எதை சொல்கிறான் என அச்சத்துடன் பார்த்தவள் முகமே சட்டென வெளிறிவிட்டது.
“ஸார்…” என்றவள் தொண்டைக்குழியில் அடுத்த வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்ய அவனுக்கு தான் பேசியவை எல்லாம் தெரிந்திருக்குமோ என பயத்தில் குழம்பி போனாள்.
“நீங்க பேசினதை தான் சொல்றேன். பேசினது தப்பில்லை. பேசற விதம் நிதானமா இருக்கலாம். பொறுமை வேணும். புரியுதா?…” என்று கேட்க இன்னும் திருதிருவென முழித்தாள் நிதர்ஷனா.
“இங்க வந்ததும் நீங்க பேசினதை தான் சொல்றேன். கவனம்…” என்று சொல்லியவன் வெளிப்புறம் கையை காட்ட அப்போது தான் நிதர்ஷனாவிற்கு சென்ற உயிர் மீண்டு வந்தது.
மூச்சை இழுத்து பிடித்திருந்தவள் முகத்தில் மெல்ல ஆசுவாசம் பரவ பார்த்த திருமொழியின் விழிகளில் ‘அந்த பயம் இருக்கனும்’ என்ற பாவனை.
“ஓகே ஸார்… என சொல்லியவள் வாசல்வரை சென்றவள்,
“தேங்க்ஸ் ஸார்….” என்றாள் அவனிடம்.
திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன் மீண்டும் கையிலிருந்த கோப்பை பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தான்.
‘ஹப்பாடா’ என வெளியில் வந்தவள் ஆழ்ந்த மூச்செடுத்து நடந்து செல்ல திருமொழி மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.
“அந்த பொண்ணு போயாச்சா?…” என போனில் பேசி முடித்து ரிஸீவரை தொலைபேசியில் பொருத்திவிட்டு ரத்னா கேட்க,
“ஹ்ம்ம்..” என்றான் அதற்கும்.
“கிளம்பும் போது இப்படியா பயம் காட்டுவ? ஒருநிமிஷம் அவ பயந்து போய்ட்டா….” என ரத்னா சொல்லவும் திருமொழியின் இதழ்கள் லேசாய் வளைந்தது.
“இப்ப இந்த பேச்சு எதுக்கு?…” என்றவன் அடுத்த வேலைகளை பற்றி பேச ஆரம்பித்துவிட்டான் திருமொழிவர்ணன்.
———————————————————–
வீட்டிற்கு வந்ததுமே சரஸ்வதி சுட்டு கொடுத்த கார பணியாரமும், ஏலக்காய் டீயுமாய் அடுக்களை மேடையில் சம்மணமிட்டு அமர்ந்தபடி கதை சொல்லிக்கொண்டிருந்தாள் நிதர்ஷனா.
“இனிமே இதுக்கு உன் ஹெச்ஓடி உன்னை வச்சு செய்வாங்களா?…” என சரஸ்வதி கேட்க,
“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். மார்க் விஷயத்துல கை வைக்க முடியாது. அங்க நடக்காது. ஆனா கொஞ்சம் இரிட்டேட் பண்ணுவாங்க. நார்மலா பேச மாட்டாங்க. இப்படித்தான் இருக்கும்…” என்றாள் அசால்ட்டாக.
“ரொம்ப தைரியம் தான்….” என மகளின் தலையில் அவர் கொட்டு வைக்க,
“என்ன தைரியமா? என் முகத்தை பார்த்தா ஒன்னும் தெரியாது. ஆனா கால் கடகடன்னு ஆடவே ஆரம்பிச்சிருச்சு. பைனல் டச்சா சேர்மன் வேற பார்த்து பேசனும், பொறுமை வேணும்ன்னு சொல்ல என் மைன்ட்வாய்ஸ் நான் அன்னைக்கு பேசின நாய்ஸ் பொல்யூஷன் பேச்சுல போய் லேண்டாகிடுச்சு…”
“அப்பறம்…” என்றார் சரஸ்வதி சிரிப்புடன்.
