ஆனால் அவன் தன்னை பார்க்கவேண்டும் என நினைத்த பெண்ணின் சிரத்தைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி போனது.
அந்த சம்பவத்திற்கு பின்னர் மிருதுளா ஆசிரியை நளினாவை அறவே ஒதுக்கி வைத்தாள்.
மற்றவர்களிடமும் பேச்சுக்கள் குறைந்து போனது. முன்பு தன்னிடம் பேச வருபவர்கள் அனைவருக்குமே இன்முகத்துடன் பதில் தந்துகொண்டிருந்தவள் தற்போது ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க ஆரம்பித்தாள்.
“என்னாச்சு மிருது? ஏன் இவ்வளோ டல்லா இருக்க?…” என உடன் தங்கியிருக்கும் லலிதாவே கேட்டுவிட,
“நல்லா தான் இருக்கேன். எனக்கென்ன?…” என்றாள் கத்திரித்தார் போன்று.
கல்லூரியில் ஆசிரியைகள் அறையில் யாரேனும் இருவர் ரகசியம் போல பேசினாலும் அது தன்னை கேலி செய்வதற்கோ என்று வேறு சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.
அதற்கே அவளால் வேலைக்கு வரவும் முடியவில்லை. வராமலும் இருக்க முடியவில்லை. அத்தனை அவஸ்தையாக உணர்ந்தாள்.
திருமொழி சொல்லிய வார்த்தை அவளுள் பெரிய காயத்தை உண்டு பண்ணியதோடு பயத்தையும் விதைத்திருந்தது.
என்றைக்கும் போல அதிகாலை மொட்டை மாடியில் தூரத்தே சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருந்தவனின் மேலிருந்த விழிகளை திருப்ப முடியாமல் தத்தளித்தவண்ணம் தன் வீட்டிலிருந்தே மிருதுளா கவனித்திருக்க சாவித்திரி அழைத்தார்.
“என்ன பன்ற மிருது? நாளைக்கு லீவ் தானே, ஊருக்கு வரியா?…” என்றார் சாவித்திரி.
“இல்லை, வரலை…” மிருதுளா தவிர்க்க,
“லீவ்க்கு கூட வராம என்னம்மா இது? உன் அப்பா என்னை கேட்கறாங்க. சரியா பேசறது கூட இல்லையாமே நீ? அதான் அந்த பிரச்சனை முடிஞ்சு போச்சே? அப்பறம் என்னம்மா?…” என்றார்.
“என்ன முடிஞ்சது? என்ன பேசறீங்க நீங்க? காலேஜ்ல எனக்கு அது எவ்வளோ அசிங்கம் தெரியுமா? முடிஞ்சதாம் முடிஞ்சது. திரு என்னை மட்டும் தனியாவா வச்சு அப்படி பேசினார். அந்த வார்த்தையை சொன்னார். என் கூட வேலை பார்க்கிறவங்களையும் வச்சுக்கிட்டு அசிங்கப்படுத்திட்டார்….” என்று விசும்பினாள்.
அப்போதும் அதில் தான் என்ன பிழை செய்தோம் என்றோ, அதை உணர வேண்டும் என்றோ எதுவுமே மிருதுளாவிடம் இல்லை.
அவளின் கோபம், கவலை, பயம் எல்லாமே திருமொழி சொல்லிய அந்த வார்த்தைகள் தான்.
“இந்த காலேஜ்ல நான் சேரும் போது எப்படி என்னை பார்ப்பாங்க தெரியுமா? திருவோட ரிலேட்டிவ். திருவுக்கு சொந்தம். அவருக்கு மாமா பொண்ணு. இப்படி இப்படித்தான் அத்தனை மரியாதையா பார்ப்பாங்க…” என்றவள்,
“ஆனால் இப்போ அவங்க பார்க்கறது எனக்கு என்னமோ நக்கலா பார்க்கிற மாதிரி தோணுதும்மா. எனக்கு பயமா இருக்கு….” என்றவள் அவனை பார்த்தபடி தான் பேசிக்கொண்டிருந்தாள்.
இங்கு ஒருத்தி உயிர் போகும் அளவிற்கு அழுது புலம்ப அதை அவன் கவனித்ததை போல கூட தெரியவில்லை.
