“அவர் மூலமா தான் அந்த கம்ப்ளைண்ட் நீங்க எடுத்ததா சொன்னீங்க. அவரே இதையும் சொன்னாரா? இடிக்குதே?…”
“ஆபீஸ்க்கு வர சொல்லி இந்த கேஸை எடுக்க சொன்னவர், விசாரணையை நடத்த சொன்னார். நானும் நடத்தினேன். என்னோட ரிப்போர்டை சமிட் பண்ணிட்டேன்…” என்றான் கோபிநாத்.
“ம்ம்ம்….” என்றவன் சுழல் நாற்காலியில் சுழன்றபடி யோசனையாய் இருக்க,
“பொண்ணு மேல பாசமா தான் இருந்திருக்காங்க. அதனால தான் அத்தனை வருஷம் கழிச்சு பார்த்ததும் கூப்பிட்டு போயிருக்காங்க. திடீர்ன்னு இப்படி ஆகவும் உரிமைல அவங்களே எல்லாம் பண்ணிட்டாங்க. எங்க அஜிதா வீட்டுக்காரருக்கு தகவல் சொன்னா அவங்க பாடியை வாங்கிட்டு போயிருவாங்களோன்னு ஒரு பயம்…”
“அப்படின்னு நீங்களே கதை பின்றீங்களா?….” நெடுஞ்செழியன் கடினமாக பார்க்க,
“இல்லை ஸார், அவங்க வீட்டுல தான் சொன்னாங்க. ரொம்ப அழுதாங்க இத்தனை வருஷம் கழிச்சு பார்த்தும் வாழ குடுத்து வைக்கலையேன்னு…”
“கண்ணீர் முதலைகண்ணீரா இல்லையான்னு சுலபமா கண்டுபிடிச்சிருவீங்க போல? தப்பு செஞ்சவங்க அழுதாலும் கண்ணீர் வரத்தான் செய்யும் கோபிநாத். முதல்ல ஒரு போலீஸ் மாதிரி நடந்துக்கோங்க….”
“ஸாரி ஸார்…”
“கல்யாணம் ஆகிடுச்சா?…”
“எஸ் ஸார்…”
“பசங்க….”
“ரெண்டுபேர்…”
“ம்ம்ம், சந்தோஷமா இருக்கீங்க. அதான் இழப்போட வலி தெரியலை…” என்றவன்,
“இது விபத்தாவே இருந்தாலும் கொலையா இருக்குமான்னும் நாம ஆராயனும். அதுக்கு தானே படிச்சிட்டு இந்த வேலைக்கு வந்திருக்கோம். மூளையை எங்கயும் கடன் குடுத்திடலையே?….” என்றான் கடுமையாக.
“ஸாரி ஸார்…”
“எத்தனை ஸாரி? இதுக்கே வெக்கப்படனும் நீங்க…” என்றதும் கோபிநாத் தலை குனிந்தான்.
“இனி இந்த கேஸ் சம்பந்தமா விசாரணை என் பார்வையில் தான். திரும்பவும் நேரடியா விசாரிக்க ஆரம்பிக்கனும். அதுக்கு முன்னாடி அஜிதாவோட அப்பாவை, அம்மாவை, தங்கச்சியை வர சொல்லுங்க….” என்றவன் பரந்தாமனையும் பார்க்க,
“எஸ் ஸார்….” என்றார் அவர்.
கோபிநாத் சென்ற பின்னர் மீண்டும் அந்த காணொளியை பார்த்தான் நெடுஞ்செழியன்.
“பரந்தாமன் நீங்க எழுதினதை தாங்க….” என வாங்கி அதனையும் ஒன்று விடாமல் படித்து பார்த்தவன் அதனை தூக்கி வீசினான்.
“என்ன எழவு விசாரணை நடத்திருக்கானுங்க? இடியட்…” என்றான் கோபமாக.
