தாயில்லாமல் பெரிய பெண்ணாய் தன் மகள். மனது மட்டுமல்ல உடலுமே தளர்ந்து பரிதியின் முகம் கூடுதலாய் பத்துவருட மூப்பை கட்டிவிட்டது அந்த வினாடி.
“பரிதி, அமைதியா இருக்கனும். நீயே உடைஞ்சு போயிட்டா அஞ்சலியை யார் பார்க்க? இப்ப தான் நீ இன்னும் தைரியமா இருக்கனும்…” என்றார் கார்த்திகேயன்.
எல்லாவற்றிற்கும் தலையசைப்பு மட்டுமே அவனிடத்தில். பதில் சொல்லக்கூடிய மனநிலை சுத்தமாக இல்லை.
“முதல்ல போய் நீ குளி பரிதி. அஞ்சலி வந்திடுவா…” கார்த்திகேயன் அவனை அழைத்து செல்ல அவனும் சென்றான்.
குளித்துவிட்டு வரும் பொழுது மகளை தனியே அமர்த்தி வைத்திருக்க அதை பார்க்கவே முடியவில்லை.
எப்படி பூரித்திருக்கவேண்டிய தருணம் இது? சந்தோஷத்தை விட துக்கம் தான் பெருகி நின்றது.
“யூ கேன் டூ இட் பரிதி…” மனைவியின் குரலில் முகம் வெளுத்தான்.
“நோ நோ அஜிதா. என்னால முடியலை. முடியலைடி…” என வாய்விட்டே பரிதி அரற்றிவிட,
“டாடி என்னாச்சு?…” அஞ்சலி வந்து தந்தையை அணைத்துக்கொண்டதும்,
“அஞ்சலிம்மா, ஒன்னுமில்லைடா…” என தன் கண்ணின் நீரையும் துடைத்து மகளின் கன்னம் வருடி தலையை கோதினான்.
“தலையை உலர்த்தலையா பேபி?…” என கேட்டு மகளின் கூந்தலை பரிதி உலர்த்த சுந்தரவல்லி கல்லாய் நின்றிருந்தார்.
இந்த ஒரு வருடமாக மகன் படும் துயரம் சொல்லில் அடங்காததாகிற்றே. இத்தனை வயதில் இதை பார்க்கும் முதியவருக்கு இன்னுமே ரணம்.
பார்வையாளராக மற்றவர்கள் நின்றிருக்க தாயுமானவனின் கவனிப்பில் அஞ்சலி புன்னகையுடனே தான் இருந்தாள்.
அவ்வப்போது பரிதியின் முகம் நிமிர்த்தி கண்களை பார்த்து அவன் அழுகிறானா என கவனித்து கன்னம் கிள்ளி கொஞ்சி என்று அவள் செய்யும் அத்தனையும் அஜிதா தான்.
மருமகளை அப்படியே உள்வாங்கி வளர்ந்துகொண்டிருக்கும் பேத்தியின் மேல் எப்போதையும் விட இந்த நொடி இன்னுமே பேரன்பு கொதித்தெழுந்தது.
“என்னம்மா, அப்படி பார்க்கறீங்க?…” கார்த்திகேயன் சுந்தரவில்லியிடம் கேட்க,
“நான் இல்லைன்னாலும் என் பேத்தி என் பையனுக்கு எல்லாமாவும் இருப்பா. இப்ப அந்த நிம்மதி தான் எனக்கு. ஆனாலும் இவங்களுக்கு நான் இருக்கனும் கார்த்திகேயன். எப்பவும் இருக்கனும். என் ஆயுசோட ஒவ்வொரு நாளும் எனக்கு அவசியம்…”
அத்தனை வயதிலும் திடமாகவும், தைரியமாகவும் அவர் நின்று சொல்வதில் கார்த்திகேயன் வியந்தார்.
“நான் ஏற்கனவே சொன்னது தான்ம்மா. பரிதிட்ட பேசுங்க. நானே ஒரு நல்ல பொண்ணா…” என்றவரை தீர்க்கமாக பார்த்தார் சுந்தரவல்லி.
“அதுக்கு என் பிள்ளை சம்மதிக்கமாட்டான். தெரிஞ்சே அவனை என்னால வேதனைப்படுத்த முடியாது கார்த்திகேயன். இந்த வீட்டுக்கு அஜிதாவை தவிர யாருமே மருமகளா இருக்க முடியாது…” என்றார் அத்தனை உறுதியாக.
