“இவன் என்ன வாராவாரமா பேரனை கூட்டிட்டு வந்து காமிக்கிறான்? முடியாதப்பவும் வரமுடியாதாக்கும் அந்த மகாராணிக்கு…” என மருத்துவமனை என்றும் பாராமல் ஸ்ரீதரை கணேசன் பேசிவிட,
“பார்த்துக்கிட்டு கூப்பிடலாம்ன்னு தான். அதோட மெர்லின் இப்ப இங்க வரக்கூடிய சூழ்நிலை இல்லை…” என்றான்.
நிதர்ஷனாவுக்கு புரிந்தது. ஆனாலும் இருவரின் பேச்சில் அமைதியாக அவள் நிற்க சரஸ்வதி விழிக்கும் வரை அவன் கிளம்பவில்லை.
மகன்கள் இருவரும் தாயை விட்டு நகரவில்லை. அவர்களுக்கும் சேர்த்து தான் நிதர்ஷனா பார்க்கவேண்டியதானது.
அதிலும் ஸ்ரீதர் அவரின் கையை பிடித்தபடியே அமர்ந்திருந்தான். பிரகாஷ் தங்கைக்கு துணையாக மேலுதவிகள் செய்தவண்ணம் இருந்தான்.
இதோ முதல்நாள் இரவு தான் ஸ்ரீதர் சரஸ்வதியின் உடல்நிலையை பார்த்துவிட்டு கிளம்பி இருந்தான்.
நெஞ்செல்லாம் சளி கட்டியிருக்க சரஸ்வதியால் சரியாக பேச முடியவில்லை. அவ்வளவு ஜலதோஷம்.
இருமலில் கண்ணெல்லாம் நீர் கழன்றுவிடும். அத்தனை துடித்து போவார். எப்போது காய்ச்சல் வந்தாலும் இந்தளவிற்கு அவரை வாட்டியதே இல்லை.
“ஒரு மாத்திரையை போட்டா உடனே சரியாகி போறது உனக்கு மட்டும் தான் ம்மீ. காய்ச்சல் உனக்கு மட்டும் சொந்தக்காரரா இருப்பார் போல?…” என நிதர்ஷனா எப்போதும் கிண்டல் பேசுவதுண்டு.
எல்லாவற்றிற்கும் சேர்த்து செய்ததை போல சரஸ்வதியை சுருட்டிவிட்டது. அவரோடு அவரின் குடும்பத்தையும் சேர்த்தே.
அதிகமாய் பயந்து போனது நிதர்ஷனாவும், கணேசனும் தான். கண் விழிக்கும் வரை உயிரே இல்லை அவர்களுக்கு.
முகத்தில் கொஞ்சமும் சிரிப்பின்றி அவளிருக்க பார்த்த அண்ணன்கள் இருவருக்கும் தாளவில்லை.
“சரியாகிடும்டா…” என சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டனர்.
தேறுதல் இல்லாமல், இறுக்கத்தை காண்பித்தபடி உள்ளுக்குள் அரண்டு போய் நின்றது கணேசன் மட்டும்.
இதோ வீட்டிற்கு வந்து சேர்ந்தாகிற்று. வந்த பின்னர் தான் சரஸ்வதி நாளை பார்த்தார்.
“ம்மீ இந்தா கஷாயம். நான் அப்பாவுக்கு காபி போடறேன்…” என சொல்லி நகர போன மகளை கைபிடித்து அருகில் அமரவைத்துக்கொண்டார்.
பிள்ளை சரியாக உண்ணாமல், உறங்காமல் அலைச்சலும், கவலையுமாக இளைத்திருந்தாள்.
“நிதும்மா…” என தொண்டையை கரகரத்தபடி அழைக்க அதுவே காற்றில் பாதியாய் கலந்தது.
“என்னம்மா, எதாச்சும் வேணுமா?…” என கேட்டவள்,
“அப்பாவை அனுப்பிட்டு வரட்டா? வெளில போகனும்ன்னு சொன்னாங்க…” என கேட்க சரி என தலையசைத்தார் சரஸ்வதி.
“ம்மா, நானும் இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன். உடம்பை பார்த்துக்கோங்க. உங்களுக்கு முடியலைன்னா முதல்ல எங்கட்ட சொல்லுங்க. உங்க இஷ்டத்துக்கு மாத்திரையை போட்டேன்னு இல்லாம. இப்ப எவ்வளோ பயந்துட்டோம் நாங்க…” என சொல்லியவன் அவரின் அருகில் அமர்ந்துகொண்டான்.
