“அஜிதாவுக்கு திரும்ப வீஸிங். இப்ப பேசமாட்டா. இத சொல்லத்தான் போன் பண்ணேன். ரெஸ்ட் எடுக்கட்டும். காலையில பேசுவா..” இதை அப்படியே நெடுஞ்செழியனிடம் சொல்லிய பரிதி,
“என்னவோ அவசரமா அதுல கோபமும், பதட்டமும் சேர்ந்தே இருந்தது. என்னன்னு முழுசா கேட்கறதுக்குள்ள கட் பண்ணிட்டாங்க. வீஸிங் அப்போ சில நேரம் அஜிதா சிரமப்படுவா. அந்த பதட்டமோன்னு நினைச்சிட்டேன்…” என்றான் பரிதி.
“அக்கம்பக்கம் யாரோட தொடர்பும் இல்லை எனக்கு. அதோட அஜிதாவோட பேச்சுல அத்தனை சந்தோஷம். இதெல்லாம் என்னை வேற விதமா யோசிக்க விடலை…” என்றான் பரிதி பரிதாபத்துடன்.
“மறுநாள் காலையில அஜிதா நம்பருக்கு கூப்பிட்டா கால் போகவே இல்லை. போனை ஆஃப் பண்ணியிருக்கறதா வந்தது. முதல்நாள் எனக்கு கூப்பிட்ட நம்பருக்கு போன் பண்ணினா எடுக்கவே இல்லை யாரும். அப்ப தான் சந்தேகமா இருந்தது. என்னோட அம்மாவை கிளம்பி அங்க வர சொல்லி நானும் புறப்பட்டு என் பொண்ணோட நேரா போனேன்…”
“ஓகே, அவங்க வீட்டுல இருந்து வேற யாராச்சும் உங்க கூட பேசினாங்களா?…”
“அஜிதா அம்மாவும், தங்கச்சியும் தான். தங்கச்சி என்கிட்ட பர்மிஷன் கேட்க பேசினா. வீட்டுக்கு போனதும் அஜிதா அம்மா பேசினாங்க. பேத்தியை பார்க்கனும். நீங்க நேரா இங்க வர முடியுமான்னு…” என்றவன் அவர்களின் பேச்சுக்களை ஒன்று விடாமல் ஒப்புவித்திருந்தான்.
“ஓகே நீங்க இங்க ஓய்வெடுங்க. நான் விசாரணையை முடிச்சிட்டு வந்து உங்களை பார்க்கறேன்…” என சொல்லி கார்த்திகேயனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினான்.
வெளியே வர கோபிநாத் தயாராக நின்றிருந்தான் நெடுஞ்செழியன் வருகைக்காக.
“பரந்தாமன் அந்த பென்?….” என்று தன் கையை நீட்டவும் அவர் தர வாங்கி சட்டையில் மாட்டிக்கொண்டான்.
“என்ன கோபிநாத், அவங்க வீட்டுக்கு சொல்லியாச்சா? என்ன சொன்னாங்க?….” என முன்னிருக்கையில் அமர்ந்து பின்னாலிருந்த கோபிநாத்திடம் கேட்க,
“அப்படியா சொன்னாங்க?….” என்றவன் பேச்சில் ஒன்றையும் கண்டுகொள்ள முடியவில்லை.
“ஆமா ஸார், இன்னொரு வீட்டுல கல்யாணம் செஞ்சு குடுத்திருக்கோம். இப்படி விசாரணைன்னு கூப்பிட்ட பிரச்சனையாகும்ன்னு சொன்னாங்க…”
“ஓஹோ, பிரச்சனை ஆக்கனும்னு நினைக்கறாங்க. விடுங்க, பார்த்துப்போம்…” என்றவன் அதற்கு பின் அமைதியாகிவிட்டான்.
கோபிநாத்திற்கு அடுத்து அங்கே என்ன நடக்கும் என்று தெரியவில்லை.
முதல்நாள் இரவு தான் முன்னால் ஏசிபி ரவிச்சந்திரன் அழைத்திருந்தார் கோபிநாத்திற்கு.
