நெடுஞ்செழியன் சொல்லியதன் அர்த்தம் புரிந்தும் அந்த சேரிலிருந்து தேவகி எழவில்லை.
“எழுந்து அந்த அறைக்கு போங்க….” என அவளிடம் அறையை காண்பித்து கை நீட்டினான் நெடுஞ்செழியன்.
“இல்லை, இல்லை. நான் போகமாட்டேன். என்ன சொன்னீங்க நீங்க? என்னை கைது பண்ணுவீங்களா?….” தேவகியின் முகத்தில் பயத்தையும் மீறிய ஒரு உணர்வு.
“ஆமாம்மா. லேடி போலீஸ் வருவாங்க உங்களை கைது செய்ய. போய் அங்க காத்திருங்க…” என அமைதியாக.
“இல்லை இல்லை. அதெப்படி முடியும்? நான் என்ன பண்ணேன்? நான் ஒண்ணுமே பண்ணலை. அஜிதா செத்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நான் கொலை பண்ணலை….” கத்தினாள் தேவகி.
தேவகியின் அலறல் உள்ளே குமரகுரு வரை கேட்க என்ன நடக்கிறதோ என அவனுக்கும் பதட்டம்.
“கொலைன்னு நான் எப்போ சொன்னேன்? உங்களை சந்தேகத்தின் பேர்ல தான் கைது செய்யறோம். என்ன நடந்ததுன்னு நீங்க உண்மையை சொல்லலை. அதனால். ஆனா கொலை தானோ?…” நெடுஞ்செழியன் கேட்ட கேள்வியில்,
“குரு, நீங்க தயவு செய்து அமைதியா இருங்க. அதிகாரியை இப்படி எல்லாம் பேச கூடாது….” என பதறிக்கொண்டு அவனின் கையை பிடித்து இறக்கினார் அவனின் வழக்கறிஞர்.
ஏற்கனவே தான் வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் குமரகுரு முன்ஜாமீன் எடுக்க சொல்லி சிக்கலை உருவாக்கி இருக்க இப்போது இது வேறா என தோன்றியது.
“அட போய்யா, இவன்லாம் ஒரு ஆள்ன்னு பயந்துக்கிட்டு. என் முடிக்கு சமம் இவன்….” என்று இகழ்ச்சி பார்வையில் நெடுஞ்செழியனை வார்த்தையால் தாக்க கோபிநாத் முழித்தான்.
‘இவன் என்ன எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நிற்கிறானே?’ என நெடுஞ்செழியனை பார்க்க,
“கொட்டிடாம பார்த்துக்க. முடிய சொன்னேன்….” என்று சொல்லி வெளியேறினான் நெடுஞ்செழியன்.
வாகனத்தில் ஏறி அமரவும் கோபிநாத்தின் முகத்தில் அதிருப்தி வெட்டவெளிச்சமாய் தெரிந்தது.
சில நிமிடங்கள் கூட சென்றிருக்காது. பொறுக்கமுடியாமல் நெடுஞ்செழியனிடம் கேட்டுவிட்டான் அவன்.
“கொஞ்சம் அமைதியா வாங்க. ஸ்டேஷன் போய் பேசிக்கலாம்….” என முடித்துக்கொண்டான் நெடுஞ்செழியன்.
துணை ஆணையர் அலுவலகம் செல்லும் வரை கோபிநாத்தின் மூளைக்குள் எரிச்சல்.
இதில் செல்லும் வழியில் ரவிசந்திரன் வேறு செய்தி அனுப்பியிருந்தார். தனியாக வந்து பேச சொல்லி.
“கோபிநாத் நீங்களும் வாங்க….” என நெடுஞ்செழியன் தனது அறை நோக்கி செல்ல பின்தொடர்ந்தான். உள்ளே சென்றதும்,
“இப்ப கேளுங்க, என்ன கோவம் உங்களுக்கு?….” என நெடுஞ்செழியன் கேட்க,
“என்ன ஸார், சாதாரணமா கேட்கறீங்க?…” கோபிநாத் உள்ளே நடந்ததையும் அவர்கள் பேச்சுக்களையும் சேர்த்தே சொல்ல அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“உங்களையும் கொலை செய்யற அளவுக்கு பேசறாங்க. என்னால தான் எதுவும் முடியலை. நீங்க செய்யலாமே ஸார்?….”
