வதனி வரவில்லை என்றதும் தருணி கோபம் கொண்டிருந்தாள்.
தலைவலி வேறு கோபத்தையும் எரிச்சலையும் கிளப்பியது. மகேந்திரன் வேறு தைலத்துடன் நின்றிருந்தான்.
வேறு வழியின்றி மகேந்திரனிடமே தைலத்தை தேய்த்தவளுக்கு நெற்றி எரிந்ததை விட மனம் அதிகமாய் எரிந்தது.
அவளின் பெரியம்மாவிற்கு அழைத்தாள் தருணி.
“என்னம்மா புதுப்பொண்ணே ஃபோனையேக் காணோம்?” என்று எடுத்ததும் கிண்டல் பேச
“எரிச்சல்ல இருக்கேன். என்னைத் தூண்டி விடாதீங்க”என அவருக்கு மட்டும் கேட்கும்படி கத்தினாள்.
“அப்படி என்னடி எரிச்சலு…?”என்று அவளது கோபம் புரியாமல் கேட்டு வைக்க
“எல்லாம் உங்களால தான். அவளைக் கொண்டு வந்து என் வீட்டு மருமகளாக்கினீங்களே… அதனால வந்த வினை. எப்போதும் நான் கூப்பிட்டா அலறியடிச்சுட்டு ஓடி வர்றவ, இன்னைக்கு என் வீட்டுக்காரர் நான் கூப்பிடுறதா சொல்லிட்டு வந்தும் என்னைப் பார்க்க இதுவரைக்கும் வரலை”என்றாள் ஆத்திரமாக.
“ஆமா ஆமா அப்பிடியே உலக அழகியைக் கட்டிக்கிட்ட மாதிரி என்ன சீன் போடுறான். தூக்கிட்டுப் போறதென்ன, ஊட்டுறது என்ன ரொம்ப ஓவரா பண்ணுதுக ரெண்டும். சொத்தை எழுதித் தந்த அப்புறம் இந்த வீட்டை விட்டு போயிருவான்’னு நினைச்சேன். ஆனால் மாடியில் ரூம் செட் பண்ணி இருக்காங்க “என ஆதங்கமாய் பேசினாள்.
“விடுடி புதுப் பொண்டாட்டி மோகம் அப்படித்தானிருக்கும் “என தருணியை சமாதானம் செய்து விட்டு இணைப்பைத் துண்டித்தவரின் முகத்தில் வெற்றிப் புன்னகை.
‘ம்க்ஹ்ம்… அவளை அடிமை மாதிரி வச்சு என்னென்ன செஞ்சீங்க. இப்போ அனுபவிங்க எல்லாம். இன்னும் நீயெல்லாம் படணும், அந்த மகிழன் செய்வான். உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டுவான் ‘என்று எண்ணியபடி வேலையை கவனிக்கச் சென்றார்.
*********
மரகதநாயகி பதற்றத்துடன் தன் மகன் மகளுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் எண் இரண்டுமே தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே சொன்னது.
“நேத்தே வர்றேன்னு சொன்னவங்க ஏன் இன்னும் வரலை.? ஃபோன் எடுக்க மாட்டேங்கிது. டேய் ! நீ நல்லா பார்த்தியா ஏர்போர்ட்டிற்கு வரலையா?” என டிரைவரிடம் கத்திக் கொண்டிருந்தார்.
“அம்மா நான் நல்லாத் தேடிட்டேன், அவங்க வரலை “என்று கூறி விட்டு அவன் போய் விட்டான்.
அவரது கைபேசி அழைக்கவே ஒரே ரிங்கில் எடுத்து ,”ஹலோ ஸ்வீட்டி எங்கே இருக்க?” என்று பரபரப்புடன் கேட்க
அவன் குரல் என்று உணர்ந்து கொண்ட மரகதநாயகிக்கு ஒரு நொடி பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது.
“டேய் டேய் என் மக எங்கடா?” என்று அலற, மகிழன் சத்தமாக சிரித்தான்.
