மகேந்திரன் இயல்பாய் ,”என் அண்ணா தப்பு பண்ணினா மட்டும் தான் திட்டுவார்.”என்று உறுதியான குரலில் கூற தருணிக்கு அதிர்ச்சி தான்.
“மகேன் நான்…” என்றவளை,” உள்ளே போ தருணி நான் வரேன்” என்றான் அழுத்தமாக.
மகிழன் அவர்கள் பேசத் துவங்கும் முன்பே தருணியை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
மகிழனின் தேவை எல்லாம் தன் மனைவி எங்கேயும் அடிமையாகவோ பிறர் கட்டளைக்குக் கட்டுப்பட்டவளாகவோ இருக்கக் கூடாது அவ்வளவு தான்.
******
தருணிக்கு மகேந்திரன் செயலை ஏற்கவே முடியவில்லை. எப்படி அவன் தனக்கு ஆதரவாக பேசாமல் இருக்கலாம் என எண்ணிக் கோபம் கொண்டாள். அந்தக் கோபம் எல்லாம் வதனியிடம் தான் பாய நேரம் பார்த்துக் காத்திருந்தது.
ஸ்வீட்டி நேரே சுமித்ராவின் வீட்டிற்கு வந்து விட்டாள்.
“ஹாய் ஆண்ட்டி!” என்று வந்தவளை முகம் மலர வரவேற்ற சுமித்ரா,” எப்போடா வந்த… அம்மா சொல்லவே இல்லை.” என அரவணைத்துக் கொள்ள
“நீங்க கூட தான் உங்கப் பசங்களுக்கு மேரேஜ் ஆனதை எங்ககிட்ட சொல்லலை. இங்கேயே வந்துட்டீங்களா இனி மகி மாமா கூட தான், ஜாலி இல்ல” என்று செல்லங் கொஞ்சினாள்.
தருணிகா அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஸ்வீட்டியைப் பார்த்து கேள்வியாக புருவம் சுருக்க, அவளோ இயல்பாக,” இவங்க தான் மகேன் மாமா வொய்ஃபா , ஆண்ட்டி மகிழ் மாமா வொய்ஃப் எங்கே ?”என்று வினவியவள்,” ஹாய் நான் ஸ்வீட்டி மகேன் மாமாவோட அத்தைப் பொண்ணு.” என அறிமுகம் செய்து கொண்டாள்.
பின் அவளே தருணியின் பதிலை எதிர்பாராமல் சுமித்ராவிடம்”மகிழ் மாமா எங்க ஆண்ட்டி…?” என ஆவலுடன் கேட்டபடி தேடினாள்.
தருணிக்கு யோசனையில் முகம் சுருங்கியது. சில நிமிட யோசனைக்குப் பின்னர்,” ஹாய் ஸ்வீட்டி நான் தருணிகா” என தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“நீங்க பேசிட்டு இருங்க நான் காஃபி கொண்டு வர்றேன்.” என சுமித்ரா எழ பேச்சிற்காக கூட தருணி தான் கொண்டு வருகிறேன் என்று கூறவில்லை.
“ஏன் ஆண்ட்டி நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கிறீங்க, உட்காருங்க. ஐ வில் மேக் எ காஃபி “என்று இயல்பாய் சமையலறை புகுந்தாள் ஸ்வீட்டி.
