மனம் முழுக்க மகிழ்வில் திளைத்தது மகிழனுக்கு. நாணத்தில் சிவந்து நிற்கும் மனையாளை காணத் திகட்டவில்லை அவனுக்கு.
சற்று முன் நிகழ்ந்திருந்த இதழ்யுத்தம் அவளை சிவக்க வைத்திருந்தது.
“ப்ருஹா… கண்ணைத் திற. “என்றவனின் குரல் கேட்க தான் செய்தது. ஆனால் எங்கிருந்து திறக்க?. இத்தனை அருகாமையில் அவன். அவனை விட இம்சித்தது அவனின் சூடான மூச்சுக் காற்று. அவளின் உடல் தன்னிச்சையாக நடுங்க ,”கொல்றடி ப்ருஸ்லீ !”தன்னையறியாமல் வந்து விட்டது வார்த்தைகள் அவனுக்கு.
பட்டென்று கண்ணை திறந்து விட்டாள் அவனின் ப்ருஸ்லீ.
வினாக்கள் தொடுக்கவில்லை ஆனால் விழிகளில் தொக்கிக் கிடந்தது அவனுக்கான கேள்விகள்.
“ஓகே ஓகே ச்சில்… போகலாம் “யோசிக்க விடாமல் அழைத்துச் சென்றான் அவளை.
அவனின் அழைப்பிற்கு நடந்தாலும் மனமோ, அவன் அழைத்த விதத்தில் தேங்கி நின்றது. எங்கேயோ இதற்கு முன்பு அறிந்ததாய் ஞாபகம் அந்தப் பெயரை . கராத்தே வீரர் பெயர் என்று மூளை சொல்லியது. ஆனால் இல்லை இது மனதுக்குள் பதிந்த பெயர் ,ஆனால் யார் அழைத்தார் இது போல் என்று நினைவுக்கு வரவில்லை அவளுக்கு.
“மறந்துட்டா விட்டுடு ப்ருஹா. ரொம்ப யோசிக்காதே…”அவளின் எண்ணத்தை திசை மாற்றினான்.
“உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கவா…?”
“ம்ம்ம் கேளு… “என்றபடியே அவளை கைவளைவிற்குள் கொண்டு வர நாவானது மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது அவளுக்கு.
“கேளுடா ப்ருஹா…!”
‘எங்கே கேட்பது?’ ஒரு வித அவஸ்தை அவளிடம்.
“எங்க என்னைப் பாரு?” என்று அவளை தன்னை நோக்கித் திருப்ப
‘முடிஞ்சது இதுக்கே இந்த பாடு, இவர் வேற இப்படி பார்த்து வைக்கிறார்.’ தொண்டைக்குழியில் மெல்லிய வலி போல ஓர் உணர்வு.
இமைகளை தாழ்த்தியவள் ,”இப்படி பார்த்தா பேச வரலை…!” என தடுமாறினாள்
“காத்து தாங்க வருது அந்த மாதிரியா ப்ருஹா…!?”அடக்கமாட்டாமல் சிரித்து வைத்தான்.
“நான் தூங்கணும்… “
“நீ இன்னும் கேட்கவே இல்லையே…?” அங்கேயே நின்றான் அவன்.
“அது அது மறந்துட்டேன்…!”என்றவள் வேகமாக விலகிக் கொண்டாள்.
“ஓகே ஓகே நீ தூங்கு” என்றவன், அதற்கு மேலும் அவளை சோதிக்க விரும்பவில்லை.
விட்டால் போதுமென்று கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
மெல்லிய இடைவெளியில் அவள் வதனம். அவனின் உடைமையானவள் உரிமையானவள். அனுமதியின்றி அவளை தீண்டும் அத்தனை அதிகாரமும் இருக்கப்பட்டவன். ஆனாலும் அண்மையில் இருந்தே ரசித்துக் கொண்டான்.
விருந்து அன்று ஊரார் பேச்சுக்களும், ஏளனமும் அவன் காதில் விழாமல் இல்லை. அழகு என்றால் நிறத்திற்கு உட்பட்டதா என்ன?, அப்படி என்றால் அவள் அழகிற்கு அப்பாற்பட்டவள். அன்பு தான் அழகு என்றால் அவள் அழகின் எல்லைகளை கடந்தவள் அவனுக்கு.
அவனின் நினைவுகளில் நர்த்தனமாடினாள், பத்து வயது சிறுமியாக. நினைவுகளில் அமிழ்ந்தான் சுகமாக.
