அன்று அஜிதா வழக்கில் தீர்ப்பு நாள். வழக்கை ஒத்திவைக்க எந்த அனுமதியும் பெறமுடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் நெடுஞ்செழியன் ரிமாண்டில் வைத்திருந்த குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் அனைவருமே உண்மையை ஒப்புக்கொண்டனர்.
செல்வபாண்டி, நாச்சியார், மீரா, பேச்சியம்மாள், நல்லதம்பியின் மனைவி, பிள்ளைகள் தவிர்த்து அத்தனைபேரும் குற்றவாளி கூண்டில் நின்றிருந்தனர்.
இந்த கால இடைவெளியில் உடல் நலிவடைந்திருந்தது அனைவருக்குமே. பயம் மனதெங்கும் பயம் மட்டுமே.
இப்படி மாட்டிக்கொண்டோமே என்ற பயம் அவர்களை உலுக்கி உருக்கி இருந்தது.
தண்டனை நிச்சயம். இதிலிருந்து தப்ப முடியாதென்று தெரிந்துபோக தைரியம் எல்லாம் வற்றி போயிருந்தது.
நாச்சியார் ஓய்ந்து போயிருந்தார். ஏற்கனவே அவரின் உடல்நிலையில் பின்னடைவு.
இதில் மகளை தானே வரவழைத்து தங்களாலேயே இல்லாமல் செய்துவிட்டோமென நாள் முழுவதும் துடியாய் துடித்துக்கொண்டிருந்தார்.
மீரா அவருக்கு ஆதரவாக இருக்க செல்வபாண்டியின் முகத்தில் இறுக்கம் மட்டுமே.
இதுவரை எந்த உணர்வுகளையும் அவர் பிரதிபலிக்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை.
விசாரணையில் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லியிருந்தார்.
அந்தவகையில் அவருக்கும் இந்த கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகியது.
பரிதி அஞ்சலி, சுந்தரவல்லியுடன் ஒருபக்கம் அமர்ந்திருக்க நாச்சியார், மீரா பார்வை அவர்களிடம் தான் சுற்றி வந்தது.
பரிதி அந்த திசைக்கே திரும்பவில்லை. அவர்களை பார்த்தால் கூட பாவம் என்பதை போல அமர்ந்திருந்தான்.
நாச்சியார் பார்வை அஜிதாவின் மகளை இறைஞ்சுதலாக பார்க்கவும், கெஞ்சுவதுமாக இருந்தது.
நீதிபதி வந்துவிட்டார். அன்றைய முதல் வழக்கே அஜிதா வழக்கின் தீர்ப்பில் தான் துவங்கியது.
நீதிபதிக்கே அத்தனை ஆதங்கமும், ஆற்றாமையும். எந்த தைரியத்தில் இப்படி செய்திருக்கிறார்கள் என்று அவரின் நேர்மையான உள்ளம் தானும் ஒரு மகளை பெற்றவராக வேதனை கொண்டது.
அஜிதாவின் எலும்புகளை மறுபரிசோதனை செய்து வந்த மருத்துவ அறிக்கையை கார்த்திகேயன் சமர்ப்பிக்க அதனை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார் நீதிபதி.
நிசப்தமான அந்த அரங்கில் பரிதியின் நெஞ்சம் அஜிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க போகும் அந்த தருணத்தை எதிர்பார்த்து தவித்துக்கொண்டு இருந்தது.
மகளின் பிஞ்சு விரல்கள் தன் கைகளுக்குள் இருக்க அவனின் நடுக்கத்தை உணர்ந்தாள் அஞ்சலி.
“டாடி…” என்ற பிள்ளையின் அழைப்பில் கண்கள் கலங்க திரும்பியவன் மகளின் தோளை அணைத்து வலி மிகுந்த புன்னகையை சிந்தினான்.
அதற்குள் எல்லாம் படித்து முடித்த நீதிபதிக்கு பெருமூச்சுடனான ஆதங்கம் தலை தூக்கியது.
அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவர் கூண்டில் கூண்டோடு நிற்கும் குடும்பத்தையும் பார்த்தார்.