“இவ எப்போதும் இப்படித் தானா அத்தை. அதென்ன அடுத்தவங்க கிச்சன்ல சங்கடமே இல்லாம நுழையறது “என்று தருணி கேட்டு விட சுமித்ரா சற்று சினத்துடன்,”அவ இந்த வீட்டுப் பேத்தி, இந்த வீட்டுப் பொண்ணான மரகதநாயகியோட வாரிசு தருணி. அவளுக்கு இல்லாத உரிமை இங்க எனக்கு கூட கிடையாது. லீவ்ல எல்லாம் என் கூட தான் இருப்பா. என் கிட்ட அவளுக்கு எந்த வித சங்கடமும் கிடையாது. சொல்லப் போனா நம்ம வீட்டில் ஒருத்தி. மகேனுக்கு இவளைத் தான் பேசி முடிக்கிறதா இருந்தது. மகிழன் தம்பி சொன்னதால தான் உன்னை பெண் கேட்டோம் “என்றவர்,” நான் காஃபி போட்டுட்டு வரேன்னு சொன்னதும், இல்ல அத்தை நான் போடுறேன்னு நீ எழுந்து போயிருந்தா… அவ கிச்சன் போயிருக்க மாட்டா தருணி. நம்ம பெரிய வீட்டு மருமகள்ன்ற அதிகாரத்தை நம்ம கிட்ட வேலை செய்றவங்க கிட்ட அன்பா வேலை வாங்கறதுல காட்டணும். விருந்தாளி கிட்ட இல்லை. இல்லாட்டி இப்படி தான் நடக்கும்” என்று சமையலறைக்குள் புகுந்தார்.
‘இதென்னடா இது?’ என்றானது தருணிக்கு. தன்னைப் பெரிய வீட்டில் இருந்து பெண் கேட்கிறார்கள் என்றதும் அவளது அழகிலும், படிப்பிலும் ஒரு வித கர்வம் கொண்டாள் தருணிகா. பெரிய வீடு எனும் போது தான் சொகுசாய் வாழப் போவதாக நினைத்திருந்தாள். இப்படி காஃபி போட கூட தான் செல்ல வேண்டும் என்பது அபத்தமாய் தோன்றியது அவளுக்கு. ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை அவள். வீடு வளமையானதோ, இல்லையோ விருந்தோம்பல் என்று வரும் போது வந்தவர்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் தான் உபசரிக்க வேண்டும் என்று.
இவள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க, ஸ்வீட்டி காஃபி கலந்து சுமித்ராவிற்கு தந்து விட்டு,”அத்தை நான் போய் மகிழ் மாமா வொஃய்பை பார்த்துட்டு வரேன். அவங்க எந்த ரூமில் இருக்காங்க?” என்றதும் சுமித்ரா மாடியை கைகாட்ட
“தனியாவா அத்தை ?!”என்று விழி விரித்தவள்,”நான் போய் பார்த்துட்டு வரேன்” என சுமித்ரா பதில் கூறும் முன்பே படியில் ஏறி இருந்தாள்.
அங்கே மகிழன் ப்ரகல்யாவை பின்னிருந்து அணைத்தபடி நின்றிருந்தான்.
“இங்கே யார் வர்றா…?வந்தாலும் மகிழன் பொண்டாட்டிக் கூட ரொமான்ஸ் பண்றான்னு திரும்பி போயிடுவாங்க” இறுக அவளைப் பிடித்துக் கொள்ள ஸ்வீட்டி தடதடக்கும் மனதோடு கீழிறங்க,சத்தம் கேட்டு வருவது போல வந்தான் மகிழன்.
“ஹேய் ஸ்வீகா வா வா ஏன் வந்துட்டு உடனே போற ?”என்று சத்தமாய் அழைக்க,” இல்ல மாமா “என்று அசடு வழிந்தவள் மீண்டுமாய் படியில் ஏறினாள்.
“ப்ருஹா ஒரு காஃபி டா நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க” என குரல் கொடுக்க, சில நிமிடங்களில் காஃபியோடு வந்தாள் ப்ரகா.
முகம் மலர அவளை வரவேற்று விட்டு மகிழனின் முகம் பார்க்க
அவனோ புன்னகையுடன்,” இது ஸ்வீகா… ம்ம்ம் “என்றவன் நொடிகள் தயங்க,
ஸ்வீட்டியே,” நான் இவங்க அத்தை மரகதநாயகியோட பொண்ணு” என்றாள்.
“போதுமா நானே இன்ட்ரோ தந்துட்டேன். ஆனாலும் நீங்க பிடிவாதம் மாமா “என்ற ஸ்வீட்டி ,”இவர் என்னைத் தான் கட்டிப்பார்னு நினைச்சேன்.” என்றாள் மனதை மறைக்காமல்.
