வந்த இடத்தில் தான் பாலாஜியின் தந்தையான செல்வராஜும் திருமொழியை வைத்துக்கொண்டே,
“அடுத்து என்ன? திருவுக்கு வரன் பார்த்திடலாமா? இன்னும் எவ்வளோ நாளைக்கு தள்ளி போட போறீங்க?…” என்றார் அனைவரின் முன்னிலும்.
“என்ன திரு, பார்க்கலாமா?…” என அவனிடமே கேட்க,
“அதான் அம்மாவும், அப்பாவும் இருக்காங்களே மாமா. பார்ப்பாங்க…” என சொல்லிவிட்டான் அவன்.
சாதாரணம் தான். ஆனாலும் அதுவும் சுசீலாவிற்கு அதிருப்தியை தந்தது. அதனை முகத்திலும் காண்பித்துவிட்டார் அவர்.
ஆனால் வாய்விட்டு சொல்லிவிட முடியாதே? மகனும், கணவரும் தன்னை உண்டு இல்லை என்றாக்கிவிடமாட்டார்களா? அதனைக்கொண்டே மௌனமாகி போனார்.
பின் பாலாஜி திருமொழியை தனியே அழைத்துக்கொண்டு வியாபாரம் விஷயமாக பேச மெதுவாய் சுசீலா தான் சங்கவையிடம் சொல்லி வைத்தார்.
“மனசுல பட்டதை சொல்றேன் மதினி, திருவுக்கு ஏன் நீங்க மிருதுவை பார்க்க கூடாது? ஒருவேளை திரு தம்பிக்கும் அப்படி எதாச்சும் ஒரு எண்ணமிருந்தா? கேட்டு பாருங்க. அவருக்கு சரின்னா முடிச்சிருவோம். சொந்தத்துக்குள்ள சொந்தமாகி போகும் பாருங்க…” என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
மாமியாரின் சாமர்த்தியத்தில் ஸ்வாதி வாயை பிளக்க என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கவை திகைத்தார்.
இதுவரை இப்படி நேரடியாக சொல்லியதில்லை என்பதனால் சங்கவையும் அதனை பெரிதுபடுத்தவில்லை.
ஆனால் இன்று சொல்லிவிட அதனை மறுக்கவும் முடியவில்லை. மகளை பார்த்தவர்,
“எதுக்கும் ஒருவார்த்தை திருக்கிட்ட கேட்போமே ஸ்வாதி?…” என்றார் மெல்லிய குரலில்.
“உங்களுக்கு சரியா தெரியாது. மிருது சாந்தமா தான் இருப்பா. சிரிச்ச முகமா தான் பேசுவா. ஆனா ஒருவிஷயம் இல்லைன்னா அவ ரியாக்ட் பன்றதே வேற மாதிரி இருக்கும். இங்க எதையும் கூட நான் சொல்லலை. நம்ம காலேஜ்ல நடந்ததையே கூட உதாரணத்துக்கு நினைச்சு பாருங்க…” என்றாள் ஸ்வாதி.
“எதை சொல்ற? அந்த கல்சுரல்ஸ் ட்ரெஸ் விஷயமா?…” என சங்கவை கேட்க,
“ஆமா. பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லித்தரவங்க எப்படி இருக்கனும். ஒரு விஷயம் செய்யும் போது சரியா தப்பான்னு யோசிக்கனுமே. எத்தனை அலட்சியம் இருந்தா அவங்க ப்ரென்ட் அப்படின்னு பேவர் பண்ணியிருப்பாங்க. இவங்க எப்படி நாளைக்கு நம்ம காலேஜை நிர்வகிப்பாங்க?…” என கேட்க,
“அதுக்கில்லை ஸ்வாதி, ஒருவேளை அண்ணன்…”
“என் அண்ணனை எனக்கு தெரியாதா? இப்ப என்ன உங்களுக்கு கேட்டு கிளியர் பண்ணிக்கனும். அவ்வளோ தானே? கேட்டு நல்லா வாங்கி கட்டுங்க. அப்பறம் எனக்கு கால் பண்ணுங்க….” என நம்பிக்கையுடன் சொல்ல,
“இதுக்கேன் இவ்வளோ கோவிச்சுக்கற நீ? எஸ் ஆர் நோ, இதானே நான் கேட்க போறேன். கேட்டுட்டா உன் மாமியார்கிட்டையே பதிலை சொல்லிடலாம் பாரு…” என்றவர்,
“அப்படியே அவனுக்கு விருப்பம் இருந்தா தாராளமா பண்ணிக்கட்டும். நான் வேணாம்ன்னு சொல்லமாட்டேன். யோசிக்காம முடிவு பன்னமாட்டானே உன் அண்ணன்…” என்றார் புன்னகையுடன்.
