“அதை நீ என்கிட்ட சொல்லியிருக்கனும். நான் சொன்னேனா உனக்கு கல்யாணம் செய்யப்போறேன்னு? வீட்டுக்கு வந்தவங்க காதுபட என்ன பேச்சு நீ பேசியிருக்க?…” என அடிக்கவே பாய்ந்துவிட்டார்.
கையை ஓங்கிக்கொண்டு வந்தவரை தடுக்க நினைத்த சரஸ்வதியின் கன்னத்தில் பளாரென்று விழுந்தது.
“உன்னை சொல்லனும்? உன்னை கட்டின நாள்ல இருந்து என் நிம்மதியே போச்சு….” என்று மனைவியிடம் பாய கன்னத்தை தேய்த்தபடி நின்றவர் பதிலேதும் சொல்லவில்லை.
“உனக்கு இஷ்டமா இல்லையான்னு எல்லாம் நான் கேட்கறப்போ சொல்லனும். பேச வந்தாங்கன்னா உடனே உன்னை பிடிச்சு குடுத்திருவேனா நான்?…” என எகிற அவரின் வார்த்தைகளில் நிதர்ஷனாவின் அழுகை இன்னுமே கூடியது.
அந்தநேரம் வேகத்தில், ஒருவித அச்சத்தில் பேசிவிட்டாள் தான். அதுவும் திருமொழிவர்ணனுக்கு என்று சொல்லும் பொழுதே அவளால் நம்ப முடியவில்லை.
நிதர்ஷனாவிற்கு தெரியும் அந்த கல்லூரியில் படிக்கும் அநேக பெண்களின் மனதில் ஆஸ்தான நாயகன் அவன்.
தன் காதுபடவே எத்தனை பேசியிருப்பார்கள்? அவனை பிடித்திருக்கிறது என்னும் தன் தோழிகளை மற்ற தோழிகளுடன் சேர்ந்து தானும் எவ்வளவு கேலி பேசி இருப்போம்?
இத்தனைக்கும் அவனின் பார்வை யாரின் மீதும் பதிந்ததில்லை. அதுவே அவன் மீதான கவனத்தை இன்னுமே ஈர்த்தது.
உடையாகட்டும், பேசும் விதமாகட்டும் எல்லாமே எதிராளிகளை அவன்பால் சாயச்செய்யும்.
ஒரே ஊர் என்பதால் அவனுக்கு பெண் கொடுக்க எத்தனைபேர் வரிசையில் இருக்கின்றனர் உட்பட சில பேச்சுக்கள் கல்லூரியில் தோழிகள் மத்தியில் அரசல்புரசலாக அடிபடும்.
அப்படி இருக்க அவர்கள் வீட்டிலிருந்து தன்னை பெண் கேட்டு வந்திருக்க அவளின் மனது பலவாறான யோசனைகளை எடுத்துக்கொண்டது.
முதலில் அதனை நம்பமுடியவில்லை. அந்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க கல்யாணம் என்னும் பேச்சு பதட்டத்தை விதைத்துவிட்டது.
இன்றுவரை தனக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்று பேச்சுக்கு கூட யாரும் ஆரம்பித்ததில்லை.
படிப்பை முடித்து பணியில் அமர்ந்த பின்னர் தான் அந்த பேச்சுக்கே இடம் என்றிருந்தார் கணேசன்.
ஏதோ ஒருவித வேகத்தில் வீட்டிற்கு வந்தவருக்கு கேட்கவா போகின்றது என்ற நினைப்பில் சரஸ்வதியிடம் அவள் பேசியிருக்க,
“ரொம்ப நல்லதும்மா. நல்லா பேசற நீ…” என்று தான் கேட்டுவிட்டதோடு அதனை சொல்லி தண்ணீர் கூட குடிக்காமல் கோபமாக சென்றுவிட்டார் கோமகள்.
அதன் பின்னர்தான் பயந்துபோனாள் நிதர்ஷனா. இப்படி நடக்கும் என அவளுமே எதிர்பார்க்கவில்லை.
