“ஹ்ம்ம், உனக்கும் எனக்கும் சூடு சொரணை கொறச்சு இருக்கட்டும்ன்னு தான்…” என மகளின் தலையில் குட்டு வைத்தவர்,
“திருவிழா வரப்போகுது. நானே உங்கப்பா எப்ப ஸ்ரீதரோட வம்புக்கு நிப்பாரோன்னு முழிச்சிட்டு இருக்கேன். அங்க உன் அண்ணி இப்பவே ஆரம்பிச்சிட்டாளாம். அங்க என்ன நிலவரம் ம்மான்னு உன் அண்ணனுக்கு அவ்வளவு எதிர்பார்ப்பு….” என படபடத்துக்கொண்டார் கணவனுக்கு கேட்டுவிடாமல்.
நிதர்ஷனா வாய் மூடியபடி பொங்கிய சிரிப்பையும் தோசையுடன் மென்று கொண்டிருக்க,
“நீ சிரிப்படி, எனக்கு இப்படி ஒரு புருஷன், புள்ளை. எல்லாம் என் நேரம். அவன் எப்ப இங்க குண்டு வெடிக்கும்ன்னு வேடிக்கை பார்க்க கதை கேட்க ரெடியா இருக்கான். நீயெல்லாம் புள்ளையாடான்னதுக்கு நான் மட்டும் இங்க வாங்கறேன்ல, அங்க நீங்க நிம்மதியா இருக்கவான்னு என்கிட்டவே கேட்கறான்….” என்று பெருமூச்சு விட்டார் சரஸ்வதி.
“புள்ளைய ரொம்ப அற்புதமா வளர்த்திருக்கீங்க ரோசா சரஸ்வதி…” என நிதர்ஷனா கேலி பேச,
“வாய்லையே போடுவேன் பார்த்துக்கோ. இவர் எப்ப ஏழரையை கூட்டுவார்னு எனக்கு தெரியலை…” என்று அடுத்த தோசையை வார்த்தார்.
“ம்மா எனக்கு போதும், நீங்க சாப்பிடுங்க…” என நிதர்ஷனா சொல்ல,
“இருக்கற கோவத்துக்கு கரண்டியாலையே வாங்க போற நீ. ரெண்டு சின்ன சின்ன தோசை. என்னத்தை பத்தும்? இதுல டான்ஸ் ப்ராக்டிஸ் வேற? எவ்வளோ பசிக்கும்?…” என மகளை கடிந்தார்.
“ம்மா, அதெல்லாம் பசிக்காதும்மா. ப்ளீஸ்…” என நிதர்ஷனா கெஞ்ச,
“என்னை ரொம்ப மிரட்டறீங்க. சின்னப்பிள்ளை மாதிரி ட்ரீட் பன்றீங்க…” என சொல்ல,
“நீ சின்னப்பிள்ளை மாதிரி சாப்பிட்டா? உன் வயசுக்கு சாப்பிட வேண்டாமா?…” என்று தோசையை திருப்பி போட்டவர்,
“இடையில பசிச்சா கேண்டீன்ல வாங்கி சாப்பிடு. லன்ச் இருக்குன்னு எதுவும் வாங்கிக்காம இருக்காத. உனக்கு குடிக்க மாதுளை ஜூஸ் வச்சிருக்கேன்…” என என்றார்.
“சரி சரி…” என நிதர்ஷனா அலுத்துக்கொள்ள,
“டான்ஸ் ட்ரெஸ் பத்தி பேசனும்ன்னு சொன்னியே? என்ன சொன்னாங்க உன் ஹெச்ஓடி?…” என கேட்டார் மகளிடம்.
“அவங்க ஒத்துக்கமாட்டேன்றாங்க. இன்னைக்கு பிரின்ஸிபல் மேடம்ட்ட பேசலாம்ன்னு நளினா மேம் சொல்லியிருக்காங்க. அவங்க தான் இந்த கல்சுரல்ஸ் ஆர்கனைஸ் பன்றவங்க….” என்றவள்,
“ம்மா சீக்கிரம், காலேஜ் பஸ் வந்திரும்…” என அவசரப்படுத்தினாள் நிதர்ஷனா.
“இருடி தோசை வேக வேண்டாமா?…” என சலிப்புடன் அவர் அதனை எடுத்து தட்டில் போட்டுவிட்டு மீண்டும் எட்டி பார்த்தார் கணவரை.
“என்னவாம் காபி முடிஞ்சதா?…” என நிதர்சனா கேட்க,
“ஆச்சு போல. கப் கைல இல்லை. நீ சாப்பிட்டு சத்தமில்லாம கிளம்பு. ஏற்கனவே ரெண்டுநாளா கரைச்சல் பண்ணிட்டிருக்கார் டான்ஸ் ஆடறதுக்கு…” என்றதும் வேகமாய் தோசையை சுருட்டி வாய்க்குள் திணித்தவள்,
“தண்ணி…” என்றாள்.
