அற்புதமான அதிகாலையாக அமைந்திருந்தது மகிழனுக்கும் ,வதனிக்கும். இருவருமே எழுந்து கொள்ள விரும்பவில்லை.
“வதனிமா… என்ன முழிச்சுட்ட ?”என்றான் சிம்பொனி இசை போன்ற குரலில்.
“தூக்கம் வரலை. ஆனா எழுந்துக்கவும் தோணலையே…?!”என்றாள் அவன் நெஞ்சில் தன் முகத்தாடையை பதித்து நிமிர்ந்து பார்த்தபடி.
முன்பெல்லாம் வார்த்தைகளுக்கு இடைவெளி விட்டு தயங்கித் தயங்கி பேசுவாள். இந்த இரண்டு நாட்களில் வார்த்தைகளில் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தாள். சகஜமாய் பேசுவதும், அவனை பேசவே விடாமல் சளசளப்பதுவுமென அவனைத் திக்குமுக்காட செய்திருந்தாள்.
“எழுந்துக்கத் தோணலையா…?”என்றவன் இடைவருட , புரிந்து போனது அவளுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று.
“இல்ல நான் எழுந்துட்டேன்.” துள்ளி குதித்து எழுந்தவளைப் பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தான்.
இரு உதடும் ஒட்டிக் கொண்டு மூக்கு விடைத்து,” சிரிக்கிறீங்க ,போங்க “என்று உதட்டை சுளித்துக் காட்டி ஓடினாள் குளியலறை நோக்கி.
“ஸ்கூல் கோயிங் கேர்ள். ச்சே இல்லயில்ல அவ சின்னப் பிள்ளை இல்லை “என்று தன்னைத் தானே திருத்திக் கொண்டான்.
கதவைத் திறந்து குறைகண் போட்டு அவனைப் பார்த்தாள்.
“என்ன உள்ளே வரவா?” என சைகை காட்ட
“துண்டும், பாவாடையும் எடுத்துட்டுப் போக மறந்து போயிட்டேன்” என்றாள் உதடு பிதுக்கி பாவமாக
“வந்து எடுத்துக்கோ” என்று இலகுவாக அவன் சொல்லிட
“ட்ரெஸ் எல்லாம் நனைச்சுப் போட்டுட்டேன். மேலேயும் தண்ணி ஊத்திட்டேன். அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு ட்ரெஸ் எடுத்துட்டு வரலைன்னு …”என்றாள் பரிதாபமாக.
“வாவ்! அப்போ பர்த்டே பேபியா ?!”என்று அவன் வம்பிழுக்க
‘உன் மூஞ்சி ,எப்படி பேசுறார் பாரேன்!’ என மனதினுள் திட்டிக்கொண்டாள் அவனை.
“ஹாஹாஹா !மைன்ட் வாய்ஸ்ல திட்டுறியா பொண்ணே?!” என்று சிரித்தபடி கேட்க
“ப்ளீஸ் எடுத்து தாங்களேன் .”என்று கண்கள் சுருக்கி கெஞ்சினாள்.
அழகி என் பேரழகி அழகான சிரிப்பழகி பாடலை முணுமுணுத்துக் கொண்டே அவளிடம் துண்டை கொடுத்தான்.
“பாவாடை…?”
“உள்ளேப் போய் குளி பொண்ணே , எடுத்துத் தரேன்.” என்றதும் ,”ஹீஹீஹீ “என்று சிரித்து விட்டு கதவை சாத்த ,”பழைய வாலு திரும்பி வருது” என்று முனகிக் கொண்டான்.
*********
“அவன் ஒத்த ஆள் அவனைக் கொல்ல முடியல “என மகிழனைக் கொல்ல அனுப்பியிருந்த நபரை அறைந்திருந்தார் மரகதநாயகி.
“இல்லம்மா டக்குனு யூ டர்ன் எடுத்து ஆள் எஸ்கேப் ஆகிட்டான் அடுத்த முறை கண்டிப்பா முடிச்சுடுறோம்மா “என்றான் அவன் பவ்யமாக.
ஆழ்ந்த பெருமூச்செறிந்தவர் ,”அவன் உயிரோட இருக்கக் கூடாது. என் அண்ணன் பேரை கெடுக்க வந்த ராஸ்கல். இவனால தான் அவர் எங்கேயோப் போயிட்டாரு. அந்த அரண்மனையில் ராஜாவா இருந்த மனுசன்… இப்போ எங்கே இருக்கிறார்னே தெரியல. அவன் சாகணும் என் அண்ணன் இடத்தில் அவன் இருக்கவேக் கூடாது’ என மனதில் வன்மமாக நினைத்துக் கொண்டார்.
“சரிம்மா இந்த முறை கண்டிப்பா போட்டுர்றோம்” என்றவன் வெளியேற, மரகதநாயகி அமைதியாக நாற்காலியில் அமர்ந்தார்.
