செல்வபாண்டி கைதாகியதும் அவருக்கென தனி விசாரணை அமைத்தது மதுரை நீதிமன்றம்.
முதலில் விசாரணையில் வாய் திறவாமல் மௌனத்தை கடைபிடித்தவருக்கு நாளடைவில் அதுவும் முடியாததாகி போனது.
மனைவியின் மருத்துவ சிகிச்சை முடிந்ததா இல்லையா என்று அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு அவரை கடுங்காவலில் வைத்திருந்தனர்.
வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்தது. நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் நேரம் சாட்சியாக மீராவும், பேச்சியுமே அவருக்கு எதிராக இருந்தனர்.
காணொளி ஆதாரமும் அவருக்கு எதிராக இருக்க மாட்டிக்கொண்டதில் வஞ்சம் குறையா முகத்துடன் இருந்தார் செல்வபண்டி.
மீராவின் மனது அதிர்ந்தது. இப்படி என்றும் அவள் தந்தையை அவள் கண்டதில்லை.
பிள்ளை போன்ற முகத்தில் கள்ளத்தனம் தாண்டிய கொடூரம் அவள் பார்த்தது. அதிலும் எதிராய் சாட்சி சொல்லியதற்கு தன்னை அவர் பார்த்த பார்வை.
“இங்க பாருங்க தம்பி, உங்களயாச்சும் கொஞ்சம் இரக்கமான மனுஷன்னு நினைச்சேன். எல்லாம் ஒரே குட்டையில ஊறின ஒன்னுக்குமத்த மட்டைங்கன்னு காட்டிட்டீங்க…” என செல்வபாண்டிக்கான தீர்ப்பன்று பேச்சியம்மாள் கொதித்துவிட்டு மீராவை அழைத்துக்கொண்டு சென்றார்.
“இவனுங்க கூட இருந்தா ஏதாவது ஒரு காரணம் சொல்லி பிடிக்கலைன்னா யோசிக்காம மிச்சம் மீதி இருக்கறவங்களையும் கொன்னுட்டு போயிருவானுங்க. வா, நாம உள்ளத வச்சு பிழைச்சுப்போம்…” என மீராவை செல்வபாண்டி முன்னிலையிலேயே பேச,
“வெக்கமாயில்ல இத சொல்ல? இப்பவும் செஞ்சது தப்புன்னு உணராம பேசற நீயெல்லாம் என்ன மனுஷன்? உன்னோட சம்பாத்தியமும், என்னை கட்டினவன் சம்பாத்தியமும் யாருக்கு வேணும்? ஊராடிச்சு உலையில போட்ட மாதிரி பெத்த பொண்ணை நம்பவச்சு கழுத்தறுத்து கொன்ன உன்னோட, உன் அண்ணனோட காச நீயே கட்டி அழு….” என ஏகவசனத்தில் பேசிவிட்டார் பேச்சியம்மாள்.
“நீ எதுக்கு அழறடி? என் உடம்புல தெம்பிருக்கு. நாம வேலையை பார்த்து சம்பாதிச்சு சாப்பிட முடியாதா?…” என்று அவளை சொல்லிவிட்டு,
“உள்ள போகும்போது, என்னை கட்டினவன்கிட்டையும், நான் பெத்ததுங்கட்டையும் சொல்லிரு…” என்று கிளம்பிவிட்டார்.
செல்வபாண்டிக்கு அவமானத்தில் முகம் சிறுத்து சின்னதாகி போனது. நாச்சியாரை பற்றி எந்தவித செய்தியையும் அவர்கள் தரவில்லை.
குமரகுருவின் அப்பா வந்து பார்த்துவிட்டு சென்றவர் அந்த வீட்டில் யாருமில்லை என்பதை மட்டும் சொல்லி சென்றார்.
“என் பேத்தியை கூட கூட்டிட்டு போய்ட்டாங்க. மதுரைக்குள்ள இல்லை. அந்த வீட்டுல இருக்க முடியாதுன்னு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க….” என்று சொல்லியிருந்தார் அவர்.
அவனருகே நெடுஞ்செழியன் இருக்க பரிதியின் அருகே அவனின் கையை பிடித்தபடி மகள் அஞ்சலி நின்றிருந்தாள்.
“உங்ககிட்ட பேசனும். ஒரு விஷயம் கேட்கனும்…” என்றவன் மகளையும் தன் முன்னே நிறுத்தி அவரிடம் காண்பித்தான்.
