மகிழன் புதிதாக போடப்பட்ட படிக்கட்டுகளில் ஏறி தனது அறைக்குள் நுழைந்திருந்தான். இனி இது தான் நமது வாசற்படி என்று ப்ரகாவிற்கும் சொல்லி இருந்தான். இனி முன்பக்கம் நமது வாசம் எப்போதும் கிடையாது என்பதில் உறுதியாக இருந்திருந்தான்.
ப்ரகல்யா ஏன் எதற்காக என்றெல்லாம் கேட்டிருக்கவில்லை. சரியென்று தலையாட்டினாள். அவளுக்குத் தான் கேள்வி கேட்டு பழக்கம் இல்லையே…
ஒரு குட்டி அறையை சமையற்கட்டாக மாற்றிக் கொண்டாள். பார்த்துப் பார்த்து சமையல் பொருட்களை வாங்கிக் கொண்டாள்.
“ப்ருஹா என்ன தேவையோ எடுத்துக்கோ சரியா…?” என்றதும் அவள் விலையைப் பார்க்க
“ப்ருஹா என்ன பண்ற?” என்று அவளருகில் செல்ல
“நீங்க தானே தேவையானதை எடுக்க சொன்னீங்க “என்று திருதிருவென்று விழித்தாள்.
“ஆனா மேடம் என்ன பண்றீங்க.?”
“எடுக்கிறேன் “என வெள்ளந்தியாக கூறியவளை சிரிப்புடன் பார்த்து விட்டு,” விலையைப் பார்க்காதே தேவையை மட்டும் பாரு சரியா.?,சில்லி கேர்ள்” என்றவன் தனக்குத் தேவையானதை எடுக்கச் சென்றான்.
இருவருக்குத் தேவையான மளிகைப் பொருட்களை எடுத்துக் கொண்டவளை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அழைத்துச் சென்றான். ஆகமொத்தம் தனிக்குடித்தனம் நடத்த என்ன தேவையோ அத்தனையும் வாங்கிக் குவித்திருந்தான்.
இருவருமாக சேர்ந்து தங்கள் கூட்டை அலங்கரித்திருந்தனர்.
அத்தனையும் சுமித்ரா வருவதற்கு முன்பே செய்தாகிற்று.
“ப்ருஹா என்ன பண்றீங்க…?”பின்னிருந்து அணைக்கவும் திடுக்கிட்டவள் ,”பயந்துட்டேன் !”என்றாள் நெஞ்சில் கை வைத்து.
“ஆஹான்!”என்றவன் அவளது இடைவளைத்து,” என்ன சமையல்?” என நெற்றியில் முட்டி சிரிக்க
“அடடா! வாசனையே சூப்பரா இருக்கே!” என்றவன் ,”செம பசி இன்னிக்கு நிறைய வேலை “என்றபடி வந்தமர்ந்தான்.
சோற்றைப் பிசைந்து கொண்டிருக்கையிலேயே கீழே பெருங்கொண்ட குரலில் ஒரு பெண்மணி அவன் பெயரை சத்தமிட்டு அழைத்தார்.
மகிழனின் முகம் இறுகிப் போக , அப்படியே எழுந்து கையை கழுவி விட்டுக் கீழே போக. ப்ரகல்யா என்னவோ ஏதோ என்று அவன் பின்னால் பதற்றத்துடன் வர,” நீ மேலேயே இரும்மா.நான் பார்த்துட்டு வரேன். நீ சாப்பிடலைன்னா சாப்பிடு இதோ வரேன்” என்று கூறி விட்டு இறங்கினான்.
“அவங்க வீட்டில் கூப்பிட்டா எப்படி?, என்னைப் பார்க்க என் வாசலுக்கு வர வேண்டியது தானே” என வெளியில் இருந்தபடி பேச, அந்தப் பெண்மணி அவனை எள்ளலுடன் பார்த்தார்.
“வீட்டை விட்டுப் போயிருப்பன்னு நினைச்சேன். இன்னுமா இங்கிருக்க?” என்று கேட்க.