“என்ன முழிக்கிற, உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன்? அவங்க எப்பேர்ப்பட்ட குடும்பம் தெரியுமா? அந்த குடும்பத்தோட எனக்கு இருக்கற பழக்கம் பத்தி தெரியுமா?…” என மகளிடம் கேட்டவர்,
“ஏன் உனக்கு தெரியாதா சரஸு? ஊரு ஊருக்கு மாற்றல் வாங்கி போயிட்டிருந்த நமக்கு இளங்கோவன் ஸார் தான் சொந்த ஊர்லையே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணினார். இப்பவரை நாம அங்கயும் இங்கயும் அலையாம இருக்க காரணம் அவங்க செல்வாக்கு தான்…” என்று மனைவியிடம் கத்தினார்.
“படிக்கிற பொண்ணை கேட்டு வந்ததும் அவ பயந்து போய் பேசிட்டா. அதுவும் என்கிட்ட தான் பேசினா. அந்தம்மா கேட்பாங்கன்னு நினைக்கலை. நான் சத்தம் போட்டுட்டேன் இவளை…” சரஸ்வதி சொல்ல,
“சப்பைக்கட்டு கட்டுறியா நீ? நாம வேண்டாம்ன்னு சொல்றது நம்ம உரிமை. அது அவங்களை அவமானப்படுத்தற மாதிரியா இருக்கனும்? பெரிய இடம்ன்னு இறங்கி வந்து கேட்டா உடனே இப்படிதான் பேசுவாளா உன் பொண்ணு?…” கணேசன் நெற்றிக்கண் திறந்துவிட்டார்.
“அவங்க எதுக்காகவும் கேட்டிருக்கட்டும். அங்க பிரச்சனையே இருக்கட்டும். அதை இவ எப்ப சொல்லியிருக்கனும் நம்மக்கிட்ட?…” என்றார்.
“அவதான் தெரியாம பேசிட்டான்னா நீங்களும் திரும்ப இவ்வளோ பேசறீங்க. நான் அவட்ட சொல்லிட்டேன்…” சரஸ்வதி மகளுக்கு பரிந்து பேச,
“இப்ப அவங்க வீட்டு மனுஷங்க முகத்துல எப்படி முழிப்பேன்? என்ன பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்கன்னு கேட்கறாங்க அந்த கோமகள்? எனக்கு கீழ வேலை பார்க்கிறவங்க. இப்ப என் முகத்துக்கு நேரா பேசறாங்க. எல்லாம் இவளால…” என மீண்டும் மகளிடம் நெருங்கியவர்,
“இப்படித்தான் புள்ளையை வளர்ப்பியா நீ? நானும் வீட்டுக்கு வந்து இவ்வளோ நேரமாச்சு. வந்ததும் இதை சொன்னியா இப்படி நடந்துருச்சுன்னு. அம்மாவும் பொண்ணும் அமுக்குணி மாதிரில இருந்தீங்க. இப்ப அந்தம்மா என் மூஞ்சில துப்பாத குறையா பேசுது. என்ன பதில் சொல்ல?…” என்றார்.
அவரின் வார்த்தைகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமானதோடு தடித்துக்கொண்டே சென்றது.
“நான் பொறுமையா தான் சொல்லனும்ன்னு இருந்தேன். அதுக்குள்ள அவங்களே போன் பண்ணி சொல்லுவாங்கன்னு நான் நினைக்கலை…” என்றவர்,
“நீங்களும் தான் அவங்க இப்படி பேச வராங்கன்னு எங்கட்ட சொல்லலையே?…” என கேட்டார் சரஸ்வதி.
“சொல்லலையா? எனக்கு தெரிஞ்சா தான சொல்ல? எனக்கே தெரியாதே. முக்கியமான விஷயம் பேசனும்ன்னு வீட்டுக்கு வரதா சொன்னாங்க. நான் வந்து வீட்டுல இருக்க சொன்னேன். ஆனா போன வேலையில போனும் பண்ணமுடியலை. அவங்களை வர சொன்னதையே மறந்தும் போய்ட்டேன்…” என்றார் கணேசன்.