“ஏன் மா அவன் தான் சொத்தை எழுதித் தந்துட்டானே.?, இப்பவாச்சும் அவனை விட்டுடுங்க. புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. குழந்தை குட்டினு சந்தோஷமா இருக்கட்டுமே!” என்றார் மரகதநாயகியின் கணவர் சுசீந்திரன்.
“உனக்கு விளையாட்டா இருக்கா.? ஹான் ! என் வீட்டோட பாரம்பரியம் என்ன? கலாச்சாரம் என்ன? எங்கேயோ பிறந்த அநாதைப்பய என் அண்ணன் வீட்டு அரண்மனையில் ஆட்சி செய்வானா??, அடுத்த பெரியய்யானு பேரெடுப்பானா ?நான் விட மாட்டேன். சொத்தை எழுதித் தந்தா அங்கிருந்து போக வேண்டியதுதானே, ஏன் அங்கேயே இருக்கான்?, உனக்குத் தெரியாதுய்யா அவன் திட்டம். சொத்தெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. அதை விட பெரிய விஷயம் பதவி அந்த அரண்மனையோட ராஜாங்கிற பதவி அதை வச்சு அவன் அதைப் போல நூறுமடங்கு சம்பாதிப்பான் தெரியும் தானே…?ஒரு தடவை ராஜாவா அங்கீகாரம் கிடைச்சுட்டா அவனை அசைக்கக் கூட முடியாது “என சொல்ல சுசீந்திரன் அமைதியாக நின்றார்.
“என்னய்யா ஏதாவது சொல்லு ?”என்றதும்,” நான் ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க மாட்டீயே?” என பீடிகை போட்டார்.
“அது நீ சொல்றதைப் பொறுத்து இருக்கு” என்று விடைப்பாக சொல்ல
“அது அது வந்து மகேந்திரனை மட்டும் எப்படி நீ ஏத்துக்கிற? அவனும் வேற வீட்டு வாரிசு தானே?” என்று கேட்க
“அவன் சுமித்ராதேவி ரத்தம். அந்த முறையில் ஏத்துக்கிட்டேன். விஸ்வநாதன்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது.” என்று உரைக்க , சுசீந்திரன் சரிதான் என்று முடித்து விட்டார்.
“இன்னைக்கு என் பொண்ணும் பையனும் வர்றாங்களே யார் கூப்பிட போயிருக்கா ?”என்று முறைப்பாக கேட்க
“ம்ம்ம்” என்றவர் அன்றைய தினசரிகளில் மூழ்கி விட்டார்.
************
மகிழன் மாடியில் ஒரு அறையில் தனித்தமர்ந்திருந்தான். வயலுக்குச் செல்வதாக ப்ரகல்யாவிடம் கூறி விட்டு வீட்டினுள் அந்த அறையில் தான் இருந்தான்.
எதிரில் மரகதநாயகியிடம் அடி வாங்கிய அடியாள் ரத்தம் சொட்ட சொட்ட முட்டிப் போட்டிருந்தான்.தலை கீழே பார்த்துக் கொண்டிருந்தது.
“யாரைக் கொல்ல ப்ளான் போடுற? ஏன்டா நான் அவ்வளவு ஈசியா உனக்கு ?,ஹான். மகிழவேல்ராஜா டா. அத்தனை ஈசியா என்னைக் கொல்ல விட்டுடுவேனா நான்.? ஒரு தடவையே மிஸ் ஆனேனே. அப்பவே சுதாரிச்சு நீ விலகி இருக்கணுமா இல்லையா?” என்று கர்ஜனைக் குரலில் கேட்க
“மன்னிச்சிடுங்க அண்ணே… !”
“ஹான் ஹான் என்னது கேட்கல ?”என்று காதை அவனருகில் கொண்டு செல்ல ,”மன்னிச்சிடுங்க சின்னைய்யா இனிமே நீங்க இருக்க திசைப்பக்கம் கூட வர மாட்டேன். என்னை விட்டுடுங்க நான் புள்ளைக்குட்டிக்காரன்” என இறைஞ்சினான்.
“அது நீ என்னைக் கொல்ல ஒத்துக்கிட்டியே அப்பவே சிந்திச்சிருக்கணும் இப்போ டூ லேட் “என்றவன் ,”நீ என்ன பண்ற ?”என்று தாடையை நிரடியவன்,” பேசாம செத்திடு” என்றான் இலகுவாக.
“ராஜா என் பிள்ளைங்க அநாதையாகிடும் ,இந்த ஒரு தடவை விட்டுடுங்க ராஜா” என்று அப்படியே காலில் விழுந்து விட்டான்.
“இனியொரு தடவை என் கண்ணில் நீ படக் கூடாது. பட்ட நீ செத்த “என்று மிரட்டியவன் ,”பேக் டோர் வழியா எழுந்து போடா” என்றான்.
அவன் விட்டால் போதுமென்று எழ கைகள் பின்னால் கட்டியிருந்ததால் அப்படியே கீழே விழுந்திருந்தான்.