“அவ்வளவு பாசமா?” நக்கலாய் வினவியவன்,
” உன் பசங்க பொணத்தை எங்கே போடலாம் …? கொளத்துல, ரயில்வே ட்ராக்ல இல்ல…”என இழுக்கும்போதே,” டேய் !டேய் !!உன்னை நான் கொன்னுடுறேன்டா” என்று கத்தினார்.
“ப்ப்ச்… சும்மா கத்தாத. என்னைக் கொல்லணும்னு நீ நினைச்சதால தான் இந்த கடத்தலே… என் மோட்டிவேஷன் வேற ,ஸோ ஒதுங்கிப் போயிடு… இல்ல நீ இழக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் “என எச்சரித்து விட்டு வைத்தான் மகிழன்.
மரகதநாயகி கொதித்துப் போனார்.
“ஒரு அநாதை நாயி என்னவெல்லாம் ஆட்டம் காட்டுறான் ?”என்று பல்லைக் கடித்தவர் ,’இப்போதைக்கு பிள்ளைகள் வீடு திரும்ப வேண்டும் அதுவரை அமைதியாக இருப்போம் ‘என்று தன் திட்டங்களை எல்லாம் ஒத்திப் போட்டார்.
**********
வதனியின் நினைவில் மகிழனைத் தவிர எதுவுமில்லை. அவளின் நினைவுகளை அந்த அளவிற்கு ஆக்கிரமித்திருந்தான் மகிழன்.
கீழே இருந்த தருணி ,ப்ரகா ஒரு முறையேனும் வந்து போவாள் என்று எதிர்பார்த்திருக்க ,அவளோ தன் பாதங்களை கீழே பதிக்கவே இல்லை.
சுமித்ரா தருணியின் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டு தன் வேலையில் கவனம் வைக்க, மகேந்திரனோ தினசரி அலுவல்களை கவனிக்கச் சென்று விட்டான். சொத்து கைமாறியதிலிருந்து கணக்கு வழக்குகளை அவன் தான் பார்க்க வேண்டும் என கூறி விட்டான் மகிழன்.
வயலுக்கு ஆட்களை அழைப்பது, வேலை சொல்வது ,ஏற்றுமதி செய்வது இதை மட்டும் மகிழனே பார்த்துக் கொண்டான். அதற்கான சம்பளத்தை ஆடிட்டர் மூலமாக தனது வங்கிக் கணக்கில் வாங்கிக் கொள்வது போல ஏற்பாடு செய்திருந்தான். எந்தவித நேரடித் தொடர்பும் சுமித்ராவின் குடும்பத்தினருடன் அவன் வைத்திருக்கவில்லை. ஆனால் அவர்களை அதிகாரம் செய்யும் போக்கை தன் கையில் மறைமுகமாக வைத்திருக்கிறான் அவர்கள் அறியாமல்.
மொத்தத்தில் அவர்கள் பொம்மலாட்டத்தில் வரும் கைப்பாவைகள். இவனோ அதை இயக்கும் நிபுணன்.
எங்கோ இருக்கும் முதலாளி தன் கட்டளைகளை நேரடியாக தெரிவிக்காமல் தொழிலாளியைத் தானாய் உழைக்க வைக்கும் சூட்சுமம் அவனிடம்.
“ஐயா… தேங்காய் எல்லாம் லோடு ஏத்தியாச்சுங்க. எப்ப வண்டி கிளம்பலாம்னு சொன்னா டிரைவர் எடுத்திடுவாருங்க” இடுப்பில் வேஷ்டி மட்டும் கட்டியிருந்த சாமிக்கண்ணு பவ்யமாக வந்து கேட்டார்.
“மொதோ மத்தியான சாப்பாட்டை முடிச்சுட்டு, அசதிக்கு ரெண்டு மணி நேரம் படுக்க சொல்லு, தூக்கம் கலைஞ்சதும் வண்டியை எடுக்க சொல்லு. நைட்டு பத்து மணிக்கெல்லாம் லோடு கோயமுத்தூருக்கு போய் சேர்ந்திருக்கணும்” என்ற மகிழன் தனது உணவின் வரவிற்காக அமர்ந்திருந்தான். நாகலெட்சுமி மதியம் சுடசுட கொண்டு வந்து தந்திடுவார்.
