“இப்ப என்னப்பா செய்ய முடியும்? நம்மள தான் இந்த கேஸ் முடியற வரைக்கும் எதையுமே செய்ய கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே. இல்லைன்னா கூட தட்டி வைக்கலாம்…” நல்லதம்பி யோசிக்க,
“இவனை தட்டி எல்லாம் வைக்க கூடாதுடா தம்பி. மறைமுகமா என்கிட்டையே போட்டு பார்க்கானே? இவனை பெருசா கவனிக்கனும்….. (Klonopin) ”
“என்னப்பா சொல்றீங்க?…”
“ஆமாப்பா, நாம அந்த சனியனுக்கு விஷம் குடுத்ததை சொல்லி காமிக்கிறான். கிட்டத்தட்ட அதை ஞாபகப்படுத்தி மிரட்டி பார்க்கான். எவ்வளவு துணிச்சல் இருக்கனும்? இருக்கட்டும்….” என தன் விரலில் நெட்டி முறித்தார் கோபமாக.
“நேத்து இங்க வந்தப்போ கூட பேச்சும் ரொம்ப திமிரா தெனாவெட்டா இருந்துச்சு. அடுத்த வாரத்துக்குள்ள பணம் குடுக்கனும்னு கட் அன்ட் ரைட்டா நெஞ்சை நிமிர்த்தி சொல்லிட்டு போறான்…”
“இவன் ஒருபக்கம், அந்த போலீஸ்க்காரன் ஒருபக்கம். ச்சை. குடைச்சல் குடுக்கானுங்க. அவ செத்தன்னைக்கு அந்த மெட்ராஸ்க்காரன் வந்து சண்டைக்கு நிக்கும் போதே திரும்ப அவன் ஊர் போய் சேரவிடாம முடிச்சிருக்கனும். இங்கயே அந்த கேஸும் முடிஞ்சிருக்கும்…”
“விடுங்கப்பா, இப்ப மட்டும் என்ன பண்ண முடியும்?…” என்ற நல்லதம்பி,
“நானும் கவனிச்சேன். அதான் நேத்து நைட்டு சாப்பிடும் போது பேச்சுவாக்குல இதுல நம்மளை யாரையாச்சும் உள்ள புடிச்சு போட்டா குடும்பத்தோட தற்கொலை தான் பண்ணிக்கனும்னு சொல்லியிருக்கேன். உன் பிள்ளைகளை பயந்து பார்த்தா. அது போதும். இனி அடங்கி கிடப்பா…” என்றார் சுடலைமுத்து.
“சென்னை போக இன்னும் ஒருவாரம் இருக்கு. நம்ம வீட்டுக்கு ஏசி சரி பன்றவனை எல்லாம் போய் விசாரிச்சிருக்கான் அந்த போலீஸ். அதுல அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்ல….” இறுமாப்பாய் அசிங்கமான ஒரு சிரிப்பு நல்லதம்பி முகத்தில்.
“அவன் போனதடவையே மண்ணை கவ்விட்டான்டா தம்பி. என்ன செய்ய முடியும்?…”
“அதான்ப்பா, திரும்ப அந்த அக்கக்கா கிடக்கற எலும்பை வச்சு என்ன செய்வான்? அந்த பரிதி மொத்தமா தோத்துட்டு போறதை பார்க்கனும் நான். நம்ம வீட்டு புள்ளையவே மயக்கி கல்யாணம் பண்ணி இத்தனை வருஷம் மறைச்சு வச்சிருந்தானே?…” நல்லதம்பி கொந்தளித்தான்.
“அவனை சொல்லி என்னடா செய்ய? நம்ம வீட்டு கழுதைக்கு புத்தி புல்லு மேய போச்சா? கூட போன உன்னையே ஏமாத்திட்டு ஓடிருக்காளே? எவ்வளவு துணிச்சலா பேசினா அன்னைக்கு நைட். என்னை சாகடிச்சா கூட சந்தோசம் தான். என்னோட வாழ்க்கையை நான் நல்லவிதமா வாழ்ந்துட்டேன். அது போதும்ன்னு சொன்னாளே…” என்ற சுடலை,
“என்னால அதத்தான்டா தாங்க முடியலை. ஓடினவள அன்னைக்கே புடிச்சு இழுத்துட்டு வந்துருக்கனும். தேடமுடியாத தேசத்துக்கு போயிட்டு எவ்வளவு பேச்சு என்கிட்டையே?….” என்றார்.
