எங்கே தன் பலவருட கனவு நடக்காமலேயே போய்விடுமோ என்றொரு பரிதவிப்பு இப்போது பூரிப்பாய் மாறியிருந்தது.
முன்பே அவர்களை கொண்டாடுபவர். இப்போது சம்பந்தம் செய்தும் தங்களின் கனவிற்கு மதிப்பளிக்க அவர்களை போல் உண்டா என காலரை உயர்த்தி பேசிக்கொண்டிருந்தார்.
வீட்டினரின் வாழ்த்தையும் ஆசிர்வாதத்தையும் பெற்று நிதர்ஷனா தேர்வை சிறப்பாகவே செய்துவிட்டதாக திருமொழிக்கு அழைத்து சொல்லியிருக்க அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு கணேசனிடமிருந்து.
“மாப்பிள்ளை பாப்பாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்….” என மருத்துவமனை பெயரை சொல்லவும், கட்டி முடிக்கப்பட்டிருந்த விடுதியை பார்வையிட்டுக்கொண்டிருந்தவன் பதட்டமாகிவிட்டான்.
“தர்ஷிக்கு என்னாச்சு மாமா…” என கேட்டுக்கொண்டே அருகில் நின்றவர்களை பார்க்க அவர்களும் என்னவோ என நின்றனர்.
“எல்லாம் நல்ல விஷயம் தான் மாப்பிள்ளை. பாப்பாவுக்கு பாப்பா வருதாம். வாழ்த்துக்கள் மாப்பிள்ளை…” என அவர் சொல்லி சிரிக்க திருமொழி முகத்திலும் ஆயிரம் தீபத்தின் வெளிச்சம்.
“ஓஹ்…” என்றவன் இதழ்களுக்குள் பொங்கிய புன்னகையை மறைக்க முயன்று முகம் மகிழ்ச்சியிலும், வெட்கத்திலும் சிவந்தது.
அத்தனைபேரும் தன்னை பார்க்க கண்டவன் முகத்தில் அளவற்ற புன்னகையோடு நெற்றியை சுருக்கிக்கொண்டு விரலால் கோடிழுக்க அதுவே பார்த்தவர்களுக்கு விஷயத்தை விளக்கியது.
“கண்டிப்பா. இதுவரை குழந்தைங்க பத்தி நாம பேசிக்கிட்டதில்லை. இப்பவும் அப்படியே விடமுடியாதில்லையா. சொல்லு உனக்கு எத்தனை குழந்தைங்க வேணும்?…” என்று கேட்க,
“எத்தனைன்னா? நீங்க முதல்ல சொல்லுங்க…” என்றவள் புன்னகைக்க திருமொழியின் கைகள் சுடிதாரின் மேல் மனைவியின் மணிவயிற்றை வருடியது.
“அதிகமெல்லாம் இல்லை. உங்கப்பாவை நான் பீட் பண்ணவேண்டாம். ஆனா ஈக்வேல் பண்ணலாம்ன்னு நினைக்கறேன்…” என்று குறும்பாய் சொல்ல நிதர்ஷனா முகத்தில் பீதி.
“மூணா?…”
“ஆமா, மூணும் உன்னோட அண்ணனுங்க, உன்னை மாதிரி. வேணும்னா எக்ஸ்ட்ராவா ஒன்னு என்னை மாதிரி. உனக்கு ஓகே வா?…” என்று சொல்ல அப்போதுதான் மயக்கமே வரும் போலானது நிதர்ஷனாவிற்கு.
“நோ நோ நோ…” என வேகமாய் மறுத்து தலையை ஆட்டியவள்,
“நாலு, ஆத்தீ. நோ நோ நோ…” என கையாட்டி மறுத்தவள்,
“அதுவும் நான் போய் நாலா? நோ நோ நோ…” என்றாள் இன்னும் முடியாதென்று அரண்ட முகத்துடன்,
“போதாததுக்கு என் அண்ணனுங்களை மாதிரி, என்னை மாதிரி. வாய்ப்பே இல்லை. நோ நோ நோ. ம்மீ சரஸு எவ்வளோ பாவம் தெரியுமா? என்னால நாலு? அம்மோவ்…” என சொல்லி சொல்லியே மயங்கி போக அதன் பின்னரும் அவனின் முன்னே ஒற்றை விரலை காண்பித்தபடியே தான் வீட்டில் வலம் வந்தாள்.