ப்ரகா புன்சிரிப்புடன்,” நீங்க அவர் மேரேஜுக்கு வந்திருக்கலாம் “என்றிட மகிழன் அவளை முறைத்தான் .
“இப்படி சொன்ன உன்னை என்ன செய்யலாம். ம்ம்ம் சொன்ன வாய்க்கு ஏதாவது பனிஷ்மென்ட் தரணுமே, என்ன தரலாம்?” என்று சிந்திக்கும் பாவனையுடன் அவள் இதழ்களை ரசனையுடன் பார்த்து மீள ,அதன் பிறகு நடந்தது அவளறியாததா என்ன…
மகிழ்வான தருணங்கள் தான் அடுத்து அடுத்து வந்ததெல்லாம். அழகாய்
சென்றது அவன் வாழ்வு ப்ரகல்யாவுடன்.
“ப்ருஹா உன் துணைக்கு நாகலெட்சுமி வருவாங்க. நான் இன்னும் இரண்டு நாளில் வந்திடுவேன் சரியா…?கரெக்டா சாப்பிடணும்.ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடு, நாகலெட்சுமி சமைப்பாங்க நீ எதுவும் செய்ய வேண்டாம். அவசியம்னா மட்டும் கீழே போ இல்லாட்டா வேண்டாம்.. ம்ம்ம் வேறென்ன?” என்று கூறியவன் மேலும் யோசித்திட
“இல்லடா இம்பார்ட்டன்ட் வொர்க். வெளியே தான் சுத்தணும் ,உன்னையும் அழைச்சுட்டு சுத்தறது, அது இம்பாசிபிள். இன்னொரு தடவை கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன் ஓகே ” அவள் நெற்றியில் முத்தமிட்டு தயாராக எழுந்து சென்றான்.
திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. இதுவரை அவளைத் தனியே விடவே இல்லை மகிழன். தன் பெரியப்பா வீட்டிற்கு கூட செல்லவில்லை ப்ரகா. அவர்கள் நினைவே வராதபடி தான் கவனித்துக் கொண்டான் மகிழன்.
மகிழனை அனுப்பி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை ப்ரகாவிற்கு இருப்பேக் கொள்ளவில்லை. வீடு வெறுமையாக பயமுறுத்தியது அவளை.
‘ப்ப்ச் பெரியப்பா வீட்டுக்காவது போயிருக்கலாமோ…?அவர் கிட்ட கேட்காம எப்படி போறது?’ என்று சிந்திக்க மூச்சு முட்டுவது போலிருந்தது அவளுக்கு.
தருணி அங்கே வந்தாள்.
“என்ன செய்யிற ப்ரகா. போர் அடிக்குதா?” என்று கேட்க
“ஆமாம் தருணிக்கா… அதான் ஏதாவது படிக்கலாம்’னு எடுத்து வச்சேன்” என்றாள் வதனி.
“உனக்கு போர் அடிக்காத மாதிரி ஒரு விஷயம் சொல்லவா?” என்று பீடிகையாய் அவள் கேட்க வதனி ஆர்வமானாள்.
“என்னக்கா அது. சொல்லுங்களேன்” என்றவள் ,”அதுக்கு முன்னாடி டீ குடிக்கலாம்” என்று எழுந்தவள் சமையலறை நோக்கிச் சென்றாள்.
தேநீர் அருந்தியபின் தருணி சொல்ல சொல்ல வதனியின் முகம் மாறியது. இறுகிப் போனாள் தன்னுள்.
“இந்தா கப்பை கழுவி வை” என்று நீட்டிய தருணி வெற்றிப் புன்னகையுடன் வெளியேறினாள்.
மகிழன் இரண்டு நாட்கள் கழித்து ஊருக்கு வந்தான்.
வந்ததும் வராததுமாக அவனிடம் கேள்வியைக் கேட்கத் துவங்கி இருந்தாள்.