சுடலைமுத்துவின் கண்கள் முழுவதும் கொலைவெறி. அவருக்கு குறையாமல் நல்லதம்பிக்குள் இன்னும் குறையாத பழிவெறி.
சில நிமிடங்கள் அன்றைய இரவையும், அஜிதாவின் துணிவான பேச்சுக்களையும், கொஞ்சமும் கண்ணில் அச்சமில்லாமல், சாக போகிறோம் என்னும் பயமில்லாமல் தங்களை இகழ்ந்ததையும் எண்ணி பார்த்து எரிமலையானார்கள்.
“அண்ணே இன்னும் புறப்படலையா?….” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் செல்வபாண்டி.
“இதோ வரேன் பாண்டி. டாக்டர் போன் போட்டிருந்தார். அதை பத்தி தான் தம்பிகிட்ட பேசிட்டு இருக்கேன்….” என்றார்.
“வேற எதுக்கு? அவருக்கும் சம்மன் போயிருக்கும். அதுமில்லாம அந்த ஏசிபி வேற போய் விசாரணை செஞ்சிருப்பான் போல? அதை சொல்லவும் தான் பேசினார்…” என்றார் சுடலைமுத்து.
மூவருமாக கிளம்பி செல்ல அன்று இரவு பணி முடிந்து மறுநாள் அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த மீராவை நடுவீதியில் வைத்து சந்தித்தான் நெடுஞ்செழியன்.
—————————————-
கோபிநாத்திடம் சில பொறுப்புகளை ஒப்படைத்த நெடுஞ்செழியன் சென்னை கிளம்பி இருந்தான்.
நமச்சிவாயத்தை பார்த்துவிட்டு வந்த அன்றே வழக்கறிஞர் கார்த்திகேயனை தொடர்புகொண்டவன்,
“எனக்கு ஒரு உதவி செய்யனுமே லாயர் ஸார்…” என கேட்க,
“கண்டிப்பா செய்யறேன்….” என்றார் கார்த்திகேயனும்.
“இங்க அஜிதாவோட போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு அந்த அஜிதாவோட எலும்புகளை பரிதிக்கிட்ட தானே ஒப்படைச்சாங்க….” நெடுஞ்செழியன் கேட்க,
“ஆமா ஸார், கணவனுக்கு பிறகு தான் பெத்தவங்களுக்கு உரிமை. அவர் அனுமதி இல்லாமல் சடங்கு செஞ்சதே தப்புன்னு சொல்லி வாதாடினதும் நீதிபதியும் அஜிதாவை பரிதிகிட்ட ஒப்படைச்சுட்டாங்க. அவங்க முறைப்படி அதுக்கப்பறம் சடங்கு செஞ்சாங்க….” என்றவர்,
“எலும்புகள்ன்னு சொல்லாம அஜிதான்னு சொல்றேன்னு நினைக்கவேண்டாம். அது பரிதியோட விருப்பம். எந்த சூழ்நிலையிலையும் அஜிதாவா தான் அதையும் அவர் பார்க்கறார்…” என கூறினார் கார்த்திகேயன்.
“ரொம்ப நல்லது. நான் நாளைக்கு ஒரு வேலையை முடிச்சிட்டு அங்க கிளம்பி வரேன்…” என்று விஷயத்தை விவரித்தவன்,
“பரிதிகிட்ட நான் நேர்ல பேசிக்கறேன். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நமக்கு உதவியா இருப்பார்…” என்றான்.
“உங்களை எப்படி பாராட்டன்னு தெரியலை ஸார். வேற யாரும் இதை செய்வாங்களான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியலை. ஆனா இந்த விஷயம் வெளில வந்தா உங்க வேலைக்கு பங்கம் வரலாம்…” என்றார்.
“அதை நான் பார்த்துக்கறேன். உண்மையை நிரூபிக்கவும் கூட நமக்கு சூழ்நிலை வேறு மாதிரி பாதையை தான் தேர்ந்தெடுக்க வைக்குது. குறிக்கோள் நல்லதுக்கு தானே? என் வேலையை சரியா செய்யனுமே?..” என்றான் நெடுஞ்செழியன்.