இன்றும் அவரை எதிர்பார்த்துக் காத்திருக்க, வந்ததோ ப்ரகல்யா.
ஆச்சரியத்தில் விழி விரித்தவன் பட்டென எழுந்து அவளை நெருங்கி இருந்தான்.
வரப்பில் வேகமாக ஓடிச் சென்றவனை கண்ட சாமிக்கண்ணு, தன்னுள் நகைத்தபடி இடத்தை காலி செய்தார்.
“என்னடா ப்ருஹா நீ வந்திருக்க…?வழி தெரிஞ்சதா உனக்கு…? ஏன் நடந்து வந்த?” படபடவென்று அத்தனைக் கேள்விகளை கேட்டு வைத்தான்.
அவனையேப் பார்த்திருந்தவள்,” லெக்ஷ்மி அக்கா கொண்டு வந்து விட்டாங்க. அதோ அங்கேப் போறாங்க பாருங்க. ஏன் நான் வரக் கூடாதா?” அடுக்கடுக்காய் அவனைப் போலவே இவள் பதிலளித்தாள்.
“வரலாமே… நான் ஒண்ணும் சொல்லலையே” என்றபடி சாப்பாட்டுக் கூடையை வாங்கிக் கொண்டு நடந்தான்.
“என்ன சமையலாம்…? இப்படி உட்கார் கீழே விரிக்க படுதா எடுத்துட்டு வர்றேன்” என்று திண்ணையில் உணவை வைத்து விட்டு உள்ளே சென்றான்.
“என்ன பெரிய வீட்டு மருமவளே, சாப்பாடு நீங்களே கொண்டு வந்துட்டீக போல. ஆமா என்ன சோறு…?”சாப்பிட சென்ற வேலைக்கு வந்த பெண்மணிகள் கேட்டபடி நகர்ந்தனர்.
“அது சீக்கிரம் கேப்பாகடி… பெரியவீட்டம்மா வெரசா நல்லசேதி சொல்லுங்க. சீக்கிரம் உங்க வீட்டு விருந்து சாப்புடணும்.” என கிண்டல் செய்தபடி சென்று விட்டனர்.
“என்ன கிண்டல் பண்றாங்களா?, இங்கே எல்லாம் இப்படி தான் பெருசா எடுத்துக்காத “என்றவன் படுதாவை விரித்து விட்டான்.
தூக்குவாளியில் கம்மங்கூழ் உருண்டைகளாக இருக்க, மோர் தனியே அதற்கு தொட்டுக்கொள்ளவென்று வகை வகையாக பொரியல், வறுவலைக் கொண்டு வந்திருந்தாள்.
நாகலெட்சுமி அவனுக்குப் பிடித்த எல்லாம் சொல்லி விடவே கம்மங்கூழுக்கு இணையாக மாங்காய் ஊறுகாய், மோர்மிளகாய் வற்றல், தக்காளித் தொக்கு, மீன் வறுவல், வெங்காயம் பச்சைமிளகாய் உப்புப் போட்டு தாளித்தது என்று வரிசைகட்டி நின்றது. கூடவே பச்சை சின்ன வெங்காயமும், வறுத்து அரைத்த பருப்புத்துவையல் சுடசுட சோறும் இருந்தது.
