மருத்துவமனையில் இருந்து அஞ்சலியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர் பரிதியும், சுந்தரவல்லியும்.
அவர்களுடன் வந்த சாருலதாவிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அவரை அவரின் இல்லத்தில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தனர்.
அதன் பின்னரே சுந்தரவல்லிக்கு நீதிமன்றத்தில் நடந்ததை கேட்க நேரம் அமைந்தது.
நீதிமன்றத்தில் இருந்து நேராக மருத்துவமனை வந்தவன் பெண்ணை பற்றி, அவளின் உடல்நிலையை கேட்டு அறிந்துகொண்டான்.
“அஞ்சலி சின்னப்பொண்ணு தானே மிஸ்டர்.இளம்பரிதி. இதை எல்லாம் தாங்கும் சக்தி இனி தான் உங்க பொண்ணுக்கு வரும். உடல்நிலை மாற்றம் மட்டும் காரணமில்லை, அவங்க மனஅழுத்தத்தோடவும் இருக்காங்க. அம்மா இல்லைன்னு சொன்னீங்களே?…”
“ஆமாம் டாக்டர்…” எனும் பொழுதே பரிதியின் குரல் உடைந்து போனது.
“மனமுதிர்ச்சியோட இருக்க அவங்க முயற்சி பன்றாங்க. உங்களை கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறாங்க. அதுதான் விஷயம். போக போக சரியாகிடும். நான் குடுக்கற சத்து மாத்திரைகளோட உணவுகளையும் கவனம் வச்சுக்கோங்க…”
மருத்துவர் எழுதித்தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டவன் மனதில் மகளை குறித்த கவலையே ஓங்கி எழுந்திருந்தது.
தன்னுடைய போராட்டத்தில் மகளை கவனிப்பது சிதறி போனதோ என சஞ்சலத்துடன் தான் வந்து சேர்ந்திருந்தான்.
“நான் ஆல்ரைட் டாடி…” என்று தன் முகம் கண்டு தேற்றும் குழந்தையை அணைத்திருந்தவன் அஞ்சலி தூங்கும் வரை தன் மீதே சாய்த்திருந்தான்.
அலைகடலின் ஆர்ப்பரிப்பை போல அதற்கு சற்றும் குறையாத ஆக்ரோஷ அலை அவனின் மனதில் சுருண்டெழுந்தது.
அஞ்சலி உறங்கிவிட்டதை தன்னை அழுத்தியிருந்த கரத்தின் தளர்வில் உணர்ந்தாலும் மகளை நெஞ்சத்தை விட்டு அகற்றவில்லை.
தலையை வருடியபடியே தான் இருந்தான் பரிதி. விழிகள் அஜிதாவின் நிழற்படத்தில் முற்றுகையிட்டிருந்தது.
அதில் மகளின் புன்னகைக்கு இந்த உலகம் கூட விலையில்லை என்னும் விதமான சந்தோஷம் மிளிர்ந்தது.
மெல்ல தன் மீது சாய்ந்திருக்கும் குழந்தையின் முகத்தை கவனிக்க கன்னம் ஒட்டிப்போய் கூடவே அவளின் உடலில் மெலிவு என அவனை உலுக்கியது.
சுந்தரவல்லி இதனை எல்லாம் திறந்திருந்த அறை கதவின் வாயிலாக கவனித்துக்கொண்டு தான் அமர்ந்திருந்தார்.
பொறுத்து பார்த்தவர் மகன் அதற்குள்ளேயே உழலுவதில் விருப்பமின்றி எழுந்து வந்தார்.
“எவ்வளவு நேரம் அஞ்சலியை கையிலையே வச்சிருக்க போற பரிதி?….” என்ற கேள்வியில் நிமிர்ந்து பார்த்தான்.
“இதை எல்லாமே அவ தாண்டி வருவா. அதுக்கு நீ துணையா இருக்கனுமே தவிர்த்து இப்படி தளர்ந்து போறதா? அதுவே அஞ்சலியை இன்னும் முடக்கிடும்…” என்றார்.
“இல்லம்மா, தூங்கிட்டிருந்தா…”
“அப்பவே தூங்கிட்டா பரிதி. நான் பார்த்துட்டே தான் இருந்தேன். டாக்டர் சொன்னது மறந்து போச்சா?….”
“அதெல்லாம் இல்லைம்மா…”
“இருந்தா இப்படி இருக்கமாட்ட. உன் முகம் பார்த்து உன் பொண்ணு நடந்துக்கறா. அப்போ நீ எவ்வளவு தைரியமா இருக்கனும்…” என்றதும் அஞ்சலியை தன்னிலிருந்து பிரித்து மெத்தையில் சாய்க்க,
“டாடி…” என்று மெல்ல கண் திறந்தாள் அஞ்சலி.
“டாடி இப்ப வந்திடறேன் அஞ்சலிம்மா. தூங்கு….” என நெற்றியை வருடி விடவும் மீண்டும் கண்ணயர்ந்தாள்.