அத்தனை அட்டகாசம் செய்தாள். முதலில் கணவனின் இந்த நினைப்பை மாற்றியே ஆகவேண்டும் என சுட்டுவிரலை காண்பித்தபடியே ஒன்று, ஒன்று என குட்டிக்கரணம் அடிக்க,
“முதல்ல குழந்தை பிறக்கட்டும் தர்ஷி…” என்று கூட சொல்லி பார்த்துவிட்டான் திருமொழி.
“ஒன்னு சொல்லுங்க. ஒன்னு சொல்லுங்க…” என்று அவனை நொய்த்துக்கொண்டே வந்தவள் குழந்தை வயிற்றுக்குள் சுழல ஆரம்பித்ததும் சிலிர்த்து போனாள்.
“அச்சோ, எப்படி இருக்கு தெரியுமா? செம்ம ஃபீல்…” என திருமொழியின் கைகளை எடுத்து வைத்து காண்பித்து அவனை பித்தாக்கி கொண்டிருந்தாள் நிதர்ஷனா.
அவளின் ஒவ்வொரு செயல்களையும் ரசித்து, அனுபவித்து, அழகாய், உயிராய் ஒரு வாழ்க்கை திருமொழி வாழ்ந்துகொண்டிருந்தான்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். ஒவ்வொன்றும் அவனின் சுவாரஸியங்களை கூட்டிக்கொண்டே சென்றது.
இதைவிட அடுத்தநாள் இன்னும் அதிகமான மகிழ்வாய் வேண்டும் என்று நினையாமல், இன்றையநாளின் சொட்டு தேன் சுவை குன்றாமல் அடுத்து விடியும் நாள் இருந்தால் போதும் என்னும் பொன்மனது.
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அனைவருமே வீட்டில் இருந்தனர். ஸ்ரீதர், பிரகாஷ் தன் மனைவி, குழந்தையுடன் வந்திருந்தார்கள்.
அவர்களுடன் கணேசன் குடும்பத்தினரும் கூட வந்திருந்தனர். அன்று திருமொழிவர்ணன் பிறந்தநாள்.
மதியவிருந்து முடித்து பிள்ளைகள் எல்லாம் விளையாடிக்கொண்டிருக்க ஸ்ரீதரின் பிள்ளையான ஷிவேஷும், ஸ்வாதியின் மகன் ஆதித்தும் பெரிய பிள்ளைகளாய் சிறுவர்களை கவனித்துக்கொண்டனர்.
“பூர்ணி குட்டி, தாத்தாவுக்கு தண்ணி கொண்டு வாடாம்மா…” என்று இளங்கோவன் தன் மூத்த பேத்தியான பூர்ணிதாவை அழைத்தார்.
“நானும் நானும்…” நான்கு வயதான இளையவன் திருமொழிமாறன் தண்ணீர் சிந்த சிந்த கொண்டுவந்து நீட்டினான்.
“போச்சு ட்ரெஸ்ல பட்டுடுச்சு. அப்பா பார்த்தா சத்தம் போடுவாங்க. போய் மாத்திக்கோ…” என சங்கவை சொல்ல,
“நான் ஹெல்ப் பன்றேன்…” என பூர்ணிதா தம்பியின் கையை பிடித்துக்கொண்டாள்.
திருமொழியின் மூத்த மகள் பூர்ணிதா. இளையவன் திருமொழிமாறன். தற்போது நிதர்ஷனா திருப்பூர் கிளையில் வங்கி மேலாளர்.
மருமகளின் பணியிடம் அதிகதூரம் இல்லாமல் அருகிலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டார் இளங்கோவன்.
பிள்ளைகள் அனைவரும் ஹோவேன்னும் சத்தத்துடன் ஆர்ப்பாட்டமாய் விளையாடிக்கொண்டிருக்க வெளியே கார் சத்தம்.
“ஷூப், மாமா வந்தாச்சு….” என பிள்ளைகள் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி சொல்லி சமத்தாய் சத்தத்தை குறைக்க உள்ளே நுழைந்தான் திருமொழிவர்ணன்.
பிறந்தநாள் அன்றும் வீட்டில் இருக்காமல் மஞ்சள் தோட்டம் வரை சென்றிருந்தவன் வியர்க்க விறுவிறுக்க வந்திருந்தான்.
“வாப்பா திரு. சாப்பாடு எடுத்து வைக்கவா?…” என சங்கவை கேட்க,
“குளிச்சிட்டு வரேன் ம்மா. எங்க நிதர்ஷனா?…” என அந்த கூட்டத்தில் மனைவியை தேட,