“என் பொண்ணு அஞ்சலி. இப்ப சில மாசங்களுக்கு முன்னாடி தான் பெரிய பொண்ணானா…” என்று பரிதி சொல்லவும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவர் தன் பேத்தியையும் பார்த்தார்.
அச்சில் வார்த்தது போல தன் மகள் அஜிதா தான். இந்த வயதில் அப்படியே தான் இருந்தாள் அஜிதாவும்.
ஒருநொடி அந்த நினைவில் செல்வபாண்டியின் மனதில் சிறிது இளக்கம் தோன்றி இறுகியது பரிதியை பார்த்ததுமே.
“என் பொண்ணுக்கு அஜிதா இருந்தாலும் பெரும்பாலும் நான் தான் சாப்பாடு ஊட்டுவேன். அதிகமா என்னோட தான் இருப்பா. அவளுக்கு சின்ன வலின்னாலும் என்னால தங்கிக்க முடியாது…” என்றவன் குரலில் கிஞ்சித்தும் உணர்வில்லை.
இயந்திரம் போல வந்தது அவன் வார்த்தைகள். ஏன் இதனை தன்னிடம் கூறுகிறான் என புரியாமல் செல்வபாண்டி பார்த்தார்.
“அஜிதாவுக்கு நீங்களும் அடிக்கடி ஊட்டுவீங்கன்னு சொல்லியிருக்கா. உங்க சாப்பாட்டோட கடைசி உருண்டை அஜிதாவுக்கு தான் குடுப்பீங்களாமே. அதுல உங்க சந்தோஷம் தான் தெரியும்ன்னு சொல்லுவா…” என்றான் பரிதி.
செல்வபாண்டிக்கு உடலெல்லாம் நடுங்கியது. அந்த நினைவுகள் அவரை நிலைகுலைய செய்தது.
“நீங்க கடைசியா அஜிதாவுக்கு விஷம் குடுத்தப்பவும் அதே சந்தோஷத்தோட, மனநிறைவோட தான் குடுத்தீங்களா? என்ன நினைச்சீங்க?…” என்ற கேள்விக்கு அவர் பதில் கூற முடியாமல் வெறித்த பார்வையுடன் அஞ்சலியை பார்த்தார்.
அஜிதாவே கேட்பதை போலிருந்தது இந்த கேள்வி. பரிதி என்ற ஒருவன் தன் பெண்ணின் வாழ்வில் வரவில்லை என்றால் என நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
அதனால் தானே இவை எல்லாம் நடந்தது என்று அப்போதும் தான் செய்ததற்கு நியாயத்தை தான் சேர்த்துக்கொண்டார்.
எதுவும் சொல்லாமல் அவ்விடத்தைவிட்டு கடக்க எத்தனிக்க பரிதியும் அவரின் முன் நின்றான் மீண்டும்.
“சொல்லிட்டு போங்க. என்ன நினைச்சீங்க? சரி, நினைச்சதை சாதிச்சிட்டீங்க. இதனால என்ன கிடைச்சது உங்களுக்கு? உங்க கௌரவம் திரும்ப கிடைச்சிடுச்சா? நிம்மதி கிடைச்சிருச்சா? உங்க சந்ததிக்கு நியாயம் செஞ்சுட்டீங்களா?…” என்ற கேள்வியின் முன் அவரால் நிற்க முடியவில்லை.
அவருக்கு நெருப்பின் மேல் நிற்க வைத்ததை போலிருந்தது பரிதியின் கேள்விகள் ஒவ்வொன்றும்.
அவன் தன்னிடம் கோவப்பட்டோ, ஆவேசத்துடனோ இந்த கேள்வியை கேட்கவில்லை என்பது புரிந்தது.
மகள் இறந்த அன்று அவனின் கோபத்தின் உச்சத்தை கண்டிருந்தாரே. அன்று எத்தனை சந்தோஷத்தை தந்தது அவனின் வலியும், வேதனையும்.
இறுமாப்புடன் அவனின் கதறலையும், கண்ணீரையும் மனதார புசித்து தன் வெறிக்கு இரையாக்கிக்கொண்ட தருணத்தை போல இதனை எதிர்க்கொள்ள முடியவில்லை.
அந்த வலியும், கேள்வியும் அவரை பொசுக்கியது. கூடவே அதில் இருந்த உண்மை.
இதனால் என்ன கிடைத்துவிட்டது? அவருக்கே தெரியவில்லை. குடும்பம் மொத்தமும் இப்போது சிறைக்கம்பியின் பின்னால்.