சரஸ்வதி மகனை புன்னகையுடன் சோர்வாய் பார்க்க அத்தனை வருத்தமாய் இருந்தது பிரகாஷிற்கு.
“எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கும்மா. ஆனா இன்னும் அவக்கிட்டையே சொல்லலை. லவ் எல்லாம் இல்லை. ஆனா லைப் பாட்னரா வந்தா நல்லா இருக்குமேன்னு தான் ஸ்ரீதர்கிட்ட சொல்லிட்டிருந்தேன். அந்த ரெண்டு பிசாசுங்களும் உங்ககிட்ட சொல்லிருச்சுங்க…” என்றான் சங்கடத்துடன்.
“இன்னும் நானே உறுதியான முடிவுக்கு வரலை. ஜஸ்ட் ஒரு தாட். இன்னும் அது அவ்வளோ ஸ்ட்ராங் அப்படின்னும் சொல்ல முடியலை. அதான்…” என்ற மகனின் தலையை கோதிய சரஸ்வதி,
“அப்பா இருக்காங்க. போன்ல பேசுவோம். நீ வருத்தப்படாத…” என்றார் மகனிடம்.
“இதான் நீங்க. ஆனாலும் நீங்க பெத்து வச்சிருக்கீங்களே ஒன்னு. அந்த வாலு உங்க மூத்தவனோட சேர்ந்துட்டு என்னை வச்சு செஞ்சிட்டா. ஒரே கலாட்டா, அப்பாவுக்கு நீ குடுத்த ப்ராமிஸ் என்னாச்சு அது இதுன்னு அவ்வளோ கேள்வி. அவ தான் எனக்கு பொண்ணு பார்த்து முடிவு பண்ணுவாளாம்….” என சொல்லி சிரித்தான்.
“ஆனா நம்ம நிதுக்குட்டி எவ்வளோ பொறுப்பு தெரியுமா? ரொம்ப தவிச்சு போனதும் அவ தான். எல்லாரையும் பார்த்துக்கிட்டதும் அவ தான். பயந்தும் போய்ட்டா…” என தங்கையை சில்லாகித்து பேசினான் பிரகாஷ்.
சரஸ்வதிக்கு தெரியுமே தன் மகளை. மகன் சொல்லவும் ஆமோதிப்பாய் புன்னகைத்தவர்,
“என் பொண்ணு எப்பவும் சூழ்நிலை அறிஞ்சு நடக்கறவ. கொஞ்சம் வாய்த்துடுக்கு…” என சொல்ல,
“இனிமே ரகசியம்ன்னு என்னை மாதிரி குரலை குறைச்சு பேச வேண்டாம். இப்ப உங்க குரலே அப்படித்தான் கிசுகிசுப்பா இருக்கு ம்மா…” என்று பிரகாஷ் கிண்டல் பேச,
“படவா…” என அவனின் தலையில் லேசாய் கொட்டு வைத்தார் சரஸ்வதி.
எத்தனை நாட்களாகிற்று வீட்டிற்குள் இப்படி சிரித்து. கணேசன் இல்லை என்றாலும் சரி, வீட்டினுள் இருந்தாலும் சரி எப்போதும் பிள்ளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டால் கூத்தும் கும்மாளமுமாக கலகலவென்று இருக்கும்.
“வீடா இது? சத்தத்தை குறைங்க முதல்ல…” என தலையில் அடித்துக்கொள்ளும் கணேசனின் சத்தம் தான் அங்கே கேட்காமல் போகும்.
முதன்முறை இத்தனை நாட்கள் தான் இருந்தும் இன்று தான் சிரிக்கின்றார்கள் அவர்கள்.
“ண்ணா இந்தா டீ…” என நிதர்ஷனா வர,
“அப்பா எங்க? கிளம்பிட்டாங்களா?…” என்றான் பிரகாஷ் அதனை வாங்கியபடி.
“ஆமா, உன்னை ரொம்ப நேரம் அம்மாவோட பேசிட்டிருக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு போனாங்க…” என்றதும்,
“நான் நல்லா தான இருக்கேன். போயிருக்க வேண்டியது தான?…” என முறைத்தார் சரஸ்வதி.
