“உங்களை நம்பி என் பொண்ணை வரவழைச்சு அவளுக்கு காரியத்தை பண்ண வச்சிட்டேன். அவ வராம இருந்திருந்தா எங்கையோ நல்லா இருந்திருப்பா. இப்ப அவளை காவு குடுத்த மாதிரி செஞ்சிட்டேனே? இந்த பாவம் என்னை இப்படியே கொண்டு போய்ட்டா கூட பரவாயில்லை….” என அரற்றினார் நாச்சியார்.
பேசிக்கொண்டே இருந்தவரின் கண்கள் மேலோங்க அப்படியே கீழே சாய்ந்தார் நாச்சியார்.
“அம்மா….” என்ற அலறலுடன் மீரா அவரை தூக்க முயல செல்வபாண்டி சுதாரித்து மனைவியை எழுப்பி அமர வைத்தவர் வெளியே ஓடினார்.
சில மணித்துளிகளில் நாச்சியாரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டனர் மருத்துவர்கள்.
அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் துவங்க மீராவும், பேச்சியம்மாவும் உடன் இருந்தனர்.
செல்வபாண்டி நல்லதம்பியின் மனைவியை மதுரைக்கு கொண்டு விட்டு வந்தவர் குமரகுரு வீட்டிலும் விஷயத்தை சொல்லிவிட்டு வேறு வீட்டை பார்த்து வைக்க சொல்லி மீண்டும் சென்னை வந்தார்.
மறுநாள் நாச்சியாருக்கு அறுவை சிகிச்சை. அன்று காலை தான் வந்திருந்தார் செல்வபாண்டி.
சிகிச்சைக்கான பணத்தை கட்டிவிட்டு மேலே நாச்சியார் இருக்கும் அறைக்குள் நுழைந்தார் செல்வபாண்டி.
மழிக்கப்படாத தாடியும், தளர்வான நடையும் அவரின் வயதை காட்ட மனைவியின் முன் சோகமாய் அமர்ந்தார்.
“இப்ப எப்படிம்மா இருக்கு? டாக்டர் என்ன சொல்லிட்டு போனாங்க?…” மீராவிடம் அவர் கேட்க,
“சாப்பிட்டியா நாச்சியா?…” என கேட்க ‘இல்லை’ என தலையை அசைத்தார்.
“கொஞ்ச நேரத்துல ஸ்கேன் பண்ணனும்ன்னு சொல்லியிருக்காங்கப்பா. அதான் எதுவும் குடுக்க வேண்டாம்…” மீரா சொல்ல தலையசைத்தவர் அந்த அறையில் கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்த பேச்சியம்மாவை பார்த்தார்.
“நீங்க சாப்பிட்டீங்களா அண்ணி?…” என அவரிடம் கேட்க,
“அவங்க சாப்பிடலை. அம்மா போய்ட்டு வரட்டும். சாப்பிடுவோம்ன்னு சொல்லிட்டாங்க…” மீராவே அதற்கும் பதில் கூறினாள்.
“உடம்பை பார்த்துக்கனும் அண்ணி. நீங்க தைரியமா இருக்க வேண்டாமா? போனவங்க போய்ட்டாங்க…” என செல்வபாண்டி அவருக்கு ஆறுதல் சொல்ல,
“இப்படி குடிய கெடுப்பானுங்கன்னு தெரியாம போச்சே. என்னவோ ஆத்திரத்துல நாலு வார்த்தை பேசினோமா போனோமான்னு இல்லாம புள்ளைய அடிச்சே கொன்னுருக்கானுங்க பாவி பயலுங்க….” என மீண்டும் அழ நாச்சியாரும் கதற ஆரம்பித்துவிட்டார்.