இடை தாண்டிய இரட்டைச் சடை. ஒல்லியான தேகம். பாவாடை சட்டை அணிந்து ஸ்கிப்பிங் கயிற்றில் நிற்காமல் துள்ளிக் கொண்டிருந்தாள்.
“அக்கா நூறு வந்துட்ட வாய் வலிக்குது போ, இதுக்கு மேல எண்ண மாட்டேன் போ” என குட்டி வாண்டு வேகமாய் சொன்னது.
“ஹை நூறு வந்துட்டேனா…!!நிக்காம ஆடி இருக்கேன். பாத்தியா நாளைக்கு போட்டியில் நான் தான் ஜெயிப்பேன். பிடி மிஸ் எனக்கு புது ரோப் வாங்கித் தரேன்னு சொல்லி இருக்காங்களே “துள்ளி குதித்து கயிற்றை சுழற்ற வண்டியில் வந்தவன் மீது பட்டு விழுந்தது. சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தியவனோ,” ஆஆஆஆ!!” என்று அலறியபடி திட்ட வாயெடுத்தான் கண்களை தேய்த்துக் கொண்டு.
‘ஒல்லிபிச்சான் மாதிரி இருந்துட்டு சுளீர்னு அடிச்சுட்டாளே!’ என முனகியபடி வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான் மகிழன்.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து பெட்டிக் கடையில் நிகழ்ந்தது அவர்களின் சந்திப்பு.
“அண்ணே ஒரு ரூபா ஐம்பது பைசா கம்மியா இருக்குண்ணே, நாளைக்கு எப்படியாச்சும் தந்துடுவேன். அந்த கண்ணாடி பேனா மட்டும் வேணும்ண்ணே !!”என்று பெட்டிக்கடைக்காரரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ப்ரகா.
“நீ போய் ஒங்க வீட்டுல யாரையாச்சும் கூட்டிட்டு வா தரேன்” என்றார் அந்தப் பெட்டிக் கடைக்காரர்.
“அண்ணே பெல் அடிக்கப் போறாங்கண்ணே வீட்டுக்கு ஓடிட்டு வர முடியாதுண்ணே ப்ளீஸ்ண்ணே” என்று கெஞ்சிக் கொண்டிருக்க, மகிழன் அங்கே வந்து கொண்டிருந்தான்.
“வாங்க சின்னய்யா… என்ன கடை பக்கம். ஏதாச்சும் வேணும்னா சொல்லி விட்ருக்கலாமே கொண்டு வந்து தந்திருப்பேனே?” என்று பதறியவர்,” இந்தா பொண்ணே !, ஓடு பள்ளிகூடம் மணி அடிச்சுட்டாங்க” என்று அவளை விரட்ட , உதடு பிதுக்கிக் கொண்டு அங்கிருந்து செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தடுமாறினாள் ப்ரகா.
“ஸ்கூல் பசங்களுக்குத் தேவையானதை வாங்கி வைக்காம என்ன பெட்டிக்கடை வச்சிருக்க நீ?. எது கேட்டாலும் இல்லைனு சொல்றியாம்??” என்று கேட்க
“ஹேய் நில்லு!!” என மகிழன் குரல் கொடுக்கவும், சட்டென்று நின்று விட்டாள்.
“நீ அந்த ஸ்கிப்பிங் கயிறு பொண்ணு தானே…?!, ஸ்கூல் போகாம என்ன பண்ற??” என கடினக் குரலிலேயே கேட்கவும் பயந்து போய் நின்றவள்,” பேனா பேனா வாங்க…” என்றாள்.
“வாங்கிட்டியா…?”
“இல்ல காசு கம்மியா இருக்கு. பரிட்சை வேற” என்று அழுது விடுபவள் போல சொல்ல, அவன் முகத்தில் மெல்லிய முறுவல்
“அது கேட்ட பேனாவை குடுங்க” என்று சொல்லவே கடைக்காரர் பேனாவை எடுத்து வைத்தார்.
“பரிட்சை இருந்தா பேனா எல்லாம் முன்னாடியே வாங்க மாட்டியா…? ஆமா எத்தனாவது படிக்கிற?” என்று கேட்க
“அஞ்சாவது படிக்கிறேன். என் பேனாவை அண்ணே உடைச்சுட்டான். அது கசியுது. அதான்” என பேசியவள் நிமிரவே இல்லை.
“சரி சரி வாங்கிட்டுப் போ “என்றவன் கடைக்காரரிடம்,” சாயங்காலம் பேப்பர் வந்திடும். பசங்க பரிட்சை நேரத்தில் கேட்கிறதை வாங்கி வைங்க, ஒரு கடை தான இருக்கு” என்று கூற,” சரி தம்பி” என்றார்.