“ஓகே ஸார், நீங்க வாங்க. நாம நேர்ல மத்ததை பேசலாம். அதுக்குள்ள நான் மத்ததை ஏற்பாடு செய்யறேன்…” என சொல்லி வைத்துவிட்டார் கார்த்திகேயன்.
நெடுஞ்செழியன் சென்னை கிளம்பும் முன் குமரகுருவிடம் மீண்டும் விசாரணை செய்ய அவன் எதற்கும் பிடிகொடுக்கவில்லை.
என்னவும் செய்துகொள் என்பதை போல அமர்ந்திருக்க கோபிநாத் இன்னுமே கோபமானான்.
“எல்லாம் செஞ்சுட்டு எவ்வளோ திண்ணக்கம் பார்த்தீங்களா ஸார்?….” என கேட்க,
“எல்லாம் சீக்கிரம் அடங்கிடும் கோபிநாத். நான் சொன்னதை மறக்காம செய்ங்க. குமரகுரு ஒயின்ஷாப்க்கு எங்க இருந்து சரக்கு வருது? அங்க சப்ளை பன்ற மத்த ஆட்கள் யார்ன்னு விசாரிச்சோமே? அதுல அந்த சோடா சப்ளையரை புடிங்க. நான் வரதுக்குள்ள அவன்கிட்ட இருந்து நீங்க விஷயத்தை வாங்கி இருக்கனும்….”
“உண்மையை சொல்லுவானா அந்த ஆள்?….” கோபிநாத் சந்தேகமாக கேட்கவும்,
“சொல்லித்தான் ஆகனும். தேர்ட் டிகிரி ட்ரீட்மென்ட் எடுங்க. அவனை நைய புடைச்சா வசத்துக்கு வருவான். அவன் தான ஸ்கூல் பசங்களுக்கு பன்னீர் சோடா, கலர் சோடா சப்ளையர்…”
“ஆமா ஸார் அவனே தான்….”
“ரெண்டுபேரோட பணப்பரிவர்த்தனை ரொம்ப அதிகம் கோபிநாத். அங்க குமரகுரு சிக்கினா கொத்தா மாட்டுவான். ஜென்மத்துக்கும் வெளில வரமுடியாது…” என்று சொல்ல,
“கண்டிப்பா நீங்க வரதுக்குள்ள ஆக்ஷன் எடுத்திடறேன் ஸார்…” என கிளம்பி நின்று சல்யூட் அடித்த கோபிநாத்,
“ஆமா கோபிநாத். வேலை இருக்கு…” நெடுஞ்செழியன் பிடிகொடுக்காமல் பேச,
“இல்லை ஸார், இங்கயே நிறைய இருக்கே? இன்னும் ஒருவாரத்துல அஜிதா கேஸ்ல அடுத்த ஹியரிங்…”
“எனக்கும் ஞாபகமிருக்கு கோபிநாத்…” என சொல்லிவிட்டு நிமிர்ந்தவன்,
“நான் எதுக்கு போறேன்னு உங்களுக்கு தெரியனுமா?…” என கேட்க கோபிநாத் என்ன சொல்வது என தெரியாமல் பார்த்தான்.
“பொண்ணு பார்க்க போறேன்…” என்று முறுவலித்தவன்,
“தப்பாவே கேட்டாலும் தெளிவா சத்தமா கேளுங்க. பதில் சொல்லவேண்டிய அவசியம் இருந்தா கண்டிப்பா சொல்லுவேன். இல்லைன்னா இல்லை தான்…” இன்னும் இளநகை குறையாமல் நெடுஞ்செழியன் சொல்ல,
“ஓகே ஸார்…” என்று வணக்கம் வைத்து கோபிநாத் கிளம்பிவிட்டான்.
நெடுஞ்செழியன் சென்னைக்கு கிளம்பிய அன்று நமச்சிவாயத்திடம் நல்லதம்பி பணத்தை ஒப்படைத்தான்.