“செய்யலாம் தான். அதுக்கு வேகம் மட்டும் பத்தாது. விவேகமும் வேணும் கோபிநாத். இந்த முன்ஜாமீன் நான் எதிர்பார்த்தது தான்…”
“ஸார், எப்படி சொல்றீங்க?….” கோபிநாத் திகைத்தான்.
“ரவிச்சந்திரன் இருக்கும் போது, அதுவும் வழக்கு என் கையில இருக்க வேற என்ன எதிர்பார்க்க முடியும்? சில விஷயங்கள் ஊர்ஜிதமாக இப்படியெல்லாம் நடந்தா தான் உண்டு…”
“புரியலை ஸார்…” தயக்கமாக கோபிநாத் கேட்க,
“தெரியாததை கேட்டு தெரிஞ்சுக்கறதுல தப்பில்லை. நீங்க தைரியமாவே கேட்கலாம். அடுத்து நீங்க விசாரணை செய்யும் போது இது உபயோகமா கூட இருக்கும்…” என்றான் நெடுஞ்செழியன்.
“சரி விடுங்க. இந்த வழக்கு விஷயமா அதை பத்தி பேசலாம்….” என்றவன்,
“முதல்ல ஒரு விஷயம், தேவகியை நாம என்னதான் சந்தேகம்ன்னு கைது செஞ்சிருந்தாலும் இதெல்லாம் போதுமான ஆதாரம் இல்லைன்னு சொல்ல எவ்வளவோ காரணங்களை அவங்க தரப்பில இருந்தும் முன் வைப்பாங்க…”
“ரெண்டாவது தேவகி மனவுளைச்சல்ல மாத்தி பேசிட்டாங்கன்னு சொல்லி அதுக்கும் ஏதாவது மருத்துவ அறிக்கையை காண்பிக்கவும் தயங்க மாட்டாங்க. ஒருதடவை பதட்டத்துல தவறினவங்க இன்னொருமுறையும் தவறுவாங்களா? வாய்ப்பில்லை….”
“மூணாவது கொலை வழக்கை விபத்துன்னு சுலபமா மாத்தி பிணக்கூராய்வு முதற்கொண்டு தெளிவா காய் நகர்த்தி அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு வர செஞ்சவங்களுக்கு இது எல்லாம் சாதாரணம்….”
“நாலாவது இப்ப வலையை மட்டும் தான் வீசியிருக்கோம். பிடிக்க நாளாகும். இந்த முன்ஜாமீனும், நான் எதுவும் செய்யமுடியாம கிளம்பி வந்ததும் அவங்களுக்கு ஒரு அசட்டு துணிச்சலை தரும். முட்டாள்த்தனம் செய்ய அது போதும்…”
“ஐந்தாவது என்னால முடியலைன்னு அவங்களுக்கு இப்ப சின்னதா ஒரு நம்பிக்கை இருக்கும். அது வளரனும். அந்த நம்பிக்கை அலட்சியத்துல கொண்டுபோய் நிறுத்தும். எல்லாமே அவங்க பிடிக்குள்ள இருக்குன்ற இறுமாப்பு தான் நம்மோட பலம். அதுக்காக காத்திருக்கனும்…”
வரிசையாக நெடுஞ்செழியன் சொல்ல கேட்டிருந்த கோபிநாத் இதில் இத்தனை உள்ளதா என வியந்து பார்த்தான்.
நிச்சயமாக தான் இத்தனை யோசித்திருக்க போவதில்லை. யோசித்தாலும் எங்கே பலன்? பூஜ்யம் மட்டுமே?
தன்னை யோசிக்கவும் விடப்போவதில்லை என்பது ஒருபக்கம் அவனை வருத்தியது.
