ஐந்து நாட்கள் விடுமுறை. அதன் பின் வார விடுமுறை எல்லாம் முடிந்து அன்றைக்கு தான் நிதர்ஷனா கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.
எப்போதும் கல்லூரிக்கு சென்றாலும், வீட்டில் இருந்தாலும் சின்ன சின்ன உதவிகள் சரஸ்வதிக்கு செய்வது தான்.
இப்போது இன்னும் அதிகமாகவே மகள் செய்ய சரஸ்வதிக்கு தான் சங்கடமாகி போனது.
“இப்ப எனக்கு என்னாகிருச்சுன்னு இன்னும் ஒன்னொண்ணுக்கும் என் முகத்தையே பார்த்துட்டு இருக்க நீ? எல்லாம் சரியாகிருச்சு நிது. நான் பார்த்துப்பேன். நீ போய் காலேஜ் கிளம்பு…” என்றார் மகளை.
“அதெல்லாம் எனக்கு தெரியும். நீ பேசாத ம்மீ…” என அவரையே அதட்டியவள்,
“எனக்கு எப்போ காலேஜ் போகனும்ன்னு தெரியும். உன் வேலையை நீ பாரு….” என்றாள்.
“எங்கடி விட்ட நீ? எல்லாத்தையும் இழுத்து போட்டுட்டு இப்படி வேர்த்திருக்கு. மரியாதையா போய் குளிச்சிட்டு வா…” என அவளை அடிக்காத குறையாக விரட்ட,
“ஆமாமா ஒரே நாள்ல இவ்வளோ ஹெவி பெர்பாமென்ஸ் மம்மிக்கு ஷாக்கா தான இருக்கும்…” என வீடியோ காலில் கிண்டலடித்தான் ஸ்ரீதர்.
“நீ முதல்ல வேலைக்கு போடா. என்னை பேசற? அங்க இருந்துட்டு என்னை சொல்றன்னு அப்பாக்கிட்ட சொன்னேன்னா…” என நிதர்ஷனா தன் மூத்த அண்ணனை சீண்ட,
“என்னவாம்? இல்ல என்னவாம்? பயந்துருவோமா நாங்க? என் பொண்டாட்டிக்கிட்ட போனை குடுத்திருவேன்….” என்றவன்,
“மெர்லின்….” என சத்தம் குடுக்க சரஸ்வதியும், நிதர்ஷனாவும் வாயில் கைவைத்து முறைத்தனர்.
“ம்மா பார்த்தீங்களா? பஞ்ச டயலாக் மாதிரி மெர்லின் டயலாக் தான். இங்க வந்துட்டு கிளம்பற வரைக்கும் கண்ணீரும் கம்பலையுமா நின்ன பய தான் இவன். அங்க போகவும் மாணிக் பாட்ஷாடான்னு தெனாவெட்ட பார்த்தீங்களா?…” என சொல்லியவள்,
“இன்னும் ஒருவாரத்துல உனக்கு போன் வரும். திருவிழா வருதுன்னு. வர புதன்கிழமை கொடியேத்த போறாங்க. உனக்கு அப்பா அலகு குத்த போறார். சிக்குவ இல்ல, அன்னைக்கு பேசிக்கறேன்….” என சொடுக்கு போட்டு சொல்லிவிட்டு,
“நான் போய் குளிக்கறேன்…” என நகர்ந்தாள் நிதர்ஷனா.
“போ போ போய் தொலை…” என அவளை விரட்டுவதை போல பாவனை செய்தவன் தங்கை சென்றதும்,
“ஒழுங்கா சாப்பிடறாளா ம்மா? இப்படி இந்த பிசாசு கன்னமெல்லாம் வத்தி போயிருக்கா? அங்க இருக்கும் போது கூட தெரியலை. இப்ப பார்க்கும் போது தெரியுதே?…” என்றான் கவலையுடன் ஸ்ரீதர்.
