“அஞ்சலி பாவம், பெண் குழந்தை. கண்டிப்பா அவளுக்கு ஒரு பெண் துணை வேணும்…” என ஒருவழியை மனதில் இருந்ததை ஆரம்பித்துவிட்டாள்.
“நானும் என் அம்மாவும் இருக்கோம். எங்களுக்கு நாங்க மட்டும் போதும். புதுசா யாரும் வேண்டாம். ட்ரெயின் கிளம்ப போகுது. நீ இப்ப இங்க நிக்கிற காரணம் நல்லதுக்கு இல்லை…” என்றான் பரிதி அடக்கப்பட்ட கோபத்துடன்.
“என்னோட அக்கா இல்லாத குறையை அஞ்சலிக்கு நான் போக்கனும்னு நினைக்கறேன் மாமா. வேற எந்த நோக்கமும் இல்லை. புரிஞ்சுக்கோங்க…”
அவன் சொல்லியதும் எங்கே தங்களுடைய ரயிலும் வந்துவிடுமோ என்னும் பதட்டத்தில் மீரா வேகமாய் சொல்லிவிட்டாள்.
பரிதியின் கோபம் பின்சென்று அந்த சூழ்நிலையிலும் நிதானத்தை வரவழைத்துக்கொண்டது.
“அஜிதா இல்லைன்னு உனக்கு யார் சொன்னா? எங்களோட ஒவ்வொரு அசைவுலையும் அஜிதா மட்டும் தான் இருக்கா. அஜிதா மட்டும் தான் எனக்கு மனைவியாகவும், என் பொண்ணுக்கு அம்மாவாகவும் இருக்க முடியும்…” என்றான் பரிதி.
“ஆனா அஞ்சலி பெண் குழந்தை மாமா. புரிஞ்சுக்கோங்க. அவளுக்கு அம்மா கண்டிப்பா அவசியம். நான் ஒரு நல்ல அம்மாவா கண்டிப்பா இருப்பேன்…” மீரா தன்னை புரிந்துகொள்வானா என்னும் தவிப்புடன் கேட்க,
“உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் வர காரணம் அஞ்சலியா இருந்தாலும் அதை என்னால ஏத்துக்க முடியாது…” என மறுத்தான் பரிதி.
“வெளிப்படையாவே கேட்கறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க. வேற எந்த எதிர்பரப்பும் இல்லை. ப்ளீஸ் மாமா. இல்லை நம்மோட வயசு வித்தியாசம் பார்க்கறீங்களா?…” என்றாள் மீரா அவனின் கையை பிடித்து நிறுத்தி.
பரிதி மீரா பிடித்திருந்த தன் கையை பார்த்தவன் ஒருகணம் மெல்லிய முறுவல் புரிந்தான்.
“இப்ப நீ என்னை தொட்டு என் கையை பிடிச்சது கூட என் பொண்ணு அஞ்சலி தொடுறது மாதிரி தான் எனக்கு தோணுது. நீன்னு இல்லை அஜியை தவிர வேற எந்த பொண்ணோட தொடுகையும் எனக்கு அப்படித்தான்…”
பரிதியின் பேச்சில் மீரா அதிர்ந்து தன் கையை எடுத்துக்கொண்டவள் கண்ணீரில் நனைய,
“அஜிதா மட்டுமே எனக்கு மனைவி. அவளோட எங்க உலகம் நிறைஞ்சு போச்சு. அங்க இன்னொருத்தர் வர நான் மட்டுமில்லை என் குடும்பத்தில் யாரும் அனுமதிக்க மாட்டோம்…” என்றவன்,
“உன் வாழ்க்கையை வீணடிக்காத. என்னை திரும்ப பார்க்கனும்னு முயற்சி பண்ணாதே. அது அஜியோட இறப்பை சொல்லி என்னை சுட்டுக்கிட்டே இருக்கும். நீ அந்த குடும்பத்து பொண்ணு. அது என்னைக்கும் மாறாது. எங்களை விட்டு போயிரு. அதுதான் எங்களுக்கு நல்லது…”
கடைசி வார்த்தையில் கடுமை ஏறி இருந்தது பரிதியிடம். எவ்விடத்திலும் அவன் தன் பெயரை கூட உச்சரிக்கவில்லை என்பதை மீராவும் உணர்ந்தாள்.