“ஓஓஓ ! உங்க நினைப்புக்கெல்லாம் நான் செயல்பட முடியுமா மரகதநாயகி?” என திமிர்ப் பார்வையுடன் கேட்க
“ஏய் ! மரியாதையா பேசு. என் பேர் சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு.?” என எச்சரிக்கை தொனியில் அந்தப் பெண்மணி பேச
“என் அப்பாவோட அக்கான்ற முறைக்கு என்ன வருமோ அதை வச்சு தான் உங்களைக் கூப்பிட்டேன். பட் நீங்க தான் கூப்பிடக் கூடாதுனு சொன்னீங்களே… ஸோ பேர் சொல்ல வேண்டியதா போச்சு. “என்று உச்சுக் கொட்டினான்.
“உன் அப்பாவா?” என்று நக்கலுடன் அவர் கேட்க
“சட்டத்துக்கு முன்னாடி அவர் தான் என் அப்பா. இல்லிங்களா?” என்று சுமித்ராவைப் பார்க்க
“அண்ணி சண்டை வேண்டாமே , தம்பி நீங்க போங்கப்பா” என்று மகிழனைப் பார்த்து கெஞ்சினார் சுமித்ரா.
“நான் சண்டை போட வந்தேனா.?, ஏன் சுமித்ரா இப்படி இருக்க… இதோப் பாரு ஏதோ என் அப்பாவும் உன் அப்பாவும் புத்தி பேதலிச்சு எல்லா சொத்தையும் அவன் பேரில் எழுதிட்டாங்க. இப்ப அது தான் மகேந்திரன் பேருக்கு வந்திடுச்சே… இன்னும் எதுக்கு இவன் இங்கே… போக சொல்லு… “என்றார் கடுகடுப்பாக.
மகிழனின் பார்வை,’ என்ன சொல்வீர்கள்?’ என்பதாய் சுமித்ராவைப் பார்த்து மீண்டது.
சுமித்ரா சுதாரித்து,” நான் ஏன் அண்ணி போகச் சொல்லணும்?,மகிழனை வெளியே அனுப்ப மாட்டேன் னு மாமா அப்பாக்கு நான் வாக்கு தந்திருக்கேன். நீங்களும் தான் “என்றார் அழுத்தமாக.
“ஓஓஓ நீ அப்படி சொல்ற, சூடு சுரணை இருந்தா அவனே போகட்டும் நாம ஏன் வெளியே போகச் சொல்லணும்னு சரி தானே ?!”என திருப்பி கேட்க
மகிழனின் பார்வை மாறவே இல்லை சுமித்ராவிடமிருந்து.
“அண்ணி நான் அந்த மாதிரி எல்லாம் சொல்லவே இல்லை நீங்க ஏன் இப்படி பேசுறீங்க.?”என பதற மகேந்திரன் உள்ளே வந்தான்.
“வாங்க அத்தை. எப்போ வந்தீங்க நல்லா இருக்கீங்களா?. எப்படி உங்களுக்கு ஒரு வழியா எங்களைப் பார்க்க நேரம் கிடைச்சிடுச்சுப் போல?!” என்றான் படு நக்கலாக.
“என்ன மகேன் பண்றது நான் அந்த அளவுக்கு பிஸியா இருந்துட்டேன்” என்றார் சற்றும் திமிர் குறையாமல் .
“இந்த பிஸி டைமிலும் எங்களைப் பார்க்க வந்திருக்கீங்களே எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு?!” என்ற மகேந்திரன் ,”உட்காருங்க அத்தை. எங்க வீட்டில் நீங்க அன்னந்தண்ணி புழங்க மாட்டீங்கனு தெரியும் . ஆனா பாருங்க வந்தோரை வரவேற்று உபசரிக்கிறது எங்க பெரிய வீட்டு அரண்மனை பழக்கம்” என்றபடி தண்ணீரை நீட்டினான் மகேந்திரன்.
மரகதநாயகி அதை வாங்கவில்லை. மகேன் தண்ணீரை டீப்பாயில் வைத்து விட்டு ,”சொல்லுங்கத்தை என்ன விஷயமா வந்திருக்கீங்க ?,ஏதோ சொல்லிட்டு இருந்தீங்க?” என்று கேட்டிட மகிழன் அங்கிருந்து நகர்ந்தான்.
