“என்ன பேச போறா இவ? அப்பா என்னப்பா?….” என தேவகி சுடலைமுத்துவை பார்க்க அவருமே பதறிப்போய் தான் இருந்தார்.
நெடுஞ்செழியன் முகத்தில் அடக்கப்பட்ட வெற்றிப்புன்னகை. இதை தானே அவன் எதிர்பார்த்தான்.
இந்தமுறை மீரா உண்மைகளை அப்படியே பேசுவாள் என்பதில் நம்பிக்கையுடன் தான் இருந்தான்.
இப்போது நிச்சயம் அவள் உண்மையை தவிர வேறு பேச போவதில்லை என தெள்ளத்தெளிவாகியது.
“இங்க பாருங்க மீரா…” என்று கேள்வி கேட்க வந்த கார்த்திகேயனிடம்,
“ஸார் நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு தெரியும். என்னை பேசவிடுங்க ப்ளீஸ். நானே எல்லாம் சொல்லிடறேன்…” என்றவள் நீதிபதியை பார்க்க,
“சொல்லுங்கம்மா…” என்றார் அவரும்.
“என்னோட அக்காவை கூட்டிட்டு போனது நான் தான். முடியாதுன்னு சொன்னவக்கிட்ட அம்மாவை பேசவச்சு அக்காவோட வீட்டுக்காரக்கிட்ட கேட்கவச்சு நான் தான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்…” என்று ஒவ்வொன்றாய் சொல்லியவள்,
“அன்னைக்கு நைட் அக்கா அவ ரூம்க்கு போனதும் நாங்களும் தூங்க போய்ட்டோம். திரும்ப அதிகாலைல என்னோட அண்ணி தான் வந்து என்னை எழுப்பினாங்க. அதுக்குள்ள ரூம் எரிஞ்சு அஜிதாக்கா பாதி எரிஞ்சிருந்தாங்க…”
“நான் எழுந்து வரும்போதே அக்கா, மாமா, அவங்க வீட்டுல இருந்து எல்லாரும் எங்க வீட்டுல தான் இருந்தாங்க. வீட்டுல இருந்த எனக்கு முன்னாடியே அவங்க எப்படி அங்க வந்தாங்கன்னு அப்போ தோணவே இல்லை…”
“இருந்த பதட்டத்துல அக்காவுக்கு என்னாச்சோன்னு தான் தோணுச்சு. எதையும் அப்போ நான் யோசிக்கலை. ஆனா அதுக்கப்பறம் யோசிச்சேன். சொல்லமுடியலை….” என்றவள் கண்ணீர் விட சுடலைமுத்து, நல்லதம்பி அனைவருமே பேயறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்.
பரிதி எந்தவித முகமாற்றமும் இன்றி கல்லை போல இறுகி கடினமாக அமர்ந்திருந்தான்.
“இதை நீங்க போனமுறை ஏன் மாத்தி சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?….” என்று கார்த்திகேயன் கேட்க,
“என்னோட பெரியப்பா தான் சொல்ல சொன்னாங்க. இல்லைன்னா சின்ன குழந்தைகளோட சேர்ந்து தற்கொலை பண்ணிப்போம்ன்னு சொன்னார். குடும்ப மானம், கௌரவம். என்னால மீற முடியலை…” என்றவளுக்கு அழுகை நின்றபாடில்லை.