“ஹ்ம்ம், வீட்டுக்கு வந்ததுல இருந்து கவனிக்கறேன். சாப்பிடறா தான். ஆனா ஒழுங்கா தூங்க மாட்டேன்றா ஸ்ரீ. அர்த்த ராத்திரில நான் எழுந்துட்டாலும் பதறி எந்திச்சு என்னாச்சு ம்மீன்னு கேட்கறா. கஷ்டமா இருக்குடா…” என்ற பொழுதே சரஸ்வதிக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“ஷிவ், ஓடாதடா, ஸ்கூலுக்கு நேரமாச்சு. ஷிவ்…” என மெர்லின் மகனின் பின்னால் சுற்ற ஷிவேஷ் வந்து தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டான்.
“கொஞ்ச நேரத்துல ஸ்கூல் வேன் வந்திரும். இவன் படுத்தறானே?…” என மெர்லின் அவனை ஸ்ரீதரிடமிருந்து பிரிக்க முயல,
“அந்த யூனிபார்மை என்கிட்ட குடு…” என ஸ்ரீதர் மகனை தன் முன்னே கொண்டுவந்து போட்டுவிட்டான்.
“என்ன த்தை கிட்சன்ல பொறுப்பெடுத்தாச்சா?…” என கேட்டுக்கொண்டே தன்முன் வந்து அமர்ந்தபடி மெர்லின் தலையை வார,
“இல்லம்மா, இப்படியே உக்கார்ந்திருக்கேன். என்னை எங்க செய்ய விட்டா? சும்மா உக்கார்ந்தவாக்குல காய்கறி கட்பண்ணி குடுத்திட்டு இருக்கேன். வேற ஒண்ணுமில்லை…” என்றார் அவர் மருமகளிடம்.
“அதுவும் சரிதான். கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க. அதான் மூணுபேரை வளர்த்தாச்சுல. இன்னும் என்ன உங்க தோள்ல தூக்கி சுமந்துட்டு? அவங்க பார்த்துப்பாங்க. நிதாவும் ஒன்னும் சின்ன பொண்ணில்லை…” என்று சொல்ல,
“சொன்னாலும் சொல்லலைன்னாலும் அவ சின்ன பொண்ணு தான்…” என்றான் ஸ்ரீதர்.
“அப்போ ஏன் அத்தைக்கு முடியாதப்போ நீங்க அந்த சின்ன பொண்ணை கவனிக்கலையாம்? இங்க வந்து புலம்பிட்டிருந்தா ஆச்சா?…” என மெர்லின் வெடுக்கென்று கேட்க,
“தப்புத்தேன் தப்புத்தேன்…” என ஸ்ரீதர் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ள,
“அப்படியே கவுத்திடறது….” என கையிலிருந்த சீப்பினால் அவனின் கையில் ஒரு அடி வைத்து சிரித்தவள் மாமியாரிடம் திரும்பினாள்.
“இங்கயும் இவங்க ஒரே புலம்பல் தான். நிதுவை கவனிக்கலை, விட்டுட்டோம்ன்னு அண்ணனும் தம்பியும் மாத்தி மாத்தி கரைச்சல். பேசாம திரும்ப ஊருக்கு கிளம்புங்கன்னும் சொல்லிட்டேன்…” என கிண்டல் பேசினாள் மெர்லின்.
“அதெல்லாம் சரியாகிடுவா. நான் பார்த்துக்கறேன். நீ முதல்ல கிளம்பு. அங்க பார் ஷிவா ட்ரெஸ் பண்ணிட்டான். அவனை அனுப்பிட்டு நீயும் ஆபீஸ் போகனுமேமா…”
“ஆமா த்தை. இவங்களுக்கு இன்னைக்கு வேற ஒரு ப்ரான்ச்ல மீட்டிங். லேட்டா தான் புறப்படுவாங்க. அதான் காலையிலையே உங்ககிட்ட வம்பு பண்ணிட்டிருக்காங்க…” என தன் கூந்தலை போனியில் கட்டிக்கொண்டாள்.
“நீ பேசிட்டிரு. நான் போய் விட்டுட்டு வரேன்…” என சொல்லி ஸ்ரீதர் எழுந்துகொண்டான் மகனுடன்.