“இதை கூட எடுக்கமாட்ட நீ…” என்று மகளை திட்டிவிட்டு தண்ணீரை நீட்டிவிட்டு வெளியே சென்றார்.
பின்னோட நிதர்ஷனாவும் வர கல்லூரிக்கு கிளம்பி வந்த மகளை முறைப்புடன் பார்த்தார் கணேசன்.
“பாப்பா டான்ஸ் ஆடறது இருக்கட்டும். அதேநேரம் படிப்புலையும் கவனம் இருக்கனும்…” என்றதும்,
“ஓகே ப்பா…” என்று சிரித்தவள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட பெருமூச்சுடன் திரும்பி மனைவியை பார்த்தார் கணேசன்.
“இன்னும் டைமிருக்கே? இப்ப இருந்தே ப்ராக்டிஸ் பண்ணனுமா என்ன?…” என கணேசன் கேட்க,
“பண்ணனும்ன்னு காலேஜ்ல சொன்னதால தான அவ ப்ராக்டிஸ் பன்றா…” என்று சொல்லிவிட்டு நிற்க,
“என்ன கேட்டாலும் எடக்குமொடக்காவே பதில் சொல்லு. போ உள்ள…” என்றவர் தலையை பிடிக்க ‘ஹப்பாடா’ என சரஸ்வதி நகர்ந்தார்.
“சரஸு நில்லு…” என மீண்டும் அவரை நிறுத்தி,
“என்னவாம், இந்த வருஷமாசும் உன் மூத்தவன் பொண்டாட்டியை கூட்டிட்டு ஒருவாரம் முன்னவே திருவிழாவுக்கு வருவானா?…” என்றார் அவர்.
‘இதோ அவர் பயந்தது வந்தேவிட்டது. இன்னும் ஒருவாரம் கழித்து கேட்க கூடாதா?’ என யோசித்தபடி நிற்க,
“என்ன பதில் சொல்லனும்ன்னு யோசிக்கிறியோ?…” என்றார் கணேசன்.
“நான் இன்னும் அவன்கிட்ட அதைபத்தி பேசவே இல்லை. என்கிட்ட கேட்டா என்ன பதில் சொல்ல? அதை சொல்றதுக்குள்ள நீங்களே இப்படி சொன்னா நான் என்ன பேச?…” என எதிர்கேள்வி கேட்டுவிட்டு,
“நான் எதுவும் சொல்லலை. அவனும் எதுவும் பேசலை. நீங்க பேசிக்கோங்க. அதுவும் இல்லாம திருவிழா என்ன நாளைக்கேவா வாசல்ல வந்து நிக்குது?…” என்று உள்ளே சென்றுவிட்டார் சரஸ்வதி.
“திமிரை பாரு…” என புலம்பிக்கொண்டு அமர்ந்திருந்தார் கணேசன்.
———————————
கல்லூரி அறக்கட்டளை அலுவலகத்தின் அருகிலிருந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அலுவலகம் அது.
கீழே ஆசிரியர்கள் அறையும், அலுவலக அறையும் இருக்க மாடியில் முதல்வர் அறை இருந்தது.
“அன்னைக்கு வர கெஸ்ட் எல்லாருக்கும் என்ன ஃபூட் புரவைட் பன்றதுன்னு பைனல் பண்ணியாச்சா?…” என முதல்வர் ரத்னாவின் எதிர் இருக்கையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் திருமொழிவர்ணன்.
“எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு திரு. நீ பார்த்துட்டு ஓகே சொன்னா ஆடர் குடுத்திடலாம்…” என்றார் ரத்னா.
“ஹ்ம்ம், நீங்க ஓகே பண்ணினா எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை தான்…” என்றாலும் அவனும் அதனை வாங்கி பார்வையிட்டான்.
“இதுல மார்னிங் வர கெஸ்ட்டுக்கு வெல்கம் ஸ்பீச் யார் தராங்க? இன்னும் அந்த பேப்பர் வரலையே?…” என கேட்க,
“ஸோ வாட்? நேம் மென்ஷன் பண்ணுங்க. அதோட இன்விடேஷன் காப்பி இன்னும் ரெடியாகலையா?…” என்று அந்த தொகுப்பில் அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களை பார்த்துக்கொண்டிருந்தான்.
ரத்னா அமைதியாக அவன் பார்த்து முடிக்கட்டும் என கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
ரத்னா திருமொழியின் பெரியம்மா. தாய் சங்கவையின் உடன்பிறந்த சகோதரியும் ஆவார்.