“நீங்களே இப்படி சொன்னா எப்படிம்மா? நாம தான் எடுத்து சொல்லனும். பரிதிக்கு என்ன வயசாகிடுச்சு? அதுவும் பெண் குழந்தை வேற…”
“ஏன்? ஒரு ஆணால பெண்ணை வளர்க்க முடியாதா?…” என்றவர் தந்தை, மகள் பேச்சில் கவனம் திருப்பினார்.
“எனக்கு என்ன டாடி?…” என்றாள் பரிதியின் மடியில் அமர்ந்து.
“அஞ்சலி அம்மா இதுவரை எனக்கு பொண்ணா இருந்தாங்க. இப்ப எனக்கு நிஜமாவே இன்னொரு அம்மாவாகிட்டாங்க. அந்த சந்தோஷம். டாடி அழுதுட்டேன்…” என்றான் பரிதி மீண்டும் கண்களில் நீர் கோர்க்க.
“அழாதீங்க டாடி. நாம ப்ரேவ் ஹ்யூமன்ஸ்…” என தாய்க்கு தாயாய் மகள் தந்தையை கவனிக்க சுந்தரவல்லி முகத்தில் அத்தனை பெருமிதம்.
“இதைவிட என்ன வேணும் கார்த்திகேயன்? ஆனா நான் வேற யோசிக்கறேன்…” என கார்த்திகேயனிடம் கூறிய சுந்தரவல்லி,
“இந்த கேஸ் முடிவு என்னவா இருந்தாலும் சரி கார்த்திகேயன், நான் என் பையன், பேத்தியோட திரும்ப யுஎஸ் போயிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்…” என்றார்.
“நமக்கு சாதகமா தான் இருக்கும்ன்னு நம்புவோம் அம்மா. ஏன்னா நான் விசாரிச்சவரை இப்ப அந்த டிஸ்ட்ரிக்ல ஏசிபி நெடுஞ்செழியன் தான் போஸ்டிங்ல இருக்கார். லாஸ்ட் வீக் தான் ட்ரான்ஸ்பர்ல அங்க சார்ஜ் எடுத்திருக்கார்…”
சுந்தரவல்லியிடம் புயலை அடக்கிய அமைதி. இன்னும் அவர் முகம் யோசனையில் தான் இருந்தது.
அஜிதாவின் இழப்பில் ஒரு சில நாட்கள் மட்டுமே அந்த வலியில், பிரிவில் இருந்தவர் தன்னை மீட்டுக்கொண்டார்.
இப்போதும் மகன் கலங்கி நிற்க கலங்காமல் பார்த்துக்கொண்டிருந்த பெண்மணி மேல் மதிப்பு பெருகியது கார்த்திகேயனுக்கு.
“சடங்கு சுத்தனும்ங்க…” என கார்த்திகேயனின் மனைவி அவரின் காதை கடிக்க,
“வெய்ட் பண்ணும்மா. பார்ப்போம்…” என மனைவியிடம் சொல்லிவிட்டு பரிதியின் அருகில் அமர்ந்தார்.
பிள்ளைகள் இல்லாதவருக்கு மனைவிக்கு பின் தொழில் தான் எல்லாம். அதன் மூலம் சில நட்புகள்.
இப்போது பரிதியின் மேல் அவனின் குடும்பத்தின் மேல் உண்டான பற்றுதல் கூட தொழிலின் மூலம் வந்தது தான்.
இப்படி ஒரு நிலையில் அவர்களை விட்டு செல்லவும் மனதில்லை. அதே நேரம் அங்கே இருக்கவும் நேரமில்லை.
அவருக்கான வேலைகள் காத்துக்கிடக்க கிளம்ப மனமின்றி முகம் பார்த்தபடி இருந்தார்.
“நீங்க கிளம்புங்க ஸார். நான் பார்த்துப்பேன்…” பரிதி அவரின் நிலை புரிந்து சொல்ல,
“எல்லாம் தெரியும் மேன். இது வேற விஷயம்…” என்றவர்,
“அஞ்சலி குட்டி, நீங்க பாட்டிக்கிட்ட போய் சாப்பிடுங்க…” என்று அனுப்பினார்.
“டாடி அழக்கூடாது…” விரல் நீட்டி தந்தைக்கு பாடம் சொல்லி சென்றாள் மகள்.
கோடாய் மெல்லிய புன்னகை அவனிதழ்களில். அஜிதா. இது தான் தோன்றியது பரிதிக்கு.