“நான் எதுக்குப்பா? அம்மாவும் வரலை. நீங்க போய்ட்டு வாங்களேன்….” என சொல்ல,
“என்ன பாப்பா நீ? அதுவும் சொந்தக்காரங்க விசேஷத்துக்கு போகாம போனா நல்லா இருக்காது. உங்கம்மா நல்லா இருந்தா அவளை கூட்டிட்டு போவேன். நேத்துல இருந்து நெத்தியில பத்து போட்டுட்டே சுத்துறா. இன்னும் இழுத்து விட்டுக்க வேண்டாம்….” என்றவர்,
“இதென்ன அடுத்தவங்க வீட்டு நிகழ்ச்சியா? நம்ம சொந்தக்காரங்க ஃபங்க்ஷன். உன் அண்ணனுங்க இருந்தா அவனுங்களையும் சேர்த்தே கூட்டிட்டு போயிருப்பேன். காலையில கல்யாணத்துக்கு நான் வந்துக்கறேன். இப்ப நீ ரிசப்ஷனுக்கு கிளம்பி வா…” என அழைத்துக்கொண்டு தான் கிளம்பினார்.
திரும்பி வரும்வழியில் இப்படி நடுரோட்டில் கார் நின்றுவிட என்ன ஏதென்று கூட கீழே இறங்கி பார்க்க அத்தனை அச்சமாக இருந்தது.
குறையாமல் இன்னும் மழை பெய்துகொண்டிருக்க நிதர்ஷனாவை அழைத்து வந்திருக்க வேண்டாமோ என யோசித்தபடி இருந்தார் கணேசன்.
“உங்கம்மாவுக்கு போனை எதுவும் போட்டுடாத. கேட்டா வந்திட்டிருக்கோம்ன்னு மட்டும் சொல்லு…” என சொல்லியவர் மழை குறைந்து தூறலாகவும் கீழே இறங்கினார்.
அவனை அந்தநேரம் எதிர்பார்க்காதவருக்கு உண்மையில் ஆசுவாசமாய் இருந்தது.
“ரிலேட்டிவ் வீட்டு ரிசப்ஷன். போய்ட்டு திரும்பிட்டிருக்கும் போது கார் இங்க நின்னுடுச்சு ஸார்…” என்றார் கணேசன்.
“என்னன்னு பாருங்க…” என திருமொழி தன் கார் ட்ரைவரிடம் சொல்ல,
“ஸார் மெக்கானிக் வரனும். ரேடியேட்டர்ல சுத்தமா தண்ணியே இல்லை. எப்படியும் அவங்க தான் வந்து பார்க்கனும்…” என ட்ரைவரும் பார்த்துவிட்டு சொல்ல கணேசனுக்கு போன் வந்தது.
“மெக்கானிக் தான். பக்கத்துல வந்துட்டானாம்…” என பேசிவிட்டு கணேசனும் கூறினார்.
“ஓஹ்…” என்றவன்,
“சரி…” என்று ‘கிளம்பலாம்’ என்பதை போல திரும்ப,
“இருப்பா திரு..” என்றவர்,
“மெக்கானிக் வந்து என்ன சொல்லுவானோ. நீங்க பொண்ணை இங்கயே நிக்க வைக்க முடியுமா? அது பாதுகாப்பா இருக்காது. திரும்ப மழை பிடிச்சுட்டா. அதனால நாங்க ஊருக்கு தான் போறோம். பொண்ணை வேணும்னா அனுப்பி வைங்களேன். வீட்டுல விட்டுடறோம்…” என்றார் சங்கவை.
“ம்மா…” என்று திருமொழி குரல் காற்றாய் வந்தாலும் மெல்லிய அதட்டல் வெளிப்பட்டது.
“நான் மாட்டேன்…” என கணேசன் பதில் சொல்லும் முன்பே அவரின் காதில் நிதர்ஷனா மறுக்க,
“ஏன் தயங்கறீங்க கணேசன் ஸார்? நாங்க என்ன உங்களுக்கு தெரியாதவங்களா? ஒருவேளை மெக்கானிக் வந்தாலும் இங்க இருந்து எப்படி நீங்க கிளம்பி வருவீங்க. நீங்க மட்டும்ன்னா பிரச்சனை இல்லை…” என்றவரின் பேச்சை மறுக்க முடியவில்லை.