“பாப்பா சீக்கிரம் எடு ஸ்கூல் பெல் அடிக்கப் போறாங்க” என்றதும் கண்ணாடி வைத்த பேனாவை வாங்கிக் கொண்டாள்.
“தேங்க்ஸ் அண்ணா !”என்று மகிழனிடம் கூறியவள் ,”மிச்ச காசு நாளைக்கு தந்திடுறேன்” என்றாள் வேகமாக.
“அப்புடியா… எங்கே பார்த்து தருவ…?நாளைக்கு நான் ஊருக்குப் போயிருவேனே ??”என்றான் வேண்டுமென்றே.
“ம்ஹூம் நீயே ஞாபகம் வச்சு நான் ஊர்ல இருந்து வந்ததும் தர்ற…” என்றான் அவளது விழிகளின் உருட்டலை பார்த்தபடி.
“எப்ப வருவீங்க…?”
“மூணு மாசம் கழிச்சு…”
“மூணு மாசமா…” என்று வாய் பிளந்தவள்,” நான் நான் நோட்டுல எழுதி வச்சுக்கிறேன். இல்ல இல்ல பென்சில் டப்பாவில் எழுதிக்கிறேன்” என்று ஜியோமெட்ரி பாக்ஸை வாயில் கடித்து திறந்து அதில் எழுதி வைத்தாள்.
“சரி சரி போ பரிட்சை நல்லா எழுதணும் “என்றவன்,” ஓய் பொண்ணே!, உன் பேர் என்ன ?என்றதும்,” கிங்… ம்ஹூம் ப்ருஹா.. இல்ல இல்ல ப்ரகல்யவதனி ஃபிஃப்த் சி “என்றாள்.
“ஓஓஓ ப்ருஹா… நைஸ் நேம் சரி ஆல் த பெஸ்ட் போய்ட்டு வா “என்று அனுப்பியவன் ,’சில்லி கேர்ள் !’என்று சிரித்தபடி கிளம்பி விட்டான்.
மீண்டும் குடுகுடுவென்று மூச்சிரைக்க ஓடி வந்தவள், அவன் வண்டிக்கெதிரே வந்து நின்று விட்டாள்.
“ஹேய் லூசு…! இப்படியா வந்து நிற்பாங்க. இடிச்சிருந்தா என்ன ஆகறது?” என்று திட்டி விட்டான் அவள் வந்து நின்ற படபடப்பில்.
“இல்ல… அன்னைக்கு அடிபட்டது சரியா போச்சானு கேட்கல நான் அதான் ஓடி வந்தேன். சரி ஆகிடுச்சா?. மருந்து போட்டீங்களா…?வீங்கிடுச்சா… ?”மூச்சிரைக்க கேட்டவளை மெல்லிய சிரிப்புடன் பார்த்து விட்டு,” ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட போ” என்றான் கிண்டலாக.
“அது வந்து சாரி மறந்து போயிட்டேன். வலிக்குதா?” என்று கேட்க
“ஆமான்னா என்ன செய்வ?” அவளிடம் வம்பு வளர்க்கவே தோன்றியது அவனுக்கு.
“அது வந்து வந்து இந்த மருந்து போட்டா வலி போயிரும். “கையிலிருந்த குட்டி கோடாலி தைலத்தை நீட்ட ,அதில் பாதி தீர்ந்திருந்தது.
“இது வெளிநாட்டு தைலம். எல்லா வலியும் கேட்கும் நீங்க தடவிக்கங்க” என்று கொடுத்தவளை அப்போது தான் நன்கு கவனித்தான்.
ஒல்லியான தேகத்தில் தொளதொளவென்று பள்ளி சீருடை இருக்க முடியை வளைத்து நெளித்து இரட்டைச்சடை போட்டிருந்தாள். நெற்றியில் கோபுரம் போல சிவப்பு சாந்து பொட்டு வியர்வையில் பாதி மூக்கு வரை வழிந்திருந்தது. காதில் வெள்ளை பாசி போல ஒரு குட்டித் தோடு. கையில் வளையல் எல்லாம் இல்லை. சிகப்பு கயிறு ஒன்று தான் கட்டி இருந்தாள். கண்ணுக்கு மையிட்டது போல கீழிமை கருப்பாகவே இருந்தது. குட்டிக் கண்ணுக்கு அது எடுப்பாகவே இருந்தது.