மகள் உள்ளே செல்ல சுந்தரவல்லியிடம் சாருலதா சடங்கு பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
“இந்த கேஸ் முடியட்டும் சாருலதா. அதுவரை பரிதி வேற யோசிக்க மாட்டான்…” என சொல்லியவர் பேத்தியின் தலையை தடவி,
கார்த்திகேயனின் நம்பிக்கையில் பரிதிக்கும் உள்ளுக்குள் ஒரு வெளிச்சம். அஜிதாவின் அரூபம் அவனை அரவணைத்து நின்றது.
வாசலில் இரும்பு கதவு திறக்கும் சப்தம் கேட்க யாராக இருக்கும் என எழுந்து சென்றான் பரிதி.
வியர்த்து போய் வேக நடையுடன் மூச்சு வாங்க வந்து நின்ற மீராவை பார்த்ததுமே உடலெல்லாம் பற்றிக்கொண்ட வேதனை பரிதிக்கு.
வாசலை மறித்து நின்றவன் தீப்பார்வையில் உள்ளே செல்ல முடியாமல் கண்ணீருடன் பரிதியை பார்த்தாள் மீரா.
“மாமா…”
“நீ எங்க இங்க?…” பரிதி குரலில் கடினம், கடினம் மட்டுமே.
“அம்மாவை இங்க உள்ள அப்பல்லோல தான் ட்ரீட்மென்ட்க்கு அட்மிட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு மார்னிங் தான் மதுரையில இருந்து வந்தோம். பாப்பாவை பார்க்கனும் போல இருந்தது. அதான்…”
“என் பொண்ணை நீ ஏன் பார்க்கனும்? கெட் அவுட்…” என்றான்.
“மாமா ப்ளீஸ், நான் யாருக்கும் தெரியாம வந்திருக்கேன். பெரியப்பா, அண்ணா எல்லாருமே வந்திருக்காங்க. அவங்களுக்கு தெரியாம வந்திருக்கேன். பார்த்துட்டு போயிடறேனே?…” என கெஞ்சினாள் மீரா.
அஜிதாவின் உடன் பிறந்த ஒரே தங்கை. விதிவசம் இருவரையும் பிரித்திருக்க இப்போது தாயில்லாத அக்கா மகளின் மீதான அன்பு இழுத்து வந்திருந்தது.
ஊரிலும் கூட பார்க்க முடியாமல் ஒரு சிறைவாசம். இப்போது இங்கே வைத்தும் பார்க்க முடியாமல் போக பரிதவித்து நின்றாள் மீரா.
கிஞ்சித்தும் இரக்கமில்லை, காண்பிக்கவும் முடியாதென பரிதி நிற்க அவனை கடந்தும் செல்லமுடியவில்லை மீராவால்.
“மாமா ஒரே ஒருதடவை. என்னோட அக்கா பொண்ணு. அவளை நான் தொட்டு தூக்க கூடாதா? பார்க்க கூடாதா? ஸ்கூலுக்கு போனேன். உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. அதான் பயந்து போய் வந்தேன்…”
“இப்ப நீ கிளம்ப போறியா இல்லையா? அதான் அங்க வந்தவளை இல்லாம பண்ணிட்டீங்களே? இன்னும் என் பொண்ணும் வேணுமா?…” வீடே அதிரும்படி இரைந்தவன் சத்தத்தில் பயந்து போனாள் மீரா.
“இப்ப கூட உன் வீட்டுக்கு கூப்பிட்டு சொல்ல முடியும். என்னை பார்க்க வந்தேன்ற ஒரே காரணத்தை வச்சு உன்னையும் இல்லாம பண்ணிடுவாங்க. போய்டு…” என அவளை நுழைய விடாமல் அவன் முன்னே நடக்க பின்னே நகர்ந்தாள் மீரா.
“உங்க கால்ல விழறேன் மாமா…” என்று அவனின் பாதங்களை தொடும் முன்னரே விலகி நின்றவன் பார்வையில் ஏகத்திற்கும் வெறுப்பு.
“உன்னை கூட நம்ப முடியலை. எந்த நிமிஷம் காலை வாருவியோன்னு தான் தோணுது. கிளம்பிடு…” என்று எச்சரித்தவன்,
“சீக்கிரமே உன் அப்பனை நான் கூண்டுல ஏத்தத்தான் போறேன். முடிஞ்சா இதை உன் வீட்டாளுங்ககிட்ட சொல்லிக்கோ…” என கூற கண்ணீருடன் துவண்டு போய் நின்றாள் மீரா.