“இதுல யாரையும் குத்தம் சொல்லமுடியாது. நிது பேசினது தப்பாவே இருந்தாலும் அந்த சூழ்நிலையில நாம நாலையும் யோசிக்கத்தான் செய்யனும். ஏனா காலம் அப்படி தான் இருக்கு. விடுங்க. இந்த விஷயத்தை இப்படியே விடுங்க….” சரஸ்வதி அந்த பிரச்சனையை முடிக்க பார்த்தார்.
இத்தனை பேசியும் நிதர்ஷனா அவரிடம் எதுவும் பேசவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
அந்த நேரத்தில் அவளுக்கு சட்டென தோன்றியதை மட்டுமே தாயிடம் பகிர்ந்திருந்தாள்.
பேசியவிதம் தவறு என்றாலும் அதனை யோசிக்காமல் எப்படி இருப்பது என அவளை சமாதானமும் செய்துகொண்டாள்.
கணேசனுக்கு தெரியாமல் இருந்தவரை இருந்த பதட்டம் இப்போது அவர் கோபமாய் பேசி முடித்ததில் தணிந்திருந்தது.
“இப்ப இதை சொல்ல தான் உங்களுக்கு கூப்பிட்டாங்களா?…” என சரஸ்வதி கேட்க தளர்ந்து அமர்ந்தார் கணேசன்.
“இந்த விஷயம் இன்னும் இளங்கோவன் ஸார்க்கும், திரு தம்பிக்கும் தெரியாதாம். பொண்ணு பிடிச்சதுன்னு கேட்டது அவங்க அம்மாவாம். அதனால நாளைக்கு காலேஜ்லயோ இல்லை வேற யார்ட்டையுமோ எதுவும் சொல்லவேண்டாம், உங்க பொண்ணை வாயடக்கி இருக்க சொல்லுங்கன்னு சொல்ல கூப்பிட்டிருக்காங்க…” என்றார் கணேசன் பல்லை கடித்துக்கொண்டு.
“இவளால என்னலாம் பேச்சு கேட்கவேண்டியதா போச்சு. பசங்க ரெண்டுபேரும் தான் அப்படி இருக்கானுங்கன்னா. இவ அதுக்கு மேல என் மானத்தை வாங்கறா. எவ்வளவு இளக்காரம் அவங்க பேச்சுல? தானா தேடி வந்தா இப்படி பேச சொல்லுமான்னு பேசுது…” என இன்னும் அவருக்கு ஆதங்கம் குறையவில்லை.
“பொண்ணை சொல்லி வளருங்கன்னு என்கிட்டையே சொல்றாங்க அந்தம்மா. எனக்கு மரியாதை எத்தனை முக்கியம்? இன்னைக்கு எல்லாம் போச்சு. எல்லாம்…” என்று அவர் மீண்டும் சத்தத்தை கூட்ட,
“நிது, நீ எழுந்து உள்ள போ…” என்றார் சரஸ்வதி.
கணேசன் மகளையே முறைத்துக்கொண்டிருக்க நிதர்ஷனாவிற்கு அங்கிருந்து எழுந்து செல்லவே முடியவில்லை.
“போன்னு சொல்றேன்ல…” என சரஸ்வதி மீண்டும் சொல்லவும் எழுந்துவிட்டாள் நிதர்ஷனா.
“நில்லு பாப்பா…” என கணேசனும் எழுந்து நிற்க,
“அவளை நான் ஏற்கனவே நல்லா திட்டிட்டேன். விடுங்க…” என சரஸ்வதி சொல்ல,
“நீ சும்மா இருக்கமாட்டியா?…” என மனைவியை வாயடைக்கும்படி விரல் நீட்டி எச்சரித்தார் கணேசன்.
“இங்க வா…” என மகளை அருகே அழைக்கவும்,
“காலேஜ்ல நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன்ப்பா…” என்றாள் நிதர்ஷனா அவர் சொல்லும் முன்பே.
