மரகதநாயகி அடிபட்ட வேங்கையாய் உலாவிக் கொண்டிருந்தார்.
‘பிள்ளைகள் வரட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு’ என நினைத்திருந்த அதே வேளையில் மகிழன் மாந்தோப்பில் வதனியோடு இருந்தான்.
மரகதநாயகியின் மகனும், மகளும் உதவிக்காக கைகாட்ட சில நிமிடங்களில் கைகள் மீண்டும் உள்ளிழுக்கப்பட்டது.
மகிழன் புன்னகைத்தபடி வதனியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்.
“போய் ரெஸ்ட் எடு, இல்லாட்டி படி. நான் சாயங்காலம் வரேன்.” என்று வாசலில் அவளை இறக்கி விட்டவன், அப்படியே தோட்டத்திற்கு கிளம்பினான். வதனி பின்பக்கம் வழியாக மாடிக்குச் சென்று விட்டாள்.
சுமித்ரா அவன் செல்வதை பார்த்தபடி நின்றவர்,மாடிக்குச் சென்றார்.
“என்னம்மா பண்ற?” என கேட்டபடி வதனியிடம் செல்ல,” வாங்கத்தை. அது வயலுக்குப் போனேன். அவர் இப்ப தான் கொண்டு வந்து விட்டுட்டுப் போனார்” என்றாள்.
“ம்ம்ம் பார்த்தேன் மா. கீழே ஏன் மா வர்றதில்லை.? தம்பி போக வேண்டாம்னு சொல்லிடுச்சா?” என சங்கடத்துடன் கேட்க
“அது…. வேலை முடிச்ச பிறகு படிக்கிறதுக்காக நிறைய புத்தகம் வாங்கி கொடுத்திருக்கார், அதான் கீழ வர்றது இல்லங்கத்த “என்று சொல்ல.
“ஓ சரிம்மா, என்ற நேரம் கிடைக்கும்போது கீழ வந்துட்டு போம்மா” என்றவர் வேறு எதுவும் பேசிடவில்லை .
“நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?” என்று தயக்கத்துடன் வினவியவள் , சுமித்ராவின் முகம் பார்த்தாள்.
“கேளும்மா.” என்று குழப்பத்துடன் அவளைப் பார்க்க,
” அவர் ஏன் உங்கக் கூட இல்லாம தனியா இருக்கார்.?”என்று கேட்டதும் சுமித்ராவின் முகம் கலங்கியது போலத் தெரிந்தது வதனிக்கு.
“அ.. அவ.. அது ஒண்ணுமில்லைம்மா தம்பி எப்போதும் அவங்க தாத்தா பாட்டிக் கூடவே இருந்ததால் இங்கேயே இருந்தாச்சும்மா. நாங்களும் வெளியே தங்கி இருந்தோம்.” என்று சமாளித்து வைக்க, ப்ரகாவிற்கும் அவர் ஏதோ சொல்லி சமாளிப்பதாகத் தான் தோன்றியது. அதனால் அதற்கு மேல் வேறெதுவும் கேட்கவில்லை.
“தருணிக்கு கூட உடம்பு சரியில்லை மா, உன்னைப் பார்க்கணும்’னு சொல்லிட்டு இருந்தா. நேரம் கிடைக்கும் போது வாம்மா” என்றவர் கீழே செல்ல வதனியும் எழுந்து கொண்டாள்.
“இருங்கத்தை சாப்பிட்டு போகலாம் .”என்று கூற,” இல்லம்மா சாப்பிட்டு தான் வந்தேன் “என்று கிளம்பி விட்டார்.
மகிழன் ஆசிரமத்தில் இருந்த விஷயத்தை எல்லாம் அவள் சுமித்ராவினிடத்தில் கேட்க நினைக்கவில்லை. அவனது அந்தரங்கத்தை அடுத்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து
கொள்ள விருப்பமில்லை அவளுக்கு, அது அவனது அம்மாவாகவே இருந்தாலும் வேண்டாம் என விட்டுவிட்டாள்.