“என்னடா அவன் வந்ததும் வேலையை காமிக்கிறானா? நான் முடிச்சுவிட்ட கேஸ் அது. முடிஞ்சதாவே இருக்கனும். திரும்பவும் எதாச்சும் தப்பாச்சு நீ முடிஞ்ச…” என சொல்ல,
“ஸார் என்னை என்ன செய்ய சொல்றீங்க? இப்ப எனக்கு அவர் தான் மேலதிகாரி. அவர் சொல்றதை தான் நான் கேட்கனும்…” கோபிநாத் ஒருவாறு தன் நிலையை சொல்லிவிட்டான்.
“ஓஹோ, அப்ப என்னோட பேச்சுக்கு மதிப்பில்லையோ? இங்க பாரு கோபி, சீக்கிரமே அதே ஏரியாவுக்கு நான் மாற்றலாகி வருவேன். அதுக்கான வேலையில தான் இருக்கேன். என்னை பகைச்சுக்க நினைச்ச…” என்று மிரட்டவும் கோபிநாத்தின் கொஞ்சநஞ்சமிருந்த தைரியமும் சென்றிருந்தது.
“நான் என்ன செய்யனும் ஸார்?…” என கேட்டான் வேறு வழியின்றி.
“அப்படி கேளு, இது நல்லபிள்ளைக்கு அழகு. இங்க பார் அவன் என்ன பன்றான்னு என்கிட்ட நீ சொல்லனும். மத்ததை நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்ல,
“ஏன் ஸார், அவங்க வீட்டுல தான் எந்த தப்பும் பண்ணலைன்னு சொல்றீங்களே? ஏன் இவ்வளோ கஷ்டப்படனும்?…” பொறுக்காமல் கேட்டுவிட்டான் கோபிநாத்.
“என்னய்யா செய்ய? இப்பலாம் நல்லவங்களை காப்பாத்த இப்படி தான் முயற்சி பண்ணனும். இல்லன்னா உன் புது ஏசிபி இந்த வழக்கை கொலை கேஸா மாத்திருவான். அவனுக்கு என் மேல காண்டு. அதான் இப்படி என் சொந்தத்தை வச்சு பழி தீர்க்க பார்க்கான்…”
சிறுபிள்ளை கூட நம்பாது அவர் சொல்லியதை கேட்டு. அப்படி இருக்க கோபிநாத் இப்போது நெடுஞ்செழியன் கூற்றை முற்றிலும் நம்பினான்.
“என்னய்யா அமைதியாகிட்ட? புரியுதா?….” என கேட்க,
“ஓகே ஸார், எனக்கு தெரிஞ்சதை நான் சொல்றேன்…” என்று வைத்துவிட்டான்.
இப்போது அதை சொல்லுவோமா வேண்டாமா என யோசனையில் அமர்ந்திருக்க செல்வபாண்டியின் வீடு வந்திருந்தது.
நெடுஞ்செழியன் இறங்கிவிட இன்னும் கோபிநாத் அந்த யோசனையில் தான் இருந்தான்.
“விசாரணைக்கு வரலையா கோபிநாத்?…” என அவன் பக்கம் கதவை திறந்து நெடுஞ்செழியன் கேட்க,
“ஸார் வரேன்…” என்று பதறி இறங்கினான்.
“நான் கூட உங்க மாஜி ஏசிபி போக கூடாதுன்னு சொல்லிட்டாரோ, அதான் நீங்க வரலையோன்னு நினைச்சேன்…” என்றதில் கோபிநாத் முகத்தில் இரத்த பசையில்லை.
“நேத்து நைட் அதை சொல்ல போன் பண்ணலையா அவர்?…” என்று அடுத்த அடியை இறக்க,
“ஸார்….” கோபிநாத் மிரண்டான்.
