“என்னை குட்டிச்சாத்தான்னு சொன்ன, நான் உன் வீட்டுக்கு வரவேமாட்டேன்…” என சண்டைக்கு நின்றாள்.
“உன்னை நான் எப்ப இங்க வான்னு கூப்பிட்டேன்? வரவேண்டாம் போ. இப்ப அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லு…” என்றபடி கேட்டு இருக்கையில் அமர்ந்தவன் மடியில் தாவி வந்து ஏறினான் அவனின் ஐந்து வயதான மகன் ஷிவேஷ்.
“அத்தா…” என திரையில் தெரிந்த நிதர்ஷனாவை பார்த்ததும் தன் கையில் இருந்த சாக்லேட்டை காண்பித்தான்.
“என்னன்னுடா பொடியா உனக்கு உங்கம்மா சாக்கி சாப்பிட குடுத்தாங்க?…” என மற்றதை விட்டுவிட்டு நிதர்ஷனா அதற்கு தாவ,
“ஷிவ் நீ உள்ள போ. அப்பா பேசிட்டு வரேன்…” என மகனை அனுப்பினான்.
“பை அத்தா…” என குழந்தை ஓடிவிட,
“நீ ஏன்டா அவனை துரத்தற? பேசிட்டிருக்கேன்ல?…” என வெடித்த தங்கையை முறைத்தவன்,
“என்ன சொன்னார் மிஸ்டர்.எம்டன்? நீ பன்னீர்ல பல்லுவிளக்குன கதையெல்லாம் சொல்லாம அதை சொல்லு….” என்றான் தங்கையை நக்கலாக.
“ஊருவிட்டு வேற ஊர்ல இருக்கோம்ன்ற ஆணவம். நீ ஏன் பேசமாட்ட? உன் லவ்க்கு ஹெல்ப் பண்ணுனேன் பாரு. எனக்கு தேவை தான்…” என பெரியண்ணனை முறைத்தாள் நிதர்ஷனா.
“எது என் லவ் மேட்டரை அவர்கிட்ட போட்டுக்குடுத்ததுக்கு பேர் ஹெல்ப்பா?…”
“இல்லையா பின்ன? இல்லைன்னா நீ இப்ப வரைக்கும் முரட்டு சிங்கிள்டா அண்ணா…” என்று கிண்டல் பேசினாள்.
“செமத்தியா வாங்கியும் உன் வாய் அடங்கலை பாரேன்…” என்றவன்,
“நீ ஒன்னும் சொல்லவேண்டாம். எல்லாம் லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்தாச்சு. உன் வாய்க்கு இது தேவை தான். கொஞ்சமா பேசனும்…”
“நீயுமாண்ணா…” என பாவமாய் பார்த்தவள் முகம் சுண்டிவிட,
“சரி விடு. விடு. அவர்கிட்ட அர்ச்சனை வாங்கினா அன்னைக்கு நமக்கு நல்லநாள் தான். விடு…” என்றவன்,
“அப்பறம் நிது, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும். அம்மா எங்க?…” என்றான் ரகசியமாக.
“அவங்க வெளில நிக்கறாங்க. நாளைக்கு ஏதோ நல்லநாளாம். வீட்டுல பூஜை பண்ணனும்ன்னு பூ வாங்க பூக்கார பாட்டிக்காக வெய்ட்டிங். நீ சொல்லுண்ணா…” என்றாள்.
“நிதுக்குட்டி அம்மாக்கிட்ட டக்குன்னு சொல்லிடாத. பிரகாஷ்க்கு கால்ல லேசா அடி பட்டிருக்கு….”
“என்னண்ணா? எப்படி?…” என்றாள் பதட்டமாக.
“பைக் ஸ்கிட்டாகி கீழ…” என்று முடிக்கும் முன்,
“என்னது பைக்லருந்தா?…” என்றவளின் சத்தத்தில்,
“ஏய், கத்தாத பிசாசே. அம்மாக்கு கேட்டுட போகுது…” என்றவன் அதட்டலில் மெல்ல எழுந்து சென்று வெளியே எட்டி பார்த்துவிட்டு உள்ளே வந்து கதவை சாற்றினாள்.