“இப்போ எல்லாம் புரியுதா கோபிநாத்?….” என்று கேட்டவனிடம் தலையசைக்க,
“சில விஷயங்கள் எங்க பேசனுமோ அங்க தான் பேசனும். ஜீப்ல ட்ரைவர் இருக்கார். அதை யோசிக்க வேண்டாமா?….”
“ஸார்…”
“நம்பிக்கையானவர் தான். ஆனா எந்தளவுக்கு ஒன்னு இருக்கு. நான் என்னை தவிர யாரையும் நம்பமாட்டேன். இப்பவுமே உங்ககிட்ட இதை சொல்றது ஏன்னா திருத்திக்க நினைக்கிறவங்களுக்கு கை குடுக்கனும். அதுக்காக…”
“ஸாரி ஸார். இதை கடைசியா கேட்கறேன். இனிமே மன்னிப்பு கேட்கிற மாதிரி நடந்துக்கமாட்டேன்…”
“அவர் சொல்றதும் சரி தான் பரிதி. விசாரணை இப்போ தான் ஆரம்பிச்சிருக்கோம். உடனே எல்லாரும் ஒத்துப்பாங்களா? வாய்ப்பே இல்லை. அப்படின்னா இந்த வழக்கே இப்ப அவசியம் இல்லையே?…” நெடுஞ்செழியன் சொல்லவும் பரிதி தன் நிதானத்தை இழுத்து பிடித்தான்.
“பத்திரமா போய்ட்டு வாங்க. என்னால முடிஞ்சதை நான் பார்க்கறேன்…” என்றவனின் பேச்சை கேட்டு பரிதியின் முகம் வேதனையை காண்பித்தது.
“பரிதி, எல்லாமே நமக்கு சாதகமா அமையாது. இப்பவே நம்பிக்கை குடுக்க வேண்டாமேன்னு தான் அப்படி சொன்னேன். என்னோட வேலையை நான் சரியா செய்வேன். தைரியமா இருங்க….”
“அவங்க வீட்டுல யாருக்குமே மனசாட்சி இல்லையே ஸார்? விட்டிருந்தா நிம்மதியா எங்கையோ இருந்திருப்போமே?…” என கேட்டவனுக்கு எந்தவித சமாதானமும் கூற முடியாதென நெடுஞ்செழியன் மௌனமாக பார்த்தான்.
“என் தப்பு, நான் இங்க வந்திருக்கவே கூடாது. அஜிதாவை தனியா இங்க மதுரை வர அனுமதிச்சிருக்கக்கூடாது. அவ தங்கச்சி கூப்பிட்டதும் போன்னு சொல்லியிருக்கக்கூடாது. இப்படி எத்தனையோ என் மேலையும் தப்பு இருக்கு…” என்றவன்,
“எப்படி ஸார் கூட்டிட்டு போய் உயிரை எடுக்க முடிஞ்சது? அவங்க ரத்தமில்லையா? அவங்க பொண்ணில்லையா? எப்படி வளர்த்திருப்பாங்க? அந்த பாசம் ஒரு சொட்டு மிச்சமில்லையா? எவ்வளோ வலிச்சிருக்கும் என்னோட அஜிக்கு. உயிரை விடும் போது என்ன நினைச்சாளோ?…” என கேட்டு முகத்தில் அறைந்துகொண்டான் பரிதி.
“எங்கம்மாவுக்கே எல்லாம் அவ தான் ஸார். என் குடும்பத்தோட சந்தோஷம், நிம்மதி, உறக்கம், பசி, தாகம் எல்லாமே அவ மட்டும் தான். அவளை உலகத்தை விட்டு அனுப்பி எங்களை நடைபிணமா மாத்திட்டாங்க. போனது ஒரு உயிர் இல்லை ஸார். கூடவே எங்க மூணு உயிரும் தான். அவளோட சிதைச்சிட்டாங்க…”
பரிதியின் மனக்குமுறல்கள் எல்லாம் நெஞ்சை பிழிந்தது. குருவிக்கூட்டை கலைத்ததோடு இல்லாமல் தாயை பிரிந்த குஞ்சுகளாக இவர்களை பரிதவிக்க விட்டிருக்கின்றனர் என வலிக்க பார்த்தான் நெடுஞ்செழியன்.