“அம்மா உங்களுக்கு பிரஷர் ஏற கூடாது. என்ன பன்றீங்க? அழாதீங்க….” மீரா அவரை சமாதானம் செய்ய பார்க்க,
“நாச்சியா என்னவோ ஆத்தமாட்டாம பேசிட்டேன். நீயாச்சும் நல்லா இருக்கனும். இனிமே இதை பத்தி பேசலை…” என எழுந்து வந்து அவரிடம் சொல்ல தேம்பிக்கொண்டே இருந்தவர் கண்ணீரை துடைத்துவிட்டார் பேச்சியம்மாள்.
“விடுங்க இனி எதையும் பேசவேண்டாம்…” என மீரா சத்தம் போட பேச்சியம்மாள் சத்தமாக அழவில்லை என்றாலும் கண்ணீருடன் தான் இருந்தார்.
இனி ஊரில் எப்படி தலைகாட்ட போகிறோம் என்று மனதே விட்டு போனது அவருக்கு.
தானும் பேசுவோம், ஆத்திரம் அதிகம். அடி, உதை, மிரட்டல் எல்லாம் அவருக்கு பெரிதாய் தெரிந்ததில்லை.
ஆனால் கொலை என்று எந்த இடத்திலும் யோசிக்கவில்லை. தன்னுடைய கோபமும், புலம்பலும் கூட அவர்கள் மனதில் வன்மத்தை வளர்த்திருக்குமோ என எண்ணி மறுகினார்.
நாச்சியார், செல்வபாண்டி முகத்தை காணவே முடியவில்லை. பெண்ணை பறிகொடுத்து, அதுவும் உடன்பிறந்த அண்ணன், அண்ணன் குடும்பமே சேர்ந்து செய்திருக்க எப்படி தாங்கியிருப்பார்?
இப்போது நாச்சியார் நிலையும் கவலைக்கிடம். எல்லாம் தன் குடும்பத்தால் என குற்ற உணர்வில் தவித்து போனார்.
“நீ என்னம்மா பன்ற? நைட்டெல்லாம் முழிச்சிருந்த. நான் வந்துட்டேன்ல. நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு….” என மீராவிடம் கூறினார் செல்வபாண்டி.
லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு மகள் வேலையாய் இருப்பதாக தோன்றியது.
“சரிம்மா….” என அங்கிருந்த சேரில் அமர்ந்திருந்தார் செல்வபாண்டி.
பேச்சி அங்கிருந்தவற்றை எல்லாம் பார்த்துவிட்டு வெந்நீரும், பழமும் வாங்கிவர கீழே கிளம்பினார்.
அறைக்குள் இருக்க இருக்க அழுகை குறைவதாக இல்லை. அதனால் வெளியேறினார்.
ஐந்து நிமிடத்தில் நாச்சியாரை அழைத்து செல்ல நர்ஸ் இரண்டுபேர் வந்தனர். மீரா எழுந்துகொள்ள,
“நாங்க பார்த்துக்கறோம். நீங்க வெய்ட் பண்ணுங்க….” என்று சொல்லிவிட்டு அழைத்து சென்றனர்.
மீராவும் அமர்ந்துகொண்டாள். செல்வபாண்டி தனது போனை எடுத்து பார்த்தவர் மகளை பார்த்துவிட்டு குளியலறை சென்றார்.
சென்ற வேகத்தில் வெளியே வந்தவர் மீராவை பார்க்கவும் போனை பாக்கவும் இருந்துவிட்டு,
“மீரா அப்பாவுக்கு தண்ணில போட்டு குடிக்க குளுக்கோஸ் வாங்கிட்டு வரியாம்மா?…” என்று கேட்க,
“என்னப்பா? உடம்புக்கு முடியலையா? என்ன செய்யுது?…” என அப்படியே பதட்டத்துடன் எழுந்து வந்தாள்.
“இல்லம்மா, கொஞ்சம் தெம்பா இருக்கும் பாரு…” என்று சொல்லி,
“அண்ணிக்கு அப்படியே ஏதாவது சாப்பிட வாங்கி குடுத்து கூட்டிட்டு வா. அவங்களும் பாவம் என்ன செய்வாங்க?…” என்றார்.