**********
“எங்களை ஏன்டா அடைச்சு வச்சிருக்கீங்க?” என கத்திக் கொண்டிருந்தான் மரகதநாயகியின் மகன்.
இருவரது கைக்கட்டும் அவிழ்த்து விடப்பட்டது.
“ரெண்டு பேரும் சத்தம் போடாம கார்ல ஏறிக் கிளம்புங்க” என ஒரு குரல் மட்டும் அவர்களுக்கு கேட்டது.
“யாருடா நீங்க எதுக்குடா கடத்துனீங்க?” என கத்திக் கொண்டிருக்கும் போதே பளாரென்று அறை விழுந்தது அவனுக்கு.
“இங்கிருந்து போற வரைக்கும் சத்தமே கேட்க கூடாது. கேட்டுச்சு இங்கருந்து என்னைக்கும் போக முடியாது” என்று எச்சரித்த அந்தக் குரல் யாருடையது என்று இருவரும் குழம்பிக் கொண்டனர்.
“டேய் எங்கம்மா யார் னு தெரியாம கடத்திட்டிங்க, நல்லா அனுபவிக்கப் போறீங்க .”என மீண்டும் துவங்க மறுபடியும் விழுந்தது அடி.
“ப்ப்ச் தெரிஞ்சு தான்டா கடத்தினோம். திரும்பி அடி வாங்க வேண்டாம்னா சத்தம் போடாம வா” என்று காரில் ஏற்றினர் அவர்களை.
அரை மணி நேரத்தில் எல்லாம் அவர்களிருவரும் வீட்டில் இறக்கி விடப்பட்டிருந்தனர்.
மரகதநாயகி வாசலிலேயே காத்திருந்தவர் மகனையும், மகளையும் அணைத்தபடி உள்ளே செல்ல
“மம்மி எங்களை கிட்னாப் பண்ணி இருந்தாங்க .”என்று கூற,மரகதநாயகி அமைதியாக,”எனக்குத் தெரியும்.” என்றவர்,” இதை பெரிசு பண்ணாத பிரபு. இனி இது போல நடக்காது.” என்று உறுதியளித்தார்.
“அப்போ கடத்தினது யார்னு உங்களுக்குத் தெரியும் அப்படித்தானே ?!”என ஸ்வீட்டி கோபமாய் கேட்க
“ஸ்வீட்டி, இதை விடுன்னா விட்டுடு.உங்களை கடத்தினவனை என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” என்றபடி அறைக்குள் செல்ல பிரபுவின் கைபேசி இசைத்தது.
“ஹை.. மகிழன் மச்சான் !”என அழைப்பை அவன் சந்தோஷமாக ஏற்க, மரகதநாயகி திகைப்பாய் அதைப் பார்த்தார்.
“அண்ணா பேசிட்டு என் கிட்ட குடுண்ணா. நான் பேசணும்.”என்றாள் ஸ்வீட்டி ஆர்வத்துடன்.
“ஹ்ம்ம் மச்சான். நல்லா இருக்கேன். “
“*******”
“இப்போ தான் ஜஸ்ட் நவ் , நீங்க எப்படி இருக்கீங்க…?:
“*******”
“நிஜமாவா மச்சான் ஹான்… சொல்லவே இல்லை பார்த்திங்களா… அக்காவை கூட்டிட்டு கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க” இடைவிடாது பேசியவன் இணைப்பைத் துண்டிக்க மரகதநாயகி கோபமாக பிரபுவைப் பார்த்தார்.
“நீ இன்னும் அவன் கூடப் பேசுறியா?” என்று எரிச்சல் மிகுந்த குரலில் கேட்க
“ஆமாம்மா. ஏன்… நானும் ,மச்சானும் வீக்லி ஒன்ஸ் பேசிப்போமே !”என்று இயல்பாய் கூற
அவரோ கோபத்துடன்,” இனிமே அவன் கிட்ட பேசக் கூடாது நீ.” என்று எச்சரித்தார்.