“இன்னைக்கே அவங்களை வர சொல்லுங்க. அப்படியே அந்த இறந்த பொண்ணோட புருஷனுக்கும் இன்பார்ம் பண்ணுங்க. நாளைக்கே இளம்பரிதி இங்க இருக்கனும்…”
“ஓகே ஸார்….”
“ஒழுங்கா உருப்படியா வேலையை பார்க்காம எல்லாரும் என்ன ஈ ஓட்டிட்டி இருந்தானுங்களா? எத்தனை ஓட்டை ஒரு வழக்குலயே?….” என சொல்லி அத்தனை பேச பரந்தாமன் அமைதியாக நின்றார்.
நெடுஞ்செழியன் பற்றி கேள்விபட்டிருக்கிறார் என்பதனால் இவை எல்லாம் எதிர்பார்த்தது தான்.
அன்று பிற்பகல் வேளையில் செல்வபாண்டியுடன் சுடலைமுத்துவும் நல்லதம்பியும் உடன் வர அவர்களுடன் வழக்கறிஞர் ஒருவரும் வந்திருந்தார்.
“ஸார் அந்த அஜிதா கேஸ்…”
“வந்தாச்சா?…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஆமா ஸார், வெய்ட் பன்றாங்க….” என்றதும் தனக்கு முன்னிருந்த கணினியில் அவர்கள் இருக்கும் பகுதியை பெரிதாக்கி பார்த்தான்.
சில நொடிகள் அவர்களின் முகபாவனையிலிருந்து, உடல்மொழி வரை கவனத்தில் எடுத்தான்.
“யார் யார் வந்திருக்காங்க பரந்தாமன்? கூட அட்வகேட் இருக்கார் போல?…”
“அஜிதாவோட அப்பா, பெரியப்பா, அண்ணன், அப்பறம் அவங்க அட்வகேட்…” என சொல்லவும்,
“கேஸ் ஹிஸ்டரில அஜிதாவுக்கு கூட பிறந்தது ஒரு தங்கச்சின்னு இருக்கே?…”
“அது பெரியப்பா பையன் ஸார். விசாரிச்சிட்டேன்….”
“ஓகே, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அனுப்புங்க….” என்று சொல்லிவிட்டு வேலை பார்த்தவன் கண்ணில் ஒன்று திரையிலும் இருந்தது.
பதினைந்து நிமிடங்கள் கடந்ததும் தான் நெடுஞ்செழியன் மணியை அடித்து அவர்களை உள்ளே வர அனுமதித்தான்.
நால்வரும் உள்ளே நுழைய நெடுஞ்செழியன் புருவங்கள் ஏறி இறங்கியது அவர்களை பார்த்ததும்.
“உட்காருங்க….” என அனுமதித்தவன்,
“இதுல அஜிதாவோட அப்பா….” என கேட்கவும்,
“நான் தான் ஸார். பேர் செல்வபாண்டி…” என்றார்.
“நான் உங்களை தானே வர சொல்லியிருந்தேன். இப்பவே லாயர் கூட வந்திருக்காரே? முன்ஜாமீனுக்கா?….” என கேட்டுக்கொண்டே அனைவரையும் பார்க்க நல்லதம்பிக்கு ஆத்திரம்.
அது அப்படியே அவனின் முகத்தில் தாண்டவமாட சுடலைமுத்து மகனை அடக்கிவைத்தார்.
“ஸார் க்ளோஸ் பண்ணின கேஸை திரும்ப தொடங்கி இருக்கீங்க? என் கட்சிக்காரர் சார்பா நான் வந்திருக்கேன். விசாரணைன்னு வர சொல்லி இதென்ன மிரட்டல் மாதிரி?…” என்றார் லாயர்.
“ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு இவ்வளோ கோபப்படனுமா? சரி விடுங்க. நான் செல்வபாண்டிக்கிட்ட தனியா பேசனும்….” என்றான் நெடுஞ்செழியன்.
