விஷயத்தை கேட்ட சுந்தரவல்லியின் பார்வை பரிதியை வேதனையுடன் தீண்டியது.
“என் பிள்ளை இதை இத்தனை நாள் எப்படி சுமந்திட்டு இருந்தான்? எனக்கு சொல்லியிருக்கலாமே கார்த்திகேயன்? அவனுக்கு ஆறுதலா இருந்திருப்பேனே?….” வார்த்தைகள் கோர்க்க இயலாவண்ணம் அந்த பெண்மணியின் குரல் உடைந்து வந்தது.
“உங்களுக்கு தெரிஞ்சா தாங்க முடியாதோன்னு தான்…”
“என் பிள்ளை இதை தனியா சுமந்திருக்கானே? இந்த நாலுநாள் இடைவெளி எங்களுக்கு துக்கமில்லாமலா நகர்ந்து போச்சு? என்ன பேசறீங்க நீங்க?…” என்றவர் தொண்டையிலிருந்து சீறிவந்த கேவலை இரும்பாய் விழுங்கிக்கொண்டார்.
“இன்னைக்கு இந்த விஷயம் வெளில வந்திருமா? இன்னைக்கே முடிஞ்சிருமா?….” என்றார் சுந்தரவல்லி.
“வாய்ப்பில்லைங்கம்மா. இன்னைக்கு விசாரணை நடக்கும். திரும்ப போஸ்ட்மார்ட்டம் பண்ண நீதிபதி உத்தரவு போடனும். நமக்கு அதுதான் இன்னைக்கு வேணும். அது மட்டுமில்லை, இந்தமுறை அவங்க எல்லோரையும் கண்டிப்பா ரிமான்ட்ல எடுக்கனும்…”
“முடியுமா? இன்னைக்காவது இந்த வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகருமா? இல்லை இதுவும் வெறும் வாதத்தோட வாய்தா வாங்கி போயிருமா?…” என்றவரின் குரலில் அடக்கப்பட்ட சீற்றம்.
அது அறசீற்றம். கார்த்திகேயனுக்கும் அவரின் வேதனை தெளிவாய் விளங்கியது.
ஆனால் மனிதமனங்களின் உணர்வுகளால் மட்டுமே எழுப்பியதா இந்த நீதிமன்றம்?
“பொறுமையா இருங்கம்மா. நெடுஞ்செழியன் கூட உண்மையை கொண்டுவர தான் முயற்சி பண்ணிட்டு இருக்கார். அதுக்கான எல்லாமே செஞ்சாச்சு. ஆனாலும் அவங்க பக்க வாதம் எப்படி இருக்குமோ?…”
“அதுக்குள்ள என் பையனை நான் இழந்திருவேனோன்னு பயமா இருக்கே கார்த்திகேயன். அவன் எங்களை கஷ்டப்படுத்தறோம்ன்னு நினைச்சே இன்னும் நொறுங்கி போறான். என்னால அதை பார்க்க முடியலை. பார்க்கவும் முடியாது…”
“சுந்தரவல்லியம்மா, நீங்களே உணர்ச்சிவசப்படலாமா?….”
“வேற என்ன செய்ய முடியும் கார்த்திகேயன்? இன்னைக்கு என் பேத்தியை எப்படி ஒரு சூழ்நிலையில இங்க நான் கூட்டிட்டு வந்திருக்கேன் தெரியும் தானே?…” என்றவர்,
“சொல்லிடுங்க. ஒருவேளை இந்த முறையும் வழக்கு உண்மை பக்கம் நிக்காதுன்னா அதை பார்க்க நாங்க இங்க இருக்கவேண்டாம்…” என்று முடிவாய் கூறினார் சுந்தரவல்லி.
அதேநேரம் பேச்சியம்மாவுடன் வெளியே வந்த மீராவை பார்த்தவருக்கு பொறுமை அகன்றது.
மீரா முதலில் சுந்தரவல்லியை பார்த்துவிட்டு பரிதியையும், அஞ்சலியையும் தேட அவளின் தேடலை கண்டுகொண்டார்.
கண்கள் இடுங்க அவளின் அருகில் நெருங்கியவர் பேசும் முன் வேகமாய் அங்கே வந்துவிட்டான் பரிதி.
