அஜிதா சம்பந்தபட்டதன்றி மகன் இப்படி செய்வதறியாமல் தவிக்கும் காரணம் வேறு எதுவும் இல்லையே.
தன்னுடன் வந்த தாயிடம் தானாக பேச வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவன் அவரின் பார்வையில் கரைந்துகொண்டிருந்தான்.
“நான் எதுவும் கேட்கலை பரிதி. உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத. உனக்கு சொல்லவேண்டாமேன்னு இருந்தா தானா தெரியும் போது தெரியட்டும்…” என்றார் சுந்தரவல்லி.
காரை நிறுத்தியவன் ஸ்டியரிங்கில் முகத்தை புதைத்துவிட்டான். அவன் உடலின் அசைவில் சுந்தரவல்லியின் உள்ளம் துடித்து போனது.
“இந்த கேஸ் எதுவும் வேண்டாம் பரிதி. அம்மா சொல்றதை கேளுப்பா. நாம திரும்ப யுஎஸ் போயிருவோமே?…” என கண்ணீருடன் கேட்டுவிட பரிதி நிமிர்ந்தான்.
“இப்படியே பாதியில விட்டுட்டு நான் போனா நான் செத்ததுக்கு சமம் ம்மா. அவனுங்களுக்கு தண்டனை கிடைக்காம நான் போறதா? அஜியே என்னை மன்னிக்கமாட்டா….” என்று தீர்க்கமாக சொல்ல,
“இந்த தைரியத்தை நீ தளரவிடக்கூடாது. நீ நொறுங்கி போனா அடுத்தமுறை நான் உன்னை கேட்டுட்டு இருக்கமாட்டேன். புரியுதா?….” என்றார் அவர். (exitonetaproom.com)
தாயின் கண்களில் நீர் கோர்த்திருந்தாலும் பார்வையின் தீட்சண்யம் பரிதியை சுட்டு பார்த்தது.
“இனி கலங்கமாட்டேன்ம்மா…” என்று சொல்லிவிட்டான்.
ஆனாலும் விஷயம் தெரியும் அன்று சுந்தரவல்லி என்னாவாரோ? தன் மகளின் கேள்விகள் எப்படி இருக்குமோ? என எண்ணியபடி அஞ்சலியின் பள்ளிக்கு வந்தான்.
மகளுக்கு இப்போது கூடுதலாக ஒருமணி நேரம் கேரம் விளையாட பயிற்சிகள் நடந்துகொண்டு இருந்தது.
செல்லவேமாட்டேன் என்ற பெண்ணை அஜிதாவின் பெயரை சொல்லி மீண்டும் உருவாக்கி இருந்தான்.
தான் சென்றதனால் தான் தாயுடன் செல்ல முடியாமல் போய் இப்போது தாயே இல்லாமல் இருப்பதாக சில நாட்கள் கேரம் விளையாட்டையே வெறுத்தாள் அஞ்சலி.
அஜிதாவின் ஆசை என்று சொல்லி மகளை மீண்டும் தாயின் இழப்பில் இருந்து மீட்டு கொண்டுவந்திருந்தவன் மட்டும் மீளவில்லை.
தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடிகளும் அஜிதாவிடமே சென்று நிற்க பரிதியும் மீள விரும்பவில்லை.
இந்த நினைவுகள் தான் அவனை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அவளுடனான வாழ்க்கையின் மிச்சங்களில் தான் அவனும் இயங்கிக்கொண்டு இருக்கிறான்.
அன்றைய நாளின் தாக்கம் அவனை மனம் பிரள செய்யாததே பெரும் புண்ணியம் என நினைத்துக்கொண்டான்.
“டாடி…” என்று ஓடி வரும் மகளின் வாழ்க்கை மொத்தத்திற்கும் இனி தான் மட்டுமே என்றவன் மனதும் இப்போதும் ஆர்ப்பரிப்பை அடக்கி இருந்தது.
மனதின் கனல் உள்ளே கொதித்துக்கொண்டிருந்தாலும் வெடித்து சிதறினால் தன் குடும்பமும் சேர்ந்து பாதிக்குமே என துக்கத்தை விழுங்கினான்.
வீட்டிற்கு சென்றால் மீண்டும் அறைக்குள் முடங்கினால் என எண்ணியவனுக்கு அப்போதைக்கு மனதை திசைதிருப்ப வேண்டிய அவசியம்.