“இந்த கொலையை நீங்க தான் செய்ததா இப்பவாவது ஒப்பு கொள்கிறீர்களா?…” என்று அவர்களிடம் கேட்க தேவகி சத்தமாக அழுது,
“கோவத்துல புத்தி பிரண்டு போய் பண்ணிட்டோம் ஐயா. தப்புதான். ஆத்திரம் எங்க கண்ணை மறைச்சிருச்சு….” என அழ,
“விஷத்தை கொடுத்ததும் இல்லாம உங்களோட ஆத்திரத்தை அந்த பொண்ணை அடிச்சு தணிக்க முயற்சி பண்ணியிருக்கீங்க? செத்திட்டிருக்கும் பொண்ணை இரக்கமில்லாம துன்புருத்திருக்கீங்க. இத்தனை பழிவெறி இருக்குமா?…” என்றார் நீதிபதியே.
“தப்புத்தாங்கய்யா. இப்ப யோசிக்கறேன். என் பொண்ணு நடுத்தெருவுல விட்டுட்டு போய்டுவேனே? ஐயோ இப்ப நான் என்ன செய்வேன்?…” என சத்தமிட்டு அழ,
சுடலைமுத்து, நல்லதம்பி, குமரகுரு மூவரும் மௌனமாக தலை குனிந்து நின்றிருந்தனர்.
“சொல்லுங்க, இப்பவாவது உண்மையை ஒத்துக்கறீங்களா?….” என்றார் நீதிபதி.
மூவருமே ஆமோதிப்பாக தலையை மட்டுமே அசைத்தனர். வேறு வழி இருக்கவில்லை. தாங்கள் இல்லை என்றாலும் நம்பிவிடுவார்களா?
நமச்சிவாயத்திடம் உண்மையை ஒப்புவித்தது, காவல்துறை விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டது, அவர்களுக்கு எதிரான உண்மையான ஆதாரங்கள் என எல்லாம் இருக்க ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.
அதையும்விட விசாரணையில் தாங்கள் அனுபவித்த துன்பங்கள். உடலில் காயங்கள் வெளியில் தெரியாதவகையில் இருந்து வலி உயிர் போனது.
சுடலைமுத்துவால் ஒருகட்டத்திற்கு மேல் தாங்க முடியவில்லை. தளர்ந்து போய் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சி தானே முன்வந்து உண்மையை சொல்லவேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இப்போது மருத்துவ அறிக்கை வேறு வந்திருக்க எல்லாம் முடிந்தது. தப்பிக்க வழிவகையில்லை. ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் ஒப்புக்கொண்டதும் தீர்ப்பை எழுத ஆரம்பித்தார் நீதிபதி. எழுதியதை எடுத்து படிக்கவும் அனைவரின் கவனமும் சிதறாமல் அங்கே நிலைத்தது.
“பதிமூன்று வருடங்கள் காத்திருந்து ஒரு ஆணவக்கொலை நடந்திருப்பது முதல்முறை அல்ல. ஆனால் அதனை மறைக்க இத்தனைபேர் உடன்பட்டிருப்பது இதுவே முதல்முறை…”
“பெற்ற மகளையே துன்புறுத்தி கொலை செய்யிறது எந்தவகையான மனநிலை பிறழ்வு? இப்படி மனிதர்கள் தான் சமுதாயத்தின் ஆபத்தானவர்கள். சில இடங்களில் இன்னும் வெளிவராமல் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கும் கொடூரத்தின் பிம்பம் தான் இந்த சம்பவம்…”
“எங்கோ ஒரு மூலையில் பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லை என்றொரு தற்கொலை, மாதவிடாய் பிரச்சனையின் வேதனை தாளாமல் தற்கொலை, பள்ளியில் தாமதமாக சென்றதற்கு திட்டியதற்காக மனமொடிந்து தற்கொலை. இப்படி நிறையவே செய்திகள்…”
“அதன் பின்னணியில் இப்படி ஏதேனும் மரணங்கள் கொலை என்று தெரியாமலேயே நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதனை வெளிக்கொணர வேண்டிய அதிகாரிகளே பணத்திற்கு விலைபோவது தான் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அவமானம்…”
“பெண்குலத்தின் பெருமையை காப்பாற்றவேண்டிய பொறுப்புமிக்க சமுதாயத்தில் கல்வியும், பகுத்தறிவும் மேன்பட்டிருக்கும் இத்தகைய காலகட்டத்தில் காதலித்து திருமணம் செய்ததற்கு கொலை செய்யும் அளவிற்கு மக்களிடையே தலைவிரித்தாடும் வன்மம் அதிர்ச்சியாக உள்ளது…”
“இறுதியாக இது ஒரு கொலை தான் என்பதை ஆதாரப்பூர்வமாகவும், ஒப்புதல் வாக்குமூலம் கொண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளான அஜிதாவின் குடும்பத்தினரான சுடலைமுத்து, நல்லதம்பி, குமரகுரு, தேவகி நால்வருக்கும் இருபத்தியோரு வருடம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்…”
“இபிகோ செக்ஷன் முன்னூறு, முன்னூற்றி இரண்டு, முன்னூற்று நான்கின் படி தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதன் சாராம்சம் கொலை, கொலைக்கான தண்டனை, கொலைக்கு துணை போனது என்ற வழக்கின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது…” என்று தீர்ப்பை சொல்லியவர்,
“வழக்கின் மருத்துவ அறிக்கையை மாற்றி அதன் மூலம் கொலைக்கு துணை போன காரணத்தால் மருத்துவர் நமச்சிவாயம் அவர்களின் மருத்துவ சான்றிதழ் பறிக்கப்பட்டு பதினான்கு வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது….” என்றார்.