“அவருக்கு தகவல் சொல்றவரை சொல்லுங்க. எனக்கு பிரச்சனை இல்லை. இப்படி ஒரு ஆள் இருந்தா தானே கேஸ் சுவாரஸியமா போகும். இல்லைன்னா என்ன இருக்கு? இப்ப உள்ள போகலாமா? இல்லை உங்க ஸார்கிட்ட கேட்கனுமா?…” என்று கோபிநாத்தை சுழலவிட்டான்.
“நான் இனிமே பேசலை ஸார், அவர் தான் சொன்னார்…” என விஷயத்தை போட்டுடைக்க,
“அப்படியெல்லாம் செய்யாதீங்க கோபிநாத். கொஞ்சம் போலீஸ் மூளையை யூஸ் பண்ணுங்க. நீங்க சொல்லலைன்னா வேற ஒருத்தரை பிடிப்பார். ஏன் நம்ம பரந்தாமனை கூட பிடிக்கலாம்?…” என்றவன்,
“எதுக்கு கஷ்டப்பட்டு அவரையும் என் ஹிட் லிஸ்ட்ல சேர்த்து உங்களை பாலோ பன்ற மாதிரி பாலோ பண்ணி, போன் ஹிஸ்டரி செக் பண்ணி. எவ்வளோ வேலை? அதனால நீங்களே தகவல் சொல்லுங்க…” என கூற பரந்தாமன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“இது தான் தப்பு பண்ணாதவங்களுக்கும் பன்றவங்களுக்கும் உள்ள வித்தியாசம். போலீஸ் கிரிமினலா யோசிக்கலாம். ஆனா கிரிமினலா இருக்க கூடாது. புரியுதா? குறைஞ்சபட்சம் சாப்பிடற சாப்பாட்டுக்காவது உண்மையா இருக்கனும். அப்படின்னா சாப்பாடு தர வேலைக்கும் சேர்த்து…”
நெடுஞ்செழியன் சொல்லவும் கோபிநாத் முகத்தில் இயலாமை. தன்னால் இப்படி இருக்க முடியவில்லையே என்னும் கவலை.
“நீங்க எப்பவும் போல அவர்கிட்ட நான் என்ன சொல்றேனோ அதை சொல்லுங்க. போதும். நரிக்கிட்ட நரி வேலை தான் பார்க்கனும். இப்ப உள்ள போகலாம்…” என்று திரும்ப அங்கே வாசலில் செல்வபாண்டியன் குடும்பத்தார்.
சுடலைமுத்து, நல்லதம்பி, செல்வபாண்டி மூவரும் வாசலில் நிற்க அந்த வீதி மொத்தமும் காவல்துறை வாகனத்தையும் நின்றிருந்தவர்களையும் தான் பார்த்தது.
“இதுக்கு மட்டும் வந்திருவாங்க….” என சொல்லிய நெடுஞ்செழியன் வீட்டினுள் நுழைய அவனின் வருகையை பிடிக்காத பாவம் அங்கிருந்தவர்கள் முகத்தில்.
“எதுக்கு ஸார் இவ்வளோ தூரம்? சொல்லி அனுப்பியிருந்தா நாங்களே நேத்து மாதிரி வந்திருப்போமே?…” சுடலைமுத்து பல்லை நெரித்தபடி அவனிடம் சொல்ல,
“ஓகே, உட்காருங்க. ஆமா உங்க வீட்டுல யார் யார் இருக்கனும்ன்னு சொல்லியிருப்பாரே கோபிநாத்?…” என்ற நெடுஞ்செழியன் நேராக ஒரு சேரை இழுத்து நடு கூடத்தில் எடுத்து போட்டு அமர்ந்துகொண்டான்.
“இது தான் எங்க குடும்பம். என் தங்கச்சி சித்தி ரூம்ல இருக்கா. சித்திக்கு உடம்புக்கு முடியலை. அம்மாவுக்கு இந்த விசாரணை எல்லாம் பிடிக்காது. அதனால உள்ள இருக்காங்க…” நல்லதம்பி வேண்டாவெறுப்பாக சொல்ல,
“ஓஹோ, அப்போ உங்களோட அக்கா, உங்க மனைவி?…” என கேட்டான் நெடுஞ்செழியன்.
