“ஸார், என்ன எதுவும் சொல்லலை?….” பரிதி அவனை அழைக்க,
“நான் கைது பண்ணினது அஜிதா வழக்குல இல்லை பரிதி. இது வேற வழக்கு….”
“அப்படியா?….” என்றவன் குரலில் சுரத்து குறைந்தது.
“பரிதி நிதானம் ரொம்பவே அவசியம். உடனே எல்லாம் நடந்திடாது. இப்ப தானே ஒவ்வொரு செங்கலா தட்ட ஆரம்பிக்கறோம். கொஞ்சம் ஆட்டம் காணட்டும். உருவி உடைக்க வேண்டியது தான்…”
நெடுஞ்செழியன் பேச்சில் நம்பிக்கை வர நின்றவன் எதிரே மகள் ஓடி வந்தாள்.
“புரியுது ஸார். காத்திருக்கேன்…”
“நல்லது. உங்களுக்கு இதை சொல்ல காரணம் நீங்க நம்பிக்கையோட இருக்கனுமேன்னு தான்…”
“அந்த நம்பிக்கை ஒன்னு தான் இப்ப வரைக்கும் போராட வைக்குது…” என பரிதி சொல்லவும்,
“டாடி போகலாமா?….” என காரின் கதவை திறந்து அஞ்சலி தனது பள்ளி பையை உள்ளே வைத்தாள்.
“வேலையா இருக்கீங்களா பரிதி? அப்போ நீங்க அதை பாருங்க….” என சொல்ல,
“பரிதி, வேற எதுவும் பிரச்சனையா? ஏதாவது சொல்லனுமா?….” நெடுஞ்செழியன் கேட்ட பின்னர் தான்,
“போனமுறை வழக்கு கோர்ட்ல இருக்கும் போது வழக்கை திரும்ப வாங்க சொல்லி அஞ்சலியை தூக்க பார்த்தாங்க. நீங்க சொன்ன குமரகுரு தான் போன்ல மிரட்டினான்…” பரிதி சொல்ல,
“ஆமா, என் மருமக புத்திசாலி. என் பேத்தி அதிபுத்திசாலி. அப்போ என் மகன் பாக்கியசாலி தானே?…” பெருமிதம் பெரியவரின் முகத்தில் ஜொலிக்க,
“என்னோட அம்மா இது எல்லாத்துக்கும் மேல….” என்றான் பரிதி அவரின் கையை பிடித்துக்கொண்டு.
“சரி இருக்கட்டும். நீயும் போய் தயாராகி வா பரிதி….”
“போகனும்மா…” என்றவன் பார்வை வெளியே படர்ந்தது.
“என்ன பரிதி?….” சுந்தரவல்லி மகனின் கண்களில் தெரிந்த எச்சரிக்கை உணர்வில் துணுக்குற்றார்.
“யாரோ இங்க இருக்கிறது மாதிரியே, நம்மளை கண்காணிக்கிறது மாதிரியே ஒரு உள்ளுணர்வு…”
“விசாரணைக்கு இன்னும் நாலுநாள் தான் இருக்கு. இதெல்லாம் நாம எதிர்பார்த்தும் இருக்கனும். கவனமாகவும் இருக்கனும்….” என்றார்.
“ஆனா இந்தமுறை என்ன செய்ய நினைச்சாலும் அவங்களுக்கு பாதகமா தான் முடியும். அதேநேரம் நம்மோட பத்திரமும் நமக்கு ரொம்ப முக்கியம்…” என எழுந்துகொண்டான்.
“நீங்க உள்ள வாங்கம்மா….” என தாயை அழைக்க,
“இந்த புடவை போதும். நீ போய் தயாராகி வா. நான் இருக்கேன்…” என்றவர் மகன் உள்ளே செல்லவும் வெளியே இரும்பு கதவின் அருகே வந்து கதவை திறந்து நின்றார்.