உறக்கத்திலும் அவளின் முகத்தில் வலியின் சாயல். அணைவாக இரு பக்கமும் தலையணைகளை வைத்தவன் சுந்தரவல்லியை தாண்டிக்கொண்டு வரவேற்பறை வந்தான்.
“உட்கார் பரிதி….” என்றவர் உள்ளே சென்று மகனுக்கு தட்டில் உணவை எடுத்து வந்தார்.
“பசி இல்லைம்மா….” பரிதி மறுக்க,
“பரவாயில்லை, சாப்பிடு….” என பிசைந்து அவனுக்கு தர,
“அஞ்சலி சாப்பிட்டாளா? நீங்க?…”
“நானும் என் பேத்தியும் ஹாஸ்பிட்டல்லயே சாப்பிட்டோம். கூட சாருவும் தான் இருந்தாங்க…” என்றவர் மகனுக்கு ஊட்ட,
“நானே சாப்பிடறேன்…”
“எத்தனை நாள் ஊட்டுவேன் பரிதி? இந்த தெம்பும், நடமாட்டமும் இருக்கற வரை தான். வாங்கிக்கோ…” என்றார் அதட்டலும், இறைஞ்சுதலுமாக.
“அம்மா நீங்க எனக்கு தான் முதல்ல தரனும். அதான் உங்க மகனை இத்தனை வருஷம் வச்சு ஊட்டி வளர்த்தாச்சே? இனிமே என்னை வளருங்க….” என முகம்கொள்ளா புன்னகையுடன் முதல் கவளத்தை வாங்கிக்கொள்ளும் அஜிதாவை இருவரின் உள்ளமும் தேடி தவித்தது.
தேம்பும் நெஞ்சத்துடன் தாய் நீட்டிய அந்த கவளத்தை வாங்கிக்கொண்டவன் வாங்கிய வேகத்தில் தொண்டைக்குள்ளே தள்ளினான்.
எங்கே தான் அஜிதா என்ற பெயரை இப்போது உதிர்த்துவிட்டால் அதன் வலியில் இங்கே சுந்தரவல்லி கட்டுப்பாட்டை இழந்துவிடுவாரோ என அஞ்சியே வாங்கிக்கொண்டான் பரிதி.
கவளத்தை பிசைந்து நீட்டியவரின் விழிகள் சிவந்து கசிந்திருக்க விரல்களில் நடுக்கத்தை பார்த்ததும் வாங்கியவன் அடுத்தடுத்து எதுவும் பேசாமல் விழுங்கி முடித்தான்.
அதற்குள் சுந்தரவல்லியும் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் பரிதியின் அருகே அமர்ந்துகொண்டார்.
“என்ன நடந்தது பரிதி?…” என்ற கேள்வியில் நீதிமன்றத்தில் விவாதத்தை தான் சொல்கிறார் என புரிந்துகொண்டான்.
சுருக்கமாக பரிதி சொல்ல சுந்தரவல்லிக்கு போதவில்லை. மகனின் முகத்தில் தென்படும் துளி அமைதி அவருக்கு அங்கே தங்களுக்கு சாதகமாக நடந்திருகிறது என புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால் எப்படி, என்ன நடந்தது என முழுதாய் தெரியாமல் அவருக்கு நிம்மதி ஏற்படாது என விளக்கமாக கேட்டார்.
“நீங்க கிளம்பவும் மீராவை விசாரணை பண்ணினாங்க. ஏற்கனவே செழியன் ஸார் பேசினதால அந்த பொண்ணும் நடந்ததை சொல்லுச்சு…” என்றவன் மீரா பேசியதை எல்லாம் சொல்ல உணர்வின்றி கேட்டிருந்தார் சுந்தரவல்லி.
மேலோட்டமாகவே பரிதி சொல்ல கேட்டவருக்கு அதுவே தாங்கவியலாததாக இருந்தது.
சுந்தரவல்லி வலி மிகுந்த பார்வையை மகனிடம் வெளிப்படுத்த அதற்கு மேலும் மறைக்கமுடியவில்லை பரிதியால்.
நீதிமன்றத்தில் நெடுஞ்செழியனை அழைத்ததும் வந்து அவன் நின்றது தான் பரிதியின் மனக்கண்ணில் வந்தமர்ந்தது.
காட்சிகளை எல்லாம் வார்த்தைகளாக தன்னை பெற்றவளுக்கு எடுத்துரைத்தவன் குரலும் அதற்குள் ஒடுங்கி இருந்தது.
நெடுஞ்செழியன் கூண்டிற்குள் வந்து நின்றதும் கார்த்திகேயனின் கேள்வியில் அவன் விழியசைவில் எல்லாம் தயாராக இருந்தது.
“இந்த வழக்கு ஆரம்பம் முதலே எனக்கு சந்தேகம் தான் யுவர் ஹானர். முதல் சந்தேகம் வழக்கை விசாரிச்ச முறை…” என்றவன் கோபிநாத்தையும் வரவழைத்திருந்தான்.