“எம்மாடியோவ் இதென்ன இத்தனை வகை?!” என்று அவன் மலைக்க
“ஹாஹாஹா… அழகுப் பொண்ணே!” என்று கன்னம் வழித்து கொஞ்சியவன்,”இதெல்லாம் தொட்டுக்கப் பிடிக்கும் தான், அதுக்காக எல்லாம் ஒரே நேரத்தில் இல்ல… ஒவ்வொரு தடவையும் ஒண்ணு தான் சரியா!” என்று சிரித்தபடி இரண்டு உருண்டைகளை கிண்ணத்தில் போட்டு அதில் தயிரை ஊற்றி உப்புப் போட்டு பிசைந்து கரைத்து மேலும் நீராகாரத்தை ஊற்றி கலந்து அதில் பச்சை வெங்காயத்தையும் அரிந்து போட்டு கலந்தான். அப்படியே கையை கழுவி விட்டு டம்ளரில் ஊற்றியவன், மடக்கென்று குடித்து விட்டு மீன் வறுவலைக் கிள்ளி வாயில் போட, ப்ரகல்யாவிற்கு நாக்கே ஊறிவிட்டது அவன் உண்ணும் அழகைக் கண்டு.
அவளுக்கும் மற்றொரு டம்ளரில் ஊற்றித்தர, தயக்கமாக ,”நான் இதெல்லாம் குடிச்சது இல்லையே!” என்றாள்.
“இப்போ பழகிக்கோ பொண்ணே,உடம்புக்கு ரொம்ப நல்லது. குளிர்ச்சி, உடம்புசூட்டை தணிச்சிடும். அரிசி சாதத்தை விட சத்தானது. ஒரு வாய் குடி நல்லா இருந்தா மொத்தமா குடி” என்று கொடுக்க தயங்கியபடியே வாங்கிக் குடித்தாள்.
“நல்லா இருக்கு” என்று தலையாட்ட,” கூடவே இதையும் சேர்த்து சாப்பிடேன்” என்றவன் அவள் சற்றும் எதிர்பாராமல் மீன் வறுவலை ஊட்டி விட்டிருந்தான்.
மதிய உணவை சிறப்பாய் முடித்து அசதியாய் மாமரநிழலில் கட்டிலைப் போட்டு படுத்தும் விட்டான்.
“நான் போகவா?” என்று இழுக்க” உட்கார் ப்ருஹா !”என்றான் அமைதியாக.
“யாராச்சும் வந்திடப் போறாங்க” பட்டென்று எழுந்து கொண்டாள்.
“அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க, வந்தாலும் கேட்டைத் திறந்து தான் வரணும். கேட் கிட்ட யாராவது வந்தா மணி சத்தம் குடுப்பான்” என்று அங்கே படுத்திருந்த நாயைக் காட்டினான்.
“சரி நான் இங்கேயே உட்கார்றேன்” என்றவளை விட்டால் தானே அவன்.
“எங்கே போ பார்க்கலாம்…!” விடாப்பிடியாக பிடித்திருந்தவனை பார்த்தவள், பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு,” இப்படி பிடிச்சிருந்தா எப்படி போறதாம்?” என கேட்க
“ஸ்ஸ்ஸ் ஆஆஆ ராட்சசி வலிக்குதுடி.” என மூக்கைத் தேய்த்துக் கொள்ள
“வாரிசு எல்லாம் வரும். அதுக்கு இடம் பொருள் இருக்கு. இங்கே கிடையாது. இப்படி இடக்கு பண்ணீங்க, கடிச்சு தான் வைப்பேன்.”என்றாள் ஒழுங்கு காட்டி
“முன்னவெல்லாம் மொத்தமா சேர்த்து பேச வாய் வராது. இப்போ அடிக்கிற வாயைப் பாரு ப்ரூஸ்லிக்கு.” என்றதும் நாணத்தில் அவள் தலைகுனிய,” மாங்கா வேணுமா வதனிமா?” நமட்டுச்சிரிப்புடன் கிண்டல் செய்தான் அவளை.
“அச்சோ! நீங்க போங்க” எழுந்து ஓட ,கட்டிலில் இருந்து எழுந்தவன் அவளைத் துரத்த மாந்தோப்பிற்கு அருகே இருந்த குடிசையில் மரகதநாயகியின் மகனும், மகளும் உதவிக்கு ஜன்னல் வழியே கைகாட்டிக் கொண்டிருந்தனர்.