“போட்டோலாம் இல்லை. எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்…” என்றதும்,
“என்ன எனக்கு தெரிஞ்ச பொண்ணா?…” என்றான் யோசனையுடன்.
“ஆமா, நீ பார்த்திருக்க. நமக்கு வேண்டப்பட்டவங்க தான்…” என்றவர்,
“பொண்ணு மிருதுளா. நம்ம மாப்பிள்ளையோட சித்தி பொண்ணு. நம்ம காலேஜ்ல கூட…” என்று முடிக்கும் முன் எழுந்துவிட்டான் திருமொழி.
“என்ன பன்றீங்க நீங்க?…” என கண்டனத்துடன் கேட்டதுமே ஜெர்க்கானது சங்கவைக்கு.
“என்னப்பா? இல்ல சொந்தமாவும் இருந்தாங்க. அவங்க வீட்டுலையும் அபிப்ராயப்படறாங்க. அதான்…” என வார்த்தைகளை சேர்க்க திணறினார் மகனின் முகபாவனையில்.
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நம்ம காலேஜ்ல வேலை பார்க்கிற பொண்ணை போய். இதென்ன பேச்சு? அதுவும்…” என்றவன் நெற்றியை பிடித்தபடி,
“ம்ஹூம். இது சரிவராது. வேண்டாம்…” என்றான் உறுதியாக.
“இல்ல திரு, பொண்ணு நல்ல பொண்ணு…” சங்கவை மீண்டும் துவங்க,
“இருக்கட்டும், எனக்கு சரிவராது. வேற பாருங்க. அவ்வளோ தான். இனி பார்க்கற பொண்ணாவது காலேஜ்ல படிக்கிற பொண்ணு, வேலை பார்க்கற பொண்ணுன்னு இல்லாம வெளில பாருங்க. ஒவ்வொருதடவையும் சொல்லனுமா உங்களுக்கு…” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான் திருமொழி.
“போதுமா? கேட்டாச்சா?…” என இளங்கோவன் மகன் சென்றதும் கேட்க,
“இதென்னங்க அநியாயமா இருக்கு? கொஞ்சமாச்சும் லாஜிக்கா இவன் ரீஸன் சொல்லலாம். அந்த மேனேஜர் பொண்ணுக்கு இவன் இதே காரணம் சொன்னான், அப்பா அது சரியா இருந்துச்சு. ஆனா இப்பவும் இதை சொன்னா?…” என்றவர்,
“இதை நான் எப்படி அங்க சொல்ல?…” என்று யோசிக்க,
“நீ சொல்லவேண்டாம். சம்பந்திக்கிட்ட நான் பேசிக்கறேன். நீ விடு…” என்று சொல்லிவிட்டார் இளங்கோவன்.
அதன்படி மறுநாளே செல்வராஜிற்கு அழைத்து திருவிற்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட சுசீலாவுக்கு ஏமாற்றம் என்றாலும் அதை பெரிதுபடுத்தவில்லை.
திருமணம் செய்துகொள்ள போகிறவனுக்கு பிடித்தமில்லை என்றால் என்ன செய்ய முடியும் என்று சாவித்திரியிடம் சொல்ல மிருதுளா இடிந்து போனாள்.
“அதெப்படிம்மா, எப்படி என்னை பிடிக்கலைன்னு சொல்லுவாங்க?…” என உண்ணாமல் உறங்காமல் வீட்டில் தாயிடம் ஒரே ஆர்ப்பாட்டம்.
அதை அவளின் தந்தையிடமோ, அக்காவிடமோ காண்பிக்க முடியாது. சாவித்திரி தான் மாட்டிக்கொண்டு தவித்து போனார்.
“எந்த தப்பான முடிவு எடுத்துடாத மிருதும்மா….” என மகளுடனே இருக்க,
“நான் ஏன் தப்பான முடிவுக்கு போக போறேன்? இப்ப பிடிக்கலைன்னா என்ன? இனி என்னை பார்க்கும்போது தோணும்ல இந்த கல்யாண பேச்சு. நான் பார்த்துக்கறேன்…” என்றாள் மிருதுளா.