“சொன்னா மட்டும் பத்தாது. புரிஞ்சு நடந்துக்கோ. இன்னும் ஒருவருஷ படிப்பு இருக்கு. அங்க தான் படிக்கனும். எதையாச்சும் சொல்லி யார் மூலமாச்சும் என் காதுல விழுந்துச்சு. நான் மனுஷனா இருக்கமாட்டேன்….” என்றவர் வேகமாய் உள்ளே சென்றுவிட்டார்.
நிதர்ஷனா மீண்டும் அந்த இடத்திலேயே அமர்ந்துவிட சரஸ்வதிக்கு பாவமாக இருந்தது மகளை காண.
“சரி விடு. பேசிட்டார் தானே? முடிஞ்சது. இதை எதையும் யோசிக்காம இரு நீ…” என்றார் சரஸ்வதி.
“ம்மா நான் வேணும்னா வேற காலேஜ் மாறிடவா?…” என்று நிதர்ஷனா கேட்க,
“அதுக்கு இப்ப என்ன அவசியம் வந்துச்சு?…” மகளை கடிந்தார் அவர்.
“இத்தனைக்கும் அந்தம்மா தானே கேட்டிருக்காங்க. வேற யாருக்கும் தெரியாதுன்னு சொன்னாங்களே? அப்பறம் என்ன நிது?…” என்றார் அவளருகில் அமர்ந்து.
சில நொடிகள் யோசனையுடன் இருந்தவள் புருவங்கள் சுருங்கி விரிந்தது. தலையாட்டியபடி,
“ரைட், அதுக்கு என்ன அவசியம் வந்துச்சு? நாம காசு கட்டியிருக்கோம். படிக்கறோம். சும்மா ஒண்ணுமில்லையே. அப்பறம் என்ன? நான் அங்கயே போறேன். அதான் சேர்மனுக்கு தெரியாதுன்னு சொன்னாங்களே?…” என நிதர்ஷனாவே முடிவை மாற்றிக்கொண்டாள்.
“ஹ்ம்ம், அவ்வளோ தான். பிரச்சனை வந்தா உடனே ஒளிஞ்சுக்கனுமா? பேசிட்ட, அந்த வார்த்தைக்கு நீ தான் பொறுப்பு. அப்போ அதுக்கான விளைவையும் நீயே சமாளி. இதுக்கெல்லாம் கண்ணுல தண்ணி வச்சுப்பியா நீ?…” என மகளின் கண்ணீரை துடைத்துவிட்டார் சரஸ்வதி.
“பயத்துல அழுகையே வந்திருச்சு. நானும் தப்பு தானே? அந்த மைக்ரோ செகென்ட் எனக்கு அது தான் தோணுச்சு. நம்ம வீடா இருந்தாலும் அவங்க கேட்கும்படி சொல்லியிருக்கக்கூடாது. ஸாரி ம்மீ…” என்று அதிலேயே தான் நின்றாள் நிதர்ஷனா.
தன் தவறும் அதிலிருப்பதை உணர்ந்து தந்தையிடம் கேட்காத மன்னிப்பை தாயிடம் கேட்டாள் நிதர்சனா.
அன்றைய நாள் அவளுக்கு நிச்சயம் சரியாக வாய்க்கவில்லை. உடல் உபாதை வேறு. திடீரென்ற இந்த திருமண பேச்சுக்கள்.
எல்லாம் அவளை நிலைகுலைய செய்ய, அதிலும் அவன். திருமொழியின் முகத்தை யோசித்து பார்த்தாள்.
அன்றாடம் அவனை பார்த்திருந்தாலும் நினைத்தமாத்திரத்தில் எல்லாம் அவனின் முகம் மனதிற்குள் தோன்றவில்லை.
‘ப்ச், என்ன கொடுமைடா சாமி’ என எண்ணிக்கொண்டவள் தன்னுடைய அறைக்குள் நுழைய மூத்த அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது நிதர்ஷனாவிற்கு.