“என்னண்ணா, சின்னண்ணா எதுவும் சொல்லலை….” என கண்ணில் மீண்டும் கண்ணீர்.
“டேய் அழாத. அவனுக்கு பெருசா ஒண்ணுமில்லை. சைலன்சர் சுட்டுடுச்சு. ஒருவாரம் லீவ் போட்டிருக்கான். தனியா அங்க இருக்க முடியாதுன்னு கிளம்பிட்டான். நாளைக்கு மார்னிங் வந்திருவான். நீ இருந்து பார்த்துக்கோ. அம்மாக்கிட்ட இப்பவே சொல்லவேண்டாம்…” என எச்சரிக்க,
“ஹ்ம்ம் சரி…” என முணங்கினாலும் இன்னும் கண்ணில் நீர்.
“ப்ரெண்டோட போகும் போது அப்படியாகிடுச்சு. பெருசா எதுவுமில்லை. கண்ணை துடை. அப்பறம் அம்மாக்கிட்ட சொன்னா இப்ப இருந்து ஓயாம அவனுக்கு கால் பண்ணி, பேசி, அழுது அவனையும் டென்ஷன் பண்ணிருவாங்க. வீட்டுலையும் நிம்மதியா இருக்கமாட்டாங்க…” என்றான் ஸ்ரீதர்.
“ஹ்ம்ம்…” என்று மட்டும் நிதர்ஷனா சொல்ல,
“அப்பறம் நிதும்மா, நீ தான் பார்த்துக்கனும். அம்மாவை ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ண வச்சிடாத. முடிஞ்சா ரெண்டுநாள் காலேஜ்க்கு லீவ் போடு. அதுக்கு தான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன். பார்த்துக்கோ. நாளைக்கு அவன் வரவும் கால் பண்ணு…” என்று வைத்துவிட்டான்.
உடனே பிரகாஷிற்கு நிதர்ஷனா அழைக்க இரண்டு மூன்றுமுறை அழைப்பு சென்ற பின்னர் தான் எடுத்தான்.
“ஒருதடவை கால் அட்டன் பண்ணலைன்னா திரும்ப உடனே கூப்பிடாதன்னு எத்தனைதடவை சொல்லிருக்கேன் உனக்கு? கேட்கவே மாட்டியா நிதா…” என்றவன் எடுத்த எடுப்பில் எரிந்துவிழ,
“இனிமே கேட்டுக்கறேன்…” என்றவள் போனை வைத்துவிட ஐந்து நிமிடத்தில் அவனே அழைத்துவிட்டான்.
“இந்த ரோஷத்துல ஒன்னும் குறைச்சல் இல்லை. என்னன்னு சொல்லு….” பிரகாஷ் கேட்கவும்,
“ஒழுங்கா வண்டியை ஓட்ட தெரியலை. நீ என்னை பேசற. பேசாதண்ணா என்னோட. காலை பார்த்துக்கோ. பத்திரமா வா. நாளைக்கு பேசிக்கறேன் உன்னை…” என்று சொல்லி அவள் வைத்ததும் மறுபக்கம் கேட்டிருந்தவன் முகத்தில் மென் புன்னகை.
“தூங்கிட்டிருந்தேன்டா. கொஞ்சம் வலிக்குது. அதான் டேப்லெட் போட்டு படுத்திருந்தேன். பஸ் வேற இங்கிட்டும் அங்கிட்டுமா ஆடுது…” என்றவன்,
“சரி நான் தூங்கறேன். அம்மாக்கு சொல்லாத. மார்னிங் நான் வர லேட்டாகிடும். பஸ்ஸை உருட்டிட்டு இருக்கானுங்க. நான் வந்து பார்க்கறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டான் பிரகாஷ்.
போனை சார்ஜில் போட்டவளுக்கு பலத்த யோசனை. மறுநாளே கல்லூரிக்கு செல்லவும் ஒருவித தயக்கம்.