“வேண்டாம் மிருது. விட்டுட்டு. இனி அங்க வேலைக்கு போகவும் வேண்டாம். நீ நம்ம கார்மெண்ட்ஸ வந்து பாரு…” என சொல்ல,
“முடியாது முடியாது. நான் அங்க தான் போவேன். என்னால போகாம, திருவை பார்க்காம இருக்க முடியாது…” என பிடிவாதமாய் வந்துவிட்டவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
திருமொழி வீட்டில் அவனுக்கு வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டதாக விஷயம் தெரிந்ததில் இருந்து நிம்மதி என்பதே இல்லை.
‘இன்னும் எந்த பெண்ணும் முடிவாகவில்லையே? பார்த்துக்கொள்ளலாம்’ என்னும் ஒருவித ஆணவம் அவளிடம்.
அதற்குமுன் திருமொழியின் பார்வையில் அவள் படிய நினைக்க, திருமொழியிடம் என்றைக்கு வீட்டில் இந்த விஷயம் கேட்கப்பட்டதோ, அன்றிலிருந்து அறவே அவளை தன் பார்வை வட்டத்திற்குள் நுழையவிடவில்லை அவன்.
அதன்பின் சங்கவையை நிறுத்த முடியவில்லை. கோமகளிடமும், அவள் கணவரிடமும் சொல்லி வரன்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
“என்னம்மா மருமகள் வேட்டையா?…” என ஸ்வாதி கிண்டல் பேசும் அளவிற்கு இருந்தது சங்கவையின் வேகம்.
“அடுத்த திருவிழா திரு குடும்பத்தோட தான்னு சொல்லியிருக்கார் கோமகள் வீட்டுக்காரர். அதான் இப்ப இருந்து பார்த்தா தானே?…” என அத்தனை சந்தோஷம்.
திருமொழிக்கு என்றதும் அவனுக்கான பெண்களின் ஜாதகங்கள் ஏகப்பட்டது வந்து சேர தனக்கு திருப்தியாய் இருப்பதை பார்த்து தான் மகனின் பார்வைக்கே கொண்டு சென்றார்.
திருமொழியிடம் காண்பித்ததற்கு பெண் பார்க்காமலே இருந்துவிடலாம் என நினைக்கும் அளவிற்கு இருந்தது அவன் மறுப்புக்கான காரணங்கள்.
“அழகழகா அம்புட்டும் லட்டு பொண்ணுங்க ஸ்வாதி. இவன் என்னனா ஒரு பார்வையில வேண்டாம்ன்னு சொல்றான். எனக்கு கிறுக்கு புடிக்குது. எப்படி பொண்ணை தான் பார்க்கறதுன்னு எனக்கே தெரியலை…” என அவரே துவண்டு போகும் அளவிற்கு இருந்தது திருமொழியின் மறுப்புகள்.
எந்த பெண்ணையும் அவன் ஒரு வினாடிக்கும் மேல் பார்க்கவில்லை. ‘வேண்டாம்’ என ஒற்றை வார்த்தை தான். இல்லை தலையசைப்பு.
என்னவோ எதுவுமே அவன் மனதில் ஒட்டவில்லை. அவனை இழுக்கவில்லை. பார்க்க தூண்டவில்லை.
புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சங்கவை தன்னை நெருங்கும் பொழுதே அதில் மனம் லயிப்பதில்லை.
ஒருவித எரிச்சல் தான் கூடியது. கல்யாணமே வேண்டாம் என சொல்லிவிடுவோமா என்று கூட நினைத்துவிட்டான்.
“எப்படி பொண்ணு தான் வேணும் திரு? அதையாவது உங்கம்மாக்கிட்ட சொல்லு…” என்று இளங்கோவன் கூட மனைவிக்காக மகனிடம் பேச,
“பிடிச்சா தான் ப்பா சரின்னு சொல்ல முடியும்…” என்றுவிட்டான் அவன்.
“அதுவும் சரி தான். அவனுக்கும் பிடிக்கனுமே?…” என மனைவியிடம் அவர் சொல்ல,
“என்ன நீங்களும் இப்படி சொல்றீங்க? நான் பார்க்கற பொண்ணுங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு பார்த்தீங்க தானே? அவன் போட்டோவை சரியா கூட பார்க்க மாட்டேன்றான்…” என நொந்துகொண்டார் சங்கவை.
“ம்மா, ரெண்டுமூணு மாசம் போகட்டும். அப்பறமா பார்க்கலாம்…” என ஸ்வாதி கூட சொல்லிவிட்டாள்.
மாதங்கள் தான் சென்றதே தவிர மகனிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே தான் இருந்தான்.