“பரிதி, பொறுமையா இருப்பா…” என்ற கார்த்திகேயன்,
“நீ கிளம்பும்மா. இது உனக்கும் பிரச்சனையாகும். அஞ்சலியை நீங்களாம் பார்க்காம இருக்கறது தான் இந்த குடும்பத்துக்கு செய்யற பெரிய பிரதி உபகாரம். போம்மா…” என கடுமையாக சொல்ல பரிதாபமாக திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சென்றாள் மீரா.
“என்ன பரிதி, ஏன் இவ்வளோ கோவம்?…”
“கோபப்படாம? என்ன ஸார் செய்ய சொல்றீங்க? இந்த பொண்ணு தான் அவங்கம்மாவை வரவழைச்சு அஜிதாவை கூட்டிட்டு போனதே. போனது போனது தான்…” என சொல்லியவன் பார்வை புகைப்படத்தில் இருந்தவளை வேதனையுடன் பார்த்தது.
இதற்கு எந்த வகையிலும் சமாதானம் சொல்ல முடியாதே? சொன்னால் தீரும் துக்கமும் இல்லை.
சிறிது நேரம் அங்கேயே இருந்தவர் அடுத்து செய்ய வேண்டியதை பேசிவிட்டு கிளம்பி சென்றார் மனைவியுடன்.
இரவு உணவு யாருக்கும் செல்லவில்லை என்றாலும் வேறு வழியிருக்கவில்லை. உயிர் வாழவேண்டுமே.
ருசிக்கும் உண்ணவில்லை, பசிக்கும் உண்ணவில்லை. ஆனால் கடமையே என்று உண்டார்கள்.
அஞ்சலியுடன் சுந்தரவல்லி உறங்க செல்ல பரிதியின் விழிகள் வழக்கம் போல விழித்தே இருந்தது.
மனைவியின் பிரிவின் பின்னால் ஒரு இரவேனும் படுத்ததும் உறக்கம் என்பது அவனை அண்டியதில்லை.
நினைத்து, அழுந்தி, அலுத்து, கண்கள் எரிந்து, சோர்ந்து அதற்கு மேல் முடியாதென்பதை போல தானாக தன்னை மறந்து இமை மூடினாலே அன்றி சுகமாக உறங்கியதில்லை பரிதி.
அன்றும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் எதிரிருந்த புகைப்படத்தில் தன் கருவிழியை பதித்திருந்தான்.
இரண்டு வருடத்தின் முன் யுஎஸில் இருந்து கிளம்பும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
மகள், மனைவி, தான் என்று மூவரும் சந்தோஷத்தின் எல்லையில் நின்றிருந்த தருணம்.
அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சந்தோஷத்தின் எல்லையில் தான்.
அதற்கு மேலொரு சந்தோஷம் இருக்குமா என்னும் அளவிற்கு தான் வாழ்க்கை அவர்களை மகிழ்ச்சிக்கு வசீகரித்திருந்தது.
இப்போது அந்நினைவுகளில் தாக்கம் செதில் செதிலாய் அவனை வெட்டிக்கொண்டிருக்க கதவோரம் சிறு சலனம்.
“டாடி…” என மகள் நின்றிருந்தாள்.
“என்னடா அஞ்சலிம்மா…” நிமிர்ந்து அமர்ந்தவன் எழுந்து வரும்முன் அஞ்சலி வந்து தந்தையின் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
“ரொம்ப டயர்டா இருக்கு டாடி. இங்க வலிக்குது. கால் எல்லாம் பெய்ன். தூக்கம் வரலை…” என்றாள் அஞ்சலி தூக்க கலக்கம் குறையாமல்.
“ஓகே, நீ அப்பாவோட தூங்கு…” என மகளின் காலை நான்றாக நீட்டிவிட்டவன்,
“பாட்டி முழிச்சிருக்காங்களா?…” என கேட்டான்.
“ம்ஹூம், பாட்டி தூங்கறாங்க….”
“சரிடா, நீ தூங்கு…” என்றவன் மகளுக்கு தட்டி கொடுத்து கால்களை லேசாய் பிடித்து விட சில நிமிடங்களில் உறங்கி போனாள்.