“அவங்களாம் எதுக்கு ஸார்? என் வீட்டுக்காரம்மாவோட அப்பாவுக்கு முடியலைன்னு அவ கோயம்பத்தூர் போயிட்டா பிள்ளையோட…” என சொல்லிய நல்லதம்பிக்கு நொடிக்கு நொடி ஆத்திரம் மிகுந்தது.
“உங்க அக்கா உள்ளூர் தானே?…” என்றவனிடம்,
“ஸார் நானும் ரொம்ப பொறுமையா போறேன். நீங்க ரொம்ப அராஜகம் பன்றீங்க. அப்பறம் நான் இதை பத்தி கமிஷனர்கிட்ட பேசுவேன்…” என்றான் முன்னே வந்து நின்று மிரட்டலாக.
“என்னன்னு பேசுவீங்க நல்லதம்பி? அதையும் சொல்லுங்க கேட்டுட்டு கிளம்பறேன்…” என்ற நெடுஞ்செழியன் பாவனையில்,
“குடும்பம் நடத்தற வீட்டுக்குள்ள வந்து அராஜகம் பன்றீங்கன்னு சொல்லுவேன். கல்யாணம் பண்ணி குடுத்த குடும்ப பொண்ணுங்களை விசாரணைன்னு கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்தி மிரட்ட பார்க்கறீங்கன்னு சொல்லுவேன்…” என்றான்.
“அவ்வளோ தானா நல்லதம்பி? நான் வேற எதிர்பார்த்தேன்….” என சொல்லிவிட்டு எழுந்து நின்றான் நெடுஞ்செழியன்.
பரந்தாமனும், கோபிநாத்தும் அடுத்து நெடுஞ்செழியன் என்ன செய்ய போகிறான் என பார்த்துக்கொண்டிருக்க,
“கோபிநாத் இப்ப நீங்க என்ன பன்றீங்கன்னா, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கறாங்க. அதனால சந்தேகத்தின் பேர்ல கைது பன்றோம்ன்னு குடும்பத்துல நண்டு சிண்டு விடாம ஸ்டேஷன்க்கு மாத்தறீங்க. விசாரணை இனிமே உங்க ஸ்டேஷன்ல வச்சு தான்…” என சொல்ல அத்தனை பெரும் அதிர்ச்சியாகி பார்த்தனர்.
“அப்பறம் நல்லதம்பி மனைவி, பிள்ளைங்க கோயம்புத்தூர்ல தானே இருக்காங்க? அவங்க எந்த ஏரியான்னு கேட்டு அங்க உள்ள ஸ்டேஷனுக்கு தகவல் அனுப்பி அரஸ்ட் பண்ண சொல்லுங்க. இங்க இருந்தே அங்க விசாரிப்போம்…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஏய், என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? என்ன நீ வச்ச ஆளா? என் கண்ட்ரோலுக்கு வா, அப்ப தெரியும் நான் யாருன்னு. கமிஷனர்கிட்ட சொன்னா என்ன? யார்கிட்ட சொன்னா என்ன?…” என்று பேசியவன் பேச்சில் நடுக்கத்துடன் பார்த்தனர்.
“பரந்தாமன் கிளம்பலாம்….” என வேகமாய் வெளியேறியவனின் பின்னால் நல்லதம்பியும், செல்வபாண்டியும் கெஞ்சிக்கொண்டே வாசலுக்கு சென்றனர்.
வெளியே வீதியில் அத்தனைபேரும் இந்த காட்சியை பார்க்க சுடலைமுத்து அவமானமாக உணர்ந்தார்.
“மன்னிச்சிடுங்க ஸார், தெரியாம பேசிட்டேன். ஸ்டேஷனுக்கு எல்லாம் வேண்டாம். கல்யாணமாக வேண்டிய பொண்ணு இருக்கு. சின்ன பிள்ளைங்க ஸார்…” நல்லதம்பி காலையே பிடித்து போய்விட்டான்.