“என்னோட சித்தப்பா ஒரு அப்பாவி, அவர்கிட்ட தனியா என்ன பேச போறீங்க? என்ன விசாரணையா இருந்தாலும் எங்களையும் வச்சுக்கிட்டு பேசுங்க…” என நல்லதம்பி சொல்ல,
“உங்க சட்டப்புத்தகம் என்ன சொல்லுது லாயர் ஸார்?….” என்றான் நெடுஞ்செழியன் அவரிடம் பார்வையை செலுத்தி.
“ஓகே ஸார், நாங்க வெளில இருக்கோம். ஆனா அவர் உடல்நிலை சரியில்லாதவர். கவனத்துல வச்சுக்கோங்க…” என சொல்லி சுடலைமுத்துவையும், நல்லதம்பியையும் அழைத்துக்கொண்டு சென்றார்.
அவர்கள் சென்றதும் செல்வபாண்டி பரிதாபமாக அமர்ந்திருந்தார் நெடுஞ்செழியனை பார்த்து.
“என்ன ஸார் கேட்க போறீங்க? அந்த எடுபட்ட பய சொன்னான்னு திரும்ப எங்களை கூண்டுல ஏத்த போறீங்களா?…” என்றார் கண்ணீருடன்.
“இப்ப உங்களை கூண்டுல ஏத்தத்தான் கூப்பிட்டிருப்பேன்னு நீங்களா ஏன் கற்பனை பண்ணிக்கறீங்க? இன்னும் நான் எதுவுமே கேட்கலையே?…” என்றான் நெடுஞ்செழியன்.
“எல்லாம் சொல்லிட்டேன். திரும்பவும் கேஸ்ன்னு எங்களை உயிரை வாங்கினா? ஏற்கனவே ஒரு பொண்ணை பறி கொடுத்துட்டோம். கல்யாணத்துக்கு இன்னொரு பொண்ணு தயாரா நிக்குது. இன்னும் இதையே பேசினா அவ வாழ்க்கை என்னவாகும்?…” என்றார் செல்வபாண்டி.
“இதை கவலைப்படவேண்டியது எங்க வேலை இல்லை செல்வபாண்டி. விசாரணைன்னு வர வழக்கை நாங்க ஒத்திவைக்க முடியாது. அதுக்கு நாங்க இங்க இல்லை…” என இளக்கமின்றி.
ஆனால் அவனின் விழிகள் செல்வபாண்டியின் ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாய் படம் பிடித்தது.
“சரி சொல்லுங்க…” என்றவன் கேள்வியில்,
“சாதாரண குடும்பம் தான் எங்களோடது. கூட்டுக்குடும்பம். அண்ணன் குடும்பமும், நாங்களும் சேர்ந்து தான் இருக்கோம். ஓட்டல் நடத்திட்டிருக்கோம். வேற பெருசா ஒண்ணுமில்ல…” என அவனை பார்க்க,
“நீங்க நிறுத்தாம சொல்லுங்க. கேள்வி கேட்கனும்னு எனக்கு தோணும் போது நானே கேட்பேன்…” என்றான் அவரிடம்.
“சரிங்க ஸார். எனக்கு ரெண்டும் பொண்ணுங்க. அண்ணனுக்கு பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு. அந்த பொண்ணோட வீட்டுக்காரர் தம்பிக்கு தான் என்னோட மூத்த பொண்ணை சம்பந்தம் பேசியிருந்தோம். டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டுச்சு…”
“அப்ப கையில கிடைச்சிருந்தா கொன்னு போடனும்ன்னு அவ்வளோ வெறி இருந்தது என்னமோ நிஜம் தான். ஆனா பதிமூணு வருஷம் கழிச்சு வந்த பிள்ளையை நாங்க எப்படிய்யா கொல்ல முடியும்?…” என முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டார்.
சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் அவருக்கு தண்ணீரை நகர்த்திய நெடுஞ்செழியன் செல்வபாண்டி குடித்து முடிக்கவும்,
“மேல சொல்லுங்க….” என்றான்.
“என்னோட சின்ன பொண்ணு பெரியவளை கூட்டிட்டு வரேன்னு சொன்னப்ப எங்க உயிரெல்லாம் பார்க்கனும்னு ஆசைப்பட்டு துடிச்சது. எத்தனை வருஷம் கழிச்சு பொண்ணை பார்க்க போறோமேன்னு. பார்த்தவளை பார்க்காமலே இருந்திருக்கலாம்ன்னு நினைக்க வச்சிட்டா ஸார்…”
“எங்கையோ நல்லா இருக்கான்னு நினைச்ச நேரம் எங்க வீட்டுக்கே வந்து அவ சாகனும்ன்னு இருந்திருக்கு. விதி. வேற என்ன சொல்ல? நைட்டுக்கு தூங்க போனவளை இப்படி காவு குடுப்போம்ன்னு நினைக்கலையே…” என முகத்தில் அடித்துக்கொண்டு மீண்டும் அதே அழுகை.
“சரி ஏன் உங்க மருமகன் வரதுக்குள்ள தகனம் செஞ்சீங்க? அதுவும் அப்படி ஒரு விபத்து நடந்திருக்கு. போலீஸ்க்கு சொல்லியிருக்கனுமே? ஏன் செய்யலை?…” என கேட்டான்.
“கோவம் தான் ஸார். எங்க அவ புருஷன் வந்து என் பொண்ணை கொண்டு போயிருவானோன்னு எங்க முறைப்படி சடங்கு செய்ய முடிவு பண்ணி செஞ்சிட்டோம். அவன் இப்படி செய்வான்னு நினைக்கவே இல்லையே? பதிமூணு வருஷம் காத்து கிடந்து கொலை செய்யற அளவுக்கு நாங்க ஆள் இல்லை ஸார்….”
செல்வபாண்டியனின் பேச்சு உருக்கமாகவும், பரிதாபமாகவும் இருக்க நெடுஞ்செழியன் முகம் எந்தவித பாவனையையும் காண்பிக்கவில்லை.
“நீங்க போய்ட்டு உங்க அண்ணனை வர சொல்லுங்க…” என்றான்.
சுடலை முத்துவும் செல்வபாண்டியன் சொல்லியதை போலவே வருத்தத்துடனும், பரிதி மேல் கோபத்துடனும் பேசினார்.
“ஸார், எனக்கு இப்பவும் என் தங்கச்சி மேல கோபம் இருக்கு தான். ஆனா அதுக்காக அத்தனை வருஷம் கழிச்சு வீடுக்கு வந்தவள கொலை செய்வோமா? என்ன ஸார் இது?…” என்றவன்,
“ஆனா அவனை சும்மா விடமாட்டேன். என் குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டே இருக்கான்….” என கொந்தளித்தான் நல்லதம்பி.
அனைவரிடமும் விசாரித்து முடித்தவன் அடுத்து வீட்டிற்கு வருவதை பற்றியும் சொல்லியிருந்தான்.
“இது முதற்கட்ட விசாரணை தான். இன்னும் பிராப்பரா நான் ஆரம்பிக்கலை…” என்ற நெடுஞ்செழியன்,
“மீரா, அஜிதா அம்மாவையும் விசாரணைக்கு வர சொல்லியிருந்தேனே?….”
“வீட்டு பொண்ணுங்களை நாங்க ஸ்டேஷன் வரை கூட்டிட்டு வர முடியாது ஸார். அதுவும் மீராவுக்கு சீக்கிரம் கல்யாணம் பேசலாம்ன்னு இருக்கோம். இப்ப என்னோட சித்திக்கு உடம்பும் சரியில்லை…” என நல்லதம்பி சொல்ல,