“ஏய் நீ எங்கேப் போற… இந்த வீட்டை விட்டு எப்போ போவ?” என்று மரகதநாயகி கத்த
“என் கிட்ட கேள்வி கேட்கிற வேலை எல்லாம் இதோடு நிறுத்திக்கணும். நான் உங்க அப்பன் வீட்டு சொத்தில் வாழலைப் புரியுதா…? கேள்வியே கேட்க கூடாதுன்னா அப்போ இந்த மிரட்டல் நிச்சயம் வரக் கூடாது” என்றவன் சுமித்ராவைப் பார்த்து ,”சொல்லி வைங்க “என்றபடி படியேறினான்.
“அநாதைப்பயலுக்கு இவ்வளவு திமிர் ஆகாது. எல்லாம் இவனை ஏத்தி விட்ட எங்கப்பாவை சொல்லணும்” என்று மரகதநாயகி முணுமுணுக்க , அது மகிழனுக்கு நன்றாகவே கேட்டது. சுமித்ராவை பார்த்து விட்டு இயல்பாய் மேலே சென்று விட்டான். சுமித்ரா சங்கடப்பட்டுப் போனார் மரகதநாயகியின் பேச்சில் . அவன் தன் பேச்சை பொருட்படுத்தவில்லை என்பதே மரகதநாயகி அவமானமாக இருந்தது , அவனை ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டார்.
“அண்ணி போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க “என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டு , தன்னறை புகுந்து விட்டார் சுமித்ரா.
********
வைத்துவிட்டுச் சென்ற உணவு அப்படியே இருந்தது. பிரகல்யா அதன் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
“ஹேய் பொண்ணே !, நீ சாப்பிடலையா ?,உன் கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்?” என்று மெலிதாய் கடிந்தவன் ,
அவளருகில் நாற்காலியை போட்டு அமர்ந்தான்.
” இல்ல நீங்க வேற சாப்பிடலையா?” என்று தயங்கியவளை தலையில் மெலிதாக கொட்டி,” இப்படி எல்லாம் காத்திருக்க கூடாது சரியா ?!, பசி வந்தா சாப்பிட்டுடனும். நான் வருவேன் தானே, ஏன் இப்படி பண்ற? சரி வா சாப்பிடலாம் “என்று அழைத்தான்.
அவனுக்கு சூடாக பரிமாறியவள், தனக்கு அவன் வைத்துவிட்டு சென்ற உணவை எடுத்துக் கொள்ள,”ஹ்ஹா ஹ்ஹான் இதுதான் கூடாது!, ஏன் ஆறிப் போனது சாப்பிட்டு இருக்க, ஒழுங்கா புதுசா எடுத்து வச்சு சாப்பிடு” என்று கண்டிக்க
“இது வேஸ்டா போயிடுமே, சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது இல்ல” என்றதும் சூடான உணவை ஒதுக்கி விட்டு அதையே எடுத்து உன்னை ஆரம்பித்தான்.
“ஏன் இப்படி பண்றீங்க ?”என்று பதறியவளை இடை நிறுத்தி,” ப்ப்ச் வேஸ்ட் ஆகக்கூடாதுனு நீதானே சொன்ன” என்றான்.
“அதான் நான் சாப்பிடுறேனே…”என்று தட்டைப் பிடுங்கினாள். அவனுக்கு இந்த இயல்பும் உரிமையும் அதிகப்படியாக பிடித்தது.
“யார் சாப்பிட்டா என்ன ப்ருஹா.?”
“ம்ம்ஹூம் இது இப்படி பண்றது பிடிக்கலை “இடவலமாக தலையாட்டினாள்.
“வாவ் பொண்ணே… ! இந்த ரியாக்க்ஷன் ஃபெண்டாஸ்டிக் “என்று சிலாகித்தான்.
.
“போங்க நீங்க கிண்டல் பண்றீங்க” என்று சிணுங்கிட, அவள் வாயில் உணவை திணித்திருந்தான்.