“லன்ச் பேக் சோபால இருக்கு. எடுத்துக்கோங்க…” என சத்தமாய் சொல்லிவிட்டு திரும்பியவள்,
“திருவிழா டேட் பிக்ஸ் பண்ணிட்டதா மாமா சொன்னாங்களாம்…” என்று அவள் கேட்க,
“ஆமாம்மா, உன் தோதை நீ பார்த்துக்கோ…” என்றுவிட்டார் சரஸ்வதி.
வந்துதான் ஆகவேண்டும் என்று அதிகாரம் பண்ணிவிட ஒருநொடி ஆகிவிடாது. அங்கே அவர்கள் சூழ்நிலை எப்படியோ என அதனை பெரிதாய் நினைப்பதில்லை சரஸ்வதி.
“கயறை கட்டியா இழுக்க முடியும்? கூப்பிட மட்டும் தான் முடியும். வர விருப்பமும், வரக்கூடிய சூழ்நிலையும் அவங்களுக்கு தான் தெரியும். இங்க இருந்துட்டு வா வான்னா?…” என கணேசன் காதுபடவே பலமுறை அவர் சொல்லியும் ஆகிற்று.
ஆனால் கணேசன் அத்தனை பிடிவாதம். மெர்லினுக்கும் அவருக்கும் எப்போதும் ஒத்து போகாது.
எப்போதும் ஒரு சிடுசிடுப்பு. பட்டென்று கணேசன் பேசிவிடுவார். மெர்லினும் பதிலுக்கு பேசிவிட்டால் ஸ்ரீதர் தலை தான் கணேசனால் உருளும்.
அதிலும் மெர்லின் பெரிதாய் கணவனை முன்னிறுத்தி குறை சொல்லுவதும் கிடையாது.
“என்னை கேட்டா நான் தான மாமா பதில் சொல்லுவேன். இதுல அவர் எங்க இடையில வந்தார்? நீங்க என்கிட்டையே நேரா சொல்லுங்க. பதில் சொல்றேன்…” என முன் வந்து நிற்பாள் மெர்லின்.
அதற்கே காய்ந்துபோவார் கணேசன். சரஸ்வதியும், நிதர்ஷனாவும் தான் இழுத்து பிடிக்க பார்ப்பார்கள்.
அண்ணன், தம்பி இருவரும் வேடிக்கை பார்ப்பதோடு சரி. ‘சபாஷ், சரியான போட்டி’ என பிரகாஷ் சத்தமில்லாமல் விசில் போடுவான்.
இப்படியாகவே மெர்லின் வரும் நேரங்களில் சிலபல கலவரங்கள் வீட்டிற்குள் மட்டும் சத்தமின்றி புகையும்.
ஆனால் மெர்லின் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய மரியாதையும் விட்டுத்தந்ததில்லை. யாருக்கும் மரியாதை தராமல் இருந்ததும் இல்லை.
அதற்கே சரஸ்வதி மருமகளுடன் அனுசரித்து செல்ல இருவருக்குள்ளும் அதிகத்திற்கே புரிதல்கள்.
இப்போதும் கணேசனை போல வந்துதான் ஆகவேண்டும். ஒருவாரம் முன்பே வா என கட்டளை இடாமல் சூழ்நிலையை பார்த்துக்கொள் என்னும் மாமியாரின் மீது அன்பு வலுப்பட்டது.
“டேட் கன்பார்ம் ஆகிட்டா லீவ்க்கு இப்பவே நான் பிக்ஸ் பண்ணிருவேன் த்தை. உங்க பேரனுக்கும் லீவ் சொல்லனுமே…” என சொல்லியவள் அவரிடம் பேசி முடித்து,
“சரி நிதுவை பார்த்துக்கோங்க…” என சொல்லி அழைப்பை துண்டித்து சென்றாள்.
தனது போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்த சரஸ்வதி யாருடனோ வாசலில் பேசிக்கொண்டிருந்த கணேசனின் சத்தத்தில் அங்கே சென்றார்.
“இவங்களை வேலைக்கு சொல்லியிருக்கேன். உனக்கு ஒத்தாசைக்கு….” என்று சொல்ல,
“ஏன், எனக்கு…” என்ற சரஸ்வதியை பேசவே விடவில்லை கணேசன்.