என்னதான் திருமொழிக்கு இந்த பேச்சுவார்த்தை விஷயம் தெரியவில்லை என்றாலும் தனக்கு தெரியுமே?
ஒருவித அசௌகரியமாக தோன்றுமே என நினைத்தவள் இருநாள் விடுமுறை எடுப்பது என முடிவிற்கு வந்துவிட காலை எழும்பொழுதே காய்ச்சல் என்று சொல்லி கணேசனிடம் வாங்கிக்கட்டிவிட்டு வீட்டில் இருந்துகொண்டாள்.
————————————————
காலை எழுந்து கல்லூரிக்கு கிளம்பி கீழே வந்த திருமொழிவர்ணன் முகத்தையே ஆராய்வதை போல பார்த்தார் சங்கவை.
“சாப்பிட்டீங்களா?…” என கேட்டுக்கொண்டே தானும் அமர்ந்தவன் அவர் ஆகிற்று என்பதை கேட்டு தலையசைத்து உண்டு முடித்தான்.
“அப்பா இன்னைக்கு கிளம்பிருவாங்களா திரு?…” என மகனிடம் கேட்க,
“இன்னும் அப்ரூவல் ஸைனாகலை. இன்னைக்கு முடிஞ்சதுன்னா நைட் ப்ளைட்ல வந்திருவாங்க. இல்லைன்னா நாளைக்கு தான். அப்ரூவல் கிடைச்சாலும் கிடைக்காட்டியும்…” என்று சொல்லியவன் அவருக்கான மாத்திரைகளை எடுத்து பார்த்தான்.
“அப்ரூவல் கிடைக்காதுன்னு நினைக்கிறியா திரு?…” என சங்கவை கேட்க,
“அப்படின்னு சொல்லலையே. அப்பாவை வர சொல்லிட்டு நான் போவேன். எப்படி கிடைக்காம போகுதுன்னு பார்ப்போம்…” என்று சொல்லியவன்,
“டேப்லெட் நாளைக்கு வரைக்கு தான் இருக்கு. இன்னும் என்கிட்ட சொல்லவே இல்லை நீங்க?…” என தாயை கடிந்தான்.
“இன்னைக்கு ஸ்வாதி வரேன்னு சொன்னா…” என சங்கவை மகனிடம் சொல்ல,
“அதுக்கும் உங்களுக்கு மாத்திரை வாங்கறதுக்கும் என்ன சம்பந்தம்? நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன சொல்றீங்க?…” என்றவனிடம் பதில் சொல்லமுடியவில்லை.
“நாங்க மறந்தாலும் நீங்க ஞாபகப்படுத்த வேன்டாமா? எங்க உங்க நர்ஸ்?…” என்றவன் அவர் இன்னும் வந்துசேரவில்லை என்று விழிகளை சுழற்றியதிலேயே கண்டுவிட்டான்.
“இந்த நேரம் வந்திருக்கனுமே?…” என கேட்க,
“அவங்களுக்கு இன்னைக்கு பேங்க்ல முக்கியமான வேலையாம். முடிச்சிட்டு வரேன்னு சொன்னாங்க…” என சங்கவை கூறவும் திருமொழி முகத்தில் மேலும் கடுமை.
கூடுதலாக முதல்நாள் பேச்சுக்களும், நிதர்ஷனாவும் ஞாபகம் வர மேலும் முகம் இறுகியது.
“நான் டேப்லெட் வாங்கி அனுப்பறேன்…” என சொல்லி நகர போனவன்,
“எதுக்காம் ஸ்வாதி வரா? திருப்பூருக்கும் ஈரோட்டுக்கும் என்ன பத்துநிமிஷ டிராவலா? ஒரு இடத்துல இருக்கமாட்டாளா? பத்துநாள் முன்னாடி தான வந்துட்டு போனா?…” என அதற்கும் அதட்டியவன்,
“நீங்க முதல்ல சொல்லுங்க அவக்கிட்ட. அடுத்தமாசம் வளைகாப்பு போட்டுட்டா அடுத்து ஃபுல்லா இங்க தானே இருக்க போறா? சும்மா அலைஞ்சு உடம்புக்கு எதுவும்ன்னா?…” என சத்தம் போட்டுவிட்டு கிளம்பினான் திருமொழி.