“துணை ஆணையர் ரவிச்சந்திரனுக்கும் இதில் பெரும்பங்கு உள்ளது என்பதாலும், அவரின் பதவியை துஷ்ப்ரயோகம் செய்த காரணத்தினாலும் பதவி இறக்கம் செய்யப்பட காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அவரை ஆறு மாதங்களுக்கு தற்காலிக பதவி நீக்கமும் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்….”
“இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட திரு.இளம்பரிதி அவர்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் நீதிமன்றத்தின் சார்பாக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறது…” என்று முடித்தார் நீதிபதி.
அலைபாயும் படகின் தத்தளிப்பு அலைகளின் நடுவிலும் அடங்குவதை போல ஒரு நிம்மதி பரிதியிடம்.
சற்றுநேரம் அங்கேயே கண் மூடி அமர்ந்துவிட்டான் பரிதி. தீர்ப்பு வழங்கப்பட்டதும் சுந்தரவல்லி, அஞ்சலியை அணைத்துக்கொண்டு,
“பரிதி…” என்றழைத்தார்.
இல்லை அவன் கண்கள் திறக்கவில்லை. இந்த சில நிமிடம் அவனுக்கு அமைதி தேவையிருந்தது.
மானசீகமாக அஜிதாவின் அருகில் நின்றுகொண்டிருந்தான். அவளை கவனித்தான். பேசினான். கண்ணீர் விட்டான். கரைந்தான். கண்காணாமல் அவளுடன் சென்றுவிடமாட்டோமா என மருகி கேட்டான்.
அவனின் அசைவற்ற, பதிலற்ற தன்மையில் சுந்தரவல்லியின் கையை பிடித்த அஞ்சலி,
“ஷ்ஷ்…” என்றாள் பாட்டியிடம் தொந்தரவு செய்யாதே என்பதை போல.
சுந்தரவல்லியை அமைதியாக இருக்கும்படி சொல்லியவள் தகப்பனின் தோளில் சாய்ந்து தன் கைகளை சுற்றி போட்டு பரிதியை ஆறுதலாக அழைத்துக்கொண்டாள் அஞ்சலி.
மகனுக்கு தாயான பெண்ணை பார்த்த சுந்தரவல்லிக்கு இனி இவர்கள் வாழ்க்கையில் சிறிதளவாவது அமைதியை கொடு என மானசீகமாக அஜிதாவிடம் வேண்டிக்கொண்டார்.
அதற்குள் சுடலைமுத்து, நல்லதம்பி, குமரகுரு, தேவகி இவர்களுடன் நமச்சிவாயம் என ஐவரையும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.
“அம்மா…” என தேவகி பேச்சியம்மாவை பார்த்து அழுதுகொண்டே,
“என் பொண்ணை விட்டுடாதம்மா…” என அழ,
“நீயெல்லாம் பொண்ணாடி? உன்னைய என்னன்னு என் வயித்துல பெத்தேனோ? என் நிலமைய பாரு, புருஷன், மகன், மக, மருமகன் எல்லாம் கொலைகார கும்பலால போய்ட்டீங்க. இனி இந்த பாவத்த எங்க போயி கழுவ?….” என தேவகியை அடித்தார் பேச்சியம்மாள்.
“எம்மா இப்படியெல்லாம் செய்ய கூடாது. அவங்க அக்யூஸ்ட்…” என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
“என்னம்மா பேசுற? நீயுந்தான அத்தனை பேச்சு பேசின? கோவமா இருந்த?…” தேவகி தாயை கேள்வி கேட்க,
“அடிதடியோட நிப்பீங்கன்னு பார்த்தா இப்படி கொலைன்னு பெருங்காரியத்த செய்வீங்கன்னு நான் கண்டேனா? எனக்கு தெரிஞ்சிருந்தா விட்டிருக்கமாட்டேனே?….” என அழுது புலம்பினார் பேச்சியம்மாள்.
