பஸ் ஸ்டாண்ட் எப்போதடா வரும் என முள்ளின் மேல் அமர்ந்திருப்பதை போலிருந்த நிதர்ஷனா அந்த வழியில் செல்லாமல் வேறு திக்கில் பயணமாகும் காரின் பாதையில் சங்கவை பக்கம் திரும்பினாள்.
“மேம்…” என அவள் பதட்டமான குரலில் சங்கவை திரும்பினார் என்றால் திருமொழி திரும்பாமலே கவனித்தான்.
“என்னம்மா?…” என்றவரின் சாந்தமான கேள்வியில்,
“என்னை பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்டுடுங்க. நான் ஆட்டோ பிடிச்சு போயிடுவேன்…” என நிதர்ஷனா சொல்ல,
“இல்லம்மா இவ்வளோ தூரம் வந்துட்டோம். உன் வீட்டுக்கிட்டையே போயிடலாம். என்ன திரு?…” என அவளிடம் ஆரம்பித்து மகனிடம் முடித்தவரை அவள் மறுத்து பேசும் முன்,
“பாப்பாவா?…” என நிதர்ஷனா அவளறியாமலேயே கேட்டுவிட அவர் பதில் சொல்லும் முன்,
“ப்ச், வேகமா போங்க…” என்றான் திருமொழி ட்ரைவரிடம்.
குரலில் அத்தனை அதட்டலும் அதிகாரமும். இந்த பக்கம் திரும்பாமலே அவன் குரல் நிதர்ஷனாவை வாய் திறக்கவிடவில்லை.
ஆனால் உள்ளுக்கு கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. அவன் தன்னை தான் அதட்டுகிறான் என்பதை உணர்ந்துகொண்டவள் மௌனமாய் பழையபடி அமர்ந்துகொண்டாள்.
‘வீட்டுக்கு போறது இந்த வழி இல்லையே? ஒருவேளை அவங்க இறங்கிட்டு என்னை வீட்டுல விட சொல்லுவாங்களோ?’ என கார் சென்ற திக்கில் பார்த்தபடி அவளிருக்க அடுத்த இரண்டு வீதிகள் கடந்ததும் தங்கள் வீடு செல்லும்திசை வந்துவிட்டது.
‘ஆமால, இதை மறந்துட்டோம்’ என ஆசுவாசத்துடன் கதவை திறக்க தயாராக கையை பிடியில் வைத்துக்கொண்டாள்.
“மெதுவாவே இறங்கலாம். என்ன அவசரம்? உன் வீட்டுக்கு தான் போறோம்…” என்றார் சங்கவை மீண்டும்.
“ஹ்ம்ம், தேங்க்ஸ் மேம்…” என அப்போது தான் தெளிந்த முகத்துடன் அவள் சொல்ல,
“இருக்கட்டும் பாப்பா…” என்றார் சங்கவை.
‘பாப்பாவாம். எல்லாம் இந்த அப்பாவால’ என பல்லை கடித்தபடி இருந்த நிதர்ஷனாவின் பரபரப்பில் சிரித்த சங்கவை அவள் வீட்டின் அருகாமையில் கார் வந்ததும்,
“ம்மா…” என்றான் திருமொழி.
‘இறங்க வேண்டுமாம்’ அதற்கான அழைப்பு அது. அதன் பின்னரே நிதர்ஷனாவால் கதவை திறக்க முடிந்தது.
“வரேன் மேம். தேங்க் யூ…” என்றவள் திருமொழியிடம் ‘சொல்லலாமா? வேண்டாமா?’ என யோசிக்க,
“பத்திரமா போம்மா…” என்றார் சங்கவை.
அவருக்கு தலையசைத்தவள் திருமொழியை கதவை திறந்தபடியே பார்க்க அவன் நிமிரவே இல்லை.
கையில் வைத்திருந்த போனில் தான் அவனின் கவனம். மீண்டும் சங்கவைக்கு நன்றியை சொல்லிவிட்டு நிதர்ஷனா நகர்ந்ததும் கார் விரைந்தது.
தூறல் விழுந்துகொண்டிருக்க கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்து ஒரு சாய்த்து பூட்டப்பட்டிருந்த கதவை திறந்தாள் நிதர்ஷனா.
“ஹ்ம்ம், இதோ வந்துட்டா. சரி, நீங்க பார்த்து வாங்க…” என்று சொல்லிவிட்டு தன் அலைபேசியை கீழே வைத்த சரஸ்வதி,
“என்னடா லேசா நனைஞ்சிட்ட போல?…” என கேட்க,
“ப்ச், விடுங்க ம்மா…” என்றவள் அறைக்குள் நுழைந்து கொள்ள,
“என்னாச்சு? எதுக்கு இப்படி எரிச்சலா இருக்க?…” என பின்னே வந்தார் சரஸ்வதி.
“அதெல்லாம் ஒன்னுமில்லையே. நார்மலா தான் இருக்கேன்…” என அமைதியாக.
