“உட்காருங்க மிஸ்டர் இளம்பரிதி….” உள்ளே வந்த பரிதியை அமர சொல்லிய நெடுஞ்செழியன் அவனை துளைக்கும் பார்வையுடன் எதிர்கொண்டான்.
“தேங்க்யூ ஸார்…” என்றவனின் முகத்தில் இருந்த நம்பிக்கை நெடுஞ்செழியன் கண்களுக்கு தப்பவில்லை.
“உங்களோட வந்திருக்கறவர் தான் உங்க லாயரா?….”
“ஆமா ஸார். அட்வகேட் கார்த்திகேயன். இப்ப அவர் என்னோட வெல்விஷர் கூட. எங்க ஃபேமிலிக்கு இங்க ஆதரவா இருக்கறவர்….” என கூறினான் பரிதி.
உள்ளே வரும்பொழுது வழக்கறிஞரையும் அழைத்துக்கொண்டு வருவேன் என்னும் எந்த அடாவடியும் இன்றி தனியாகவே தைரியமாக வந்திருந்தவன் மேல் மதிப்பு உண்டாகியது நெடுஞ்செழியனுக்கு.
“ஓகே…” என தலையசைத்து,
“ம்ம்ம், சொல்லுங்க. அஜிதா உங்களுக்கு எப்படி தெரியும்? எப்படி பழக்கம்?…” என ஆரம்ப கேள்வியில் இருந்து அவன் ஆரம்பிக்க பரிதி முகத்தில் வேதனையின் சாயல்.
“இது வழக்கமான விசாரணை தான். அதோட எனக்கு எல்லாம் தெரிஞ்சா மட்டும் தான் என்னால இந்த கேஸ்ல என்ன பண்ண முடியும்ன்னு பார்க்க முடியும்…”
“ஓகே ஸார், சொல்றேன்…” என்னும் பொழுதே பரிதி முகம் கலங்கியது.
“உணர்ச்சிவசப்படாம எல்லா விஷயத்தையும் சொல்லுங்க. தைரியமா இருங்க…” நெடுஞ்செழியன் பரிவுடன் சொல்ல,
“உணர்ச்சி எல்லாம் எப்பவோ அவளோடவே போயிருச்சு ஸார். இப்ப என் பொண்ணுக்காக மட்டுமே எல்லாம்…” என்றான் தொண்டை அடைக்க.
“உங்க பொண்ணு வந்திருக்காங்களா?…”
“இல்லை ஸார், நானும் கார்த்திகேயன் ஸாரும் மட்டும் தான் வந்திருக்கோம். பொண்ணு அம்மாவோட இருக்காங்க…” என்றதும்,
“ஓகே, சொல்லுங்க….” என நெடுஞ்செழியன் பரிதியின் பேச்சுக்களை பதிவு செய்ய ஆரம்பித்தான்.
“நான் ஒரு மென்பொறியாளன், யுஎஸ்ல ஒரு பெரிய கம்பெனில வொர்க் பன்றேன். அம்மா மட்டும் தான். அப்பா நான் ஸ்கூல் முடிக்கும் போதே தவறிட்டார். அதுக்கப்பறம் அம்மா தான் எல்லாம்…”
“அஜிதாவை என் ப்ரென்ட் மூலமா தான் மீட் பண்ணினேன். சென்னைல மெரிட்ல மெடிக்கல் சீட் கிடைச்சு படிக்க வந்த பொண்ணு. அங்க தான் என் ப்ரெண்ட் படிச்சிட்டிருந்தான். அவனை பார்க்க வர போக இருந்தப்போ அவனோட ப்ரெண்டா அஜிதாவை தெரியும். அப்படி ஆரம்பிச்சது தான் எங்களோட ப்ரெண்ட்ஷிப்…”
“என்னோட ப்ரெண்ட் படிப்பு முடிஞ்சதும் நாங்க பெருசா பார்த்துக்கலைன்னாலும் போன், நேர்ல பார்க்கும்போது சில விசாரிப்புன்னு தொடர்ந்திட்டிருந்த எங்களோட நட்பு காதலாக என்னோட அம்மாக்கிட்ட அப்பவே நான் அஜிதாவை அறிமுகப்படுத்தி வச்சேன். அவங்களுக்கும் அஜிதாவை ரொம்ப பிடிச்சது…”
“படிப்பு முடிஞ்சதும் வீட்டுல பேசுவோம்ன்னு அம்மா சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டா அஜிதா. விஷயத்தை சொன்னா அடுத்து எப்பவும் அவங்களை மீறி வெளில வரமுடியாது. கொன்னு போட கூட தயங்க மாட்டாங்கன்னு சொல்லி எங்களை பேசவிடலை….”