“இங்க வந்து இத்தனை நாளாச்சு, ஒருதடவை தானா பேசியிருப்பாரா? இல்லை தானா பார்த்திருப்பாரா? ம்மா, எனக்கு பயமா இருக்கு….” என அதையே சொல்ல,
“நீ இப்படி பேசறது தான் எனக்கு பயமா இருக்கு மிருது. முதல்ல அந்த நினைப்புல இருந்து வெளில வா. ஸ்வாதி திருப்பூர் வரவும் நாம பேசிப்போம். எல்லாம் நல்லபடியா நடக்கும்….” என்றார்.
மகள் இப்படி காலநேரமின்றி அவனின் நினைவிலேயே பிதற்றிக்கொண்டிருக்க திருமணம் நடந்துவிட வேண்டும் என்ற வேண்டுதல் அவருக்கு அதிகமானது.
பெரிய இடமாய் திருமணம் செய்துகொண்டு போகவேண்டும். சொந்தங்களுக்கு மத்தியில் தன்னை அனைவருமே உயர்வாக பார்க்க வேண்டும் என்று தான் பேசிக்கொண்டிருப்பாள் தாயிடம்.
அதன் பிடிவாதம் திருவின் மீது முற்றுகையிட்டிருக்க என்ன செய்ய போகிறோம் என அச்சத்துடன் சுசீலாவிற்கு அழைத்தார்.
பாலாஜி அதற்கு முன்பே தன் தாயிடம் சொல்லிவிட்டான் இதில் தலையை கொடுக்க வேண்டாம் என்று.
“நம்மக்கிட்ட பொண்ணு இருந்தா சொல்லுங்கன்னு சொன்னா மட்டும் நீங்க உங்க கருத்தை அங்க சொல்லுங்க. கல்யாணம் எல்லாம் அவங்கவங்க விருப்பம். மிருதுவை தான் திருவுக்கு முடிக்கனும்ன்னு நீங்க முடிவு பண்ணக்கூடாது…” என கண்டிப்பாய் சொல்லிவிட்டான் அவன்.
ஒற்றை மகனின் பேச்சையா மீற முடியும்? சாவித்திரி சுசீலாவிற்கு அழைக்க அவர் மேலோட்டமாய் பேசிவிட்டு திருமண பேச்சில் பட்டுக்கொள்ளாமல் பேசிவைத்துவிட்டார்.
அதுவே சாவித்திரி வயிற்றில் புளியை கரைத்தது. முன்பானால் ‘பார்த்துக்கொள்ளலாம், பெண் எடுப்பார்கள், நான் இருக்கேன்ல’ என்பவர்,
“இப்ப என்ன திரு தான் மாப்பிள்ளையா? அவனை மாதிரி நல்லா படிச்ச, பாரின் மாப்பிள்ளையவே பார்ப்போமே. பொண்ணுக்கு தான் பஞ்சமா போச்சு. பையனுக்கா பஞ்சம்….” என போகிறபோக்கில் இதையும் அவர் சொல்லிவிட்டு செல்ல சாவித்திரி அரண்டு போனார்.
அதனை மகளிடம் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
இதோ இப்போது அவள் பேசபேச என்ன செய்வதென தெரியாமல் தானே கிளம்பி மகளை பார்க்க ஈரோடு வந்துவிட்டார் சாவித்திரி.
வந்தவர் அதோடு இல்லாமல் ஸ்வாதியை பார்க்கிறேன் என பழங்கள், பூ என வாங்கிக்கொண்டு மிருதுளாவுடன் வர அவளுக்கு முகமே அன்று தான் தெளிந்தது.
அத்தனை சந்தோஷம். திருமொழியின் வீட்டில் இருந்துகொண்டு அவனின், தாய் தங்கையுடன் செல்பி எடுத்து தனது இன்ஸ்டா, வாட்ஸ்ஆப் பக்கங்களில் வைக்க உடன் வேலை செய்யும் சக ஆசிரியைகள் எல்லாம் வரிசையாக குறுஞ்செய்திகள்.
எல்லாம் சரி. திருவை பார்க்க முடியவில்லை என்பது மட்டுமே அவளின் வருத்தமாகி போனது இறுதியில்.
பழையபடி மிருதுளா கல்லூரியில் வலம்வர முகத்தில் பழைய புன்னகையும், சந்தோஷமும் மீண்டிருந்தது. ஒருவித கர்வமும் கூடுதலாய்.
