பரிதி அவன் சொல்வதை கவனித்து கேட்க ஆரம்பித்தான். இதோ அன்றைக்கு அஜிதாவிற்கு என்ன நடந்தது என அறிய போகிறான்.
மனதை முயன்று திடப்படுத்திக்கொண்டான். இந்தக்கணம் இதனை கேட்க தாயும், தன் மகளும் அங்கு இல்லாததில் அவனுக்கு நிம்மதியே.
குமாரகுருவிற்கு தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை பார்க்க தோன்றவில்லை. இப்போதைக்கு அவனுக்கு தேவை இந்த வழக்கில் இருந்து வெளிவருவது ஒன்று தான்.
பரிதி கிளம்பி வெளிநாடு செல்லட்டும், எப்படியும் ஏதேனும் காரணத்துடன் வெளியாகிவிடலாம் என குருட்டுத்தனமாக எண்ணியிருந்தான்.
எல்லாவற்றிற்கும் மேல் போதை வழக்கில் மாட்டிக்கொண்டால் தன் சாம்ராஜ்யமே மண்ணோடு மண்ணாகி போகும்.
நினைத்தால் கூட வெளிவரமுடியாது என்ற பயத்தில் நெடுஞ்செழியன் சொல்லுவதை போல ஒப்புக்கொண்டவன் உண்மையை வெளிப்படுத்த ஆரம்பித்தான்.
அதற்குள் தேவகி எழுந்து கூச்சல் போட நீதிபதி கண்டித்து சத்தமின்றி அமர கூறினார்.
“அஜிதாவுக்கு என் தம்பியை தான் கட்டி வைக்கிறதா நாங்க குடும்பமா முடிவு பண்ணியிருந்தோம். ஆனா எங்க ரெண்டு குடும்பத்தையுமே அசிங்கப்படுத்திட்டு ஓடி போய்ட்டா. ஊருக்குள்ள என்னதான் எங்களுக்கு ஒரு மரியாதை இருந்தாலும் எங்கையாவது ஒரு சொல்லுல இந்த பேச்சு வந்து நின்னுடுது…”
“எனக்கு என் தம்பியோட வாழக்கையே போயிருச்சுன்னு அஜிதா மேல கொலைவெறியே இருந்தது. கல்யாணம் நின்னுடுச்சு, பொண்ணு ஓடி போச்சுன்ற பேச்சு என் தம்பி பக்கம் திரும்பிருச்சு. அவன் சரியில்லை அப்படின்ற ஒரு காரணத்தையும் ஆரம்பிச்சதுல மனசு ஒடிஞ்சு போய்ட்டான்…”
“என் தம்பி என்னை மாதிரி இல்லை. அவன் பூஞ்சை மனசுக்காரன். இதை எல்லாம் தாங்க முடியலை. அவ மேல ரொம்ப ஆசைப்பட்டுட்டான். ஏமாற்றம் தாங்க முடியாம சவுதிக்கு போனவன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை. எங்க குடும்பத்துல அந்த ஆத்திரம் குறையவே இல்லை…”
“நாங்க இத்தனைபேர் இருந்தும் அவனை விட்டுட்டோமேன்னு தினமும் உறுத்திட்டே இருந்துச்சு. இன்னொரு கல்யாணத்துக்கு அவன் பிடிகுடுக்கவே இல்லை. எங்க குடும்பத்தோட சந்தோஷம் இப்படி ஆனதுக்கு காரணம் அஜிதான்னு தோணுச்சு…”
“நாளாக நாளாக அந்த வன்மம் கூடத்தான் செஞ்சதே தவிர அந்த கோபம் குறையவே இல்லை. இப்படி இருக்கும் போது தான் அஜிதா திரும்ப மதுரை வந்திருக்கிறதா மீரா சொல்லி கேள்விப்பட்டோம். அடங்கியிருந்த கோபம் தான் எங்களுக்கு பெருசாச்சு…”
“வீட்டுக்கு வரவழைச்சு அவ பேசறதை கேட்கும் போது என் தம்பியோட தரிசான வாழ்க்கையும், நாங்க பட்ட அவமானமும் தான் கண்ணு முன்னாடி வந்துச்சு….” என்றவனிடம்,
“இந்த கோபம் உங்களுக்கு மட்டுமா? இல்லை உங்க குடும்பத்தை சேர்ந்தவங்களுக்குமா? இந்த வழக்கில் யாருக்கெல்லாம் சம்பந்தம்?…” என்று கேட்க,
“எனக்கும் என் மாமனாருக்கும் மட்டும் தான். வேற யாருக்கும் தெரியாது…” என்றான் குமரகுரு.
நெடுஞ்செழியன் அவன் மாற்றி சொல்லியதில் சலனமற்று பார்த்தான். இதுவும் எதிர்பார்த்தது தானே?
பேசட்டும், விசாரணைக்கு தங்கள் வளையத்திற்குள் வரட்டும் என முழுதாய் சொல்லும் வரை காத்திருந்தான்.