அன்று கோமகள் மகளின் திருமண வரவேற்பு பெங்களூரில். திருமணத்திற்கு செல்ல முடியாத இளங்கோவனும், சங்கவையும் அன்றிரவு நடக்கும் வரவேற்புக்கு கிளம்பிவிட்டார்கள்.
மதுரை விமானநிலையத்தில் காத்திருந்தனர் இளங்கோவன், சங்கவை அவர்களுடன் திருமொழிவர்ணனும்.
மதுரையில் அவனுக்கு முக்கியமான வேலை ஒன்றிருக்க இருவரையும் பயணத்திற்கு அனுப்பிவிட்டு செல்ல வந்திருந்தான்.
“அடடே யாருன்னு பாரேன்…” என்ற இளங்கோவன் சத்தத்தில் போனில் பேசிக்கொண்டிருந்த திருமொழி திரும்பி பார்க்க வந்துக்கொண்டிருந்தது கணேசனும், சரஸ்வதியும்.
“வாங்க கணேசன்…” என இளங்கோவன் புன்னகையுடன் வரவேற்க,
“ஸார் உங்களை இங்க பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. ரொம்ப சந்தோஷம்….” என்ற கணேசன்,
“வணக்கம் மேம்…” என்றார் சங்கவையிடமும்.
“ரொம்ப நன்றி மேம், அன்னைக்கு சமயத்துக்கு உதவி செஞ்சீங்க. அப்பவே சொல்லனும்ன்னு நினைச்சேன். நேர்ல பார்க்க சந்தர்ப்பம் அமையலை…” என தன் மகளை அழைத்து சென்றதை பற்றி சொல்லியவர் மனைவியை அறிமுகப்படுத்த சரஸ்வதியும் புன்னகையுடன் பேசினார்.
“ஹலோ ஸார்…” என முகமன் திருமொழியும் அவருக்கு பதில் வணக்கம் வைத்தான்.
“பெங்களூரா போறீங்க?…” என இளங்கோவன் கேட்க,
“ஆமாங்க ஸார். கூட வொர்க் பன்ற ஸ்டாப் கோமகள் அவங்களோட பொண்ணுக்கு ரிசப்ஷன். கல்யாணம் எல்லாம் அங்கையே வச்சிட்டாங்க. அதான் ரிசப்ஷனுக்கு கலந்துக்க போறோம்..” என்றவர்,
“அதோட நாளைக்கு பேரனுக்கு பிறந்தநாள். அதுலயும் கலந்துக்கிட்டு பொண்ணை ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்திடலாம் பாருங்க. என் பொண்ணு அங்க போய் ரெண்டு நாளாச்சு…”
“என்ன?…” என சங்கவை தான் கேட்டது நிஜமா என அதிர்ந்து மகனை பார்த்தார்.
“இவங்க பொண்ணை, அதான் நீங்க எனக்கு முதல்ல பார்த்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க கேளுங்க. எனக்கு சம்மதம்…” என அவன் சொல்ல சங்கவையால் இன்னும் நம்ப முடியவில்லை.
“கல்யாணத்துக்கு கேட்போம்…” என்றான் இப்போது சங்கவையை திரும்பி பார்த்து.
“பாப்பாவையா?…” என அவர் வியப்புடன் கேட்க அந்த விளிப்பில் சிரித்துவிட்டவன்,
“ஆமா, பேசி முடிச்சிடலாம்…” எனும் பொழுதே சற்று தள்ளி நின்ற கணேசன் மீது அவன் பார்வை பதிந்தது.
“எல்லாரும் ஒண்ணா தானே போறீங்க? பேசுங்க. அவங்களுக்கு, அவங்க பொண்ணுக்கு சம்மதமான்னு கேளுங்க. கேட்டுட்டு எனக்கு கூப்பிடுங்க…” என்றான் அவன்.
சங்கவையால் சுத்தமாக நம்ப முடியவில்லை. இளங்கோவனை அவர் பார்த்த பார்வையில் அவர் மனைவியிடம் என்னவென்று புருவம் உயர்த்த சங்கவையும் போனில் தெரிந்த நிதர்ஷனாவை காண்பித்து, மகனையும் காண்பித்து முழித்த முழியில் அவரும் மகனை திகைத்து பார்த்தார்.
“ஓகே, அநோன்ஸ் பண்ணிட்டாங்க. நீங்க கிளம்புங்க…” என்ற திருமொழி,