“ப்ம்ச் , ம்மா இதென்ன சின்னப்பிள்ளைத்தனமா பேசுறீங்க, அதுவுமில்லாம அவரைப் போய் அவன் இவன்னு “என்று பிரபு சொல்லி விட்டுச் செல்ல, ஸ்வீட்டி மகிழனுக்கு மறுபடியும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
“ம்மா ம்மா, மம்மி!” என்று அலறிடவும் தன் கனத்த உடம்பை தூக்கிக் கொண்டு ஓடி வர முடியாமல் மூச்சிரைக்க ஓடி வந்தார்.
“ஏன் டி அலருற ?”என்று எரிச்சலுடன் வரவே, அவள் அதற்கு மேல் எரிச்சலுடன் ,”மகிழன் மாமாக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்றாள் விழிகளை உருட்டி
“ஆமா ஏன் கேட்கிற…?”இப்போது இதற்கென்ன அவசியம் என்று தோன்றியது மரகதநாயகிக்கு.
“நீங்க எப்படி அவருக்கு கல்யாணம் ஆனதை சொல்லாம விடலாம்?, ஏன் சொல்லலை ?”என்று அழுத்தத்துடன் கேட்க
“ஏன் சொல்லலைன்னா என்ன அர்த்தம்? அவன் திடீர்னு மகேந்திரன் கல்யாணத்தன்னிக்கு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுல உனக்கு என்ன பிரச்சினை?” என்று பல்லைக் கடிக்க
“என்ன பிரச்சினையா…? மாமாவை நான் தானே கல்யாணம் பண்ணிக்கணும். என்னை விட்டுட்டு அவர் எப்படி வேறப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியும் ?”என்றாள் ஆத்திரத்தில்.
“என்ன நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டியா?” என்று திகைப்பாய் கேட்க
“இதென்ன கேள்வி அவர் எனக்கு மாமா. நான் ஆசைப்பட மாட்டேனா?” என்றவள், “வேணும்னே என் கிட்ட இதை மறைச்சிருக்கீங்க இல்ல. உங்களால என் மாமா எனக்கு இல்லை” என்றவள் மறந்தும் மகிழனைக் குற்றம் கூறவில்லை.
“ஏய் என்னடி !அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ அவனைத் தானே குத்தம் சொல்லணும், அதை விட்டுட்டு என்னைக் குத்தம் சொல்ற?” என்று எகிற
“அவர் கிட்ட என் பொண்ணை நீதான் கட்டிக்கணும்னு சொல்லி இருந்தா கண்டிப்பா மறுத்து பேசி இருக்க மாட்டார். ஆனா நீ சொல்லி இருக்க மாட்ட ,அதனால தான் அவர் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு” என கண்கலங்கி சொல்லி விட்டுச் செல்ல, மரகதநாயகி அமைதியாக அமர்ந்து விட்டார்.
‘நல்ல வேளை அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான், இல்லாட்டி அந்த அநாதைப்பய என் வீட்டு மாப்பிள்ளை ஆகி இருப்பான். சீக்கிரம் இவளுக்கு வேற மாப்ள பார்க்கணும்’ என நினைத்துக் கொண்டார்.
*********
தருணி அமைதியாக அமர்ந்திருக்க ,ப்ரகல்யா அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு,” என்னைப் பார்த்துட்டு ஏன் உட்கார்ந்து இருக்க, போ ப்ரகா உனக்கு கவனிக்க வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கும். போ” என்றாள் அலட்சியமாக.
“அக்கா நிஜமா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அத்தை சொல்லி தான் தெரியும் .”என்றாள் சங்கடமாக
“நீங்க தான் பெரிய ஆள் ஆகிட்டிங்க, இனிமேல் நான் எல்லாம் கண்ணுக்குத் தெரிவேனா?” என்று இன்னும் இன்னும் அவளைக் கெஞ்ச வைத்திட நினைக்க,
மகிழன் மாடியில் இருந்து ப்ரகாவை சத்தமாய் அழைக்க, அதன் பிறகு அவள் எங்கே தருணியிடம் கெஞ்ச.. சிட்டாய் பறந்திருந்தாள்.