“அப்பறம் என்ன? கொஞ்சம் அவர் இதை கண்டின்யூ பண்ணியிருந்தாலும் உன் மகளை நீ ஐஸியூல பார்த்திருப்ப. தலைக்கு மேல காக்கா குருவிலாம் பறந்திருச்சு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இருட்டாகிட்டே வந்த உலகத்துல அடுத்த வார்த்தை சொல்லி விளக்கேத்தி ஒண்ணுமில்லை போய் தொலைன்னு அனுப்பி வச்சிட்டார் அந்த மனுஷன்…” என நிதர்ஷனா பெருமூச்சு விட,
“உன் வாய் இருக்கே. உன் பேச்செல்லாம் இங்க தான். வெளில ஒன்னுத்துக்கும் இல்லை. ம்மீன்னு எனக்கு பின்னாடி நின்னுப்ப…” என மகளின் கன்னத்தை பிடித்து கிள்ளியவர்,
“பாவம் அந்த ரெண்டு டீச்சரும்…” என்றார் முருகா, மிருதுளாவை நினைத்து.
“பாவம் தான் எனக்குமே. அதுலயும் மிருதுளா மேம் ரொம்ப சாஃப்ட். எனக்கே கஷ்டமா போச்சு. ஆனா என்ன பண்ண? அவங்களும் அப்படி பண்ணியிருக்க கூடாதே ம்மீ…” என்றாள் நிதர்ஷனா.
“போதும், போதும். போய் படிக்கிற வேலையை பாரு. உங்கப்பா வந்திடுவார்…” சரஸ்வதி மகளை விரட்ட,
“இன்னொரு செட் பணியாரம் வேணும். ஊத்துங்க. அப்பா வர இன்னும் டைமிருக்கு…” என்றவள்,
“ம்மீ உனக்கொரு விஷயம் தெரியுமா? அன்னைக்கு உன் சின்னமகன் விழுந்து வாரி ஊருக்கு வந்து சேர்ந்தானே. யாரோட பைக்ல போனேன்னு சொன்னான்?…” என்று ரகசியம் போல கேட்க,
“என்கிட்ட எதுவும் சொல்லலையே. பைக்ல போகும்போது விழுந்துட்டேன்னு மட்டும் தான் சொன்னான். உன்கிட்ட சொன்னானா?…” என்ற சரஸ்வதி நிதர்ஷனாவின் நமுட்டு சிரிப்பில்,
“ஏய் வாலுங்களா என்னடி பண்ணிருக்கீங்க? உன் சிரிப்பே சரியில்லையே…” என்று கலவரமாக பார்க்க,
“சரஸு உன் சின்னவன் என் தலையில மண்ணை அள்ளி போட்டுட்டான். இதுக்குன்னே பிள்ளையை பெத்து வளர்த்திருக்கியா நீ?…” என கணேசன் போல நிதர்ஷனா பேசி காண்பிக்க,
“யாத்தே…” என நெஞ்சில் கையை வைத்துவிட்டார் சரஸ்வதி.
“ம்மீ, பதறாத. என்கிட்ட உன் பெரியபிள்ளை தான் உளறிட்டான். சின்னண்ணா அன்னைக்கு பைக்ல போகலை. ஸ்கூட்டில போயிருக்கான். அதுவும் அவன் ப்ரெண்டோட. அவங்க ஒரு கேர்ள். எனக்கு இவ்வளோ தான் தெரியும். மத்ததை நீ விசாரிச்சுக்கோ…” என்றவள்,
“பணியாரம் போதும். மிச்சத்தை அவனுக்கே குடு…” என்று சொல்லி,
“ஒரு நல்ல பிள்ளைக்கு நடுவுல ரெண்டு நொள்ளை பிள்ளைக. ஸ்யப்பா…” என குதித்து இறங்கி சென்றாள் நிதர்ஷனா.
“அடியே, இரு வரேன் உன்னை. உங்க மூணுபேரையும் வச்சிக்கிட்டு இந்தாளுக்கிட்ட நான் தான் வாங்கிக்கட்ட வேண்டி இருக்கு. இவனை…” என கையை கழுவியவர் பிரகாஷ் போனுக்கு கூப்பிட,
“குட்டிச்சாத்தான் முடிஞ்சதா?…” என கேட்டிருந்த அண்ணனின் கேள்விக்கு,
“பினிஷ்….” என பதில் அனுப்பியிருந்தாள் நிதர்ஷனா.
கணேசன் வரும்முன் மகனிடம் என்ன ஏதென கேட்க வேண்டுமே என்ற பதட்டத்துடன் அவனின் எண்ணிற்கு அழைத்தபடி இருந்தார் சரஸ்வதி.
