங்கி பார்க்கும் அழகிற்கே திருமொழி வம்பிழுப்பதை வாடிக்கையாக்கி இருந்தான்.
“முகத்தை சாதாரணமா வச்சுக்கிட்டே எவ்வளோ பேசறீங்க? நான் போறேன்…” என உடனே எழுந்துகொள்ள,
“உதை வாங்குவ. நான் என் வொர்க் முடிக்கிற வரைக்கும் படி. எக்ஸாம் எப்ப வேணா இருக்கும்…” என்று அதட்டி அருகில் அமர வைத்துக்கொண்டான் திருமொழி.
கணேசன் பார்த்த வேலையை இப்போது திருமொழி தன் கையில் எடுத்துகொண்டான்.
“நமக்கு தான் இத்தனை இருக்கே? எதுக்குப்பா நம்ம பொண்ணு எக்ஸாம் எழுதி வெளில வேலைக்கு?…” என இளங்கோவன் கேட்க,
“ஆமா, பாப்பா பாவம்ப்பா…” என்றார் சங்கவையும்.
இருவரும் நிதர்ஷனாவை பார்த்துக்கொண்டே அவனிடம் பேச அங்கே நின்றிருந்தவளை முறைத்தான் திருமொழி.
“நான் எதுவுமே சொல்லலை. நிஜமா…” என நிதர்ஷனா வேகமாய் சொல்ல,
“அப்பறம் என்ன? போய் படி…” என்றவன் சத்தத்தில் புத்தகத்தை தூக்கிக்கொண்டு மாடியேறிவிட்டாள்.
“இப்ப என்ன அவ படிக்கனும், அதானே? வேணும்ன்னா மேல படிக்க வை. பேங்க் எக்ஸாம் எல்லாம் எதுக்கு? பேசாம ரத்னாக்கிட்ட கூட இருக்க சொல்லி நிர்வாகம் சொல்லி குடு. இல்லை நீயே ட்ரெய்ன் பண்ணு…” என இளங்கோவன் சொல்லிக்கொண்டே மகனை பார்க்க இருவரையும் மௌனமாய் பார்த்தான் திருமொழி.
“இதெல்லாம் எனக்கு தெரியாதா? நம்ம காலேஜ்க்கு படிக்க வரது இனி சரிப்படாது. வேலைக்குன்னா அது இன்னும் தப்பு. நிர்வாகம் கத்துக்க முதல்ல நிதர்ஷனாவுக்கு இன்னும் வெளி உலகம் தெரியனும்…” என்றவன்,
“ரத்னா பெரியம்மாக்கிட்ட விட்டாலும் சரி, நான் ட்ரெயின் பண்ணினாலும் சரி ஒன்னு அவளுக்கு ரொம்ப சிரமம் இல்லாம பார்த்துப்போம். இல்லைனா நான் அவளை ஹர்ட் பன்ற மாதிரி ஆகிடும். ரெண்டும் வேண்டாம். வெளிலன்னு வேலைன்னு பார்த்தா எல்லாமே தானா கத்துப்பா….” என்றான் திருமொழி.
“நீ அப்படி சொல்றியாப்பா?…” என்று இளங்கோவன் யோசித்தார்.
“அவளும் பொறுப்பான பிள்ளைப்பா. வீட்டுலையும் நம்ம கிட்டயும் தான் விளையாட்டுத்தனம். மெருகேத்தினா போதும், நல்லா வளர்ந்து வருவா. நம்ம காலேஜ்ல ஒரு போஸ்ட்டிங்ல நிதர்ஷனா வரும்போது சின்ன குறை கூட இல்லாம ஆளுமையோட கம்பீரமா வரனும்…” என்றான் திருமொழி.
“புரியுதுப்பா…” இளங்கோவனுக்கு மனது நிறைந்து போனது.
எத்தனை கண்டிப்பு இருந்தாலும் அதிலும் நிதர்ஷனா தன்னிடம் இயல்பை தொலைக்காமல் இருக்க பார்த்துக்கொண்டான் திருமொழி.
இதோ வங்கி தேர்விற்கு அரசாங்கம் விளம்பரம் தந்திருக்க முழுமூச்சில் நிதர்ஷனா படிக்க கணேசன் மகளை கேட்டுக்கொண்டே இருந்தார்.
“ஸ்யப்பா இந்த அப்பாவும், சேர்மனும் படுத்தறாங்க….” என தலையை பிடித்துக்கொள்ளாத குறை தான் நிதர்ஷனா.
‘மொழி உங்க மேல கோவம்’ என அவளின் நாட்குறிப்பில் சின்ன எழுத்துக்களில் பதிவு செய்பவள் சந்தோஷம் என்றால் மொழியை முத்தங்களால் நிரப்பிவிடுவாள் அந்த நாட்குறிப்பில்.
ஒருவழியாக தேர்வுக்கு கணேசன் அழைத்து செல்வது என்று முடிவாக காலை திருமொழி சொல்லி அனுப்பினான்.
“ரிலாக்ஸா எழுதனும். ஏதாவது தெரியலைன்னா சும்மா பதட்டப்பட கூடாது. தெரிஞ்ச கேள்விக்கெல்லாம் ஆன்ஸர் பண்ணிடு…” என சிறுபிள்ளைக்கு சொல்வதை போல சொல்ல தலையை ஆட்டி கேட்டுக்கொண்டாள் நிதர்ஷனா.
“பெஸ்ட் ஆஃப் லக் தர்ஷி…” என வாழ்த்தி அனுப்பி வைத்தான் அவன்.
கணேசனுக்கு பெருமை பிடிபடவில்லை. முதல்முறையே மகள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தார்.
அதிலும் அவருக்குள்ளும் ஒரு பயம். எங்கே இளங்கோவனும், திருமொழியின் மகளை படிக்கவேண்டாம் என சொல்லிவிடுவார்களோ என பயந்து கொண்டிருந்தார்.
“அவங்க காலேஜை பார்த்துக்க சொல்லிட்டா என்ன செய்ய? இந்த கோமகள் இன்னும் என்னத்துக்கு பொண்ணை படின்னு சொல்றீங்கன்னு கேட்கறாங்க…” என்று சரஸ்வதியிடம் புலம்பி தவித்து போயிருந்தார்.