“வேற எங்கையாவது போகலாமா?….” என தாயையும், மகளையும் பார்த்து கேட்டான்.
“உன் இஷ்டம் பரிதி….” என்றார் சுந்தரவல்லி.
“உங்க இஷ்டம்ப்பா….” என்றாள் அஞ்சலியும்.
இருவரின் ஒருமித்த கருத்தும் தன்னுடைய விருப்பமாக இருக்க நீண்ட நெடுஞ்சாலையில் சங்கமித்தான் வாகனத்துடன்.
—————————————————
“என்ன வக்கீல் நீ? இதுக்கா காசை கொட்டி குடுத்தேன்? வாதாட தெரியுதா உனக்கு? இப்ப என் பொண்ணு வாழ்க்கையே போயிரும் போல? திரும்பவும் அவன் கூட்டிட்டு போய்ட்டான்….” என சுடலைமுத்து நடுவீட்டில் நிற்க முடியாமல் அலைபாய்ந்தார்.
தேவகி ஒருபுறம் கண்ணீருடன் ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்க மகளை சமாதானம் செய்ய முயன்றார் பேச்சியம்மாள்.
அழைப்பு சென்றதே தவிர ஏற்கப்படவில்லை. செல்வபாண்டி யாரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமர்ந்திருந்தார்.
நல்லதம்பியின் மனைவி தேவகியின் பிள்ளையை வைத்துக்கொண்டு தன் பிள்ளையோடு மூலையில் அமர்ந்திருந்தாள்.
“என்னோட மாமனார் என்னை எவ்வளவு பேசிட்டார் தெரியுமா? இதுதான் உங்க வீட்டுல பார்த்துக்கற லட்சணமான்னு கேட்கறார். இதுக்கா நான் பார்த்துக்கறேன்னு உங்கப்பா மார் தட்டினாருன்னு பேசறார். என்னப்பா செய்ய போறீங்க?….” என வெளியே வீதிக்கு கேட்கும்படி அழுது கூட்டினாள்.
“பார்த்துப்போம் தேவகி. அழாதம்மா….” என்ற பேச்சியம்மாள்,
“ஒன்னுக்கு மூணு ஆம்பளைங்க இந்த வீட்டுல இருக்கீங்க? என் மகளை இப்படி கண்ணீர் சிந்த வைக்கவா? என்னைக்கு அந்த சண்டாளி இந்த வீட்டு படியேறி வந்தாளோ அன்னைக்கே என் குடும்ப நிம்மதி எல்லாம் போச்சே…”
நாச்சியாரையும், மீராவையும் பார்த்துக்கொண்டே பேச்சியம்மாள் இதனை பேச நாச்சியார் கண்ணீர் சிந்தினார்.
ஏற்கனவே மகளை பறிகொடுத்துவிட்டு உடல்நலனும் சரியில்லாமல் இருக்க மருமகனின் வழக்கு வேறு இதில். இப்போது இல்லாத மகளையும் கரித்து கொட்டுகின்றனரே என பார்த்தார்.
குமரகுரு அவனின் மதுபானக்கடையில் போதை மருந்து விற்ற குற்றத்திற்காகவும், பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்த குற்றத்திற்காகவும் தண்டனைக்குள்ளாக இருந்தான்.
இன்னும் சில சாட்சியங்கள் கிடைக்கும் வரை காவல்துறை பிடியில் தான் குமரகுரு இருக்கவேண்டும் என மீண்டும் அனுமதி வாங்கியிருந்தான் நெடுஞ்செழியன்.
குமரகுருவை யாரையும் பார்க்க நெடுஞ்செழியன் அனுமதிக்கவே இல்லை. இப்போது முன்பை விட கெடுபிடி செய்தான்.
இன்னும் இரு நாளில் சென்னையில் அஜிதாவின் வழக்கு. எத்தனை முக்கியமானது.
தனக்கு எதிரான ஆதாரங்கள் எல்லாம் நெடுஞ்செழியன் கைவசம் இருக்க ஏன் இன்னும் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்னும் கேள்வி குமரகுருவை குடைந்தது.
கைது அன்று துணிச்சலாக இருந்தவன் மனநிலை நாளாக நாளாக வலுவிழக்க துவங்கி இருந்தது.
என்னை என்ன செய்துவிட முடியும் என்ற இறுமாப்பு எல்லாம் எங்கோ சென்றுவிட்டது.