அவள் கையில் இருந்த தைலத்தை வாங்கிக் கொள்ளவும், பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
“பெல் அடிச்சுட்டாங்க நான் போயிட்டு வரேன். மறக்காம போடுங்க” கத்திக் கொண்டே ஓடிப் போனாள்.
‘ஹாஹாஹா காத்து மாதிரி பறந்துட்டா… குட்டியா இருக்கு வாண்டு சாப்பிடுமோ சாப்பிடாதோ?’ என எண்ணியபடி அவளின் கவனிப்பை மெச்சியபடி போய் விட்டான்.
அது தான் அவர்களது சந்திப்பு. அதன் பிறகு பெரிதான சந்திப்பு இல்லை. ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அந்தப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள்.
பள்ளி முழுவதும்,’ அவளுக்கு யாரோ பேனா வாங்கித் தந்திருந்தாங்களாம் அதான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தாளாம் !!’என்று செய்தி தீயாய் பரவி இருந்தது.
மகிழனுக்கு ஒரே சிரிப்பு இந்த விஷயத்தைக் கேள்விபட்டு. அவளைப் பார்த்தால் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளியில் மாற்று சான்றிதழ் வாங்கும் போது தான் அவளைப் பார்த்தான்.
“ஹோய் நீ… ப்ரூ.. என்ன பேரு ?”என்று அவளிடமே கேட்டு வைக்க
“ஹான் ப்ரூஸ்லீ!” என துடுக்காய் கூறி விட்டு செல்ல அவனுக்கு அத்தனை சிரிப்பு.
“சரிங்க ப்ரூஸ்லி நில்லுங்க, ஒரு நிமிஷம்!” என்று அழைக்க
“உங்க கிட்ட காசு தர தேடினேன் தெரியுமா?” என்றவள் தனது பென்சில் பாக்ஸில் இருந்து சில்லறை காசுகளை எடுத்து தந்தாள்.
அனைத்தும் இருபத்தி ஐந்து பைசா நாணயங்கள். கூடவே ஒரு ஆசை சாக்லேட்டும் இருந்தது.
“அடேங்கப்பா பொன்முடியா இருக்கும் போலவே?!” என்று சிரித்தவன் சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டபடி ,”அந்த பேனாவை என் கிஃப்ட்டா வச்சுக்க எனக்கு காசு வேண்டாம் “என்று திருப்பி தர அவளின் முகம் வாடிப் போனது.
“இல்ல எங்க தாத்தா யார் கிட்டயும் கடனாளியா இருக்க கூடாதுனு சொல்லி இருக்காரு. அதனால இதை வாங்கிக்கங்க ப்ளீஸ்!” என்று முகம் சுருங்க சொல்ல
“என்ன இப்ப எல்லாம் அண்ணா சொல்ல மாட்டேங்கிற…? மறந்து போச்சா?” என்றான் கிண்டலாக.
“அது வந்து… உங்களை அப்படி கூப்பிடக் கூடாதாம், சின்னய்யா வாங்க போங்கனு சொல்லணுமாம். என் ஃப்ரெண்டு கீர்த்தி சொன்னா!” என்று கூற
“அய்யா கொய்யானுலாம் சொல்ல வேண்டாம் ,அந்தக் காசை தா வாங்கிக்கிறேன். நல்லா படிக்கணும் என்ன…?, ஆமா எந்த ஸ்கூல் போகப் போற ?”என அவளிடம் பேச்சு வளர்த்தான். அவனுக்கு அது நிரம்ப பிடித்தது. அனைவரும் மரியாதை நிமித்ததுடனேயே பேசுவார்கள் அவனிடம். சிறு பிள்ளையில் இருந்து பெரியவர் வரை இதே தான் நடக்கும். அக்கறை பேச்சு இதுவெல்லாம் இருக்காது. தள்ளி நின்றே பேசுவார்கள் அவனிடத்தில். அதற்காகவே ஊருக்கு வராமல் மும்பையிலேயே தங்கி இருந்தான்.
“எங்க பெரியப்பா கூட மெட்ராஸ் ல போய் படிக்க போறேன். லீவுக்கு தான் இங்க வருவேன்” என்றதும் ,”சரி சரி நல்லா படிக்கணும் நல்ல பிள்ளையா இருக்கணும்” என்று வாழ்த்தி அனுப்பியவனுக்கு அப்போதெல்லாம் எதுவும் தோன்றவில்லை. இயல்பாய் கடந்து விட்டான்.
அதன் பிறகான நாட்களில் அவள் மீது காதலில் வீழ்வோம் என்பதே அறிமாமல் போயிருந்தான்.