“என்னடா, இப்படியெல்லாம் இருக்க மாட்டியே? அப்பா உன்னை அவங்களோட அனுப்பி வச்ச கோவமா?…” என கேட்டவர்,
“ஆமா, ஒரு மரியாதைக்கு அவங்களை வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்பிட்டியா நீ?…” என்றார் மகளிடம்.
“ம்ஹூம், இல்லையே…” என்றவள் முகமே கன்றி இருந்தது.
“என்னடா?…” என வாஞ்சையுடன் கேட்டபடி மகளின் பின்னலை கழற்றினார்.
நீண்ட கூந்தல் மழையில் நனைந்ததில் இன்னும் கனத்தது. தலையில் வைத்திருந்த பூவெல்லாம் கசங்கி போயிருக்க அதனை எல்லாம் ஓரம்கட்டி தலையை துவட்ட ஆரம்பித்தார்.
“நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்…” என எழுந்துகொண்டாள் நிதர்ஷனா.
மீண்டும் வந்ததும் கணேசனுக்கு அழைத்து எங்கிருக்கிறார், எப்போது வருகிறார் என கேட்டு முடித்தவளுக்கு சூடாக பாலை ஆற்றி கொண்டுவந்து நீட்டினார் சரஸ்வதி.
“இல்ல எனக்கு சேர்மனை, அவங்க அம்மாவை பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி சங்கடமா இருக்கு…” என்றவள்,
“சேர்மனை விடுங்க. அவருக்கு நான் பேசினது தெரியாது. தெரிஞ்சிருந்தா எனக்கு இன்னும் ரொம்ப கஷ்டமா போயிருக்கும். ஆனா அவங்கம்மாவுக்கு நான் பேசினது தெரியும்ல. அந்த கோமகள் ஆன்ட்டி அப்பாவுக்கு போன் பண்ணி சொன்னாங்களே…” என கூற சரஸ்வதி முறைத்தார் மகளை.
“அது அப்பவே முடிஞ்சு போச்சு நிது. நீ ஏன் அதையே நினைச்சிட்டு இருக்க?…” என அதட்ட,
“ப்ச், நானா எங்க நினைக்கறேன்? என்னவோ அவங்களை பார்த்ததும் இதுதான் தோணுச்சு. அவங்களையே அப்படி பேசிட்டு ஹெல்ப்ன்னு அவங்கக்கிட்டயே நிக்கும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா? ப்ச் உனக்கு புரியாது ம்மீ…” என்றாள்.
“சரி இப்ப என்ன அது முடிஞ்சு வருஷமாக போகுது. அவங்களே மறந்திருப்பாங்க. நீ என்னன்னா?…” என்றவர்,
“இனிமே அப்படி பேசாம இரு. அவ்வளோ தான்…” என சொல்ல,
“ஏன் ம்மீ, இதுவரைக்கும் நான் அப்படி பேசியிருக்கேனா?…” என முறைத்தாள்.
“பேசலை தான். ஆனா இதுக்கே இன்னும் நீ எத்தனை வருஷம் புலம்ப போறியோ? போய் தூங்கு….” என அனுப்ப,
“நான் ஏன் வருஷக்கணக்கா புலம்ப போறேன்? இந்த வருஷத்தோட காலேஜ் முடிஞ்சது. அதுக்கப்பறம் அவங்களை நான் ஏன் பார்க்க போறேன்? எப்படா லாஸ்ட் செமஸ்டர் வரும்ன்னு நான் ஒவ்வொரு நாளா எண்ணிக்கிட்டு இருக்கேன்…”
“அதுசரி…” சரஸ்வதி சிரித்தபடி அவள் கையிலிருந்த தம்ளரை வாங்கிக்கொள்ள,
“அவங்க சாதாரணமா பார்த்தா கூட அவங்கம்மா நான் பேசினதை சொன்னதால பார்க்காங்களோன்னே வெடவெடன்னு வருது…” என முணங்கியபடி எழுந்து சென்றாள்.
மகளின் புலம்பலில் சரஸ்வதிக்கு பாவமாகி போனது. அவளை உறங்க சொல்லிவிட்டு கணவர் வர காத்திருந்தார் சரஸ்வதி.
வந்ததும் அதற்கு ஒருபாடு புலம்பி தீர்த்துவிடுவார் கணேசன். இல்லை என்றால் இரவு உறக்கம் கொள்ளாது அவருக்கும் என அமர்ந்திருந்தார் அங்கேயே.
“ம்மீ…” என்றவளின் அழைப்பில்,
“அப்பா இப்ப வந்திருவாங்க நிது. நாளைக்கு காலேஜ் இருக்குல. நீ தூங்கு…” என்றார் சரஸ்வதி மகளிடம் சத்தமாக.
—————————————————-
நிதர்ஷனாவை வீட்டில் விட்டுவிட்டு வந்த பின்னும் மகனிடம் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என பார்க்க அதே இடித்து வைத்த புளி தான் அவன்.
