எரியும் அந்த தீக்குச்சியின் ஜூவாலை அஜிதாவின் நிழற்படத்தின் முன்னிருந்த தீபத்திற்கு வெளிச்சமூட்டியது.
“அம்மாவை கும்பிட்டுக்கோ அஞ்சலி….” என மகளை தன்னருகில் நிறுத்திக்கொண்டான் இளம்பரிதி.
“அஜிதா இன்னைக்கு முக்கியமான நாள். நீ எப்பவும் எங்களோடவே தான் இருக்க. இன்னைக்கும் அப்படித்தான் இருக்கனும். இருப்பன்னு தெரியும். என்னோட நம்பிக்கை பொய்யா போகாது அஜி…” என கை கூப்பி நின்றவன் வேண்டுதலில் அஞ்சலி பரிதியை நிமிர்ந்து பார்த்தாள்.
பத்துநிமிடத்தில் உடை மாற்றி வந்த மகள் முகத்தில் சோர்வு அப்பியிருந்தாலும் தைரியமாகவே நடந்து வந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான் பரிதி.
“போகலாம் டாடி…” என்ற பெண்ணை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன்,
“வலி இருக்காம்மா?….” என கேட்டான்.
“இப்ப இல்லை டாடி. இருந்தா சொல்றேன். நாம ஹாஸ்பிடல் போவோம்…” என்றாள் அஞ்சலி.
“சரி…” என குழந்தையின் உச்சியில் முத்தமிட்டவன் எழுந்துகொள்ள,
“அம்மாக்கிட்ட சொல்லிட்டு வரேன்…” என்ற அஞ்சலி புகைப்படத்தில் இருந்த அஜிதாவின் கன்னத்தை தொட்டு முத்தமிட்டுவிட்டு வந்தாள்.
மூவருமாக வெளியே வர அவர்களுக்கு காவலுக்கு இருந்த ஒரு காவலரும் அவர்களுடன் காரில் ஏறிக்கொண்டார்.
அன்றொருநாள் அந்த இருவரின் நோட்டம் விடுதலில் இருந்தே ஒருவரை வீட்டில் காவலுக்கு என நிறுத்தியிருந்தான் நெடுஞ்செழியன்.
அவரும் பரிதி குடும்பத்துடன் சேர்ந்து நீதிமன்றத்திற்கு கிளம்பி சென்றார்கள்.
இன்றைய விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை மிகுதியாகவே இருந்தது பரிதிக்கு.
ஆனாலும் தான் பார்த்த அந்த ஆதாரம். அஜிதாவின் இறப்பில் கண்டுபிடித்த உண்மை.
இது தன் தாய்க்கும், மகளுக்கும் தெரிந்தால் என்னவாகும்? அவர்கள் தாங்குவார்களா?
பரிதியின் மனதின் கலக்கம் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க மனதை திடப்படுத்திக்கொண்டான் அவன்.
அஞ்சலி காரில் ஏறி அமர்ந்ததுமே சுந்தரவல்லியின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
சுந்தரவல்லிக்கு அஞ்சலியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளை வீட்டில் இருக்க வைக்கலாமா என்றொரு யோசனை முகிழ்த்தது ஒரு நொடிதான்.
இப்படி விசாரணை அன்று வரவில்லை என்ற காரணம் கொண்டு அங்கே எதுவும் அவர்களுக்கு சாதகமாகிவிடக்கூடாது என எண்ணியவர் பேத்தியிடம் கேட்டுக்கொண்டே வந்தார்.
“முடியலைன்னா பாட்டிட்ட சொல்லுடாம்மா. தண்ணி கொஞ்சம் குடிச்சிட்டே இரு. வலி குறையும்…” என அஞ்சலியின் முதுகையும் வயிற்றையும் தடவியபடியே வந்தார்.
நீதிமன்றத்தில் சென்று இறங்கும் முன் முழுதாய் சோர்ந்திருந்தாள் அஞ்சலி. பரிதியின் கையை பிடித்தவள் அவனையுமே எங்கும் விடவில்லை.
“என்கிட்ட சொல்லியிருக்கலாமே பரிதி? நான் ஏதாவது காரணம் சொல்லியிருப்பேனே?….” கார்த்திகேயன் கூட அஞ்சலியை கண்டு பரிதியிடம் ஆதங்கமாய் கேட்டார்.
“நான் தான் வேண்டாமேன்னு சொன்னேன் கார்த்திகேயன். இந்த காரணம் கூட அவங்க பக்கம் ஒரு சின்ன சாதகத்தை தந்திடக்கூடாதேன்னு தான்…” என்றார் சுந்தரவல்லி.
“அதுக்கு குழந்தையை கஷ்டப்படுத்தறதா? அவளுக்கு இப்போ இதை பத்தி என்ன தெரியும்?….” என கேட்டார் கார்த்திகேயன்.
“ஏன் தெரியாது? என் பேத்தி எதையும் தாங்கக்கூடியவ. அவ அஜிதாவோட பொண்ணு. இந்த ஒரு விஷயத்துக்காக நீ தள்ளி இருன்னு இப்பவே சொல்லி இதை பெரிய விஷயமா நினைக்க வைக்க அதுக்கு விதை போட முடியாது கார்த்திகேயன். இது உடலில் ஒரு மாற்றம். எல்லாருக்கும் வர காய்ச்சல், தலைவலி மாதிரி இதுவும் பெண் குழந்தைங்களுக்கு. அவ்வளவு தான்…”
சுந்தரவல்லி நிமிர்வாய் சொல்ல அஞ்சலியையும், பரிதியையும் கவலையுடன் பார்த்தார் கார்த்திகேயன்.
“அம்மா சொல்றதுல தப்பில்லை கார்த்திகேயன் ஸார். இப்பவே இதை ஒரு ஆகாத விஷயமா என் பொண்ணுக்கிட்ட திணிக்க நான் தயாரா இல்லை. அவ பார்த்துப்பா. அவளால முடியும்…” என்ற பரிதி,
“அஞ்சலி அப்பா சொல்றது சரியா?…”
“ஹன்ட்ரட் பர்சன்ட் கரெக்ட் டாடி. என்னால முடியும்…” என சிரிப்புடன் ஆமோதித்தாள் குழந்தை.
“தெரியாமலே இருக்கப்போறதில்லையே கார்த்திகேயன். அஜிதாவோட இழப்பே எங்களுக்கு ஜீரணிக்க முடியாததா இருந்தாலும் அதை தாங்கி இதோ இப்ப இங்க நிக்கிறோம். அதை விட என்ன?…” என்றவர் கேள்வியில் கார்த்திகேயனும் சொல்லிவிட்டார்.