“நேத்து தானே கல்சுரல்ஸ், உன் டான்ஸ் ப்ரோக்ராம். ஆமா நானும் மறந்தே போய்ட்டேன். என்ன நிது? நீ என்கிட்ட ஞாபகப்படுத்தி இருக்கலாமே?…” என தேதியை பார்த்தான்.
எத்தனை ஆர்ப்பாட்டம் வீட்டில். தன்னுடைய நடனம் எப்படி என எத்தனை வீடியோ, வீடியோ காலில் ஆடி காண்பித்து உடைகள், அதற்கான ஆபரணங்கள் என அவள் எடுத்து வைத்திருந்தது.
“என்னடா?…” என்றான் தங்கையிடம்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. விடுண்ணா. ஏன் இப்ப இதெல்லாம்? அதான் முடிஞ்சதே. போயிருந்தாலும் என்னால ஆடியிருக்க முடியாது…” என்றவள் கண்ணில் நீர் நிறைந்துவிட சரஸ்வதியை பார்த்து,
“பயந்துட்டேன் ம்மீ. இப்படியெல்லாம் பயம் காட்டிடாத. உன்னை அப்படி பார்க்கவே முடியலை. கண்ணு முழிக்கலைனதும் எனக்கு உயிரே இல்ல, தெரியுமா?…” என கேட்டு அப்படி ஒரு அழுகை.
மருத்துவமனையில் கூட கண்ணில் நீர் நிறைந்தாலும் துடைத்துவிட்டு தைரியமாய் நின்றவள் இப்படி கதறி அழ சரஸ்வதியும், பிரகாஷும் கலங்கி போனார்கள்.
“ஒன்னுமில்லடா, டேய் வாலு, சேட்டை. என்னடா நீ?…” என அவளை தேற்ற முயன்றான் பிரகாஷ்.
“இதெல்லாம் விட்டுட்டு எனக்கு டான்ஸ் முக்கியமா? போ ம்மீ. நீ என்னை பயம் காட்டிட்ட. போ…” என சரஸ்வதி மடியில் சாய்ந்தவள் சொல்லிக்கொண்டே இருக்க அவளின் தலையை ஆறுதலாய் வருடியபடி இருந்தார் சரஸ்வதி.
————————————————-
தன் வீட்டு மொட்டை மாடியில் காலை உடற்பயிற்சியில் இருந்தவனின் எண்ணமெல்லாம் முதல் நடந்த விழாவிலேயே தான் சுழன்றது.
எல்லாமே நல்லவிதமாய் நடந்து முடிந்திருக்க எண்ணமெல்லாம் அந்த ஒருத்தியை சுற்றி.
‘அந்த பொண்ணு ஏன் வரலை? அந்த டான்ஸ் தானா? நான் தான் கவனிக்கலையா?’ என்றவிதமான யோசனைகள் திருமொழிக்கு.
‘அன்னைக்கு அந்த ட்ரெஸ்க்கு அவ்வளோ பேசிட்டு அந்த நிகழ்ச்சியிலையே கலந்துக்காம என்னவாச்சு?’ என்னும் கேள்விகள் அவனுள்.
நிதர்ஷனா பங்குபெறும் பாடலை தான் தான் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ? இல்லை அவள் வரவில்லையா? இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தான்.
ஏதோ ஒருவகையில் அவளின் நினைவுகள் மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் நீர்க்குமிழியாய் மொட்டுவிட்டது.
தூரத்தில் ஒரு பெண்ணின் பார்வை தன்னை வட்டமிடும் உணர்வை அவன் உணராதவண்ணம் கண்ணுக்கு தெரியாதவகையில் இன்னொருத்தியின் எண்ணங்களில் சுழன்றுகொண்டிருந்தான்.
அவனின் எதிர் வீட்டின் அருகிலிருக்கும் வீட்டு மொட்டைமாடியிலிருந்து மிருதுளா திருமொழியை விடாமல் பார்த்துக்கொண்டிருக்க அந்த பார்வை என்றைக்கும் போல இன்றைக்கும் அவனின் கவனத்தையும் கவரவில்லை. கருத்திலும் பதியவில்லை.
ஆனால் அவன் அழையாமலே நிதர்ஷனாவின் நினைவுகள் திருமொழி நெஞ்சில் மேலெழும்பியது.