“அப்போ தான் படிப்பை முடிச்சு மேல படிக்கனும்னு அவங்க வீட்டுல கேட்ட நேரம் அஜிதாவுக்கு நிச்சயம் பண்ணியிருக்கோம்ன்னு சொல்லியிருக்காங்க அஜிதாவோட அப்பா. அதுக்கு மேல பேச எதுவுமில்லைன்னு கிளம்பி வந்துட்டா. அதுவும் அத்தனை சுலபமா இல்லை….”
“சர்ட்டிபிக்கேட் வாங்கனும்ன்னு போய் சொல்லி கிளம்ப, கூட அஜிதா அண்ணனும் வந்திருந்தாங்க. அவங்களுக்கு டவுட் வந்திருக்கும் போல. அதோட இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு அஜிதாவோட மறுப்பும் அவங்களுக்கு சந்தேகம். அதான் துணைன்னு சொல்லி வந்திருந்தாங்க…”
“ஏற்கனவே எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு பாதுகாப்புக்கு முதல்லையே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணியிருந்தோம். எனக்கு வேலையும் யுஎஸ்ல கிடைக்க அதன் மூலமா பாரின் போக எல்லாம் ஏற்பாடும் தயாரா இருந்தது. அஜிதா வரவும், நாங்க சேர்ந்து கிளம்பவும் சரியாய் இருந்தது….”
“அம்மாவோட அஜிதாவை கூட்டிட்டு நான் யுஎஸ் கிளம்பிட்டேன். வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போச்சு ஸார். எங்க சந்தோஷத்துக்கு பரிசா என் பொண்ணும் கிடைச்சா. அந்தமாதிரி ஒரு வாழ்கையை யாருமே வாழ்ந்திருக்க முடியாது அப்படிங்கற அளவுக்கு எல்லாமே கிடைச்சது அந்த சில வருஷத்துல…”
பேசும் நிமிடங்கள் அந்த நிகழ்வுக்கே சென்றுவிட்ட நெகிழ்வை பரிதியின் முகம் எடுத்துரைத்தது.
பரிதாபம். பார்த்த நொடி நெடுஞ்செழியன் மனதில் தோன்றியது அந்த ஒன்று மட்டுமே.
அழகான கனவு கலைந்ததை போல கொடுத்து பிடுங்கியதில் வாழ்க்கை அவனை வஞ்சித்துவிட்டதாக தான் தோன்றியது.
உள்ளுணர்வு பொய்த்ததில்லை. பரிதிக்கான நியாயத்தை நிச்சயம் தேடியே ஆகவேண்டும் என காக்கிச்சட்டையை தாண்டிய ஒரு வேகம் அவனின் மனதிற்குள்.
எப்போதாவது சில தருணங்கள் இப்படி அவனுக்கான நெகிழ்வை தொட்டு தரும். இன்று பரிதியின் மேல் நின்று காட்டியது அந்த நெகிழ்வு.
“கொஞ்ச நேரம் அமைதியா இருந்து சொல்றீங்களா பரிதி?….” என்றான் கனிவுடன்.
“நான் ஓகே ஸார், நினைச்சு வருந்தி மட்டும் என்ன கிடைச்சிடும்? ஆனா எப்படியாவது உண்மை வெளில வரனும். நம்பி போன பொண்ணோட உயிரை எடுத்துட்டு தப்பே செய்யலைன்னு எல்லாத்தையும் மூடி மறைச்சு சந்தோஷமா கொக்கறிக்கறாங்க…” என்ற பரிதி,
“அன்னைக்கு என் பொண்ணு தப்பிச்சிடுச்சாம். என்கிட்டயே குழந்தை ஸார் அவ. என்ன ஒரு வன்மம்? கொலைவெறி புடிச்ச மனுஷங்க சமூகத்துக்கு ஆபத்து இல்லையா? இன்னைக்கு அஜிதா, நாளைக்கே அவங்க சொந்தத்துல வேற யாராச்சும். இது நடந்துட்டே இருக்கும். பயமில்லாம போகும்…” என்றான்.
“ஆனா அவங்க நாங்களே எங்க பொண்ணை எப்படி கொல்லுவோம்ன்னு கேட்கறாங்க இளம்பரிதி?…”
“ஓகே, நீங்க மேல சொல்லுங்க. யுஎஸ்ல இருந்த நீங்க திரும்ப சென்னை வந்த காரணம்? இந்தியாலையே செட்டிலாகவா?…” நெடுஞ்செழியன் அவனின் பேச்சை துவக்கினான்.