வந்தவன் ரவிசந்திரனின் தலையீட்டை பற்றி விவரிக்க நீதிமன்றத்தில் சலசலப்பு.
அடுத்த விசாரணை அன்று ரவிச்சந்திரன் வர சம்மன் வழங்க செய்துவிட்டார் நீதிபதி.
ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்துகொண்டு இப்படி தவறான முறையில் வழிகாட்டியிருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மீண்டும் நெடுஞ்செழியன் தன்னுடைய விசாரணை முறையை கூற ஆரம்பித்தான்.
“முதல்முறை சுடலைமுத்து, செல்வபாண்டி, நல்லதம்பி இவங்களை விசாரிச்சதுக்கும், அவங்க வீட்டுக்கு போய் அந்த பெண்களை விசாரிச்சதுக்கும் நிறைய முரண்பாடுகள். அதில் ஒன்றுதான் இந்த வீடியோ….” என்றவன் மீராவை, தேவகியை விசாரித்த காணொளியை சமர்ப்பித்தான்.
சற்று முன் தேவகி பேசியதற்கும் கானொளியில் பேசியதற்குமான வேறுபாட்டை துல்லியமாக கவனிக்க முடிந்தது நீதிபதியால்.
“இந்த வீடியோ குமாரகுருவும், தேவகியும் அடுத்ததா அவங்க வீட்டுக்கு வந்த வீடியோ. என்னுடைய விசாரணையில் அவங்க சொன்னதுக்கும், அவங்க அங்க வந்து போனதுக்கும் இருக்கும் அடுத்த முரண்பாடு இது…” என்று அதையும் சமர்ப்பித்தான்.
எதையும் மறுக்கும் சூழ்நிலை அங்கே இல்லை. அதிர்ந்து போய் பார்த்திருந்தார்கள் அனைவருமே.
‘நாம ஆதாரத்தை சமர்ப்பிக்கும் போது அது கவனிக்கப்படறதா இருக்கனும் கோபிநாத்’ என அன்றொரு நாள் நெடுஞ்செழியன் கூறியதன் அர்த்தம் இப்போது முழுதாய் விளங்கியது.
“சம்பவம் நடந்த அன்னைக்கு ஏசில தீ பிடிச்சதுவும் ஒரு காரணமா சொல்லியிருந்தாங்க. ஏன் அவசரமா அந்த ஏசியை சின்ன துண்டுகளா உடைச்சு தூக்கி எறியனும்? தேவைப்படலைன்னா அப்படியே வீசியிருக்கலாம். அந்த அறையில இருந்த எல்லாமே உடனைக்குடனே அப்புறப்படுத்தப்பட்டிருக்கு…”
“அதுக்கான சாட்சி அன்னைக்கு அங்க வேலை செஞ்சவங்க தான். அவங்களையும் இங்க உங்க அனுமதியோடு ஒப்படைக்கிறேன் யுவர் ஹானர்…” என்று அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அவர்களின் வாக்குமூலமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
“என்னப்பா இப்படி இவங்கலாம் எப்ப மாட்டினாங்க?…” தேவகி பதற,
“மாப்பிள்ளையோட கடையை சீல் வைக்கவும் இவங்களை எல்லாம் நான் யோசிக்கவே இல்லையேம்மா…” என்றார் சுடலைமுத்து.
“இன்னும் இவங்களையும் காணுமே? என் புருஷன் வந்தா நல்லா பேசுவார். வரட்டும்…” தேவகி சூளுரைக்க நெடுஞ்செழியன் அடுத்து வரவழைத்த அந்த இருவரையும் யார் என்று தெரியாமல் பார்த்தனர்.
“இந்த ரெண்டுபேரும் பரிதியையும், அவங்க குடும்பத்தையும் கவனிச்சு முடிஞ்சா தீர்த்துக்கட்டிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணின கூலிப்படை ஆட்கள். குமரகுருவால ஏற்பாடு செய்யப்பட்டவங்க….” என்றவன் அவர்களை பார்க்கவும்,
“எங்களுக்கு குமரகுரு யாருன்னு தெரியாதுங்க ஸார். அனுப்பினது வேற ஆள்…” என்று ஒப்புதல் தர இடைத்தரகரும் அங்கே சரணடைந்தான்.
நீதிபதிக்கு இது என்ன ஒரு வழக்கில் இத்தனை தொடர்ந்து வருகிறது என்றுதான் தோன்றியது.
“இன்னும் வேற இருக்கா? இவ்வளவு தானா?…” என கேட்கவே செய்துவிட்டார் அவர்.
“இன்னும் முக்கியமான சாட்சியம். இந்த வழக்கை கொலைன்னு நிரூபிக்க கூடிய சாட்சியம்…” என்றவன் குமரகுருவை உள்ளே அழைத்துவரும்படி சொல்ல சுடலைமுத்து என்ன நடக்குமோ என்று மருமகனை பார்த்தார்.