தன்னுடைய விருப்பத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோன்றினாலும் எப்போதோ விழுந்துவிட்ட விதையின் துளிர் வளர ஆரம்பித்திருக்க அவளால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
“இப்ப இந்த இடத்தில கூட என் பக்கத்துல அஜிதா இருக்கா. என்னால உணர முடியும். நான் பேசறதை கேட்டு, நான் பேசறதுக்கு அவள் பதில் சொல்லி என்னோட வார்த்தைகளுக்கு பதில் தந்திட்டு இருப்பா. அஜிதா என்னோடவே இருக்கும் போது இல்லைன்னு உணர வைக்கிற எதுவும் என் முன்னாடி வேண்டாம்…” என்றவன்,
“ட்ரெயின் கிளம்புது. கீழே இறங்கு…” என அவளை வெளியே செல் என்று கை நீட்டினான்.
பேச்சியும் அவர்கள் ரயில் வரவும் ஓடிவந்து அழைத்தார் மீராவை. அழுகை வெடித்தாலும் அடக்கிக்கொண்டு மீரா அந்த ரயிலை விட்டு இறங்கினாள்.
திரும்பி பார்க்க மெல்ல ரயில் ஊர்ந்து நகர ஆரம்பிக்க கண்ணாடியில் அஞ்சலியும் அவளிடம் என்னவோ சொல்லி புன்னகைக்கும் இளம்பரிதியும் புள்ளியாய் மறைந்தனர்.
கண்களில் அந்த சுவடுகளை படமெடுத்து மனதில் தேக்கிக்கொண்டவள் பேச்சியம்மாவுடன் தான் செல்லவேண்டிய ரயிலில் பயணமானாள்.
வாழ்க்கை இனி அவளுக்கு என்ன வைத்திருக்குமோ. ஆனால் தெரியாமல் செய்த பிழையாக இருந்தாலும் காலத்திற்கும் மீராவிற்கு தன் அக்காவின் வாழ்க்கையை, குடும்பத்தை நிர்மூலமாக்கிய குற்றவுணர்வு என்றும் நீங்காமல் இருக்கும்.
———————————————-
மறுநாள் ஆங்கில புத்தாண்டு. சென்னை முழுவதும் வானவேடிக்கைகள் தான். இரவு நேரத்தில் வானத்தில் மத்தாப்புக்களின் அலங்காரம்.
சர்வதேச விமானநிலையத்தில் சுந்தரவல்லியுடன் சாருலதா பேசிக்கொண்டிருக்க கார்த்திகேயன் பரிதியின் கைகளை பிடித்து அமர்ந்திருந்தார்.
“நீங்க கிளம்புங்க ஸார். இன்னும் ப்ளைட்க்கு நேரம் இருக்கு. இவ்வளவு நேரம் முழிச்சிருந்து உடம்பை கெடுத்துக்காதீங்க…” என்றான் பரிதி.
“எனக்கென்ன பிள்ளைகளா? ஒவ்வொருதடவையும் நாங்க வந்து வழியனுப்ப? இந்த ஒருதடவை தானே? என்னவோ உங்களை அப்படி நினைக்க முடியலை. பழகினது கொஞ்ச காலமா இருந்தாலும்…” என்றவர் தொண்டை கரகரத்தது.
வழக்கு சம்பந்தமாக ஆரம்பித்த பழக்கம் உறவுகளாக குடும்பத்துடன் சேர்ந்திருந்தவர்கள் இப்போது பிரிய நேரும் நேரம் கார்த்திகேயனுக்கு மட்டுமல்ல சாருலதாவிற்கும் தாங்க முடியவில்லை.
அஞ்சலியை மடியில் வைத்துக்கொண்டு சுந்தரவல்லியிடம் கண்கள் கலங்க சாருலதா பேசிக்கொண்டிருந்தார்.
“சாரு தான் ரொம்ப மிஸ் பண்ணுவா…” என மனைவியை பார்த்து கூற பரிதிக்கு சங்கடமாக இருந்தது.