தங்கை மகனின் ஒவ்வொரு ஆட்டுவித்தலிலும் வீடாக இருந்தால் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைப்பார்.
கல்லூரியில் தன்னுடைய பதவிக்கும் மேல் உயர்பதவி வகிப்பவன். அதற்கான மரியாதையுடன் அவனை பார்த்தார்.
“டான்ஸ் ப்ராக்டிஸ் எல்லாம் எப்படி போகுது? யார் யார் என்னென்ன சாங்ஸ் செலெக்ட் பண்ணியிருக்காங்கன்னு நீங்க பார்த்தீங்களா? பசங்க ஆர்வத்துல எதாச்சும் ஏடாகூடமா பண்ணிடாம….” என்றும் எச்சரித்தான்.
“அதை எல்லாம் கவனிச்சுக்க அந்தந்த டிபார்ட்மென்ட் ஸ்டாஃப்ஸ் இருக்காங்க திரு…” என்றார் ரத்னா.
“அந்த லிஸ்ட் இந்த பைல்ல இல்லையே?…” என்றதும் வெளியில் இருந்து,
“எக்ஸ்க்யூஸ் மீ மேம்…” என்றொரு ஆசிரியையின் குரல் கேட்க ரத்னா எட்டி பார்த்தார்.
“வாங்க நளினா…” என உள்ளே அழைத்தார்.
முதல்வர் அறையில் சேர்மன் இருக்க உள்ளே செல்ல தயங்கிய நளினா பின் ரத்னாவின் அழைப்பில் உள்ளே சென்றார்.
வாசல் பக்கம் முதுகு காண்பித்தவாறு அமர்ந்திருந்த திருமொழி ‘யார்?’ என பக்கவாட்டில் திரும்பி பார்த்ததும்,
“குட்மார்னிங் ஸார்…” அவனுக்கு வணக்கம் வைக்க அவனும் பதிலுக்கு தலையசைத்துவிட்டு தன் கையிலிருந்த தொகுப்பில் கண்களை பதிக்க,
“சொல்லுங்க நளினா, என்ன விஷயம்?…” என்றார் ரத்னா.
“கல்ச்சுரல்ஸ் விஷயமா தான் மேம் பேசனும். ஒரு நிமிஷம்…” என்றவர் திருமொழியையும் பார்த்துவிட்டு,
“நிதர்ஷனா…” என்றழைக்கவும் திருமொழியின் இமைகள் மட்டும் உயர்ந்தது அந்த பெயரில்.
வெகுநாட்கள் கழித்து அந்த பெயரை கேட்டதும் புருவமுயர்த்தி நிமிர்ந்தவன் பார்வையில் எதிரிருந்த கண்ணாடி அலமாரியில் வெளியே நின்றிருந்தவள் பிம்பம் தென்பட்டது.
“உள்ள வா நிதர்ஷனா…” என்றார் நளினா மீண்டும்.
வாசலில் நின்றவளும் தன் கையிலிருந்த சிறிய கவரை பார்த்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்னகையுடன் உள்ளே நுழைவதையும் கண்டவன் செவியில் அவளின் மெல்லிய கொலுசு சத்தம்.
சுடிதாரில் வந்தவளின் ஒருபக்க தோளில் முல்லைச்சரம் விழுந்திருக்க வந்தவள் ரத்னாவை பார்த்து வணக்கம் வைத்த பின்னர் தான் திருமொழியையும் கவனித்தாள்.
அவனும் இமையை மட்டும் உயர்த்தி நிதர்ஷனாவை பார்க்க அவன் பார்த்ததும் சிறு திகைப்பு அவளிடம்.
ஒரு நொடியில் அந்த அதிர்வும் மறைந்து உடனே வந்தமர்ந்தது பயம் கலந்த மரியாதையான பார்வை.
“குட்மார்னிங் ஸார்…” என்றவளுக்கு,
“மார்னிங்…” என்று மட்டும் வாயசைத்தவன் மீண்டும் கையிலிருந்த தொகுப்பில் முகத்தை சாய்க்க ரத்னாவின் முகத்தில் சிறு புன்னகை.
‘எவ்வளவு தைரியமிருந்தா நான் பாரின்லையே யாரையோ கல்யாணம் பண்ணியிருப்பேன். என்னை பிடிச்சு அவ தலையில கட்ட பார்க்கறாங்கன்னு பேசியிருப்பா அந்த பொண்ணு? எல்லாம் உங்க தங்கச்சியால’ என்று அன்று அவன் இரைந்தது இப்போது நினைத்தவருக்கு சிரிப்பாய் இருந்தது.
“என்னன்னு சொல்லும்மா…” என கனிவாய் ரத்னா கேட்க திருமொழியும் அதனை கேட்கவிருந்தான்.