இதற்கே எதுவும் சொல்வானோ என அமைதியாக இருந்துகொண்டவர் வீடு வரவும் மகளிடம் சொல்லியதை பற்றி கணவரிடம் பகிர,
“திருக்கிட்ட கேட்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டு வந்து சொல்ற நீ?…” என்றார் இளங்கோவன்.
“தெரிஞ்சுப்போமே. இப்ப திரு வேண்டாம்ன்னு சொன்னா நாம இன்னும் ஸ்ட்ராங்கா பிள்ளைக்கு ஒத்துவரலைன்னு சொல்லிடலாம் இல்லையா? சம்பந்திக்கிட்ட சட்டுன்னு சொல்ல முடியலை….” என சொல்ல,
“சில விஷயங்களை சொல்லி பழகும்மா. எல்லாரும் உன்னை மாதிரி இருக்கமாட்டாங்க. அடுத்தவங்க காயப்பட கூடாதுன்னு நினைக்கிறதை விட சில நேரம் இப்படி பேசிடறது நல்லது…” என்றார் இளங்கோவன்.
சங்கவையின் முகம் வாடிவிட அதுவே அவருக்கு தாளவில்லை. மனைவியின் கையை பிடித்துக்கொண்டவர்,
“சரி நாளைக்கு ஈவ்னிங் நானும் வரவும் திருக்கிட்ட பேசலாம். என்ன சொல்றான்னு பார்ப்போம்…” என சொல்ல,
“ஸ்வாதிக்கு விருப்பமே இல்லை…” எனவும் சொல்ல,
“அதனால என்ன? நீ அவன்கிட்ட கேட்டுடு. உனக்கும் கிளியராகும்…” என்றார் இளங்கோவன்.
சொல்லியதை போலவே மறுநாள் மாலை மகன் வரவும் இளங்கோவனும் வர காத்திருந்தார் சங்கவை.
காலையில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறானே அவரை. என்னவோ பேச போகிறார் என்று அவனுக்கும் யூகம் தான்.
‘ஒருவேளை பெண் பார்த்திருந்தால்?’ என நினைத்தவன் உள்ளுக்குள் ஒருவித அலைப்புருதல்.
“ப்ச், என்ன இது?…” என நெற்றியை விரலால் கீறியபடியே தாயை பார்க்க,
“ஒன்னுமில்லப்பா, அப்பா இன்னும் வரலையேன்னு பார்த்தேன்…” என்றார் சங்கவை மகன் கேளாமலே.
“என்ன பேசனும். என்கிட்ட பேச உங்களுக்கு அப்பா துணை தேவையா?…” என்று பொறுமை இல்லாது ‘என்னவென கேட்க’ சங்கவை விழித்தார்.
“சொல்லுங்க. இப்ப எனக்கு எந்த வேலையும் இல்லை. ப்ரீயா இருக்கேன்…” என திருமொழி அமரவும் வேறு வழியில்லாமல் பேச்சை துவங்கினார் சங்கவை.
“அதான் திரு, உன் கல்யாண விஷயமா…”
“ஓஹ்…” என்று மட்டுமே அவன் கூற,
“நேத்து கூட ஸ்வாதி மாமனாரும், மாமியாரும் சொன்னாங்களே…” என்றவரிடம்,
“அதுக்காக பார்த்தீங்களா?…” என கூர்மையாய் வந்தது அவனின் கேள்வி.
“ச்சே ச்சே, அப்படின்னு இல்லை. எதுக்கும் ஒரு துவக்கம்ன்னு இருக்குமே. நானே உன்கிட்ட கேட்க இருந்தது தான். நேத்து அங்க போகலைன்னா நேத்தே பேசியிருப்பேன்…” என்றவர்,
“ஸ்வாதியும் அவ மாமியார் வீட்டுக்கு போயாச்சு. இன்னும் அடுத்து என்ன? நீ தான் ஏற்கனவே சொன்னியே. அதான் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டேன்…” என்றார் அவனிடம்.
“சரி பாருங்க…” என்று சொல்லிவிட்டான் உடனடியாக.
“அதான், ஒரு பொண்ணு இருக்கு. உனக்கு சரின்னா ஜாதகம் வாங்கிட்டு மேற்கொண்டு பேசலாம்…” எனும் பொழுதே இளங்கோவனும் வந்துவிட அப்படி ஒரு ஆசுவாசம் சங்கவைக்கு.
“வாங்க வாங்க. இப்பத்தான் பேசிட்டிருந்தேன். வந்துட்டீங்க…” என வேகமாய் கணவரை கூப்பிட்டு அருகில் அமர்த்திக்கொள்ள தாயின் சேட்டையில் திருமொழி முகத்தில் இளக்கமும், புன்னகையும்.
“என்னம்மா?…” என்றான் சிரிப்புடன்.
“அதான் சொல்ல வரேன். பொண்ணு ஒன்னு பார்த்திருக்கேன். உனக்கு ஓகேன்னா…” சங்கவை சொல்லி முடிக்கும் முன்,
“யாருன்னு இன்னும் சொல்லலை. போட்டோ இருக்கா? காமிங்க…” என கேட்டான் திருமொழி.