அவன் சென்னைக்கு வந்த வேலை முடிந்தது. மீண்டும் யுஎஸ் கிளம்புகிறான் குடும்பத்துடன்.
அதற்கு வழியனுப்ப வந்திருந்தனர் கார்த்திகேயனும், சாருலதாவும். நள்ளிரவு விமானம். அதனால் அவர்கள் காத்திருக்க பரிதிக்கு அழைப்பு வந்தது.
“செழியன் கூப்பிடறார்…” என்று சொல்லி அதனை எடுத்தவன்,
“வந்தாச்சா?…” என கேட்டான் பரிதி.
பேசியதோடு தான் அமர்ந்திருக்கும் இடத்தையும் சொல்ல அடுத்த மூன்று நிமிடத்தில் வந்து சேர்ந்திருந்தான் நெடுஞ்செழியன்.
“என்ன பரிதி ரெடியா இருக்கீங்க போல?…” என வந்ததும் அவனை அணைத்து விடுவித்தவன் கார்த்திகேயனுக்கும் வணக்கம் தெரிவித்து அவர்களுடன் அமர்ந்தான்.
“ஹாய் அங்கிள்….” என்று அஞ்சலியும் வந்து அவனிடம் பேசிவிட்டு செல்ல சுந்தரவல்லியிடமும் பேசிவிட்டு வந்தமர்ந்தவன் சிறிதுநேரம் கழித்து பேசிக்கொண்டே விஷயத்தை ஆரம்பித்தான்.
“செல்வபாண்டி ஜெயில்ல ரொம்ப மோசமான நிலையில இருக்கார் போல…” என்றான் நெடுஞ்செழியன்.
பரிதியிடம் அதற்கான பிரதிபலிப்பு எதுவுமில்லை. யாரையோ சொல்வதை போல கைகட்டி அமர்ந்திருந்தான்.
“அவங்க எல்லாம் இதோட போக கூடாது ஸார். இன்னும் அனுபவிக்கனும்…” என கார்த்திகேயன் தான் கொந்தளித்தார்.
“அப்படித்தான் ஆகும் போல கார்த்திகேயன் ஸார். அவங்க பொண்ணு மீராவுக்கு இதை தெரிவிச்சிருக்காங்க. அந்த பொண்ணு அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்…”
“வேற எப்படி சொல்லும்? அந்தளவுக்காவது மனசாட்சி இருக்கே. ஆனாலும் என்னன்னு இன்னும் அந்த ஊர்ல இருக்காங்களோ?…”
“இல்லை, அவங்க இப்ப நார்த் சைட் போய்ட்டதா கோபிநாத் சொல்லி கேள்விப்பட்டேன். நல்லதம்பியோட மனைவி விவாகரத்து வாங்க போறேன்னு பிள்ளைங்களோட அவங்க அம்மா வீட்டுக்கே போய்ட்டாங்களாம். இப்ப மீராவும், அவங்கம்மா, பெரியம்மா, குமரகுரு பொண்ணு நாலு பேர் மட்டும் தனியா இருக்காங்க…” என்றவன்,
“கூட வேலை செஞ்ச ஒரு டாக்டர் மூலமா வேலை வாங்கிட்டு பூனே பக்கம் போயிட்டதா சொல்லியிருக்காங்க. இந்த குடும்பம், பெயர் எதுவும் வேண்டாமேன்னு நிம்மதியா ஒரு வாழ்க்கை வேணுமேன்னு போயிருக்காங்க. ஆனா அந்த நிம்மதி கிடைக்குமான்றது தான் சந்தேகம்…” என்றான் நெடுஞ்செழியன்.
எதற்கும் பரிதி சிறு அசைவை கூட வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பற்றிய பேச்சுக்களை தனது தலைக்குள் ஏற்றிக்கொள்ளவும் இல்லை.
“இன்னும் ப்ளைட்க்கு எவ்வளோ நேரம் பரிதி?….” என்றான் நெடுஞ்செழியன் சூழலை மாற்ற.
“இரண்டுமணி நேரம் இருக்கும்…” என்ற பரிதி நெடுஞ்செழியன் குடும்பம் பற்றி விசாரித்துவிட்டு,
“கல்யாணத்துக்கு கண்டிப்பா சொல்லுங்க. வருவோம்…” என்று மீண்டும் கூறினான்.