“ஹ்ம்ம்..” என திருமொழியும் ஆமோதிப்பாய் தலையசைக்க,
“தேங்க் யூ மேம். நீங்க சொல்றது சரிதான்…” என்றவர்,
“கிளம்பு பாப்பா. அப்பா வந்திடறேன். அங்க பஸ் ஸ்டாப்ல இறங்கிக்கோ. அங்க இருந்து ஆட்டோ எடுத்துட்டு வீட்டுக்கு போயிரு…” என்றார்.
“ப்பா, ப்ளீஸ்…” என சங்கவையை சங்கடத்துடன் பார்த்துக்கொண்டே அவள் திணற,
“வாம்மா…” என்றார் சங்கவை.
“போய் உன் பேக் எடுத்துக்கோ. மொபைலை கையில வச்சுக்கோ. உங்கம்மாக்கிட்ட நான் பேசிக்கறேன்…” என்று மகளை தள்ளாத குறையாக திருமொழியின் காரில் ஏற்றிவிட்டார் கணேசன்.
அவளின் தயக்கத்தையும், மறுப்பையும் அடிக்கண்ணால் பார்த்தபடி தன் மேவாயில் விரல்வைத்து கவனித்தான் திருமொழி.
மீண்டும் மழை வலுக்க தங்களின் காரிலிருந்து ஹேண்ட்பேக்கை எடுத்தவள் திருமொழியின் காருக்கு மாறும் முன் லேசாய் நனைந்தும் விட்டாள்.
முன்பக்கத்தில் ட்ரைவரும் அருகில் திருமொழியும் இருக்க திருமொழிக்கு பின்னால் சங்கவையும், அவரின் அருகில் நிதர்ஷனாவும்.
விருப்பமே இல்லாது ஏறி அமர்ந்தவளுக்கு அவர்களை சகஜமாய் பார்க்கவும் முடியவில்லை.
“பாப்பா, வீட்டுக்கு போய்ட்டு போன் போடு…” என கணேசன் சொல்ல திருமொழி விழிகள் லேசாய் சுருங்கி விரிந்தது.
“ஹ்ம்ம் சரி…” என அத்தனை மெலிதாய் அவள் குரல்.
கார் கிளம்பவும் இன்னும் மிரட்சி குறையாமலும், சங்கோஜத்துடனும் அமர்ந்துவர,
“அடடா நனைஞ்சுட்டியே…” என்றார் சங்கவை.
என்ன பதில் சொல்வது? தலையை மட்டும் அசைத்தவளுக்கு காரின் ஏசியில் குளிர் வேறு.
மெல்லிய உதடுகள் கிடுகிடுவென நடுங்க ஹேண்ட்பேக்கை இறுக்கி பிடித்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“ஈஸியா இரும்மா. ஆமா உன் பேர் என்ன?…” என கேட்க ‘தன்னை ஞாபகம் இல்லையோ’ என ஆச்சர்யமாக பார்த்தவள்,
“நிதர்ஷனா…” என்றாள்.
“ரொம்ப அமைதியோ? கேட்டா மட்டும் தான் பதில் சொல்ற?…” என சங்கவை கேட்கவும் மீண்டும் திருதிரு முழி தான்.
“சரி நான் எதுவும் கேட்கலை. பேசலை. சரியா?…” என்றார் சிறு புன்னகையுடன்.
சங்கவைக்கு பெயர் தான் மறந்ததே தவிர அவளை மறக்கவில்லை. அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியுமா என்ன? பெயரை கேட்டதற்கே அவள் பதறிவிட அதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என விட்டுவிட்டார்.
இத்தனை சம்பாஷனைகளையும் கேட்டுக்கொண்டிருந்தவன் தன் போனில் வந்த தந்தையின் அழைப்பை தாயிடம் தர திரும்பினான்.
ஒடுக்கமாய் அமர்ந்த இடத்தில் கைகளை கட்டிக்கொண்டு உடலை குறுக்கியபடி கண்ணை மூடி அமர்ந்திருந்தவளை பார்த்தவன் மீண்டும் முன்புறம் திரும்பி ஏசியை குறைத்து வைத்தான்.
குளிர் குறைந்ததும் தான் நிதர்ஷனாவிற்கு நிம்மதியாக, சற்றே உடலை தளர்த்தி அமர்ந்தவள் பார்வை வெளியே வெறிக்க இதமான ஒரு பயணத்தின் மனநிலை திருமொழிவர்ணனுக்கு.