“இல்லை ஸார், எங்க கம்பெனில இருந்து சென்னைல இன்னொரு ப்ராஞ்ச் திறக்கறாங்க. அதை பார்த்துக்க எக்ஸ்பீரியன்ஸான ஒருத்தர் வேணும்ன்னு தான் என்னை அப்பாயின்ட் பண்ணினாங்க. மூணுவருஷம் இங்க வொர்க் பன்ற மாதிரி வந்தோம்…”
“அதுக்கு நீங்க குடும்பத்தை கூட்டிட்டு வந்திருக்க வேண்டாமே?…” என்றதுமே பரிதியின் கண்களில் இருதுளி நீர் வந்து நின்றது.
“அதிகபட்சம் நாலு நாள், அஞ்சு நாள். அதுக்கு மேல என்னை பிரிஞ்சு அவங்களோ, அவங்களை பிரிஞ்சு நானோ இருந்ததில்லை ஸார். இத்தனை வருஷமாச்சு, என்னாகிடும்ன்னு ஒரு அலட்சியம். குடும்பத்தோட வந்துட்டோம்…”
“ஓகே…” என்றான் நெடுஞ்செழியன்.
“அஜிதா அங்க ஏற்கனவே வேலை பார்த்திட்டிருந்ததால இங்க உள்ள ஹாஸ்பிட்டல்ல ரொம்ப ஈசியா வேலை கிடைச்சது. ஒருவருஷம் வரைக்கும் பெருசா எந்த பிரச்சனையும் இல்லை. நாங்களும் மதுரை பக்கம் போகலை. அதை நினைக்கவும் இல்லை…”
“அப்பப்போ அஜிதா சில நேரம் பேசுவா. ஆனா பேச்சு மட்டும் தான். போய் பார்க்கனும்னு விரும்பினதில்லை. போக வேண்டாம்ன்னு முடிவோட இருந்தா. விதி ஸார்…” என்றான் பரிதி பெரிய மூச்சுக்களை இழுத்துக்கொண்டே.
“அஜிதாவுக்கு மதுரையில் வேலைன்னு சொல்லவும் நீங்க என்ன சொன்னீங்க? எப்படி தனியா அனுப்பி வச்சீங்க பரிதி? யோசிக்கலையா?…” நெடுஞ்செழியன் தனது சந்தேகத்தை கேட்க,
“என் பொண்ணு கேரம்போர்ட் ஸ்டேட் சேம்பியன். அஜிதாவுக்கு மதுரையில வேலை இருந்த அன்னைக்கு டெல்லியில் என் பொண்ணுக்கு போட்டி. ரெண்டையுமே தவிர்க்க முடியாத சூழ்நிலை. எனக்கு தனியா அஜிதாவை அங்க அனுப்ப விருப்பமில்லை…”
“ஹாஸ்பிட்டல்ல இருந்து நிறையப்பேர் வராங்க. தனியா போகலையேன்னு சொல்லி என்னையும் தைரியம் சொல்லி அனுப்பி வச்சா ஸார். அவ தைரியம் எனக்கு இல்லை. அங்க போய் சேர்ந்த வரைக்கும் என்னோட பேசிட்டே தான் இருந்தா…”
“அஜிதா தங்கச்சியை பார்க்கற வரைக்கும் எல்லாம் சரியா தான் இருந்தது. ஆனா அதுக்கப்பறம் அங்க போறேன்னு சொன்னவ என்னை சமாதானம் செஞ்சா. அம்மாவுக்கு முடியலை. போய் பார்த்துட்டு மறுநாளே கிளம்பிடறேன்னு. அன்னைக்கு நைட் அவ்வளோ சந்தோஷமா பேசினா…”
“ரெண்டாவதுமுறை அவ பேச ஆரம்பிக்கும் போதே போன் கட்டாகிருச்சு. திரும்ப நான் யாருக்கு கூப்பிடன்னு தெரியலை. நான் யோசிக்க, அதுக்குள்ளே அவங்க வீட்டு நம்பர்ல இருந்து போன் வந்துச்சு…”
“ஆனா பேசினது அஜிதா இல்லை. அவங்களோட அக்கா. அஜிதாவுக்கு வீஸிங் வந்துட்டதால படுக்க போயிட்டதா சொன்னாங்க. அதுக்கப்பறம் நான் பேசவே இல்லை…” என்று சொல்லி முடித்தவன் முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டான்.
கணம் தாங்க முடியவில்லை. நெஞ்சில் சுருக்கென்று வலியாய் குத்திக்கொண்டிருந்தது அந்த நினைவுகள்.
