“என்ன பொறுமையா இருக்கறது?….” என்றவனை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான் நல்லதம்பி.
மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக அந்த அறைக்குள் சென்றுவிட பரந்தாமன் வெளியே வந்தார்.
“கோபிநாத் நீங்க உள்ள போய் இருங்க….” நெடுஞ்செழியன் கூற,
“ஸார், என் மேல நம்பிக்கை இல்லையா?….”
“நம்பிக்கை இருக்க போய் தான் உங்களை அங்க போக சொல்றேன். பரந்தாமன்கிட்ட எந்த வேலையும் அங்க நடக்காது. ஆனா நீங்க போனா கண்டிப்பா பேசுவாங்க. புரியுதா?….” என்றவன் கூற்றில் தலையாட்டினான்.
நெடுஞ்செழியன் சொல்லியதை போலவே தான் நடந்தது கோபிநாத் அந்த அறைக்குள் நுழைந்ததும்.
குமரகுரு ஆவேசமும், ஆத்திரமுமாய் கண்கள் சிவக்க பேச கோபிநாத் மிரண்டு போனான்.
‘கொலைகார பயலுங்களா இருக்காங்களே? செஞ்சாலும் செய்வானுங்க கிறுத்தவம்புடிச்சவங்க’ என பீதியுடன் பார்த்தான்.
“என்ன உனக்கே அல்லு விட்டு போச்சா? இருக்கு ஒருநாள் அவனுக்கு…” குமரகுரு அறையில் ஒரு இடத்தில் நிற்காமல் பேச,
“ஏன்டா என்னை வர சொல்லும் போதே இப்படின்னு சொல்லமாட்டியா நீ? வந்து வாசல்ல ஜீப்பை பார்க்கவும் இந்த இன்ஸு மட்டும் இருக்கான்ல நினைச்சேன்…” என்றாள் தேவகி.
கொஞ்சமும் கோபிநாத்தை அவர்கள் மதிக்கவில்லை. அவர்கள் பேச்சில் இகழ்ச்சி.
ரத்தம் கொதிக்கத்தான் செய்தது. பேசும் இவர்கள் வாயை உடைத்தால் என்ன என்னும் அளவிற்கு கோபம்.
ஆனால் வெறும் கோபம் மட்டும் போதாதே? பணிந்து பணிந்தே போய் தைரியம் என்பதை எளியவர்களிடம் காண்பித்தே வாழ்க்கையை ஓட்டியாகிற்று.
குடும்பமும் பெரியது, பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி குடும்பம் என கண்ணாடி கூண்டில் வாழும் கோபிநாத்திற்கு கல்லெறிய காத்திருக்கும் இவர்கள் மேல் அச்சம் அதிகமாகவே இருந்தது.
போதாததிற்கு ரவிச்சந்திரனின் அலட்சியம், மதிக்காமை எல்லாம் சேர்ந்து தன் மீது மரியாதை என்பதே இல்லாமல் போயிற்றே இவர்களுக்கு.
“இவன் நம்ம பையன் தான். நான் சொன்னமாதிரி வாலாட்டுவான்….” என ரவிச்சந்திரன் சொல்லும் பொழுதே கொந்தளித்திருக்க வேண்டும்.
உயர் அதிகாரி சொல்லும் பொழுது அவ்விடத்தில் தன்னுடைய தன்மானத்தை இழந்துவிட்டு மண்ணாய் நின்ற தன் நிலை இப்போதும் அழுத்தத்தை கொடுத்தது.
“என்னய்யா, என்ன பார்த்துட்டே நிக்கிற? இவன் எதுக்கு மடங்குவான் அதை சொல்லு…” என பேரம் பேச ஆரம்பித்தான் குமரகுரு.
“ஸார் ரொம்ப நேர்மையானவர்…” அதற்கு மட்டுமே பதில் கூறினான் கோபிநாத்.
“என்னத்த வேல பாத்து கிழிச்ச இன்ஸு? அந்தாளுக்கு என்ன வீக்னஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்காம? உன்னை என்ன செய்யறேன் பாரு….”
குமரகுரு பேச பேச கோபிநாத்திற்கு அவமானத்தில் தொங்கிவிடலாம் போல இருந்தது.
கோபிநாத்தை வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டே ரவிச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்தான் குமரகுரு.
மருமகனின் பேச்சுக்கள் எதிலும் மற்ற யாரும் தலையிடவில்லை. வெளியே மீரா என்ன பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதில் தான் அவர்கள் எண்ணம்.
அதற்குள் ரவிசந்திரன் எண்ணில் அழைப்பு ஏற்கப்பட கோபிநாத்தை பார்த்துக்கொண்டே பேசினான் குமரகுரு.