“அம்மா வரவும் போறேன் ப்பா…”
“இல்லம்மா, என்னவோ கொஞ்ச நேரம் தனியா இருக்கேனே? நீ போய்ட்டு வா கண்ணு…” என்று மகளை அனுப்பி வைத்தார்.
மீராவும் எதுவும் சொல்லாமல் கீழே சென்றதும் அறை கதவை பூட்டினார் செல்வபாண்டி.
அந்த அறையை ஒட்டிய ஜன்னலை எட்டி பார்த்தவர் கைகள் லேப்டாப்பில் எதையோ அழுத்திவிட்டதை கவனிக்காமல் போனில் அழைப்பு எடுக்க பரபரப்புடன் இருந்தார்.
“பாண்டி….” என்ற சுடலையின் குரலில்,
“அண்ணே எப்படி இருக்கீங்கன்னு கேட்கவே சங்கடமா இருக்குண்ணே…” என்றார் செல்வபாண்டி.
இதுவரை இல்லாத இறுக்கமான, வன்மமான குரலில் அவர் பேச அவரின் தளர்வு எல்லாம் எங்கோ சென்றிருந்தது.
“நீ ஏன் சங்கடப்படனும் பாண்டி? நம்ம கௌரவத்தை காப்பாத்தியிருக்கேன். எனக்கு நிம்மதி தான். என்ன ஒன்னு வாழவேண்டிய என் பிள்ளைகளும் கஷ்டப்படுதுங்கன்னு தான்…” என்றார் சுடலைமுத்து.
“அதுக்குத்தான் எதுவானாலும் நாம மட்டும் பார்த்துப்போம்ன்னு சொன்னேன். என்னை எங்கயும் நுழையவிடலை நீங்க. நான் மட்டும் குடும்பத்தோட இருக்கறேன்…”
“பாண்டி எதுக்கு வருத்தப்படுற? பார்ப்போம், ஏதாவது செய்ய முடியுமான்னு? நான் வெளில வரலைன்னாலும் என் பிள்ளைங்களை வெளிய எடுத்துருவேன். ஒரு ரெண்டுவருஷம் போகட்டும்….” என்றவர்,
“எங்களை மதுரை ஜெயிலுக்கு மாத்திட்டாங்க பாண்டி. இங்க வரவும் அடிக்கடி பார்க்கலாம். உள்ள நம்மாளுங்க நிறைய இருக்காங்க. நீ ஒன்னும் வருத்தப்படாத. அங்க தொழிலை பாரு…” என்றார்.
“எப்படிண்ணே வருத்தப்படாம இருக்க? நான் பெத்தவ செஞ்ச அசிங்கத்தை துடைச்சீங்க. எனக்காக முன்ன நின்னு செஞ்சீங்க. கவலைப்படாம நான் எப்படி இருப்பேன்?….”