குமரகுருவின் எண்ணமோ மாட்டிக்கொள்வது தாங்கள் இருவர் மட்டுமென்றால் வெளியில் இருப்பவர்களை வைத்து மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம் என்னும் நினைப்பு.
நல்லதம்பியும், தேவகியும் கண்ணீருடன் பார்த்தனர். தங்களை காப்பாற்றுகிறானே என்று.
“சரி சொல்லுங்க. அஜிதாவை என்ன பண்ணுனீங்க அன்னைக்கு?…” என்றார் கார்த்திகேயன்.
“அன்னைக்கு நைட்டு எங்களை தவிர மத்த எல்லாருக்கும் பால்ல மயக்க மருந்தை கலந்து குடுத்துட்டோம். அஜிதா குடிச்சதுல விஷம் கலந்திருந்தோம். அவளுக்கு குடுத்துட்டு அவ குடிக்கவும் நாங்க வீட்டுக்கு கிளம்பிட்டோம். திரும்ப வரும் போது அஜிதா அவ புருஷனோட பேசிட்டிருந்தா…”
“நாங்க போனதும் போனை கட் பண்ணிட்டு சாதாரணமா என்னன்னு கேட்டா. அதுவரை அடக்கி வச்சிருந்த கோபத்தோட…” என்றவன் இப்போது பரிதியை பார்க்க அடக்கப்பட்ட சீற்றத்துடன் கண்கள், கன்னம் துடிக்க கேட்டிருந்தான் பரிதி.
“அடிச்சு தலையில அடிச்சு….” என்றவனின் வார்த்தைகள் திக்கி திணறியது.
“சொல்லுங்க குமரகுரு. என்ன பண்ணுனீங்க?…” மீண்டும் கார்த்திகேயன் தன் பக்கம் திருப்ப,
“நாங்க கொலை தான் செய்ய போறோம்ன்னு தெரிஞ்சதும் ரூம்க்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டா. ஏற்கனவே அந்த ரூம்ல ஏசில பெட்ரோலை தெளிச்சு வச்சிருந்தோம். உள்ள போனவ செத்து அடங்கினதும் ஏசில தீப்பிடிக்க வச்சுட்டோம்…” என்று சொல்ல,
“நீங்கலாம் மனுஷ ஜென்மங்களாடா? நாய்ங்களா. என்ன பிறவிடா நீங்க…” என்று பரிதி அவனை அடிக்க பாய்வதற்குள் பரந்தாமனும் கோபிநாத்தும் பிடித்துக்கொண்டனர் பரிதியை.
“பாருங்க ஸார், என்னோட அஜிதாவை என்ன பண்ணியிருக்காங்கன்னு பாருங்க…” என முகத்தில் அறைந்துகொண்டு பரிதி கதற நீதிபதியிடமும் சில நொடி மௌனம்.
“குமரகுரு இந்த வழக்குல நீங்க, உங்க மாமனார் மட்டும் தான் சம்பந்தப்பட்டதா சொல்றீங்க. அப்பறம் எப்படி உங்க மனைவி உங்களோட அந்த நேரம் வந்தாங்க?…” என்று கார்த்திகேயன் கேட்டதும் குமரகுரு விழிக்க,
“அஜிதா அவங்க கணவர் இளம்பரிதிகிட்ட போன்ல பேசி முடிச்ச பின்னாடி திரும்ப போன் பண்ணியிருக்காங்க. கால் பண்ணி பேச ஆரம்பிக்கும் போதே கால் கட்டாகியிருக்கு. அடுத்ததா அஜிதா போன் ஆஃபாகிருச்சு. திரும்ப இளம்பரிதிக்கு போன் பண்ணி அஜிதாவுக்கு வீஸிங்ன்னு சொன்னது யார்?….” என்றார்.
“அது வந்து…” குமரகுரு திணற,
“பேசினது உங்க மனைவி தேவகி. அதுவும் சுடலைமுத்து வீட்டு தொலைபேசில இருந்து அவங்களே அழைச்சு சொல்லியிருக்காங்க. அப்போ இதுல எப்படி சம்பந்தம் இல்லாம போகும்? உங்க மனைவியை காப்பாத்த நினைக்கறீங்களா?….” என கிடுக்கிப்பிடி போட்டார் கார்த்திகேயன்.
“யுவர் ஹானர் இந்த வழக்குல இன்னும் முக்கியமான ஒரு அறிக்கையை உங்க பார்வைக்கு சமர்ப்பிக்க நீங்க அனுமதிக்கனும்…” என்று கார்த்திகேயன் சொல்லவும் அவரும் அனுமதிக்க நமச்சிவாயத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட உண்மையான அறிக்கை அது.
“இதுதான் இறந்துபோன அஜிதாவோட உண்மையான பிணகூராய்வு அறிக்கை. மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது போலியானது. இந்த கொலைக்கு மருத்துவர் நமச்சிவாயமும் உடந்தை. அதுக்கான பணபரிவர்த்தனை சமீபத்திலையும் நடந்திருக்கு. அதன் ஆதாரம் இதோ…” என இன்னொன்றையும் சமர்ப்பித்தார் கார்த்திகேயன்.