——————————————–
அழுது அழுது கண்ணீர் வடிந்தபடி தான் இருந்தது மிருதுளாவிற்கு. முகமெல்லாம் ரத்தமாய் சிவந்து வீக்கத்துடன் இருக்க கவலையாக மகளின் தலையை வருடினார் சாவித்திரி.
கல்லூரி முடிந்ததும் நேராக கிளம்பி திருப்பூர் வந்துவிட்டாள் மிருதுளா. அங்கே இருக்கவே முடியவில்லை.
விடுமுறை தினங்களை தாண்டி மற்ற எந்த ஒருநாளிலும் வராத மகள் இப்படி முகமெல்லாம் வாடி போய் வந்ததும் தாயாய் அவருக்கு தாளவே முடியவில்லை.
அதிலும் அவள் சொல்லிய விஷயம் இன்னும் கவலையாக்கியது. ஒருபுறம் கோபம் வேறு.
“இங்க நம்மக்கிட்ட இல்லாத சொத்தா மிது? நீ அங்க போய் சொல்லிக்குடுத்து தான் சம்பாதிக்கனுமா? இப்படி பேச்சு வாங்கனுமா?…” என்றார் வருத்தத்துடன்.
“உங்கப்பாவுக்கும் கிருத்திக்கும் தெரிஞ்சா இன்னும் கோபப்படுவாங்க…” என்று சொல்ல,
“ம்மா, அதெல்லாம் சொல்லக்கூடாது. யாருக்கும் தெரிய வேண்டாம். என் மேல தப்பு. அதான் திரு மாமா அப்படி பேசிட்டாங்க. ப்ளீஸ் இதை பெருசு படுத்தாதீங்க…” என்று சொல்லி கண்ணை துடைத்துக்கொண்டாள்.
“சரி சொல்லலை. இனிமே நீ அந்த காலேஜ்ல வேலை பார்க்க வேண்டாம் மிது. நான் போனவாரம் செல்வராஜ் மாமாக்கிட்ட பேசினேன்…” என்றதுமே அவளின் முகத்தில் பரபரப்பும், எதிர்பார்ப்பும்.
“திருவுக்கு இப்ப வரன் பார்க்கலையாம். ஸ்வாதி குழந்தை பெத்து அவங்க வீட்டுக்கு வரவும் தான் பார்க்க இருக்கறதா சொன்னாங்க. ஸ்வாதியை பார்க்க போனப்போ சங்கவைகிட்ட பேசும்போது அவங்க சொன்னாங்களாம்…” என்றார் மகளிடம்.
“அதுக்கும் நான் காலேஜ் போறதுக்கும் என்னம்மா சம்பந்தம்? என்னால போகாம இருக்கமுடியாது…” என மிருதுளா முகம் வாடி சொல்ல,
“எப்படினாலும் இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சிடலாம்ன்னு சுசீலாக்காவும் சொல்லியிருக்காங்க. உன் அண்ணன் பாலாஜிகிட்டையும் பேசறேன்னு சொல்லியிருக்காங்க. அப்பறம் என்னடா?…” மகளை வேலைக்கு அங்கே அனுப்ப சுத்தமாக விருப்பமில்லை அவருக்கு.
என்றைக்கு தன் பெரியம்மா பேரனும், அக்கா சுசீலாவின் மகனுமாகிய பாலாஜிக்கு ஸ்வாதியை பேசி முடித்தார்களோ அன்று திருமொழியை பார்த்ததில் இருந்து அவன் மீது விருப்பம் கொண்டு அவனை தான் மணம் முடிக்கவேண்டும் என்றொரு நினைப்பில் மகளிருக்கிறாள்.
தங்களின் கார்மெண்ட்ஸ் பொறுப்பில் பதவி வகிக்க வேண்டியவள் அவனுக்காகவே அவனின் கல்லூரியில் பணிக்கு சேர்ந்து அங்கேயே தங்கி இருக்கிறாள்.
மகளின் எதிர்காலத்தை எண்ணி இப்போதே அத்தனை கலக்கமாக இருந்தது சாவித்திரிக்கு.
இந்த திருமணம் மட்டும் நடைபெறவில்லை என்றால் என நினைத்தும் பார்க்க முடியவில்லை.
‘ஒரு வார்த்தைக்கே இப்படி உடைந்து போய் அழும் மகள். அப்படி ஒன்று நடக்காமல் போனால்?’ அவர் யோசித்துக்கொண்டிருக்க,
“ம்மா அப்பா போன் பன்றாங்க…” என அவரின் எண்ணவோட்டத்தை தடை செய்தாள் மிருதுளா.