“எப்படி உயிரை கொன்னு தின்னு அந்த வீட்டுக்குள்ளயே சந்தோஷமா சாப்பிட்டு தூங்கி எழுந்து அவங்களால இருக்க முடியுது? உறுத்தலையே அந்த ஜென்மங்களுக்கு?…” என்றவனிடம்,
“முன்ஜாமீன் வாங்கியிருக்காங்க பரிதி. கைது பண்ணிட கூடாதுன்னு முன்னாடியே நடவடிக்கை எடுத்துட்டாங்க….” நெடுஞ்செழியன் சொல்ல,
“தப்புன்னு தெரிஞ்சும் இப்ப மேலும் தப்பு பண்ணியிருக்காங்க. இந்த முன்ஜாமீன், அதுவும் இத்தனைபேருக்கும் விசாரணை ஆரம்பிச்ச மறுநாளே வாங்கியிருக்காங்கன்னா நாம இன்னும் பொறுமையா தான் இதை கையாளனும். நீங்க அமைதியா இருங்க….” என்றவன்,
“நீங்களும் எச்சரிக்கையா இருங்க பரிதி. உங்க குடும்பமும் தான். உண்மையை எப்படியும் கண்டுபிடிக்கனும். நாங்கலாம் எதுக்கு இருக்கோம்…” என முறுவலித்தான்.
“இந்த கேஸ் அடுத்த வாரம் கோர்ட்டுக்கு வருது ஸார்….” கார்த்திகேயன் ஞாபகப்படுத்தினார் நெடுஞ்செழியனுக்கு.
“அங்க தெளிவு கிடைச்சா நிச்சயமா வழக்குல ஒரு திருப்பம் இருக்கும் ஸார். ஆனா அவர் ரொம்ப உறுதியா இது புகையால, வீஸிங் வந்ததால உண்டான மரணம்ன்னு திரும்ப திரும்ப அடிச்சு சொல்றார்…” கார்த்திகேயன் சொல்ல,
“பார்க்கலாம் என்ன சொல்றார்ன்னு. அதோட கோர்ட்ல மறு கூராய்வுக்கு உத்தரவு குடுப்பாங்க. எதையும் இப்ப உறுதியா சொல்ல முடியலை….” என்று சொல்லியவன் எழுந்துகொண்டான்.
“சரி நீங்க ஊருக்கு கிளம்புங்க. அடுத்த வாரம் வழக்கின் போது சந்திக்கலாம்…” என விடைபெற்று கிளம்பினான் நெடுஞ்செழியன்.
“போகலாமா பரிதி? இங்க வந்த வேலை முடிஞ்சது. இப்ப கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கா?….” என பரிதியிடம் கார்த்திகேயன் கேட்க,
“தெரியலை ஸார், நிஜமாவே இதுல நம்பிக்கைன்ற வார்த்தைக்கு நான் எந்த அர்த்தத்தை குடுக்க? இவருக்கு முன்னாடி இருந்த ஏசிபி எவ்வளோ பேசினார். அஜிதா என் பொண்ணு மாதிரி, நான் இதுல உண்மையை கண்டு பிடிப்பேன் இப்படி எல்லாம்…”
கண்கள் சிவக்க ஆவேசத்துடன் சொல்லிய பரிதியின் உடல் கோபத்தை அடக்க முடியாமல் நடுங்கியது.
நெடுஞ்செழியன் பேச்சிலும், செயலிலும் நேர்மை தெரிந்தாலும் எந்தளவிற்கு அவனும் இதில் முழுமூச்சாக உண்மையை கொண்டு வருவான் என ஓரத்தில் சந்தேகம் வேறு இருந்தது.
நேர்மையாக இருப்பவர்களை விட அந்த நேர்மையை உடைப்பவர்கள் தான் இந்த காலத்தில் கோலோச்சுகின்றனர் என்பதை கசப்புடன் எண்ணிக்கொண்டான்.