அதற்குள் குற்றவாளிகளை சிறைசாலைக்கு அழைத்து செல்ல கூண்டு வேனில் ஏற்றிவிட்டனர்.
நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத பேச்சியம்மாள் மீரா, நாச்சியாவின் நினைவு வந்து உள்ளே செல்ல அவர்கள் பரிதி இருந்த பகுதியில் நின்றனர்.
செல்வபாண்டி அதே இருக்கையில் அமர்ந்திருக்க மீராவின் பக்கம் சென்றார் பேச்சியம்மாள்.
“அஞ்சலி…” என்றழைத்த நாச்சியாரின் குரலில் உணர்வு வரப்பெற்று நிமிர்ந்த பரிதி உடனே தன் மகளின் முகத்தை அவர்களுக்கு காட்டாமல் மறைத்துகொண்டான்.
“போகலாம்மா. இவங்க மூச்சு காத்து கூட விஷம். இவங்க இருக்கற இடத்துல நாம இருக்க வேண்டாம்….” என்று எழுந்தவன் நாச்சியாரும், மீராவும் கெஞ்ச கெஞ்ச குடும்பத்தை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.
“என் பேத்தியை கூட என்னால பார்த்து தொட்டு பேச முடியலையே? நான் என்ன பாவம் பண்ணினேன்?…” என நாச்சியார் அழ,
“நீ எந்த பாவமும் பண்ணலை நாச்சி. சின்ன சின்ன தப்பு செய்யும் போதே அதை கண்டிச்சு வைக்காம பெருமையா நினைச்ச பாவத்துக்கு தான் இப்படி அனுபவிக்கறோம்….” என்றார் பேச்சியம்மாள்.
பேச்சியம்மாவிடம் நாச்சியார் பேசவே விரும்பவில்லை. மீராவும் எதுவும் பேசவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டனர்.
“எனக்கு நிஜமாவே எதுவும் தெரியாது நாச்சி. கோவத்துல நாலு வார்த்தை கூட பேசுவேன். ஆனா கொல பன்ற அளவுக்கு நான் நினைச்சதே இல்ல. அஜிதாவை நேர்ல பார்க்கற வரைக்கும் தான் அவ மேல கோவமுமே…”
“அதுக்கு பின்னாடி நீங்க எதுவும் பேசலையாக்கா? என் பொண்ண கொன்னுட்டு அந்த வீட்டுக்குள்ளயே நடமாடி, சாப்பிட்டு தூங்கி எந்திச்சிருக்கேனே?. நான்லாம் என்ன அம்மா?…” என நெஞ்சை பிடித்துக்கொண்டு அழ,
“சத்தியமா தெரியாது நாச்சி. திரும்ப திட்டினது கூட சும்மா இருந்தவளை வீட்டுக்கு கூப்பிட்டு இப்படி அவளும் செத்து மத்தவங்க நிம்மதியை கெடுக்காங்கன்னு தான் நினைச்சேன். நம்பு நாச்சி…” என கதறினார் பேச்சியம்மாள்.
“என் பொண்ணே போய்ட்டா. இனிமே நான் இருந்து என்ன? என் சின்ன மகளையாவது உயிரோட விட்டு வச்சாங்களே?…” என்ற நாச்சியார்,
“அங்க பருங்கக்கா. என் புருஷனை. சொந்த அண்ணனே இப்படி செஞ்சுட்டாரேன்னு உடைஞ்சு போய் அழவும் திராணி இல்லாம உக்கார்ந்திருக்கறதை?….” என்று நாச்சியார் செல்வபாண்டியின் அருகில் சென்றார்.
“கிளம்புங்க, நாம போவோம்…” என்ற நாச்சியார் செல்வபாண்டியின் கையை பிடிக்க அவர் எழுந்தார்.
“ஆனா அந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன். செத்தாலும் அந்த வீட்டுக்கு வரவே மாட்டேன். என் பொண்ணு எங்களை பார்த்துப்பா. போதும், விட்டுடுங்க. எங்களை விட்டுடுங்க….” என்று நாச்சியார் சத்தமிட்டு அழ பேச்சியம்மாவும் அவரின் மருமகளும் கண்ணீருடன் பார்த்தனர்.