“இந்த அறிக்கையில் அஜிதாவோட மரணம் இயற்கையானது அல்ல என நிரூபணம் ஆகியிருக்கு. ஒரு இரும்பினாலான ஆயுதத்தால பின்னந்தலை பலமா தாக்கப்பட்டிருக்கு. கை எலும்புகள் உடைந்து போனதன் அறிகுறிகளும் இருக்கறதா அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கு…”
கார்த்திகேயன் ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல இங்கே பரிதி அந்த வார்த்தைகளில் உயிரோடு மரணித்துக்கொண்டிருந்தான்.
“இந்த அறிக்கையை சமர்ப்பிக்க கூடாதுன்னு அப்பவும், இப்பவும் பணம் கைமாறி இருக்கு. இதன் பின்னணில இருக்கறது ஏசிபி ரவிசந்திரன். அவர் தலைமையில் இவங்களை காப்பாத்த இத்தனையும் நடந்திருக்கு….” என்றார் கார்த்திகேயன்.
நமச்சிவாயத்தின் அறிக்கை மட்டுமல்லாது அன்று அவரிடம் சுடலைமுத்துவும், நல்லதம்பியும் பேசிய காணொளியும் சேர்த்தே சமர்ப்பிக்கப்பட நல்லதம்பியும் அந்த வட்டத்திற்குள் வந்துவிட்டான்.
“ஒரு வழக்கில் இத்தனை குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ஆணவக்கொலை செய்ததும் இல்லாமல் அதை மறைக்க பொறுப்பான அதிகாரிகளும், மருத்துவரும் கூட துணை போயிருக்காங்க. வெட்கக்கேடு…” என்றார் நீதிபதி.
“இத்தனை நாள் இல்லாம நீங்க இப்ப குற்றத்தை ஒப்புக்கொள்ள என்ன காரணம் குமரகுரு?….” என இறுதியாக கார்த்திகேயன் வினவ,
“அப்ரூவரானா தண்டனை குறையும்ன்னு சொன்னாங்க. அதான்…” என்றான் அவன்.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த நீதிபதி அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க கண்ணிவெடிகளின் சத்தம் அங்கிருந்தவர்களின் காதை கிழித்தெறிந்தது.
எதையும் உணர முடியாமல் அனைவருமே தனிதனி விசாரணைக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
செல்வபாண்டியிடம் சுடலைமுத்து நெருங்கவே இல்லை. நல்லதம்பியும் தள்ளி நின்று அவரை பார்த்ததோடு சரி.
இப்போது அத்தனைபேரும் விசாரணை வளையத்திற்குள். குமரகுரு சொன்னதோடு இல்லாமல், வாக்குமூலமாகவே சுடலைமுத்துவும், நல்லதம்பியும் நமச்சிவாயத்திடம் பேசியதுவும் வெளிவந்திருக்க இனி எல்லாம் முடிந்தது என்ற தான் நினைத்தனர்.
இந்த மறுகூராய்வுமே இன்னும் வேறு என்ன என்பதை அறியத்தான் என்று நெடுஞ்செழியன் நினைத்திருந்தான்.
தண்டனை வழங்க ஒரு உறுதியான இன்னொரு ஆதாரம். அவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவர் விவேகனிடம் இதனை ஒப்படைத்திருந்தனர்.
எல்லாவற்றையும் பரிதி சொல்லி முடித்திருக்க சுந்தரவல்லி எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார்.
அதற்கு மேல் அங்கிருக்க திராணி இல்லை. மனதோடு உடலிலும் வலுவில்லை. நடை தள்ளாட எழுந்து சென்றவர் மனதெல்லாம் அஜிதாவின் அன்றைய உயிர் போராட்டம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதில் தான் கதறி துடித்தது.
குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கிவிட்டாலும் அவர்களின் உறவுகளுக்கு அவர்கள் எங்கோ இருக்கிறார்கள் என்பது எத்தனை பலம்.
இங்கோ தங்களின் உயிரானவள் எங்கும் உயிரோடு இல்லை என்பது தானே நிதர்சனம்.
அந்த உயிரை இப்படி தொலைத்து நிற்கிறோமே என மௌனமாய் கண்ணீர் வடித்தார் சுந்தரவல்லி.
மறுநாளே நெடுஞ்செழியன் பரிதிக்கு அழைத்து சொல்லிவிட்டான். அனேகமாக அடுத்த விசாரணை தான் இறுதியானது என்பதை உறுதியாக தெரிவித்திருந்தான்.
ஆழ்கடலின் அமைதி போல பரிதியின் மனது அந்த நாளுக்கான அமைதியாக காத்திருந்தது.
இனி அவர்கள் தப்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எல்லாம் வெளிவந்துவிட்டது.
இது போதுமா என்றால் இல்லை. அவனின் மனது இன்னும் எங்கோ தவிப்பை தேக்கியபடி காதலுற்ற இதயத்தின் அரற்றலை அடக்கவியலாது அவன் அன்பின் அரூபத்தில் மண்டியிட்டு கிடந்தது.