“அஜிக்கா இறந்த பின்னாடி என்னோட கவனம் எல்லாம் என் அம்மா, அப்பா மேலதான் இருந்தது. முதல்முறை இந்த கேஸ் கோர்ட்டுக்கு வரும் போதே சந்தேகம் அப்படின்னு ஒண்ணு தோணலை. அது என் குடும்பத்து மேல இருக்கற நம்பிக்கை…”
“அவங்க பரிதி மாமாவோட அனுமதி இல்லாம அக்காவுக்கு சடங்கு செஞ்சது கூட ஒருவித தார்மீக கோபமா தான் நினைச்சேன். என் பொண்ணு, எங்க உரிமைன்னு நினைச்சதா பைத்தியக்காரத்தனமா நம்பிட்டேன்…”
“ஆசைப்பட்டு வரவழைச்சு கொலை செய்ய கூடியவங்க இல்லைன்னு நினைச்சேன். எப்படி மாட்டிக்குவோம்ன்னு தெரிஞ்சே செய்வாங்களா? நடந்தது விபத்து தான். அக்காவை இழந்த துக்கத்துல மாமா கேஸ் குடுத்திருக்கார்ன்னு நினைச்சேன். எல்லாம் அந்த கொஞ்ச நாள் தான்…”
“இப்ப சொல்றேன், எனக்கு சந்தேகமா தான் இருக்கு. அஜிதாக்கா சாவுல என்னவோ மர்மம் இருக்கு. எனக்கு டவுட் வந்தாலும் சொல்லக்கூடிய தைரியம் சுத்தமா இல்லை…”
“அந்த பயம், நான் எதிர்த்து கேட்டா என்னோட அம்மாவுக்கு எதாவதாகிடுமோ? ஒருவேளை இவங்க நிஜமாவே அப்படி கொன்னிருந்தாங்கன்னா அந்த உண்மையை மறைக்க எங்களையும் ஏதாவது செஞ்சுட்டா? இப்படித்தான் நினைச்சேன்…”
“தப்பு பண்ணிட்டேன். நான் அப்பவே யோசிச்சிருந்திருக்கனும். சுயநலமா இருந்துட்டேன். கொஞ்சமும் மனசாட்சி இல்லாம இருந்ததால இன்னைக்கு எனக்கு அம்மா மாதிரி இருந்த என் அக்காவோட பொண்ணுக்கு அம்மா இல்லாம போய்டுச்சு. நான் அன்னைக்கு அஜிதாக்காவை பார்த்திருக்கவே கூடாது…”
மீராவின் ஓலம் அத்தனைபேரையும் ஒருவித கனமான சூழ்நிலையில் நிற்க வைத்திருந்தது.
இதனை எல்லாம் கேட்ட நாச்சியாருக்கு அப்படித்தானோ என்ற எண்ணத்தில் ரத்தக்கொதிப்பு அதிகமாக அவரையும் மருத்துவசிகிச்சைக்காக மருத்துவமனைக்கு காவலர்களுடன் அனுப்பி வைத்தனர்.
உடன் மீராவும் சென்றிருக்க நாச்சியாரின் உடல்நிலையால் அன்று அவரை விசாரிக்கமுடியாமல் போனது. செல்வபாண்டி பிரம்மை பிடித்ததை போல அமர்ந்திருந்தார்.
சுடலைமுத்துவும், நல்லதம்பியும், தேவகியும் உள்ளுக்குள் பயந்து, வெளியே இறுக்கத்துடன் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு அடுத்து பிணக்கூராய்வு செய்த மருத்துவர் நாச்சியப்பனை அழைத்து விசாரிக்க அவரும் அன்று நெடுஞ்செழியனிடம் சொல்லியதையே கூறி சென்றார்.
அடுத்ததாக வழக்கை விசாரிக்கும் நெடுஞ்செழியனை அழைத்தனர் விசாரணைக்கு.
“சொல்லுங்க நெடுஞ்செழியன், இந்த வழக்கு கொலை தான் அப்படின்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க நீங்க?…” என்று கேட்டுவிட்டு கார்த்திகேயன் நகர்ந்து நின்றதும் அவரிடம் தலையசைத்தான் நெடுஞ்செழியன்.
அடுத்ததாய் பரந்தாமனை பார்த்ததும் அவரும் எல்லாம் தயார் என்பதை போல கையை உயர்த்தினார்.
பரிதி குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்திருந்த அந்த பகுதி காவல்துறை ஆய்வாளரும் ஒற்றை பார்வையில் சமிஞ்சை செய்துகொண்டார் நெடுஞ்செழியனிடம்.
வழக்கு அவர்கள் எதிர்பார்த்த திசைக்கு வந்து நின்றதும் அடுத்தடுத்த சாட்சியங்களிலும், இறுதியாக நெடுஞ்செழியன் ஒப்படைத்த அறிக்கையிலும் சுடலைமுத்துவின் குடும்பத்தையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவைகளுக்கு சிகரமாக குமரகுருவின் ஒப்புதல் வாக்குமூலம் வேறு சுடலைமுத்துவை சேர்ந்தோருக்கு பெரிய அடியாக விழுந்தது.
காவல்துறையினரின் மிரட்டலால் தான் குமரகுரு இப்படி பேசினான் என தேவகி கூச்சல் போட அவளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நல்லதம்பியின் மனைவி, குழந்தைகள் தவிர்த்து அத்தனைபேரும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
அனைத்திற்கும் மேல் அஜிதாவின் எலும்புகளை நெடுஞ்செழியன் கேட்டுக்கொண்டதன்படி நேர்மையான மருத்துவரை வைத்து மறுகூராய்வு செய்து உண்மையான அறிக்கையை தரும்படி உத்தரவிட்டுவிட்டார் நீதிபதி.