“ஹப்பா…” என மகன் சென்றதும் தான் நிம்மதியானது.
முன்பே வீட்டில் அத்தனை கட்டுப்பாடுகள் அவனிருந்தால். இதை ஏன் செய்கிறீர்கள், அதனை ஏன் செய்யவில்லை என ஒவ்வொன்றிற்கும் கேள்விக்கணைகள் வந்துகொண்டே இருக்கும்.
இப்போது கீழே விழுந்தது வேறு சங்கவைக்கு பெரிய தலையிடியாக போனது. ஒவ்வொன்றிக்கும் சொல்லிக்கொண்டே இருந்தான் திருமொழி.
இளங்கோவனிடம் கூறினால் ‘உன் மகன்பாடு, உன் பாடு. அதையாச்சும் கேளு’ என்றுவிடுவார் அவர்.
இப்போதுமே மகள் ஸ்வாதியிடம் மகனுக்கு பெண் பார்த்து இப்படியாகிவிட்டது என முதல்நாள் நடந்தவற்றை சொல்லியிருக்க தாயை பார்க்க கிளம்பிவிட்டாள் ஸ்வாதி.
“அண்ணன் சொன்னதுல தப்பே இல்ல. உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா என்ன? வந்து பேசிக்கறேன் உங்களை…” என அவள் பங்குக்கு பேசிவைக்க யாரிடமும் வாயே திறக்க கூடாதெனும் முடிவிற்கே வந்துவிட்டார்.
இப்போது கல்லூரியில் அந்த பெண்ணை பார்த்தால் என்ன செய்வானோ என்றிருக்க தேவையில்லாததை இழுத்து வைத்துக்கொண்டோம் என்று தோன்றிவிட்டது.
வீட்டிலிருந்து கிளம்பிய திருமொழி வழியில் சங்கவைக்கு தேவையான மருந்தை வாங்கிக்கொண்டு கல்லூரிக்கு திரும்பினான்.
கல்லூரி வளாகத்தினுள் கார் நுழையும் பொழுதே தாமதமாகி இருந்தது. எப்போதும் நேரத்திற்கே வந்துவிடுபவன் அன்று தாமதமாகி இருக்க மாணவர்களும், ஆசிரியர்களும் வர ஆரம்பித்திருந்தனர்.
நேராக அவனின் அலுவலக கட்டிடத்தினுள் சென்று நின்றவன் காரிலிருந்து இறங்கி காலணியை கழற்றிவிட்டு கட்டிடத்தின் முன்னிருந்த பிள்ளையாரை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.
அவனின் கார் வந்ததில் இருந்து உள்ளே சென்றது வரை கண்ணை சிமிட்டாமல் பார்த்தபடி நின்றாள் மிருதுளா.
அன்று திருமொழி அணிந்திருந்த அதே நிற உடையில் புடவை கட்டியிருந்தவள் முகமெல்லாம் புன்னகை.
“தரிசனம் முடிஞ்சதா? இப்ப போகலாமா?…” என உடன் வேலை செய்யும் ஆசிரியையான லலிதா கேட்க,
“போலாம் போலாம். எப்பவும் அவர் வந்த பின்னாடி தான் வருவேன். இன்னைக்கு அவர் லேட்…” என வெட்கத்துடன் மிருதுளா சொல்லி உள்ளே நுழைந்தாள்.
அவளின் பார்வைகள் தன்னை தொடர்வதை அறியாமல் தன்னிருக்கையில் அமர்ந்த திருமொழி அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
அவனின் தினசரி பார்வையிடலுக்கான நேரம் அது. முதலாம் வகுப்பு நிறைவுறும் தருவாயில் கல்லூரியை பார்வையிட கிளம்பிவிடுவான்.