வெளியில் இருக்கும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் தூக்கி எறிந்துவிட்டாகிற்று.
கிடைத்தது எதுவும் இல்லை. இளம்பரிதியின் கேள்வியில் அவரின் வெறி தான் இன்னும் கூடியது.
‘இவன் தரத்திற்கு என்னை கேள்வி எழுப்புவதா?’ என்ற எண்ணம் தலைதூக்க அவனை பார்வையால் எரிக்க அஞ்சலியை பிடித்துக்கொண்ட பரிதி,
“நான் கேட்டதுல ஒரு கேள்வியாவது உங்களை பாதிக்கும்ன்னு நான் நம்பலை. ஏனா பலவருஷ காத்திருப்புக்கு பிறகும் மகள் சாகறதை கண்கூடா இருந்து பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதுவே சொல்லலையா நீங்க மனிதாபிமானத்துக்கும், மனுஷதன்மைக்கும் அப்பாற்பட்டவர்ன்னு…”
இளம்பரிதி பேச கேட்டுக்கொண்டிருந்த நெடுஞ்செழியனுக்கு அவனின் வேதனை புரிந்தது.
“பரிதி விடுங்க. இவனுங்க எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை. ஆம்பளைங்க இவனுங்க செய்யற காவாலித்தனத்துல போகாத கௌரவம் பொண்ணால போகுதுன்னு இவங்களா ஒரு சட்டத்தை வச்சுக்கறாங்க…” என்ற நெடுஞ்செழியன்,
“ஏன்ய்யா உன்னோட மகன், மருமகன் செய்யற குடியை கெடுக்கற வேலை எல்லாம் உனக்கு பெருமை. மகளுக்கு விருப்பப்பட்ட கல்யாணம் உன் கௌரவத்தை கொண்டுபோயிருச்சோ? உன்னையெல்லாம் சோறு, தண்ணி இல்லாம பட்டினி போடனும். பாவமா மூஞ்சிய வச்சிட்டு பர்ஸ்ட் அக்யூஸ்ட்டே நீயா தான் இருந்திருக்க…” என்றான்.
“பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்க வேண்டியது உங்க பொறுப்பு, கடமை தான். அதுக்காக அவங்களுக்கும் விருப்பம்ன்னு ஒன்னு இருக்கறதை எப்போ உணர போறீங்க? சொன்னதை கேட்கலைன்னா இப்படி பிடிச்ச வாழ்க்கையை அமைச்சிக்கிட்டா உடனே உங்க கௌரவம் போச்சுன்னு கொலை செய்யறதா?…” என பரிதி செல்வபாண்டியிடம் கேட்க தலை குனிந்திருந்தவர் நிமிரவே இல்லை.
“மன்னிப்பா உங்ககிட்டையா? அதுக்கு தகுதியா நீங்க எல்லாம்?…” என்று தளர்ந்து போன உடலோடு அவள் போராடி நிமிர்ந்து கேள்வி கேட்க அருகில் கூட வராமல் செல்வபாண்டி இதனை பார்த்தார்.
“கெஞ்சி மன்னிப்பு கேட்டா மட்டும் எனக்குள்ள நீங்க குடுத்த விஷம் மருந்தா மாறிடுமா என்ன? எப்படியும் என்னை உயிரோட நீங்க விடப்போறதில்லை. இதுல நான் உங்க கால்ல விழனுமா? முடியாது…” என்றவள் செல்வபாண்டியை பார்த்தாள்.
“என்னோட வாழ்க்கையை நான் சந்தோஷமா வாழ்ந்துட்டேன். நான் இல்லைன்னாலும் என் பொண்ணை பரிதி ரொம்ப நல்லாவே வளர்ப்பாங்க. அவங்களோட நிஜமா இல்லைன்னாலும் நிழலா கூடவே இருப்பேன். பிறந்தா என்னைக்கா இருந்தாலும் இறப்பும் நிச்சயம் தானே?….”
“என்னோட இறப்பு உங்க கையால இருந்தாலும் இந்த உலகத்துல எல்லா சந்தோஷத்தையும் பார்த்த நிறைவோட இருக்கும் என் மரணம். நான் இல்லைன்னாலும் என் நினைவுகள் என் குடும்பத்தை வாழ வைக்கும். வேதனை தான். உயிரோட இருந்தா மட்டும் தானா சந்தோஷம்? அவங்களோட உணர்வா கூடவே இருப்பேன். அதை உங்களால என்ன செய்ய முடியும்?…”
“ஆனா உங்களோட கடைசி காலம் அப்படி இருக்காது. நிறைவான முடிவு உங்களுக்கு கிடையாது. உங்களோட மரணம் யாருமில்லாம அநாதரவா தான் இருக்கும். இது நிச்சயம் நடக்கும். பார்க்க நானிருக்கமாட்டேன். ஆனா அன்னைக்கு நீங்க என்னை நினைப்பீங்க…” என்றவளின் பேச்சுக்கள் காதில் இடியாய் இறங்கியது.
