பிருந்தாவனத்தில் குளுமை மட்டுமல்ல உணர்வுகளும் நிரம்பியிருந்தது. சகுந்தலா அம்மா அப்படியே அண்ணபூரணித் தாயாரையும் , கருணையே வடிவான அன்னைத் தெரசாவையும் கலந்து செய்த கலவையாக இருந்தார்.
“ரொம்ப நல்லா இருக்கு. விட்டு வர மனசே இல்லை. தேன்நிலா நல்லா பேசினாங்க “என்றாள் குதூகலமாக
“ம்ம்ம் ரொம்ப நல்லப் பொண்ணு. இங்கே வந்து மூணு வருஷம் ஆகிடுச்சு. ஹஸ்பண்ட் இல்ல இறந்துட்டான். ரிலேஷன் எல்லாம் சென்னையில் இருக்காங்க, மனநிம்மதிக்காக இங்கே இருக்கா. இவளுக்கு ஒரு ட்வின் சிஸ்டர் இருக்காங்க கரூரில், பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்க.”என்று சில விஷயங்களையும் அவளைப் பற்றி கூறியபடி வந்தான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள்,’ ம்ம்ம்’ மட்டும் போட்டுக் கொண்டாள்.
“ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் சரி ,வருத்தமா இருந்தாலும் சரி இங்கே வந்திடுவேன் ப்ருஹா. நம்ம வயல்ல விளையிற காய்கறி, பழம் எல்லாம் வாரம் ஒரு முறை இங்கே வந்து விடும்.”என்று அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தான்.
“நான் ஒண்ணு கேட்கணும்னு சொன்னேனே?” என்று அவள் இழுக்க
“இல்லையே பேசணும்னு தானே சொன்ன “என வம்பு செய்ய ,”போங்க நீங்க “என்று சிணுங்கினாள்.
“அழகுப் பொண்ணே !”என்று கொஞ்சல் குரலில் கூற ,அவளின் முகத்தில் நாணத்தின் நிழல் படர்ந்தது.
“ப்ளீஸ் !நான் பேசுறேனே ?”என்றதும் வண்டியை நிறுத்தி விட்டான்.
அருகில் இருந்த இடத்திற்கு செல்ல, மரநிழலைக் கண்டதும் அங்கேயே அமர்ந்து கொண்டனர்.
“பேசுங்க மேடம், என்ன பேசணும்?” என்று கேட்கவும்
“அது என்னை உங்களுக்கு முன்னாடியேத் தெரியுமா?” என்று கேட்க
“உனக்கு எப்படித் தோணுது?” என்றான் பதிலுக்கு.
“இல்ல நீங்க பேசறது பழகறது எல்லாம் ரொம்ப வருஷமா என் கூட இருந்த மாதிரியே ஃபீல் தான் வந்தது, வருது. அதான் கேட்டேன். உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு, ஆனா எங்கேனு தான் நினைவே வர மாட்டேங்கிது” என்றாள் பாவமாக.
“ஹான் அதான் சின்ன வயசில் தான் பார்த்திருக்கேன். பட் எங்கேனு தெரியலை. எங்க தாத்தா வீட்டில் இருக்கும் போது பார்த்திருப்பேனோ?” அவனிடமே கேட்க சுற்றும் முற்றும் பார்த்தவன் அவள் கன்னங்களை தாங்கிப் பிடித்தான்.
“ப்ரூஸ்லி நீ ஸ்கிப்பிங் விளையாடி இருக்கியா ?”என்று கேட்டு வைக்க யோசித்தாள்.
“ஹான் விளையாடி இருக்கேன் நூறு தடவை விடாம ஸ்கிப் பண்ணுவேன் தெரியுமா !?”என்று பெருமிதத்துடன் சொல்ல
அவள் விழிகளையே பார்த்திருந்தான் மகிழன்.
அவள் குழந்தைபருவம் சிந்தனைக்கு வரவும் , உற்சாகத்துடன் பேச ஆரம்பித்து விட்டாள் ப்ரகா.