“என்னம்மா பன்றீங்க?….” என இடையில் வந்து நின்ற மகனை நகர்த்தியவர்,
“என்னம்மா, யார்க்கிட்ட என்ன பேசற?…” என்று அதற்குள் பேச்சியம்மாள் வாயை திறக்கவும் நெடுஞ்செழியனும் வந்துவிட்டான்.
“இங்க வச்சு எதுவும் பேசகூடாது. நீங்க உள்ள போங்க…” என அதட்டி சொல்லி,
“பரிதி என்ன பார்த்துட்டே நிக்கறீங்க?…” என நெடுஞ்செழியன் சொல்லவும் பரிதி சுந்தரவல்லியுடன் உள்ளே சென்றான்.
“நீங்க இங்கயே உட்காருங்க. நான் அஞ்சலியை கூட்டிட்டு வரேன்…” என சொல்லி வெளியே வந்தவன் மகளை அழைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று அமர்ந்துவிட்டான்.
சுந்தரவல்லி மனது நெருப்பில்லாமல் தீயாய் கனன்று கொண்டிருந்தது. அதுவும் மீராவின் முந்தைய வாக்குமூலமும், இன்று கார்த்திகேயனிடம் தான் அறிந்துகொண்டதும் என எல்லாம் அவரை நிலைகுலைய செய்திருந்தது.
சற்று நேரத்தில் அவர்கள் வழக்கின் விசாரணை துவங்க தேவகி இன்னும் குமரகுருவை காணாமல் வீட்டினரிடம் புலம்பிக்கொண்டு இருந்தாள்.
இந்தமுறை மொத்த குடும்பமும் அங்கே வந்துவிட்டிருந்தனர். அவர்கள் தரப்பு வழக்கறிஞர் சொல்லி வரவழைத்திருந்தார்.
அஜிதாவின் மரணத்தின் காரணம் என்னவென மருத்துவ அறிக்கை அளித்திருந்த நமச்சிவாயமும் வந்திருந்தார்.
சுடலைமுத்து பார்த்ததில் இருந்து இவர்கள் மட்டுமே அங்கே வரவழைக்கப்பட்டு இருப்பதாக நினைத்திருக்க நடந்ததோ அவர்கள் எதிர்பாராத ஒன்று.
விசாரணை துவங்கப்பட்டு கார்த்திகேயனும் எதிர்தரப்பு வழக்கறிஞரும் மாற்றி மாற்றி விவாதத்தில் இருக்க அன்றைய நிகழ்வில் நடந்தவற்றை ஒவ்வொருவராய் அழைத்து விசாரித்தனர்.
சுடலைமுத்துவில் துவங்கி அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் விசாரித்து முடித்தாகிற்று.
நாச்சியாரும், மீராவும் மட்டுமே அவர்களில் மிஞ்சி நின்றனர். குமரகுருவை இன்னும் உள்ளே அழைத்தே வரவில்லை.
அதுவே தேவகிக்கு நடுக்கத்தை தந்திருந்தது. அதற்கடுத்ததாக மீரா அழைக்கப்பட அதேநேரம் சுந்தரவல்லியை அழைத்து விசாரித்தவர்கள், அஞ்சலியை அழைத்தனர்.
கூண்டுக்குள் வந்து நிற்கும் முன்னரே அஞ்சலியின் நடையில் தடுமாற்றம். சொல்லவில்லை.
“நான் சொல்லிட்டு வரேன் பாட்டி. நாம போகலாம்…” என எழுந்து வந்துவிட்டாள்.
அஞ்சலி வந்து நின்றதுமே அவளின் முகத்தையே அவதானித்த மீராவிற்குள் என்னவோ என்று தோன்றியது.
உண்மையை சொல்லவேண்டும் என்ற சத்தியம் பெற வந்து நின்றவரிடம் கையை நீட்டிய அஞ்சலியால் அதனை செய்ய முடியாமல் போக,
“டாடி…” என்றழைத்துவிட்டாள் சத்தமாக.
கண்கள் சொருக சரிந்த குழந்தையை பரிதி பதறி எழுந்துவந்து பிடிக்கும் முன் மீரா அவளை சேர்ந்திருந்தாள்.
