“ஹ்ம்ம், உன்னை கவனமா பார்த்துக்க சொல்லியிருக்காங்க டாக்டர். ஞாபகம் இருக்கு தானே? நடக்கறேன்னு பத்துநாள் முன்னாடி கால இடிச்சுட்டு விழ இருந்தது மறந்திருச்சா?…” என திருமொழி கடிய உடனே அமர்ந்துவிட்டாள் ஸ்வாதி.
“எல்லாம் இருக்கட்டும், உன்னோட உடல்நிலையும் முக்கியமில்லையா?…” என்றவரை பார்த்தவன் தனக்கான பால் சூடாக வரவும் வாங்கிக்கொண்டு அவர் நகர காத்திருந்து பின் பேசினான்.
“இது நமக்கொண்ணும் புதுசு இல்லையே? எப்பவும் இருக்கறது தானே? அதோட அடுத்த மாசம் கல்ச்சுரல்ஸ் இருக்கில்லையா நம்ம காலேஜ்ல. அந்த வேலைகள் வேற…” என்ற திருமொழி,
“இது இல்லைன்னா வேற வேலை. அது எப்பவும் நமக்கு இருந்துட்டே தான் இருக்கும்…” என்றான்.
“கல்ச்சுரல்ஸ தள்ளி அடுத்தமாசம் கூட வச்சிருக்கலாம்?…” இளங்கோவன் முகம் யோசனையுடன் இருந்தது.
“ப்பா, எக்ஸாம் வந்திரும். பசங்க கவனம் படிப்புல இருக்குமா? இல்லை ப்ராக்டிஸ் பன்றதுல, பங்க்ஷன்ல இருக்குமா? எதுலையுமே முழுமையான சந்தோஷமும் திருப்தியும் கிடைக்காது. இதென்ன நான் மட்டுமே செய்ய போறேனா? இல்லையே?…”
“ஒரே நேரமில்லை திரு. அட்மிஷனுக்கு நம்ம ட்ரஸ்ட்ல பார்த்துப்பாங்க…” என அவர் கூற,
“பார்த்துப்பாங்க தான். ஆனா இங்கயும் நமக்கு விசேஷம் இருக்கே? ஸ்வாதிக்கு குழந்தை பிறக்கவும் தொட்டில்ல போட, பேர் வைக்க, ஸ்வாதியை மாப்பிள்ளை வீட்டுக்கு கூட்டிட்டு போகன்னு ஏகப்பட்ட சம்பிரதாயம், நம்ம வீட்டு நிகழ்ச்சின்னு இருக்கு….” என்றவன் பார்த்த பார்வையில் இளங்கோவன் அமைதியாகிவிட்டார்.
“ப்பா, அண்ணா தான் என்ன பண்ணனும்ன்னு தெளிவா இருக்காங்களே. நீங்க டென்ஷன் பன்றீங்க…” என்றாள் ஸ்வாதி அண்ணனுக்கு பரிந்துகொண்டு.
“இருந்தாலும்…” என அவர் இழுக்க,
“பாய்ஸ் ஹாஸ்டல் வேலைகள் நடந்திட்டிருக்கு. நீங்க டெய்லி கொஞ்சநேரம் அங்க பில்டிங் வொர்க் எப்படி போகுதுன்னு பார்க்கமுடியுமா? நேரமிருக்குமா ப்பா?…” என்றான் திருமொழி.
“அதுக்கென்ன? பார்த்துடறேன்…” என சொல்லியவர் எழுந்துகொள்ள பார்த்தார்.
“அப்பறம் ப்பா, அடுத்த மஞ்சள் நடவுக்கு நம்மக்கிட்ட எவ்வளவு டன் விதைமஞ்சள் இருக்கு?…” என மீண்டும் அவரை அமரவைத்து அவர்களின் இன்னொரு தொழிலான மஞ்சள் சாகுபடியை பற்றி பேச ஆரம்பித்துவிட்டான்.
‘தேவையா உங்களுக்கு?’ நல்லா வேணும்’ என ஸ்வாதி கண்களை உருட்டினாள் இளங்கோவனை பார்த்து.
மகன் ஏன் கேட்கிறான் என அவருக்கும் தெரிந்துவிட்டது. சற்று யோசனையுடன் தொண்டையை செருமிக்கொண்டவர் பேசும் முன்,
“நாட்டுரகம் விதைமஞ்சள் இப்ப குறைஞ்சுட்டே வருது. நாம அடுத்த சாகுபடிக்குள்ள பிரிச்சு சேகரிக்கறது ஆகாதது. இருக்கற தரமான மஞ்சளை ப்ரெண்ட்ஷிப், பழக்கவழக்கம்ன்னு குடுக்கறதா யாருக்கும் எந்த வாக்குறுதியும் குடுக்காம இருக்கறது நல்லது…” என்றான் அழுத்தமாக.