“தருணிக்கா ,என் ஃப்ரெண்ட் புவனா, கல்பனா யாருக்குமே விடாம விளையாட வராது. ஆனா நான் வேகமா ஸ்கிப்பிங் ஆடுவேன்… ஒரு தடவை என்னாச்சுன்னா விடாம நூறு விளையாடும்போது சந்தோஷத்துல ஒருத்தர் மேல கயித்துலேயே அடிச்சு….”என்று சொல்லும்போதே மகிழனின் விழிகளைப் பார்த்தவள், ஏதோ தோன்ற ,”அது அது… நீங்… நீங்களா… நீங்க தான் எனக்கு நினைவுக்கு வந்திடுச்சு… சின்… சின்னையா தானே ….? !”என்று வியப்புடன் கேட்க
“ஒரு வழியா என் ப்ரூஸ்லிக்கு இந்த மகிழனை ஞாபகத்திற்கு வந்திடுச்சா ?”என்று கேட்டதும் மகிழ்ச்சியுடன் அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டாள் இடம் மறந்து
“ஆனா அப்போ குட்டி மீசை வச்சு ஒல்லியா இருந்தீங்க முகம் இப்படி இல்லையே?” என்று சந்தேகத்துடன் கேட்க
“ஹேய் !அப்போ எனக்கு இருபது வயசுடி. ஹாஸ்டல் சாப்பாடு, ட்ராவல் அது இதுன்னு ஒல்லியா இருப்பேன். இங்க வந்து நாகலெட்சுமி சமைச்சுப் போட்டு முகத்தில் எல்லாம் சதை வச்சிடுச்சு. உடம்பு மட்டும் வயல் வேலைப் பார்க்கிறதால எய்ட் பேக்கா மாறிடுச்சு “என்றான்.
“ஆனா அப்போ …” என இழுத்தவளை,” நீயும் கூட தான் ப்ரூஸ்லி ஒல்லிப்பிச்சானா வாண்டு மாதிரி இருந்த இப்போ அப்படியா இருக்க?” என்று கிண்டலடித்தான்.
“இல்ல… ஆனா உங்களுக்கு அடையாளம் தெரிஞ்சது, எனக்கேன் நினைவில் இல்ல. அதான் இந்த ப்ரூஸ்லி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்” என்றவள் பேனா சமாச்சாரத்தில் இருந்து, முதல் மதிப்பெண் பெற்றது சென்னையில் படித்தது என சளசளக்க ஆரம்பித்து விட்டாள்.
“என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கனு நீங்க சொல்லவே இல்லை” என்று வந்து நின்றாள்.
“அதான் பொண்ணு காணாமல் போயிடுச்சு அவசரமா கல்யாணம் நடந்திடுச்சு “என்றான் வேண்டுமென்றே
“ஆனா…?” என்றவள்,” ஓஓஓ” என முடித்துக் கொண்டாள். மனமோ,’ மணப்பெண் காணாமல் போனதால் தன்னை வேறு வழியின்றி திருமணம் செய்து கொண்டதாக நினைத்தது.
“ப்ரூஸ்லி நீ என்ன நினைக்கிறன்னு நான் சொல்லட்டா?” என்றதும்,” வேண்டாம்” என்றாள் கண்கலங்க
“நீ என்ன பண்ற உன் பெரியம்மா கிட்ட பேசுற ,ஏன் என்னை அவசரமா இந்த வயசானவனுக்கு கட்டி வச்சீங்கனு கேட்கிற !”என்றான் வம்பாக
“எனக்கு முப்பத்திமூணு வயசு தெரியுமா. பாதிகிழவன்” என சொல்ல
“அப்படி எல்லாம் இல்லையே. அறுபது வயசு ஆனா தான் அரைக்கிழவன்” என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு.
“இப்போ ஏன் இந்த அழுகையாம் ப்ரூஸ்லிக்கு.?”ஆதரவாக அணைத்துக் கொண்டான் அவள் கைகளை எடுத்து விட்டு.
“தெரியலை ஆனா வருது. சோகமா இருக்கேன்.” என்று சொல்லும்போதே விசும்பினாள்.
“அப்போ சரி பண்ணிடலாமா?” என்றதும் அவனைக் கேள்வியாக பார்க்க,” வா எழுந்துக்கோ” என்று அவளை அழைத்துச் சென்றான்.
வண்டியில் சற்றுத் தள்ளி அமர்ந்தவளை இழுத்து தன் இடையோடுக் கட்டிக் கொண்டு அமர வைத்தான்.
“அன்னைக்கு உங்களை அடிச்சுட்டேன் சாரி. அப்புறம் சரி ஆகிடுச்சு தானே ….?” அப்போ என்னை என்ன நினைச்சீங்க திட்டுனீங்களா?” என்று கேட்க
“ம்ம்ம் வாண்டு மாதிரி இருந்துகிட்டு சுள்ளுனு அடிச்சுட்டாளேன்னு நினைச்சேன். திட்டவெல்லாம் இல்லை. ஆமா அந்த பேனா வச்சு உங்க ஸ்கூல்ல பிரபலம் ஆகிட்ட போல” என்று கிண்டல் செய்தான் அவளை இலகுவாக்கும் பொருட்டு.