“நான் சொல்லிட்டேன். டெய்லி காலையில, சாயந்தரமும் வந்திருவாங்க. என்னென்ன வேலைனும் சொல்லிட்டேன். சம்பளம் எல்லாம் பேசிட்டேன். ஞாயிறு மட்டும் ஒருநேரம் வந்து செய்வாங்க…” என படபடவென்று நின்றார் கணேசன்.
“சரிம்மா, நீங்க நாளைக்கு இருந்து வாங்க. நேரமே வந்துடனும்…” என வேலைக்கு வந்த பெண்மணியிடம் சொல்லி அனுப்பியவர்,
“நகரு, வாசல்லையே நின்னுக்கிட்டு. பின்ன காலு வலி, கை வலின்னு மனுஷனை தூக்கமில்லாம படுத்த வேண்டியது…” என விறுவிறுவென உள்ளே சென்றார்.
“தர்ஷி, ரெடியா? மணியை பாரு…” என போகிற போக்கில் மகளையும் கண்டித்து அழைத்துவிட்டே அவரின் அறைக்கு சென்றார்.
இப்படி ஒரு வாரத்தில் அந்த வீடே தலைகீழாகி போனதில் ஆயாசமாய் சோபாவில் அமர்ந்தார் சரஸ்வதி.
ஒன்றுமட்டும் நிச்சயம். தானில்லை என்றால் இங்கே குடும்பமே ஆட்டம் கண்டுவிடும் சூழ்நிலை என ஒவ்வொருவரின் பேச்சிலும், செயலிலும் கண்டுகொண்டார்.
கணவனின் இந்த கண்டிப்பில் கூட விழியோரம் சிறு துளி நீர் கசியவிருந்தது. மகளின் வரவில் அதனையும் சரி செய்தவர் புன்னகையுடன் நிமிர்ந்தார்.
“ம்மீ எல்லாம் எடுத்து வச்சுட்டேன். நீ எதையும் செய்ய கூடாது. நேரத்துக்கு டேப்லெட் போடனும். இன்னும் நாலு நாளைக்கு மாத்திரை இருக்கு. காய்ச்சல் இல்லைன்னு அதை போடாம இருக்கக்கூடாது…” என ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே தன்னுடைய கல்லூரி பேக்கை எடுத்து தோளில் மாட்டினாள்.
எப்போதும் போல் வளாகத்தை சுற்றி வந்தவனின் கால்கள் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு வரவும் வேகத்தை தடைசெய்ய முயன்று மீண்டும் அதே வேக நடையுடன் நேர்பார்வையுடன் அவ்விடத்தை தாண்டி சென்றது.
நிதர்ஷனா பற்றிய நினைவுகள் அவனை தொட்டதுமே தன்னையே நிந்தித்துக்கொண்டான் திருமொழிவர்ணன்.
‘இதென்ன புதிதாய், பிரத்யேகமாய் ஒரு பெண்ணை பற்றிய சிந்தனை. சரியல்லவே’ என நினைத்தவன் தன் மனதை அவளிடமிருந்து திருப்ப முயன்றான்.
அன்று அத்தனை பேசி வந்த பெண் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்னும் சிந்தனை மட்டுமே. வேறென்ன? என நினைத்தவன் தனக்கு தானே, ‘ஷட்அப் திரு’ என சொல்லிக்கொண்டான்.
அதன்படி நிதர்ஷனாவை அவன் நினைவிலிருந்து விலக்கி வைத்துவிட இருநாட்கள் அப்படியே இருந்தவன் விழிகளில் எதிர்பாராமலே விழுந்தாள் நிதர்ஷனா.
அன்று பிற்பகல் மருத்துவகல்லூரிக்கு சென்று திரும்புகையில் வழியில் இருக்கும் கல்லூரிக்குள்ளே இருக்கும் பெண்கள் விடுதியின் முன் உணவு இடைவேளையின் போது நின்று பேசிக்கொண்டிருந்தாள்.
மெலிந்த தோற்றமும், சரியாக உறக்கமின்றி உள்ளடங்கிய விழிகளும் என பார்த்ததும் அவளின் மாற்றத்தை கண்டுகொண்டான் திருமொழி.