அன்றைய வார்த்தை எத்தனை சத்தியம் வாய்ந்தது என இப்போது செல்வபாண்டிக்கு சம்மட்டியால் அடித்ததை போல புரிந்தது.
அஜிதாவின் இறப்பின் ஆரம்பநொடி தங்கள் வாழ்க்கையின் வேதனைகாலத்தின் துவக்கம்.
பரிதி வந்து நீதிமன்றம் வரை இப்படி போராடுவான் என நினைத்தும் பார்க்கவில்லை.
அதிலும் முதல்முறை தோற்று, இரண்டாம் முறை அவனின் போராட்டம் தங்களை எங்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டது.
அவரறியாமல் அவரின் கண்களுக்குள் அஜிதாவை அடுத்து அஞ்சலியின் முகம். தோன்றியது.
உண்மை, தங்களுடைய கடைசி காலம் யாருமற்ற நிதாரவுடன் தான் என்னும் நிதர்சனத்தை உணர்ந்துகொண்டே சிறைச்சாலை நோக்கி சென்றார் செல்வபாண்டி.
—————————————————————–
மதுரை ரயில் நிலையத்தில் இளம்பரிதி அஞ்சலியுடன் அமர்ந்திருக்க அதே நேரம் பேச்சியுடன் வந்தாள் மீரா. பரிதி அஞ்சலியை பார்த்ததும்,
“இப்ப வந்திடறேன் பெரியம்மா…” என்று தங்களின் உடைகள் அடங்கிய பையை பேச்சியிடம் கொடுத்து அமர வைக்க,
“இருக்கட்டும். ஆனா எனக்கு பேசனும். அடுத்து எப்போ அவங்களை பார்ப்பேனோ தெரியலை…” என்றவள்,
“நீங்க வரீங்களா?….” என கேட்டாள்.
“இல்ல, நீயே போய்ட்டு வா….” என்றவர் அங்கிருந்து அவர்களை கவனித்தார் பேச்சி.
மீரா பரிதியிடம் செல்லும் முன்பே அஞ்சலி அவளை பார்த்துவிட, உடனே பரிதியையும் அழைத்து காண்பித்தாள்.
பரிதி எதுவும் சொல்லவில்லை. அவன் கிளம்பவேண்டிய ட்ரெயின் வரவும் உடமைகளை எடுத்துக்கொண்டு மகளுடன் ஏறிவிட மீராவும் உடன் ஏறினாள்.
அவன் எல்லாவற்றையும் வைத்துவிட்டு மகளுக்கு படுக்கையை விரித்து அவளை அங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு திரும்பியவன்,
“என்ன விஷயம்?…” என்றான் மீராவிடம்.
“நான் அஞ்சலியை உங்களை பார்க்க வந்தேன்….”
“அவசியமில்லை. ட்ரெயின் கிளம்பிரும். கிளம்பு…” என நிர்தாட்சண்யமாக மறுத்தான்.
மீராவின் விழிகள் நீரை இறைக்க ஆரம்பிக்க எரிச்சலுடன் கதவினருகே வந்து நின்றுகொண்டான் பரிதி.
“ட்ரெயின் கிளம்ப பத்துநிமிஷமாகும். ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க….” என்று அவனிடம் வந்தவள்,
“சரி, நான் அஞ்சலிக்கிட்ட பேசிக்கறேன்…” என்று மீரா திரும்பி நடந்தாள்.
“ஏய், அவ்வளவு தான்….” என வழி மறித்து எச்சரித்த பரிதி,
“அன்னைக்கு நீ கோர்ட்ல உண்மையை சொல்லிட்டன்ற ஒரு சின்ன அபிப்ராயம் இருக்கு உன் மேல. தேவையில்லாம பேசி கெடுத்துக்க வேண்டாம். என்ன பேசனும்? என்கிட்ட சொல்லிட்டு கிளம்பு…” என்று பிடிவாதமாய் நின்றவனிடம் எப்படி பேச என தயக்கமும் பயமுமாக பார்த்தாள்.