“ஆமா… எல்லா பசங்களும் எனக்குத் தா ,உனக்குத் தான்னு ஒரே போட்டி தான். நான் மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டேன் தெரியுமா. அது வச்சு தான் எக்ஸாம் எழுதினேன். டுவெல்ப்த்’ல கூட அதனால தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன் தெரியுமா?!” என்றாள் பெருமை பொங்க.
“அதுவரைக்கும் அந்தப் பேனா எழுதுச்சா என்ன?” என்று சந்தேகமாக கேட்கவும்
“இப்ப வரைக்கும் அந்தப் பேனாவை நான் வச்சிருக்கேனே” என்றவள்,” ரொம்ப நல்லாவே எழுதுது” என்றாள்.
ஆச்சரியப்பட்டுப் போனான் அவள் பதிலில்.
“நிஜமாவா ப்ருஹா. நம்பவே முடியல “என்று கேட்டதும்,” ஆமாம் பத்திரமா வச்சிருக்கேன். தருணிக்கா ,அண்ணன் கூட கேட்டாங்க தரவே மாட்டேன்’னு சொல்லிட்டு அடி வாங்கினேனேத் தவிர பேனாவைத் தரலை. தூங்கும்போது எடுத்திடுவாங்கனு பயந்து கழுத்துல கயித்துல மாட்டி உள்ளே போட்டுப்பேன் யாருக்கும் தெரியாது” என்றாள்.
“ஹேய் அது ஜஸ்ட் ஒரு பேனா!” என்றான் சங்கடமாக.
“இல்லை உங்களுக்கு தெரியாது. அது என் கூட இருந்தா ரொம்ப ஹாப்பியா இருக்க மாதிரி தோணும். நான் கேட்டதும் முன்ன பின்ன யோசிக்காம நீங்க வாங்கித் தந்தீங்க. அப்போ கூட பெருசாத் தோணல. ஆனா ஒவ்வொரு தடவையும் அதுல எக்ஸாம் எழுதிட்டு வந்து ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கும் போது என்னையறியாம அது கூட அட்டாச் ஆகிட்டேன்.”என்றாள் உளமார.
“பேனா கூட அட்டாச் ஆகிட்ட பேனா வாங்கித் தந்த என் கூட?” என்று கேள்வியாக நிறுத்த,” ரொம்ப!” என்று அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்.
வீடு எப்படி வந்து சேர்ந்தனர் என்றேத் தெரியவில்லை. ஒரு வித மயக்கம் இருவரிடத்திலும்.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக பேனாவை காட்டச் சொல்லி கேட்டான்.
அவள் பொக்கிஷமாக பாதுகாக்கும் சில விஷயங்களும் அதில் இருந்தது.
அவள் வைத்திருந்த அத்தனைப் பொருட்களையும் காட்டினாள். தாத்தாவின் அடையாளங்கள், பாட்டி தந்த வளையல் என்று சில பொருட்களை அவர்கள் நினைவாக வைத்திருந்ததையும் கண்டான்.
“இதென்ன கத்தி எல்லாம் வச்சிருக்க ?”என்று கேட்க
“அது ஒரு விஷயத்திற்காக தாத்தா தந்தது. அது எப்பவும் என் கூட இருக்கும். “என்றாள்.
“உன் பாதுகாப்புக்கு வேண்டியா ப்ருஹா?” என அவள் விழிகளை ஊடுருவியபடி கேட்க
“ம்ம்ம்… ஆமாம்” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
நெடுநேரம் பேசினர். உறங்காத விழிகள் உற்சாகத்தில் இருந்தது.
“ப்ரூஸ்லி!” என்றவன் கைநீட்ட, அவனது கரம் பற்றினாள்.
இடைவளைத்துப் பிடித்தவன் நெற்றியில் துவங்கிய முத்த ஊர்வலத்தை இதழில் முடித்து விட எண்ண, அது நீண்டு கொண்டே சென்று கூடலுக்கு அச்சாரம் போட்டது.
விழியோடு விழி கலந்து புனையல் நாகங்களாய் பின்னிப் பிணைந்து கூதல் தணிக்க, கூடல் இனிக்க இன்பசாகரம் ஊற்றெடுக்க, இமை மூடா இரவாய் கழிந்து நிலவுப் பெண்ணவள் மேக கூட்டத்தில் ஒளிய அனல்மேனியன் கீழ்திசையில் மெல்ல எழும் வேளையில் அவளை உறங்க விட்டான். தேடல்கள் முடியாது இனி நீயில்லாமல் என் வைகறையும் விடியாது என்ற நிலையை எட்டியிருந்தனர் இருவரும்.