“நீங்க.. ம்ம்ம்” என்று உணவை வாயில் வைத்துக் கொண்டு பேச முற்பட வாய் மேல் விரலை வைத்து ,”ஸ்ஸ்ஸ் பேசாதே” என்று தலையாட்டி சொல்ல அமைதியாக அவன் ஊட்ட மொத்தமாய் உண்டு முடித்தாள்.
“கீழே என்ன நடந்தது யார் வந்தா இதெல்லாம் கேட்க மாட்டியா ப்ருஹா “என்று அவன் கேட்க
“எனக்கு அவசியம் தெரியணும்னா நீங்களே சொல்லி இருப்பீங்களே?” என பதிலுக்கு கேட்டவளை அன்பொழுகப் பார்த்தான்.
“கீழே இருக்கிறவங்களோட ரிலேஷன் ப்ருஹா” என்று சொன்னவன், அங்கு நடந்ததை எதுவும் கூறவில்லை. வீணான மனஅழுத்தம் அவளுக்கு எதற்கு என்று விட்டு விட்டான்.
இருவருக்கும் படுக்கையை விரித்தவள் ஒரு ஓரமாய் படுத்திட புன்னகை தான் மகிழனின் இதழ்களில்.
“பல்லி தான் சுவத்துல ஒட்டிக்குமாம் “என நமட்டுச்சிரிப்பு சிரித்தான்.
கீழே இத்தனை நேரம் கடுவன் பூனை போல உர்றென்று பேசியவனா இவன் என்று கேட்க தோன்றும் பார்ப்பவர்களுக்கு.. இறுக்கம் குறைந்து முகத்தில் கனிவு பிறந்திருந்தது.
சட்டென்று திரும்பிப் படுத்தாள் ப்ருஹா.
‘இது பல்லிக்குட்டி இல்ல என்னை சாட்டையில் வெளுத்த ப்ரூஸ்லி குட்டி ‘மனதில் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டான்.
“தூங்கணும்” என்று அவன் கண்களை தன் கைகளால் மூடினாள் முகத்தை சுருக்கியபடி.
“தூங்கு ப்ருஹா!” வேகமாய் அவளது கையை எடுத்து விட்டுச் சிரித்தான்.
“நீங்க உத்து உத்துப் பார்க்கறீங்க…” என்றாள் அவன் குறுகுறு பார்வையின் வீரியம் தாளாது.
சத்தமாய் சிரித்தான். வேகமாக அவன் வாய் மூடினாள். தன்னோடு சேர்த்து இழுத்துக் கொண்டு ‘எனக்கு இது தேவை ‘என அணைத்துக் கொள்ள, நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள். சிரிப்புடன் இருந்தாலும் முகத்தில் இருந்த அமைதியற்ற தன்மை அவளை ஏதோ செய்தது.
“தூங்குடா “மெலிதான குரலில் உரைத்து விட்டு கண்களை மூடினான். அவனது அணைப்பில் பாந்தமாய் ஒன்றிக் கொண்டாள்.
********
சுமித்ரா மனதளவில் உடைந்துப் போயிருந்தார்.
சுமித்ரா நீ இப்படி உட்கார்ந்து இருக்கறதால எதுவும் மாறப் போறதில்லை என விஸ்வநாதன் சொல்ல அண்ணி பேசினது சரியில்லைங்க என்றார் தவிப்புடன்.
அவங்க இப்படி வருவாங்கனு நானும் எதிர்பார்க்கலை. ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சு ஒரு நாள் ஆகறதுக்குள்ள அவங்களுக்கு நியூஸ் போயிருக்குன்னா…இங்கிருந்து யாரோ தகவல் சொல்றாங்கனு அர்த்தம் என்றார்.
ம்ம்ம் அவங்க எங்க வேணும்னாலும் ஆள் வைப்பாங்க. என்ற சுமித்ரா மகிழன் அவனை இனி தான் கவனமா பார்த்துக்கணும் என்று பெருமூச்செறிந்தார்.
அதே வேளையில் மரகதநாயகி தன் வீட்டில் மகிழனை கொல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.