அவனை போல கோபத்தில் கொந்தளிக்கவில்லையே தவிர ஆத்திரம் அளவு கடந்துகொண்டிருந்தது.
“அவ வீட்டை விட்டு போய் அசிங்கப்படுத்தினா. திரும்ப ஒருதடவை உள்ள விட்டதுக்கு இவன் இன்னைக்கு வரைக்கும் நம்ம தாலிய அறுத்துட்டு இருக்கான்….” வாய்க்கு வந்தபடி அவ்வளவு பேச்சுக்கள் பரிதியை நினைத்து.
“தம்பி சொல்றது சரி தான். நீ அமைதியா இரு நல்லா. அங்க என்னத்த கிழிக்கான் அந்த பரதேசி பையன்னு பார்த்துடுவோம். அங்கயும் அவன் மூஞ்சில கரியை பூசி அனுப்புவோம்…” என்று சொல்லியவரின் கண்கள் சிவந்து இருந்தது.
நல்லதம்பியின் தந்தையும், செல்வபாண்டியின் அண்ணனுமான சுடலைமுத்து. அந்த வீட்டின் மூத்தவர் என்னும் அடையாளத்துடன் வலம் வருபவர்.
மகனிடம் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் தீயாய் எரிந்து கொண்டிருந்தது இளம்பரிதியின் மீதான துவேஷம்.
“அடங்கமாட்டேன்றானே?…” நல்லதம்பிக்கு கண்மண் தெரியாத ஆவேசம்.
“நாம என்ன கொலையா பண்ணிட்டோம்? எதுக்கு நீ கோவப்படற? அப்பீல் பண்ணினா பண்ணிட்டு போகட்டும். திரும்ப மண்ணை கவ்வினா பேசாம போவான்…” என்றார் சுடலைமுத்து.
“நம்மளை அசிங்கப்படுத்தனும்ன்னே செய்யிறான் போல அவன். அவனை சும்மா விடாதீங்க. நல்லா கையை காலை முறிச்சு போடுங்க. அப்பத்தான் பேசாம இருப்பான். நம்மக்கிட்டையே எவ்வளோ துள்ளுறான்?…” மகனுக்கு குறையாத கோபத்துடன் பேச்சியம்மாள் கொந்தளித்தார்.
வெளியே அத்தனை கலவரங்கள் அந்த நோட்டீஸ் வந்ததில் இருந்து நடந்துகொண்டிருக்க தாயின் அறைக்குள் அவருக்கு கஞ்சியை புகட்டியபடி அமர்ந்திருந்தாள் மீரா.
“நம்ம லாயரை முதல்ல வர சொல்லு. முதல் ஹியரிங்லையே இந்த கேஸை ஒண்ணுமில்லாம செய்யனும். அதோட வழக்கு சென்னையில சொல்லியிருக்காங்க. முடியாதுன்னு சொல்ல முடியுமான்னு பார்க்கனும்…” சுடலைமுத்து கூற உடனே வக்கீலை வீட்டிற்கு வரவழைக்கும் வேலைகள் நடந்தது.
பேச்சியம்மாவின் பேச்சுக்கள் இன்னுமே தொடர்ந்துகொண்டிருக்க அறையில் இருந்தவர்கள் காதெல்லாம் கூசியது.
படுக்கையில் பாதி உயிராய் படுத்திருந்தவர் கண்களில் இருந்து நீர் இறங்க மீரா அதனை அமைதியாக துடைத்துவிட்டாள்.
மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்? அஜிதா வந்த இடத்தில் யாருமே எதிர்பாராத விதமான மரணம்.
மகளை பார்த்ததில் அடங்கி இருந்த கோபம் மீண்டும் அவளை இழந்ததில் வலுவாகிவிட அவளின் கணவனிடம் பிரேதத்தை தர முடியாதென அவனிடம் சொல்லும் முன்னரே தகனம் செய்துவிட்டனர்.
இதில் யாரை சொல்ல முடியும் என்று அவர் யோசிக்க, எந்த தவறும் தான் செய்யாத பொழுது இப்படி தன்னை அலைக்கழிக்கிறானே மகளை கட்டியவன் என்ற கோபம் செல்வபாண்டிக்கு.
விசாரணையை துவங்குமாறு நீதிமன்றத்திடமிருந்து வந்திருந்த ஆணையின் பெயரில் மீண்டும் அந்த வழக்கின் கோப்பை கையில் எடுத்தான் ஏசிபி நெடுஞ்செழியன்.