“இப்ப என்னதான் செய்யனும்னு சொல்றீங்க மாமா? இதெல்லாம் ஆரம்பத்துலையே முடிச்சு விட்டா தான்…” என சொல்ல,
“என்னய்யா மாப்ள? ரொம்ப சூடா இருக்க? பொறு, பொறு, அதுக்குத்தான் அந்த கோபியை அங்க காவலா விட்டுவச்சிருக்கேன். நம்மளை தாண்டி எந்த விஷயமும் நடக்காது. இந்த தடவையும் மண்ணை கவ்விட்டு போக போறான் அந்த பரிதியும், இந்த ஏசிபியும்…” என்றார் ரவிச்சந்திரன்.
“அவ்வளோ நாள் விட்டு வைக்கனுமா? எனக்கு புடிக்கல மாமா. என் குடும்பத்தை ஒருத்தன் கேள்வி கேட்கறதா?…”
“காரணமா தான் சொல்றேன் மாப்ள. என்னை மீறி அவன் எப்படி இந்த கேஸை முடிக்கான்னு பார்க்கிறேன். கோர்ட்ல போய் கேஸ் தோத்து இவனும் அசிங்கப்பட்டு நிக்கனும்…” என்ற ரவிசந்திரன்,
“எல்லாரும் என்னை தேடி வருவானுங்க. உங்களுக்காக நான் அவனுக்கு கூப்பிட்டு பேசினேன். நூல் விட்டு பார்ப்போமேன்னு கேஸ் பத்தி எதாச்சும் விஷயம் வேணும்னா கூச்சப்படாம கேளுங்கன்னு கேட்டதுக்கு, கூச்சத்த காட்ட நான் என்ன உங்க பொண்டாட்டியான்னு கேட்கறான்…” என்றார்.
அனைவருக்கும் கேட்கும் விதமாக குமரகுரு ஸ்பீக்கரில் போட்டு பேச இதை கேட்டு கோபிநாத்தினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அத்தனை நேரம் கொதித்திருந்த மனதிற்கு ஆறுதல் கிட்டியதை போல ஒரு ஆசுவாசம்.
“வாய்ப்பில்லை. எதுலையும் சறுக்கமாட்டான். அதுதான் இவ்வளோ செருக்கு அவனுக்கு…” ரவிசந்திரன் கோபம் இங்கு வரை பரவியது.
“இப்ப மீரா பேச உக்கார்ந்திருக்கா…” குமரகுரு சொல்ல,
“அவ நடந்ததை சொல்ல போறா. என்ன பயம்? தைரியமா இருங்க. ராங்கா போறமாதிரி இருந்தா கோபிநாத் நமக்கு தகவல் சொல்லிருவான்….” ரவிசந்திரன் சொல்ல,
“இந்த மூஞ்சியை பார்த்தா அப்படி தெரியலை மாமா….”
“அதெல்லாம் ஒரு மூஞ்சின்னு ஏன் பார்க்கறீங்க மாப்ள? வேலையாகுதா அதுதான் முக்கியம். சரியான களிமண் மூளை. நாம சொன்னதை தான் கேட்பான்…” ரவிச்சந்திரன் பேசி சிரித்துவிட்டு போனை வைத்துவிட்டார்.
எதற்கும் கோபிநாத்திடம் பிரதிபலிப்பு இல்லை. எல்லாவற்றையும் கேட்டு வாங்கி மனதில் வைத்துக்கொண்டான்.
நேர்மை இல்லாமல் காசுக்கு வேலை பார்க்கும் ஆட்களுக்கு மட்டுமில்லை, துணிச்சலாக எதிர் கேள்வி கேட்காதவர்களுக்கு இந்த இழிநிலை தான் என எண்ணிக்கொண்டான் கோபிநாத்.
“எவ்வளோ நேரம்? இன்னுமா பேசறான்….” என குமரகுரு கதவை திறந்து பார்க்க முயல வெளியே பூட்டப்பட்டிருந்தது.
“இவன் என்ன பூட்டிருக்கான்?…” என அதற்கு வேறு கோபம்.
“சத்தமில்லாம இருங்க….” பரந்தாமனின் குரல் பெரிதாய் உள்ளே கேட்டது.
மீராவிடம் பேசிக்கொண்டிருந்த நெடுஞ்செழியன் பரந்தாமனை பார்த்துவிட்டு மீண்டும் அவளை பேச சொல்லி கையசைத்தான்.
“அக்காவை மெடிக்கல் காலேஜ்ல பார்த்ததும் அம்மாவுக்கும், வீட்டுக்கும் முதல்ல விஷயத்தை சொன்னேன். அம்மா அழுதுட்டே இருந்தாங்க. அப்பாக்கிட்ட பேசி அம்மா தான் அக்காவை கூட்டிட்டு வர சொன்னாங்க….” என்றாள்.
“உங்க வீட்டுல எல்லாரும் கோபமா இருக்கும் போது எந்த நம்பிக்கையில் நீங்க இங்க உங்கக்காவை கூட்டிட்டு வந்தீங்க? வந்தா பிரச்சனையாகும்ன்னு தெரியாதாம்மா?…” என்றான் நெடுஞ்செழியன்.