ஒவ்வொரு பகுதியையும் அவன் வலம் வருவான் என்பதனாலேயே மாணவ மாணவிகளும் சரி, ஆசிரியர்களும், மற்ற பணியாளர்களும் சரி அத்தனை கவனமாக இருப்பார்கள்.
முதலில் பொறியியல் கல்லூரி கட்டிடத்தினுள் நுழைந்தவன் சுற்றி முடித்து அடுத்ததாக கலை மற்றும் அறிவியல் கட்டிடத்தினுள் நுழைய அவனை எதிர்கொண்டவர்கள் வணக்கம் வைத்து விலகி சென்றனர்.
தலையசைப்புடன் நகர்ந்தவன் ஒவ்வொரு வகுப்புகளையும் பார்த்துக்கொண்டே நடக்க அடுத்த மேல் தளத்தின் இரண்டாம் வகுப்பறை எம்.காம் மாணவர்களுக்கானது.
மின்னலாய் அதனை கடந்தவன் வேகத்தில் யாரும் கண்ணில் பதியவில்லை என்றாலும் கருத்தினுள் அந்த பெண் இந்த வகுப்பு தானே என்ற எண்ணம் சட்டென மேலெழும்பி நின்றது.
திரும்பி பாராமல் அங்கிருந்து சென்றுவிட்டான். அதற்கடுத்த நாளும் அப்பகுதிக்கு செல்ல முதல்நாள் போல் அவளை பற்றிய நினைப்பெல்லாம் இல்லை.
மூன்றாம் நாள் காலை சந்தோஷமும், உற்சாகமுமாய் கல்லூரி வந்து சேர்ந்திருந்தான் திருமொழி.
தொழில்நுட்ப கல்லூரிக்கான அனுமதி அவர்களுக்கு கிடைத்துவிட்டது. அன்று அதிகாலையே சென்னிமலை முருகன் கோவில் சென்று பூஜையை செய்துவிட்டு நேராக கல்லூரி வந்துவிட்டான்.
கல்லூரி பேருந்து ஒன்று அவனின் வாகனத்தின் முன் நிற்க அதனை தாண்டி செல்லமுடியவில்லை.
பேருந்திலிருந்து மாணவிகள் இறங்கட்டும் என காத்திருந்தவன் கண்களுக்குள் அவள்.
சட்டென விழிகள் இடுங்கியது. அவள் தான். அவளே தான் அன்று புகைப்படத்தில் பார்த்ததை போலெல்லாம் இல்லாமல் முகமெல்லாம் புன்னகையில் நிறைந்திருந்தது.
சற்றே பூசியது போல உடல்வாகு, வசீகரிக்கும் புன்னகையுமாய் பேருந்தில் இருந்து கடைசியாய் இறங்கியவள் தோழியின் தோளில் சட்டென்று ஒரு அடி வைத்து என்னவோ பேசிக்கொண்டே சென்றாள்.
பேருந்தும் நகர அதன் பின்னே நின்றவன் தனது காரையும் கிளப்பினான். காரின் முன்னால் நடந்த அவர்கள் பேச்சு சுவாரஸியத்தில் திருமொழியை கவனிக்கவில்லை.
திருமொழி காரின் ஹாரனை அழுத்த ஒற்றை சத்தத்தில் பட்டென்று திரும்பிய பெண்கள் அவனை காருக்குள் கண்டதும் இருபுறமும் விலகி ஓரமாய் நின்றனர்.
அவர்களின் திகைப்பை கண்டவன் பார்வை நிதர்ஷனாவின் மேல் வினாடிக்கும் குறைவாக படிந்து மீள விக்கித்து விழி அகன்று பார்த்தவள் சட்டென விலகி சென்றுவிட்டாள் வேகமாய்.
சிறு தோள் குலுக்களுடன் தானும் தன் கட்டிடம் நோக்கி சென்றான் திருமொழிவர்ணன்.