ப்ரகாவின் செய்கையில் தருணிக்கு இன்னும் கோபம் தான் வந்தது.
‘அவ்வளவு திமிராடி உனக்கு என்னை மதிக்காம போற’ என்று அவசியமில்லாத கோபத்தை வளர்த்துக் கொள்ள, மகிழனோ அவளை மேலிருந்து முறைத்துப் பார்த்திருந்தான்.
அவன் பார்வைக்கு பொருள் சிலமணி நேரத்திலேயே விளங்கும் என்று அறியாமல், அவன் பார்த்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நகர்ந்திருந்தாள் தருணி.
சற்று நேரத்தில் வாசலுக்கு ஏதேச்சையாக வந்தவளை எதிர் கொண்டான் மகிழன். இதுவரையிலும் தருணியிடத்தில் அவன் பேசியதே இல்லை எனலாம்.
இன்றோ,” தருணிகா!” என மகிழன் அழைத்திட வியப்பாய் திரும்பினாள் தருணி.
“என்னையா கூப்டிங்க?!” என புருவம் சுருக்கி கேட்க
“உன் பேரு தானே தருணிகா ,காது உனக்கு கேட்கும் தானே, இல்லை அவுட் ஆகிடுச்சா?” என்று கேட்டவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“மா.. மா…!” என்று இழுக்க அவன் பார்வையில் கப்பென வாயை மூடிக் கொண்டாள்.
“உனக்கு உடம்பு சரியில்லேன்னா, உன் ஃபேமிலி’ல வந்து பார்க்கலைன்னா, அங்கே பேசு. என் ப்ருஹா கிட்ட கோவிச்சுக்கிறது, அவளை கெஞ்ச வைக்கிறது இதெல்லாம் வேண்டாம் இனி ஒரு தடவை இது போல பண்ண… அப்புறம் செய்யறதுக்கு நீ இந்த வீட்டில் இருக்க மாட்ட”என்று எச்சரித்து விட்டு செல்ல
“அவ என் சிஸ்டர்” என்று வேகமாய் சொல்ல
“ஸோ…?”என கைகட்டி இறுக்கமாக நின்றான்.
“அவகிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்று திமிராய் தருணி பதிலிறுக்க
“உரிமையா?” என்று எள்ளலாக வினவினான் அவன்.
“ஆமாம் அவ என்னோட சிஸ்டர் அந்த உரிமை எனக்கு இருக்குல்ல?” என்று இன்னுமே திமிருடன் நிற்க
“உரிமையா நடத்தினதால தான் இதுவரை நீ இங்க இருக்க , இல்லாட்டி… “என்றவன்,” சிஸ்டர் னா உரிமையா இரு பேசு அவளை அடிமையாய் நடத்த நினைச்ச… அதோடு நீ உன் லைஃபை மறந்திட வேண்டியது தான். மகிழன் கிட்ட வச்சுக்காத”என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
தருணி உள்ளுக்குள் புகைந்த ஆத்திரத்தில் நிற்க, மகேந்திரன் வந்து விட்டான்.
“அண்ணா… இன்னைக்கான லோட் எல்லாம் வந்திடுச்சாம், கேரளாவில் இருந்து டீலர் பேசினார்”என்றான்.
“ம்ம்ம் “என்று சொல்லும் போதே,” அவர் என்னைத் திட்டிட்டு இருக்கார்” என்றாள் கோபத்துடன்.
“அடுத்த தடவை அவர் திட்டுற அளவுக்கு வச்சுக்காதே” என்று முடித்து விட்டான் மகேந்திரன் .
மகிழன் ஏளனமாய் அவளைப் பார்த்து சிரிப்பது போலத் தோன்றியது அவளுக்கு.