“இதுக்கு மேல கேட்கமாட்டீங்கன்னு நம்பறோம் நமச்சி…” பணம் கொடுக்கும் பொழுதே எச்சரிக்கையுடன் நல்லதம்பி தர,
“இன்னொருதடவை இந்த கேஸ் கோர்ட்டுக்கு வராம இருந்தா நீங்க சொல்றதுக்கு சரி…” என நக்கலாக சொல்லிவிட்டு பல்லை காட்டிக்கொண்டு பணத்தை எண்ணினார் நமச்சிவாயம்.
“ஆசைக்கும் ஒரு அளவிருக்கு. அனுபவிக்க ஆள் இருக்கனும்…” என சொல்லி நல்லதம்பி கிளம்பிவிட்டான்.
அவன் செல்லவும் பணத்தை பத்திரமாய் வைத்தவருக்கு நல்லதம்பியின் எண்ணம் புரியாமலில்லை.
“எனக்கு பயமா இருக்குங்க. இதெல்லாம் நமக்கு தேவையா?….” என அவரின் மனைவி பயத்துடன் பார்த்தார்.
“அவனுங்க மேல எனக்கு மட்டும் பயமில்லையா சரோஜா? நாம பயந்தோம்னு தெரிஞ்சா தலைல ஏறிடுவானுங்க. ஆனா அவனுங்க குடுமி நம்ம கையில இருக்கு. ஏதாவது மிரட்டினா அதை வெளில கொண்டுவருவேன்…”
“எதை சொல்றீங்க? அந்த ஒரிஜினல் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டையா?…” என அவரின் மனைவி சரோஜா கேட்க,
“அதை மட்டும் வச்சா நான் இவ்வளவு துணிச்சலா இறங்குவேன்? அதைவிட பெரிய விஷயம். அந்த ஏசிபி ரவிசந்திரன் எல்லாரும் சேர்ந்து இருக்கும் போது அவங்க அந்த பொண்ணை என்ன பண்ணினாங்க, அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உண்மையை சொன்ன அந்த வாக்குமூலம் வீடியோவாவே என்கிட்ட இருக்கு….”
நமச்சிவாயம் சொல்லவும் இதை எதிர்பார்க்கவே இல்லை அவரின் மனைவி. பயத்துடன் அவர் பார்க்க,
“இவங்களாம் பெரிய ஆளுங்க. கொலைக்கு அஞ்சாதவங்க. செய்யுறது தான் சாப்பாட்டு தொழில். ஆனா அதுக்கு பின்னால எவ்வளோ வேலை பார்க்கறாங்க. அதான் நம்மோட பாதுகாப்புக்கு இதை எடுத்து வச்சிருந்தேன்…”
“இது அவங்களுக்கு தெரிஞ்சா…”
“என்னை ஏதாவது செய்யனும்னு வந்தா மட்டும் தான் தெரியும். இல்லைன்னா நம்மோடவே முடிஞ்சிரும். நீ பயப்படாத….”
“ஆனா அந்த கேஸ், இறந்த அந்த பொண்ணும் பாவம் தானே?…”
“பாவம் பார்த்தா நம்ம எப்படி வாழ? வாங்கின காசுக்கு நியாயமா நான் நடப்பேன்…”
“இன்னொரு டாக்டரை வச்சு திரும்ப போஸ்ட்மார்ட்டம் பண்ணினா? அப்போ உங்களுக்கு பிரச்சனை தானே?….”
“பிரச்சனை தான். ஆனா இந்த புது ஏசிபியை விட இவனுங்க மோசமானவங்க. ரவிசந்திரன் ஸார் வேற கூட இருக்கார். இந்த கேஸ்ல திரும்ப அறிக்கை கேட்டாலும் அவங்களையும் விலைக்கு வாங்கக்கூடியவனுங்க. அது பணத்துக்கோ, இல்லை உயிர் பயத்துக்கோ…” என்றார்.
“சரி இனி இதை பத்தி நீ மூச்சுவிடக்கூடாது. பேசாம இரு. என்னையும் சேர்த்து பயம் காட்டிட்டு இருக்காம….” என்றவர் உறக்கத்திலும் நிம்மதி இல்லை.
அந்த பணத்தை எப்படி பத்திரப்படுத்துவது என்பதில் தான் சிந்தனையுடன் இருந்தார் நமச்சிவாயம்.