‘எத்தனை இருந்தாலும் தாங்கள் உரிமையான உறவுகள்’ என மற்றவர்களிடம் சொல்லாமல் சொல்லிவிட்டதை போல ஒரு திமிர்நடை.
நளினாவிற்கு அவளின் இந்த அலப்பறைகள் சிரிப்பை தான் தந்தது. தன்னிடம் இன்னும் மிருதுளா பேசுவதில்லை என்பதை எல்லாம் பெரிதுபடுத்தவே இல்லை.
ஆனாலும் தன் முன்னே இறுமாப்பாய் மிருதுளா பார்க்கும் பார்வையில் ‘போ போ’ என்று கடந்துவிடுவார் நளினா.
அதோ இதொவென்று திருவிழாவிற்கான மூன்று நாள் விடுமுறைகள் கல்லூரியில்.
விடுதியில் இருப்பவர்களும் ஊர் கிளம்பி இருக்க, திருமொழி குடும்பம் தான் திருவிழாவின் முக்கியஸ்தர்கள்.
அவர்கள் முன்னின்று நடத்திவைக்கும் திருவிழா. ஒருவாரமாக ஊரே கலகலவென்று இருந்தது.
மூன்றே நாட்கள் தான். நிதர்ஷனாவை கையில் பிடிக்க முடியவில்லை. அண்ணன் குடும்பம் வந்திருக்க எங்கு சென்றாலும் அண்ணன்கள், அண்ணி, அண்ணன் மகனுடன் தான்.
“கோவில் கோவில்ன்னு படிக்கிறதை விட்டுடாத. திருவிழா முடியவும் பரிச்சை இருக்கு. கவனத்துல வச்சுக்கோ…” என அவ்வப்போது கணேசன் கொட்டு வைக்காமல் இல்லை.
“படிக்கிற பொண்ணு எப்படினாலும் படிக்கும். லாஸ்ட் டைம்ல படிச்சா மட்டும் சரியாய போகுமா?…” என மெர்லின் சொல்லிவிட,
“என் பொண்ணை நான் சொல்லுவேன். என்னடா இதெல்லாம்?…” என குதிக்க ஆரம்பித்துவிட்டார் ஸ்ரீதரிடம்.
“அப்போ நான் சொல்ல கூடாதா? கூடாதுன்னா சொல்லிருங்க…” என அலட்டிக்கொள்ளாமல் மெர்லின் பேச மூச்சுவாங்க பதில் சொல்லமுடியாமல் முழித்தார் கணேசன்.
“உங்கப்பாவுக்கு என் மருமக தான் சரி. பார்த்தியா வாயடைச்சு நிக்கிறதை…” சரஸ்வதி குதூகலமாக சொல்ல,
“எவ்வளவு ஆனந்தம் இந்த சரஸுக்கு…” என அவரின் கன்னத்தை பிடித்து கிள்ளிவைத்தான் பிரகாஷ்.
“அப்பா விடுங்க. நான் எல்லாமே படிச்சிட்டேன். நீங்க தான் எக்ஸாம் வைக்கறீங்களே? என் ஸ்ட்ரெந்த் உங்களுக்கு தெரியாதா?…” என இருவருக்கும் இடையில் சமாதானக்கொடி பறக்கவிட்டாள் நிதர்ஷனா.
“படிச்சா திரும்ப படிக்க கூடாதா? இருக்கட்டும். பேசிக்கறேன்…” என விறுவிறுவென வெளியேறிவிடுவார்.
இப்படியாக திருவிழா நிறைவு நாள் வரை அத்தனை ஆர்ப்பாட்டங்கள் வீட்டிற்குள்.
அன்று கடைசி நாள் திருவிழா. காலை தேரோட்டம் முடிந்து மாலை கோவிலுக்கு பூஜைக்கென்று குடும்பமாய் கிளம்பி சென்றிருந்தனர்.
“புடவை கட்டலையா? பாவாடை தாவணில இருக்கா?…” என்று கணேசன் சரஸ்வதியிடம் கேட்க,
“அடுத்தவருஷம் கட்ட சொல்றேன். இப்ப இதை கட்டிட்டா. மெர்லின் தான் எடுத்துட்டு வந்திருந்தா. வேணும்னா மாத்த சொல்லுங்க…” என்றுவிட்டார் சரஸ்வதி.