“நாகலெட்சுமி “என்ற மகிழனின் குரலில்,” தம்பி” என்று வந்தார் வேகமாக
“இந்த நாய் கையை அவிழ்த்து விடுங்க அப்புறம் …”என்று மீண்டுமாய் தாடையை நிரடியவன் நாகலெட்சுமியைப் பார்க்க ,”நான் இவனை பார்த்துக்கிறேன் தம்பி நீங்க போங்க “என்றார்.
“ம்ம்ம்…” என்றவன் ,”வதனி என்ன செய்யறா ?”என கேட்டதும் ,”பாப்பா உங்களுக்குப் பிடிக்கும்’னு நாட்டுக்கோழித்தொக்கு பண்ணுது தம்பி” என்றார்.
“ம்ம்ம்” என்றவன் மென்மையான முகத்துடன் அவளது செய்கைகளை சிசிடிவியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன தம்பி வெளியில் தானே இருக்காங்க , போய் பக்கத்தில் இருங்களேன் “என நாகலெட்சுமி சொல்ல
“அழகி இல்ல நாகலெட்சுமி .”என்றான் ரசனையாக.
அடிவாங்கியவனோ,’ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை பொளந்துக் கட்டின ஆளா இது?!’ என ஆச்சரியத்துடன் பார்த்தான்.
“ரொம்ப தம்பி. முகத்தை விட அழகு, பாப்பாவோட மனசு தம்பி “என்றார் உளமார.
“மகிழனுக்கும் மகிழ்ச்சியாக இருக்கத் தெரியும்னு காட்டினவளாச்சே!?” என்று சிலாகித்துக் கொண்டான்.
“நாகலெட்சுமி “என்று மீண்டும் அழைத்திட
“சொல்லுங்க தம்பி” என்றார் உடனேயே.
“மரகதநாயகி “என்று சொல்லும் போதே,” நான் பார்த்துக்கிறேன் தம்பி இனி உங்க வழிக்கு வரமாட்டாங்க” என்றார் அழுத்தமாக.
“அவங்களுக்கு ஒரு பையனும் பொண்ணுமில்லையா ?”என்று தெரியாதது போலவே கேட்டதும்,”ஆமாம் தம்பி” என்று பதிலிறுக்க
“அவங்க இந்தியா வர்றதா கேள்விப்பட்டேன். “
“இன்றைக்குத் தான் தம்பி வர்றாங்க. “
“ஓஓஓ!” என்றவன்,” இதைப் பத்தி நைட் பேசுவோம் “என்றான் சூசகமாக.
*×******
தருணி மெல்ல எழுந்தமர்ந்தாள். உடலெல்லாம் அடித்துப் போட்டாற் போல வலித்தது அவளுக்கு. கண்களை திறக்கவே முடியவில்லை அவளால் அத்தனை எரிச்சலாக இருந்தது. முதல்நாள் அழுதது வேறு தலையை பாரமாக்கியிருந்தது.
‘ஏன் ஏன் ஏன் ?’என்று தனக்குள்ளேயேக் கேட்டுக் கொண்டாள்.
“தரு எழுந்துட்டியா…?,என்ன பண்ணுது. ப்ரெஷ் ஆகறியா?” என்று அவளை தூக்கி நிற்க வைத்தான்.
“நிற்கவே முடியல மகேன். தலைவலி பயங்கரமா இருக்கு “என்றவள் நெற்றியில் கை வைத்துக் கொண்டாள்.
“ஓகே ஓகே ரிலாக்ஸ் பல் மட்டும் விளக்கிட்டு வந்திடு. நான் டிஃபன் எடுத்துட்டு வரேன் சரியா ?”என்று குளியலறையில் அவளை விட ,”ப்ளீஸ் ப்ரகாவை வரச் சொல்றீங்களா அவ எனக்குத் தலையை பிடிச்சு விடுவா உடனே சரி ஆகிடும்” என்றாள் பாவமாக.
“அது… “என்று யோசித்தவன் அவளின் முகத்தைப் பார்த்து சரியென கூறி விட்டுச் சென்றான்.
மகிழனும் ப்ரகாவும் சமையலறையில் இருந்தனர்.
மகிழனின் சிரிப்புச்சத்தமும் ,ப்ரகாவின் குரலும் ஒரு சேர வெளியே கேட்டது.
“இன்னொரு தடவை இப்படி சாப்டிங்க, பாருங்க” என மிரட்டிக் கொண்டிருந்தாள்.
“ஓஓஓ என்னை நீ மிரட்டுவியா… ?அந்த பெத்த ரௌடியா நீ பொண்ணே” என்று அவளை வம்பிழுத்துக் கொண்டே மீண்டும் அவளுக்கு ஊட்டி விட்டு ,அதனை திரும்ப அவனே பெற்றுக் கொண்டான் இதழ் வழியே.