பரிதியின் உடல்மொழியில் என்னவோ ஒரு மாற்றம். சட்டென எழுந்துவந்த நெடுஞ்செழியன் அவனின் முகத்திலிருந்த கையை எடுக்க கண்கள் மேல்நோக்கி செல்ல மயங்கி இருந்தான் பரிதி.
நொடியும் தாமதிக்காமல் மருத்துவ உதவிக்கு உடனடியாக பரிதியை அனுமதித்தவன் பரந்தாமனை உடன் இருக்கும்படி சொல்லிவிட்டு கார்த்திகேயனை அழைத்து பேசினான்.
நிறைய விஷயங்கள் வழக்கு நடந்த விதத்திலும், வாக்குமூலத்திலும், பரிதியின் பேச்சிலும் முரண்பட்டு தெரிந்தது.
“ஸார் அந்த தம்பி முழிச்சிட்டாங்க…” பரந்தாமன் தகவல் தர உடனே அங்கே விரைந்தான் நெடுஞ்செழியன்.
“எப்படி இருக்கீங்க பரிதி?…” என கேட்டு அவனருகே அமர்ந்தான்.
“ஓகே….” என்று சொல்லியவன்,
“என் போன் வேணும்…” என கேட்டு வாங்கி முதலில் தாயிடம் பேசினான்.
அதற்குள் பரிதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் நெடுஞ்செழியன் பேச,
“அதிகளவு பிரஷர் தான் மயக்கத்துக்கு காரணம். இப்படியே இவர் மனஅழுத்தத்தோட இருந்தா ரொம்ப பாதிக்கப்படுவார். கவனமா பார்த்துக்கோங்க….” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
“பாதிப்பு வராம எப்படி இருக்கும்? குடும்பத்தோட ஆணிவேரா இருந்த பொண்ணை இழந்துட்டு நிக்கிறாங்க….” கார்த்திகேயன் பரிதாபப்பட்டார்.
இன்றைய பரிதியின் சூழ்நிலையும், அவனின் தாய் பற்றியும், மகள் அஞ்சலியை பற்றியும் அதுவும் பூப்படைந்திருந்த அன்றைய நிகழ்வையும் கூறினார்.
நெடுஞ்செழியன் அமைதியாக அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு நின்றவன் மீண்டும் பரிதியிடம் செல்ல,
“வேற எதாவது கேட்கனுமா ஸார்?…” பரிதி கேட்க,
“கடைசியா நீங்க உங்க மனைவிக்கிட்ட என்ன பேசினீங்க? அவங்க என்ன சொன்னாங்க?…” என்றான் நெற்றியை சுருக்கியபடி.
“அவங்க வீட்டுக்கு கிளம்பும் போது நிறைய பேசினா. ஆனா நைட் சாப்பிட்டு முடிச்சிட்டேன்னு சொல்லிட்டு என்னையும், பொண்ணையும் விசாரிச்சவ, நாளைக்கு கிளம்பிருவேன்னு சொல்லிட்டு வச்சிட்டா. திரும்ப கொஞ்சம் நேரம் கழிச்சு அஜிதாவே கூப்பிட்டு பேசு ஆரம்பிக்கும் போது தான் போன் கட்டாச்சு…”
“ஓகே, வீட்டு லேண்ட்லைன் நம்பர்க்கு நீங்க கூப்பிட்டீங்களா? இல்லை உங்களுக்கு கால் வந்ததா?….”
“போன் வந்தது ஸார். அஜிதாவோட அக்கா, அதான் அஜிதா பெரியப்பா பொண்ணு தேவகி. அவங்க தான் பேசினாங்க…”
“நிச்சயமா?….”
“ஆமா ஸார், எனக்கு ஞாபகம் இருக்கே…” என்றதும் அதனை குறித்துக்கொண்டான் நெடுஞ்செழியன்.
“பரந்தாமன் கோபிநாத்தை வர சொல்லுங்க. அப்படியே அஜிதாவோட அப்பா வீட்டுக்கு போகனும் விசாரணைக்கு…” என சொல்லியவன்,
“ம்ம்ம், சரி அவங்க உங்ககிட்ட பேசும்போது பேச்சு எப்படி நார்மலா இருந்துச்சா? இல்லை என்ன மாதிரி பேசினாங்க? சாதாரணமா, பதட்டமா இப்படி ஏதாவது? ஞாபகம் இருக்கா?…” என்றான் நெடுஞ்செழியன்.
பரிதியின் முகம் யோசனையாகி மீண்டும் அந்த நினைவை நிழலாக ஓட்டிப்பார்த்தது.