“பாண்டி எங்க இருந்து பேசற நீ?…”
“ஹாஸ்பிடல்ல தான். யாரும் இல்லை இங்க. உங்கட்ட பேசறது யாருக்கும் தெரியாது…”
“சரிப்பா, நீயாவது மிச்சம் இருக்கனும்னு தான் உன்னை இதுல கொண்டுவரலை நாங்க. என் மகனையே வேண்டாம்ன்னு சொன்னேன். அவன் கேட்கலை. இந்த கேஸ் திரும்ப இங்க வரப்போய் தானே இவ்வளோ பிரச்சனை. நீ ஒன்னும் நினைக்காதப்பா. எப்பவும் போல உனக்கு எதுவும் தெரியாததாவே இருக்கட்டும்…” என்ற சுடலைமுத்து,
“இங்க பாரு பாண்டி, இது எல்லாமே உன் கண்முன்னாடி தான் நடந்துச்சுன்னு எந்த சூழ்நிலையிலையும் யாருக்கும் தெரியவேண்டாம். எங்க மேல கோவமா இருக்கற மாதிரியே நீ இருக்கனும்…”
“எப்படிண்ணே உங்க மேல கோவப்படற மாதிரி இருப்பேன்? என் கண் முன்னாடி அஜிதாவுக்கு நீங்க தண்டனை குடுத்தப்போ என்னோட வேதனை, நான் பட்ட அவமானம் எல்லாம் போயிருச்சுன்னு நிம்மதியா இருந்தேன். இப்ப அதுக்கு அர்த்தமே இல்லாம போச்சே?…” என்ற செல்வபாண்டி,
“அன்னைக்கு என்கிட்டையே சொன்னாளே என் புருஷன் கால் தூசிக்கு சமமாவீங்களா நீங்கன்னு. இப்ப அவ புருஷன் என்னன்னா நம்ம குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிட்டான். அவனை அந்த பரிதியை சும்மா விடக்கூடாதுண்ணே…” என்று கொந்தளித்தார் செல்வபாண்டி.
கொலைவெறி. அடங்காத கொலைவெறி. அவரின் உடல் அசைவுகள் ஒவ்வொன்றிலும் கொலைவெறி மட்டுமே.
அத்தனையையும் தவறுதலாக அவர் தொட்டுவிட்ட மடிக்கணினி திரையின் மூலம் நேரலையாக உலகம் முழுவதும் பரவியது.
பேசிக்கொண்டே இருந்தார் செல்வபாண்டி. அவர் அறியாமல் உலகளவில் ஒரு வாக்குமூலத்தை தந்துகொண்டிருந்தார்.
விஷயம் நெடுஞ்செழியன் வரை செல்ல உடனடியாக அந்த ஏரியாவின் காவல்துறை ஆய்வாளரை பிடித்து கைது நடவடிக்கை துரிதப்படுத்தப்படுத்திவிட்டான்.
செல்வபாண்டியின் பேச்சுக்கள் ஒவ்வொன்றிலும் அஜிதாவை எப்படி துடிக்க கொலை செய்தனர் என இன்னொரு முறை தெள்ள தெளிவாக சமூக வலைத்தளத்தில் பதிந்தது.
மனிதனின் அரக்க குணம். பெண்களின் மேல் திணிக்கப்படும் கௌரவ அடையாளம். ஆணவக்கொலை.
சாது போலிருக்கும் செல்வபாண்டியின் குரூரகுணம். அவர் பேசி முடித்து கதவை திறந்து வைக்க காவல்துறை மட்டுமல்லாது அந்த மருத்துவமனை காவலாளிகள் கூட நின்றிருக்க சற்று தள்ளி மீராவும், பேச்சியும் வேரொடிந்த மரமாய் சாய்ந்திருந்தனர்.
“அஜிதாவை கொலை செய்ய காரணமா இருந்த குற்றத்திற்கு உங்களை கைது செய்யறோம்…” என நின்றவரை பார்த்த செல்வபாண்டியின் இதயத்துடிப்பு வேகமாகியது.
எப்படி கண்டுபிடித்தனர் என அதிர்ச்சியுடன் பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“நான் ஒண்ணும் பண்ணலை. நானே என் பொண்ணை கொலை செய்வேனா?…” என்ற செல்வபாண்டி,
“மீரா நீ சொல்லும்மா….” என்றார்.
அவரருகே வந்த மீரா கையை நீட்டி உள்ளே காண்பிக்க அங்கே தான் வைத்திருந்த லேப்டாப்பை காண்பித்தாள்.
அவள் செல்லும் பொழுது அணைக்காமல் திறந்து வைத்திருந்த சமூகவலைதளத்தில் இங்கு நடக்கும் நிகழ்வுகள் இன்னும் துண்டிக்கப்படாமல் பதிந்துகொண்டிருந்தது.