“என் பேச்சை யார் கேட்க?…” என்றவாறு கணேசன் சென்றுவிட,
“ம்மீ நம்ம நிது போட்டோவை அந்த தரகர்கிட்ட நீங்க தான் குடுத்து வச்சதுன்னு அப்பாவுக்கு தெரியுமா?…” என நேரம்கெட்ட நேரத்தில் பிரகாஷ் கேட்டு வைக்க நெஞ்சை பிடித்துவிட்டார் சரஸ்வதி.
“வாய மூடுடா. மெதுவா பேசு. இன்னும் தெரியாது…” என சொல்லும் பொழுதே வியர்த்துவிட்டது.
“அதானே, இல்லைன்னா இந்நேரம் அதுக்கும் கலவரம் வெடிச்சிருக்கும். அந்த கோமகள் வந்தது ஏன்னு தெரிஞ்சவருக்கு, அது எப்படின்னு யோசிக்காம போனது உங்க நல்லநேரம்…” என மகன் சிரிக்க,
“தெரிஞ்சா மட்டும். எப்படியும் கல்யாணம் பேசனும்ல. நான் தான் ஜாதகம் பார்க்க போனப்போ பொருத்தமான இடம் அமைஞ்சா சொல்லுங்கன்னு சொல்லிட்டு வந்தேன். அது அங்க இங்க சுத்தி இப்படி வரும்ன்னு தெரியாதுல. உங்கப்பாக்கிட்ட விட்டா மகளை மேனேஜர் சீட்டுல உட்கார வைக்காம கல்யாணம் பண்ணமாட்டேன்னு நிப்பார்…”
“ஆக இது தான் ஆரம்பமா?…” என்றாள் மெர்லின்.
“ஆத்தீ அண்ணி…” இப்போது பிரகாஷ் நெஞ்சை பிடித்தான்.
“என்கிட்ட கூட சொல்லலை பார்த்தீங்களா?…” என சரஸ்வதியை பார்த்தவள்,
“ஓகே, நானும் சொல்லலை…” என்று சிரிக்க,
“சத்தியமா?…” என்று கேட்ட பிரகாஷின் தலையில் கொட்டுவைத்தவள்,
“வெளில கூப்பிடறாங்க. கோவிலுக்கு போகலாம்…” என அவர்களை அழைத்துக்கொண்டு சென்றாள்.
கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் முன்பிருந்தே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டது. நடந்து செல்லவேண்டும்.
கோவிலுக்கருகே செல்ல முடியவில்லை. கூட்டம் அலைமோத கணேசன் பார்த்து பார்த்து அழைத்து போனார்.
“இன்னும் நாம என்ன சின்ன பிள்ளைங்களா?…” என ஸ்ரீதர் கடுப்பாக,
“டேய் பார்த்து வாடா. வளவளன்னு பேசாம…” என்றார் கணேசன் மகனை.
“கோவிலுக்குள்ளவே வந்துட்டோம். இனி சாமியை தான் பார்க்கனும்…” என ஸ்ரீதரும் சரஸ்வதியிடம் வாயடிக்க,
“பிரகாஷ் நிதுவை பிடி. ஸ்ரீ நீ ஷிவாவை கையில தூக்கிக்கோ, மெர்லின் என் கூட வா…” என சரஸ்வதி அனைவரையும் ஒன்று சேர்த்தார்.
“நான் வச்சுக்கவாடா?…” என தங்கையின் கையிலிருந்த தேங்காய், பழ கூடையை பிரகாஷ் கேட்க,
பட்டுப்பாவாடை தாவணியில் குட்டி குட்டி தங்க நகைகள் மின்ன இடுப்பில் ஒட்டியாணம், தலை நிறைய பூ வைத்து அசைந்து வந்துகொண்டிருந்தவளின் வருகையை எதிர்பாராதவன் இப்போதும் கவனிக்கும் பார்வை பார்த்தான் திருமொழிவர்ணன்.
அத்தனை கூட்டத்தில் நிதானமாய் தெரிந்தவர்களிடம் கூட பெரிதாய் கவனத்தை வைக்காதவன் நிதர்ஷனாவை கவனிக்க திருமொழியை அங்கே கண்டுவிட்டு,