“சரி நான் பேசிட்டு வரேன். அப்பாக்கிட்ட உனக்கு உடம்புக்கு முடியலைன்னு வந்திருக்கறதா சொல்றேன். நீ படுத்துக்கோ…” என சொல்லிவிட்டு எழுந்து சென்றார் அவளின் அறை கதவை அடைத்துக்கொண்டு.
அவர் சென்றதும் தனது மேக்புக்கை எடுத்த மிருதுளா அதில் தான் சேகரித்திருந்த திருமொழியின் புகைப்படங்களை பார்வையிட ஆரம்பித்தாள்.
அத்தனையும் அவன் அறியாமல் எடுத்து வைத்திருந்தது. முதன்முதலில் ஸ்வாதியின் திருமண பேச்சு வார்த்தையின் பொழுது தான் அவனை பார்த்தது.
பார்த்த அன்றே பிடித்துவிட அவனின் நினைவுகள் புகைப்படங்களாக அவளின் கைகளுக்குள் சேமிக்க ஆரம்பிக்கப்பட்டது.
அவனை பற்றி தெரிந்துகொண்டவள் ஸ்வாதி, பாலாஜி திருமணம் கைகூடினாலும் இல்லை என்றாலும் தனக்கு அவன் என்னும் முடிவிற்கே வந்துவிட்டாள்.
ஸ்வாதியின் திருமணத்திற்கு முன்பே அங்கே வேலைக்கு செல்வது என முடிவுக்கு வந்ததும் முதல்முயற்சி கல்லூரியில் வேலைக்கு விண்ணப்பித்தது.
படிப்பும், திறமையும் இருக்க நேர்முக தேர்வில் அவள் தேர்ந்தெடுக்கப்பட அன்று அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வீட்டினரிடம் ஒரு இரு வருடங்களுக்கு மட்டும் என கெஞ்சி சம்மதிக்க வைத்து உடனடியாக ஜாகையை திருமொழியின் வீடிருக்கும் வீதியில் மாற்றிக்கொண்டாள்.
அங்கேயே ஒரு வீட்டை பிடித்து கல்லூரியில் உடன் வேலை செய்யும் தோழி லலிதாவையும் துணைக்கு தன்னுடன் தங்கவைத்துக்கொண்டாள் மிருதுளா.
ஒவ்வொரு நாளும் திருமொழியின் உடை நிறத்தில் தானும் உடை அணிவது, எப்போதாவது அவனின் வீட்டிற்கு செல்வது என அவனின் கண்ணெதிர் வந்தாலும் கவனிப்பில்லாமல் போனது அவளின் வருகைகள்.
இத்தனை நாட்களில் எண்ணி எண்ணி பத்து வார்த்தைகளுக்குள் தான் அவளிடம் பேசியிருப்பான் திருமொழி.
குடும்ப விசேஷநாட்களில் மெல்லிய அறிமுக புன்னகை, தலையசைப்பு இவ்வளவு தான்.
அதுவும் கல்லூரியில் அவனின் சொந்தம் என்றால் அதற்கொரு தனி மரியாதையே இருந்தது பார்ப்பவர்கள், உடன் வேலை செய்பவர்கள் மத்தியில்.
இதற்கே இப்படி என்றால் அவனின் மனைவியாகிவிட்டால் எப்படி இருக்கும் என நினைக்காத நாளில்லை.
அவனுடனான எதிர்கால கனவுகள் எல்லையின்றி விரிந்துகொண்டிருக்க ஒவ்வொரு நாளும் அவனுக்காகவே அவள் காத்திருந்தாள்.
அந்த எண்ணங்களில் இருந்து மீளமுடியாமல் விழுந்திருந்தவள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருக்க இன்று அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவளை குத்தி கிழித்தது.
அந்நினைவில் மீண்டும் மழுக்கென்று கண்ணில் நீர் நிறைய கண்களை துடைத்துக்கொண்டாள்.
‘இன்னும் கொஞ்சம் நாள். அதுக்கப்பறம்’ என நினைக்கையில் அந்த நினைவே தித்திப்பாய் இருக்க இனி திருமொழி பாராட்டும் விதமாக தான் நடந்துகொள்ள வேண்டும் என கவனமானாள்.
எடுக்கப்படும் கவனங்கள் எல்லாம் கவனிக்கப்பட வேண்டுமே?