“நீங்க இல்லாமல் என் கல்யாணம் எப்படி? கண்டிப்பா சொல்லுவேன் பரிதி…” என்று பேசிக்கொண்டிருக்க விமானத்திற்கான அழைப்பு வந்துவிட்டது.
“கிளம்பறோம் நெடுஞ்செழியன். என் வாழ்க்கையில நான் நன்றியோட இருக்கக்கூடியவாங்க நீங்க எல்லாரும். உங்க உதவிகளை எப்பவும் நான் மறக்கமாட்டேன்…” நெகிழ்ந்து போய் பரிதி சொல்ல,
“உங்களுக்கு எப்போ டைம் இருக்கோ நீங்க எங்களை பார்க்க வாங்க…” என்றாள் அஞ்சலி அவர்களிடம்.
“கண்டிப்பா வரோம்டா. நீயும் உனக்கு லீவ் இருந்தா அப்பா கூட எங்களை பார்க்க வரனும். வருவியா? எங்களுக்கும் வேற யார் இருக்கா?…” என அவளை அணைத்துக்கொண்டு முத்தமாரி பொழிய,
“ஏன் நாங்க இல்லையா? பரிதி உங்களுக்கு மகன் மாதிரின்னு நான் நினைச்சிட்டு இருக்கேன். நாங்க இல்லைன்னு நீங்க நினைக்க கூடாது…” என்று கண்டிப்புடன் புன்னகைத்து கூறினார் சுந்தரவல்லி.
“கார்த்திகேயன் ஸார், எதுக்கு அழறீங்க? அடுத்த ட்ரிப் நாம எல்லாருமே யுஎஸ் போறோம். செலவு எல்லாம் பரிதி தான் பார்த்துக்கனும்…” என விளையாட்டாய் கூறினான் நெடுஞ்செழியன்.
“கண்டிப்பா…” என்றான் பரிதியும் முழுமனதுடன்.
உறவுகள் அல்லாத மனிதமனங்கள் அங்கே உணர்வுகளால் உறவை உருவாக்கிக்கொண்டது.
இளம்பரிதி தன் குடும்பத்துடன் விடைபெற்று விமானத்திற்கு செல்ல நெடுஞ்செழியன் கார்த்திகேயன் குடும்பத்துடன் அவன் செல்லும் வரை பார்த்துக்கொண்டு நின்றான்.
விமானத்திற்குள் வந்து அமர்ந்ததும் அஞ்சலியின் முகத்தில் தென்பட்ட நொடி நேர வலியை கண்டுகொண்டான் பரிதி.
“அஜிதா நம்ம கூட தான் இருக்கா அஞ்சலி. அம்மாவோட நாம இருந்த இடத்துக்கே போறோம். நம்மோட அஜிதாவும் வரா…” என்று தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான் மகளை.
இருவருமாக சென்னைக்கு அஜிதாவுடன் வரும் பொழுதில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி வந்தனர்.
சிறிதுநேரத்தில் அஞ்சலியும் சுந்தரவல்லியும் உறங்கிவிட உறங்கா நினைவுகளுடன் பரிதியின் பார்வை இருள்வெளியை பார்த்தது.
கண்ணாடி சாளரத்தின் வழி கும்மிருட்டில் சிறு மின்மினிகளாக வெளிச்சக்கீற்றுக்கள் மத்தியின் அவளின் முகம் ‘உங்க கூடவே இருக்கிறேன் பரிதி’ என்பதை போல அவனுடனே சேர்ந்து பயணித்தது.
“எங்க கூட தானே இருக்க அஜி…” என புன்முறுவலுடன் தான் போர்த்தியிருந்த அவளின் சால்வையில் மனைவியின் வாசம் தேடினான் இளம்பரிதி.
நினைவுகள் என்றும் நினைவுகள் அல்ல. இருள் கூட பரிதியின் மனதில் அஜிதாவின் நிழல்களாக படர்ந்தது.
அவளின் நிழலில் கூட மயங்கும் அவன் மையல் என்றும் தெளிந்த பிம்பமாக அவர்களை வாழவைக்கும்.