“அஞ்சலி, அஞ்சலிக்குட்டி என்னடா ஆச்சு? அஞ்சலிமா?….” என மயங்கிய குழந்தையின் கன்னம் தொட்டு அழைக்க பரிதி வந்து மகளை தூக்கிவிட்டான்.
“யுவர் ஹானர் மெடிக்கல் ஹெல்ப்…” என்ற இறைஞ்சுதலாய் கேட்ட பரிதியிடம்,
“நான் டாக்டர் தான். என்னன்னு பார்க்கறேன் மாமா ப்ளீஸ். அஞ்சலியை காமிங்க…” என்று மீரா கண்ணீருடன் கைநீட்டி கேட்டாள்.
அவளிடமிருந்து விலகி மகளை தூக்கி தோளில் போட்டவன் முகத்தில் கனன்ற சினத்துடனான கண்ணீரும், அவன் தோளில் மயங்கியிருந்த அஞ்சலியின் உடையையும் பார்த்த மீரா சத்தமிட்டே கதறிவிட்டாள்.
“ஐயோ அஞ்சலிம்மா…” என்று அவள் முகத்தில் அறைந்துகொள்ள சுந்தரவல்லி வந்துவிட்டார்.
நீதிமன்றத்தில் அனைவருக்குமே அந்த நிகழ்வு கணப்பொழுதில் கண்ணீரை வரவழைத்திருந்தது.
தாயில்லா குழந்தை, இப்படியான சூழ்நிலையில் எந்தளவிற்கு மன அழுத்தத்தில் இருந்திருக்கும் என அவர்களுக்குள் பேசியபடி இருந்தனர்.
பரிதி அஞ்சலியை தன் மடியில் சாய்த்து தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளிவிக்க மெல்ல கண் திறந்தாள் அஞ்சலி.
“ப்ளீஸ்ப்பா. அழாதீங்க. நான் நல்லாயிருக்கேன்…” என்ற அஞ்சலி,
“உங்க மடில படுத்துக்கட்டுமா?…” என்று கேட்க அதற்கு மேல் அங்கே இருக்கமுடியாதென தோன்றியது பரிதிக்கு.
“அம்மா, எனக்கு இப்ப என் பொண்ணு தான் முக்கியம்…” என்றவன் பார்வையின் பரிதவிப்பும், கெஞ்சுதலும் அங்கிருந்த அத்தனைபேரையும் சுட்டு பொசுக்கியது.
நீதிபதியின் மனதையும் கூட உலுக்கியது இந்த காட்சி. அவர்களுக்கான உதவியை செய்ய காவல்துறையை உடனே பணித்தார் அவர்.
அதற்குள் கார்த்திகேயன் மனைவி சாருலதா அங்கே வந்துவிட்டார். ஏற்கனவே அஞ்சலியின் நிலையை சொல்லியே இங்கே வர சொல்லி சொல்லியிருந்தார் கார்த்திகேயன்.
அவளை விசாரித்து முடித்ததும் வீட்டிற்கு அனுப்பி வைக்க தேவையிருக்கும் என்று வரவழைத்திருக்க இப்போது அது உதவியாக இருந்தது.
“பரிதி முதல்ல அஞ்சலியை அம்மாவோட பக்கத்து ஹாஸ்பிட்டலுக்கு அனுப்புங்க….” என நெடுஞ்செழியன் சொல்ல,
“நான் இல்லாம எப்படி ஸார்?….” பரிதி இன்னும் மகளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
இத்தனை கூட்டத்தின் மத்தியில் தன்னுயிர் மகளின் இந்த நிலை அவனின் மனதை வேதனையில் குலுங்க செய்தது.
“பரிதி நான் பார்த்துக்கறேன். இப்ப இங்க நீ இருக்கனும். இருக்க. அவ்வளோ தான்…” என சுந்தரவல்லி கூற,
“அம்மா…” என்றான் அப்போதும் மனமின்றி.
“சாருலதா கூட இருப்பா பரிதி. நீங்க கவலைப்படவேண்டாம். பாதுகாப்புக்கு கூட கான்ஸ்டபிள் போவார்….” என கார்த்திகேயனும் சொல்ல உடனே அஞ்சலியை அழைத்துக்கொண்டு காருக்கு சென்றவன் பத்திரமாய் அனுப்பிவிட்டு வந்துசேர்ந்தான்.