இப்போது மிஞ்சி இருப்பது குழப்பம் மட்டுமே. குமரகுருவின் மறுபக்கத்தை, அந்த கருப்பு பக்கத்தை மொத்தமாய் தூசு தட்டி கைகளுக்குள் வைத்திருந்தான் நெடுஞ்செழியன்.
ஒன்றை தொட்டதும் வரிசையாக தானாக மாட்டிக்கொள்ள இன்னும் சுலபமாக குமரகுருவை அவனின் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிந்தது.
இப்போதும் தனியறையில் உறக்கமின்றி, அரைகுறை உணவுடன் ஆகாரமில்லாமல் உடல் நலிந்தவன் எதிரே வந்தமர்ந்தான் நெடுஞ்செழியன்.
“என்ன ஒயின்ஸ்? இந்த அறை வசதி எல்லாம் எப்படி இருக்கு?….” என கேட்ட நெடுஞ்செழியன் அறையை சுற்றிலும் பார்த்தான்.
“உனக்கு இது அதிகம் தான். இந்த வழக்கு மட்டும் நிரூபிக்கப்பட்டா உனக்கு களி இங்க இல்லை. உன் இடமே வேற….” என சொல்லி சிரிக்கவும் குமரகுருவிற்கு பயம் கண்ணில் தெரிந்தது.
“வெளில இருந்து பார்க்க ஒயின்ஷாப் வச்சு பிழைப்பு நடத்தறான்னு பார்த்தா நீ என்னன்னா மாஃபியா ரேஞ்ச்ல பிஸ்னஸ் பன்றியே? இதை தான் சொல்லுவாங்க ஆளை பார்த்து எடை போடக்கூடாதுன்னு…” என்றதும் தொண்டையில் நீர் வற்றிவிட்டது குமரகுருவிற்கு.
“என்னடா எல்லா ஆதாரமும் வச்சுட்டே இவன் திரும்ப ஆதாரத்துக்காக கஸ்டடில எடுக்கறேன்னு சொல்லிருக்கானே. என்னன்னு குழப்பமா இருக்கா?….” என்ற கேள்வியை கேட்ட நெடுஞ்செழியன்,
“நாம ஒரு ஒப்பந்தத்துக்கு வருவோமா?…. என்று கேட்டான்.
எதுவும் பேசவும் திராணி இல்லை குமரகுருவிற்கு. குடும்பம் கூட இரண்டாம்பட்சமாக தெரிந்தது.
இப்போதையே சூழ்நிலை தான் வெளியே வரவேண்டும். இல்லை தப்பிக்க வேண்டும்.
இரண்டில் ஒன்று நடந்தாக என்ன வேண்டுமானாலும் செய்யவிருந்தான் குமரகுரு.
“பெருசா என்ன கேட்டுட போறேன்? எனக்கு அஜிதா பிரச்சனை முடியனும். நான் இங்க வந்ததும் எடுத்த வழக்கு. சும்மா அது ஒன்னுக்குள்ளையே என்னால சுத்த முடியாது பாரு. நீ என்ன நடந்ததுன்னு சொல்லி ஒப்பிச்சிட்டா இந்த வழக்குல…” என்றதும் குமரகுரு சந்தேகமாக பார்த்தான்.
“இந்த வழக்குல இருந்து விட்டுட எல்லாம் மாட்டேன். உனக்கு கிடைக்க போற ஜாமீனை நான் தடுக்காம இருப்பேன். எனக்கு நீ ஒரு உதவி செஞ்சா உனக்கு இதை நான் பன்றேன்…” என்று சொல்ல இன்னும் நம்பவில்லை குமரகுரு.
“அந்த அஜிதா வழக்குல ஒத்துக்கிட்டா உள்ள போகனுமே, இவன் என்ன இப்படி சொல்றான்னு யோசிக்கிறியா?…” என்றதும் ஆமாம் என தலையாட்டினான் குமரகுரு.
“அந்த வழக்குல இருந்து வெளில வரது உனக்கு என்ன கஷ்டமா? அதுவும் வழக்கு முடியவும் பரிதியும் பாரின் போயிருவான். இங்க நீ என்ன செய்யறன்னு அவனுக்கு என்ன தெரியும்? எனக்கும் பெரிய வேலை முடிஞ்சிரும் பாரு. நானும் நிம்மதியா வேற வேலையை பார்ப்பேன்….”
மெல்ல குமரகுருவை நகர்த்தி கண்ணிவெடியில் அவனை நிற்க வைத்துவிட்டான் நெடுஞ்செழியன்.