“திரு ஒரு பேச்சுவாக்குல ப்ரெண்ட் கேட்டான்னு பார்க்கலாம்ன்னு தான் சொன்னேன்…” என்றவருக்கு சங்கடமாகி போனது.
“பழக்கவழக்கம் எல்லாம் பேச்சுக்களோட இருந்தா சரி. தொழில்ன்னு வரும் போது நம்மை மிஞ்சிதான் தானமும் தர்மமும். எனக்கு சொல்லிக்குடுத்ததே நீங்க தானே?…” என சொல்லியவன்,
“ஓகே, போய் தூங்குங்க…” என்று எழுந்துகொண்டான்.
தன்னை மிஞ்சும்விதத்தில் அவனின் வியாபாரத்துவம் இருப்பதில் இளங்கோவனுக்கும் பெருமிதம் தான்.
ஆனாலும் இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட கெடுபிடியாய் இருப்பவனிடத்தில் பதில் சொல்லவேண்டி உள்ளதே என ஆயாசமாகவும் இருந்தது.
தன்னுடைய நண்பனுக்கு என்ன பதில் சொல்வது என அப்போதே அவர் யோசிக்க ஆரம்பிக்க,
“நம்மக்கிட்ட அளவுக்கு அதிகமா இருக்குன்னு குடுக்க நினைச்சது சரியாப்படலை ப்பா. நாளைக்கு நல்ல நாட்டு ரக மஞ்சள் விதைக்கு நாம இப்படி யார்க்கிட்டயும் போய் நின்னுடக்கூடாது…” என்றான் இன்னும் நகராமல்.
“சரிப்பா, நான் பேசிக்கறேன். நீ போய் படு…” என்றார் அவனிடம்.
“நான் போறது இருக்கட்டும். நீங்க என்ன செய்ய போறீங்க?…” என்றவன் தங்கையை பார்க்க,
“இதோ போய்ட்டேன்….” என்று கொட்டாவியை விட்டபடி ஸ்வாதி நகர,
“பார்த்து போ ஸ்வாதி…” என்றான் மெல்லிய புன்னகையுடன் திருமொழி.
இளங்கோவனும் எழுந்து அங்கிருந்து நகர பார்க்க அவரின் கையை பிடித்த திருமொழி,
“சில விஷயங்கள் சங்கடமா இருந்தாலும் நம்மோட நல்லதுக்கு ப்பா. கொஞ்சம் டென்ஷன். இப்படி யோசிக்காம வாக்கு குடுக்கறீங்களேன்னு. இப்பலாம் நாட்டுரகம் கிடைக்கிறதுல தட்டுப்பாடு ஆரம்பிச்சிருச்சு. நம்மக்கிட்ட இருக்கறதை தானம் குடுக்க கூடிய சூழ்நிலையில நாம இல்லை…” என்றான்.
“புரியுதுப்பா. ரொம்ப வேண்டி கேட்டுக்கிட்டான்னு சரி பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னேன். அவ்வளோ தான். உன்கிட்ட கேட்காம செய்ய போறதில்லை. எப்படியும் நானே கேட்டிருப்பேன் தான்…” என்ற இளங்கோவனை ஒரு சிரிப்புடன் பார்க்க,
“குட். உங்களுக்கு குட்நைட்…” என அமர்த்தலாக சொல்லியவன் மாடிக்கு செல்ல,
“ஒரு பேச்சுக்கு கூட பரவாயில்லைப்பான்னு சொல்றானா?…” என மெல்லிய குரலில் முணுமுணுப்பாய் சொல்லி தன்னறைக்கு செல்ல மாடியில் அவர் செல்வதை திரும்பி பார்த்துவிட்டு தலையசைப்புடன் அறையை திறந்துகொண்டு உள்ளே சென்றான்.
காலையிலிருந்து அத்தனை அலைச்சல்கள் வேலைகள் இருந்தாலும் நாளை என்ன செய்யவேண்டும் என்பதை தனது டைரியை எடுத்து பட்டியலிட்டுவிட்டு தான் படுக்கைக்கே சென்றான் திருமொழி.
——————————————-
கணேசன் வங்கிக்கு கிளம்பி வெளியே தயாராய் அமர்ந்திருந்தார். கையில் காபி சூடாக இருக்க ரசித்து குடித்துக்கொண்டிருந்தார்.
அடுக்களையில் இருந்தே கணவர் என்ன செய்கிறார் என எட்டி அவ்வப்போது பார்த்துக்கொண்டே,
“இன்னொரு தோசை?…” என மகளின் தட்டில் சரஸ்வதி சட்னியை ஊற்ற,
“ம்மா இன்னைக்கு சட்னில காரம் கொஞ்சம் கம்மியா இருக்கே?…” என நொட்டை சொல்லியபடி நிதர்ஷனா சமையல் மேடையில் சாய்ந்துகொண்டே சாப்பிட்டாள்.