விசாரணை மறுவாரம் ஒத்திவைக்கப்பட்டது. அறிக்கை வரும் அன்று அடுத்த விசாரணை என்று உத்தரவாகியிருந்தது.
பரிதியுடன் வெளியே வந்த நெடுஞ்செழியன் அனைவரும் காவல்துறை வாகனத்தில் ஏறுவதை பார்த்துவிட்டு இறுதியாக ஏறிய நாச்சியப்பனிடம்,
“உண்மையான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என் கைக்கு எப்படி வந்ததுன்னு குழப்பமா இருக்கா டாக்டர் நாச்சியப்பன்?…” என்று நக்கலாக கேட்க நாச்சியப்பனுக்கு அச்சத்தில் கண்கள் அகன்றது.
நெடுஞ்செழியன் இறுதியாக அளித்த அந்த அறிக்கை தான் முதலில் சமர்ப்பிக்க இருந்த அறிக்கை. அது எப்படி என இப்போதும் பயந்துகொண்டே தான் இருந்தார்.
“குழப்பத்தோடவே அடுத்த விசாரணைக்கு வாங்க. வந்து உங்களோட மருத்துவ அடையாளத்தை விட்டுட்டு களி திங்க போங்க…” என்றவன்,
“பணம்ன்னா பிணத்தை கூட திம்பாங்கன்னு சொல்லுவாங்க. அந்த பிணத்தை வச்சே பணம் பார்க்கற நீயெல்லாம்….” என பல்லை கடித்தவன்,
“உள்ளவாடி மாப்ள, வகையா விருந்து வைக்கறேன். என்கிட்டயே என்ன பேச்சு பேசின?…” என்று நாக்கை மடித்தவன் நாச்சியப்பன் செல்லவும் பரிதி பக்கம் திரும்பினான்.
“என்ன பரிதி? அஞ்சலியை பார்க்க போகலையா?…” என நெடுஞ்செழியன் முறுவலிக்க,
“செழியன்…” என்ற பரிதி இருக்குமிடம் மறந்து அவனை அணைத்துக்கொண்டான்.
“பொறுமையா இருங்க பரிதி. இன்னும் நாம பார்க்கவேண்டியது எவ்வளவோ இருக்கு….” என்று சொல்ல,
“நீங்க இல்லாம இது சாத்தியமே இல்லை செழியன் ஸார்…” பரிதி தன்னை நிதானப்படுத்தி அவனிடம் சொல்ல,
“அதான் செழியன்னு சொல்லியாச்சே? அப்பறம் என்ன ஸார்? அதோட நான் என் வேலையை தான் செஞ்சேன். இது என்னோட கடமை மட்டுமில்லை. நான் சாப்பிடற சாப்பாடு எனக்கு ஒட்டனுமே?…”
நெடுஞ்செழியன் வெகுசாதாரணமாக சொல்லிவிட பரிதியால் அப்படி நினைக்க முடியவில்லை.
எத்தனை ரிஸ்க் நெடுஞ்செழியன் இந்த வழக்கில் எடுத்திருப்பவை எல்லாம் யாரும் செய்திருக்கமுடியாத ஒன்று.
“இந்த நன்றியை என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன் நான். இதுக்கு நான் என்ன பண்ண போறேன்?…” என நெகிழ்ச்சியாய் கேட்க,
“இன்னும் வழக்கு முடியலை பரிதி. முடிஞ்சதும் கேட்கறேன். பெருசா ஒண்ணுமில்லை. எனக்கு கல்யாணம் வச்சா உங்களை கூப்பிடுவேன். யுஎஸ்ல இருந்து வருவீங்களா? கூடவே அம்மா, அஞ்சலியோட?…”
“அதைவிட எனக்கு வேற என்ன வேலை? கண்டிப்பா நான் இருப்பேன்…” என உறுதியாக சொல்லவும்,
“பேசாம பொண்ணையும் பார்க்க சொல்லியிருக்கலாம் போல? போலீஸ்காரன், ஊருப்பட்ட பிரச்சனையை இழுத்து வச்சிருப்பேன்னு யாரும் எனக்கு பொண்ணு தரமாட்டேன்றாங்க…” அதையும் நகைச்சுவையாய் கூறினான் நெடுஞ்செழியன்.