அன்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பி சென்றனர் இளம்பரிதியும், கார்த்திகேயனும்.
அடுத்த இரண்டுநாளில் வேறொரு வழக்கின் காரணமாக குமரகுருவை கைது செய்திருந்தான் நெடுஞ்செழியன்.
குமாரகுரு மதுபான கடையில் நடந்த கலவரத்தில் குமாரகுருவையும் சேர்த்து ஆறு பேரை கைது செய்து வந்திருந்தனர்.
“யோவ் ஏசிபி இதெல்லாம் உன் வேலை தான? என் பவர் தெரியாம கை வச்சுட்ட. இதுக்கு நீ அனுபவிப்ப….” என கம்பிகளுக்கு பின் நின்று கூச்சலிட்டவன் பேச்சில் அலட்சியமாக திரும்பிய நெடுஞ்செழியன்,
“என்னமோ இதுக்கு சமம்ன்னு சொன்னியே. எங்க இப்ப புடுங்கு பார்ப்போம்….” என்று வந்து நின்றான்.
“ஏய், அங்க நடந்த சண்டைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைடா. ஒழுங்கா என்னை வெளில விடு. இல்லை உன் குடலை உருவிருவேன்….” குமரகுரு இன்னும் தெளியாத போதையில் கத்தினான்.
“கோபிநாத் ஸ்டேஷன்ல வச்சு துணை ஆணையரை மரியாதை இல்லாம பேசினதுக்கு ஒரு வழக்கும், கொலை மிரட்டல் விடுத்த காரணமா இன்னொரு வழக்கும் சேர்த்து இவன் மேல போடுங்க. என்ன புடுங்குறான்னு நானும் பார்க்கறேன்…” என சொல்ல குமாரகுருவிற்கு ரத்தக்கொதிப்பு கூடியது.
“ஏய் ஏய் இன்ஸு, அந்த கிறுக்கன் சொன்னமாதிரி போடாதய்யா, என்ன பத்தி தெரியும்ல. தொலைச்சுக்கட்டிடுவேன் உன்னை….” என கோபிநாத்தையும் குமரகுரு மிரட்டினான்.
“கிறுக்கனாம். குறிச்சுக்கோங்க கோபிநாத். காவல்துறை ஆய்வாளரையும் சேர்த்து இன்னொரு கொலை மிரட்டல்…” என்ற நெடுஞ்செழியன்,
“வேற எதாச்சும் சொல்லனுமா ஒயின்ஸ்?…” என கேட்டான் குமரகுருவிடம்.
“ஷாப் சேர்த்து ஏன் சொல்லலைன்னு பார்க்கறியா? உன்னோட ஒயின் ஷாப்ல எதெல்லாம் அனுமதி இல்லாம ஓடுச்சோ அந்த கடை எல்லாமே சீல் வச்சுட்டேன். அதான் வெறும் ஒயின்ஸ். இனி ஷாப் இல்லை…” என இலகுவாக தோளை குலுக்கி சொல்ல,
“டேய்….” என்ற குமரகுரு அதிகபட்ச உறுமலில் அந்த இடமே ஆட்டம் கண்டதை போலிருந்தது.
“தப்பு பன்றவன் எல்லாம் எல்லா நேரத்துலயும் தெளிவா இருக்கனும்டா. அரைபோதை நாய் நீ, உன் முடிக்கு நான் சமமா? இப்ப நான் எப்படி புடுங்கினேன்னு பார்த்தியா? அடங்கி கிடக்கனும். இல்ல மொத்தமா முடிச்சுவிட்டுடுவேன்…”
நெடுஞ்செழியன் பல்லிடுக்கில் இருந்து வார்த்தைகள் பதமாய் வெளியே வர குமரகுரு அச்சத்துடன் பார்த்தான்.
நெடுஞ்செழியனை சாதாரணமாக நினைத்திருக்க அவன் தன் அடிமடியிலேயே கை வைப்பான் என நினைக்கவில்லை.