பார்வை சுற்றிலும் வலம் வந்து ஒவ்வொரு இடத்தையும் அலசியது. புதிதாய் யாரும் உள்ளனரா என பார்த்தார்.
இருந்தனர். அங்கே இரண்டுபேர் இயல்புடன் பேசிக்கொண்டிருப்பதை போல் தெரிந்தாலும் சுந்தரவல்லி வந்து நின்றதும் அந்த புதியவர்கள் உடல்மொழியில் ஒரு பரபரப்பு கூடியது.
அவர்களும் சுந்தரவல்லியை திரும்பி பார்க்கவும், பேசவும் என்று இருக்க தன் கைகளை பின்னால் கட்டியபடி அவர்களை நோக்கி நடந்தார் சுந்தரவல்லி.
நிதானமான எட்டுக்கள் அவர்களை நோக்கி வைக்கவும் முதலில் நின்று பார்த்தவர்கள் பேசிக்கொண்டே ஆமையாய் நகர்ந்து, பின் அங்கிருந்து வேகநடையில் நின்றிருந்த வாகனத்தில் ஏறி சென்றது வரை பார்த்தார் சுந்தரவல்லி.
“அம்மா, ஏன் வெளில வந்து நிக்கறீங்க?….” பரிதி என்னவோ என ஓடி வர,
“பதறாம நான் சொல்றதை கேளு பரிதி. உள்ள வா….” என மகனை உள்ளே அழைத்து வந்தவர்,
“நம்ம வீட்டு கண்காணிப்பு கேமராவை பார்….” என்று காண்பிக்க பரிதி அதனை திறக்கவும் அதில் இருந்த இருவரை காண்பித்தார்.
“பெரியதா வச்சு பார். முகம் தெளிவா இருக்கா?….” என கேட்க மிகவும் தெளிவில்லை.
ஆனால் அவர்கள் நின்ற வண்டியும், ஓடி சென்றதும் என எல்லாம் பதிவாகி இருந்தது.
“இந்த பசங்க?….” பரிதி திகைக்க,
“நம்மளை தான் கண்காணிக்க வந்திருக்காங்க. அப்படி இல்லைன்னா ஏன் நான் போகவும் பயந்து ஓடனும் பரிதி?….”
“என்னம்மா? நீங்க ஏன் போனீங்க? என்னை கூப்பிட்டிருக்கலாமே?…” என்றவன்,
“முதல்ல இதை ஏசிபி சார்க்கு அனுப்பனும்…” என தனது மின்னஞ்சலில் சேமித்துக்கொண்டான்.
“கொஞ்சம் பொறு, நான் பல்லவி வீட்டுக்கு போய் அவங்க விட்டு பதிவையும், எதிரே சுதாகரன் வீட்டு பதிவையும் வாங்கிட்டு வரேன். அங்க இன்னும் தெளிவா தெரியும்…”
“இல்லை நான் போறேன்ம்மா. அஞ்சலி வந்தா சொல்லுங்க…” என்று வேகமாய் வெளியேறி கவனமாக கதவையும் சாற்றிவிட்டு சுந்தரவல்லி சொல்லிய வீடுகளுக்கு சென்றான்.
ஏற்கனவே இளம்பரிதி பற்றிய விஷயங்கள் தெரியும் என்பதனால் கேட்டதுமே எடுத்து தந்துவிட்டனர்.
“நான் அந்த பசங்களை பார்த்தேன். ஆனா உங்களை தான் கவனிக்கிறாங்கன்னு தெரியாது. எங்களால உங்களுக்கு வந்து சாட்சியம் எல்லாம் சொல்ல முடியாது தம்பி. ஆனா இந்த உதவியை செய்ய முடியும்…” என்றார் சுதாகரன்.
“நீங்க இதை செஞ்சதுக்கே பெரிய நன்றி. இது போதும். என்னால உங்களுக்கு தொந்தரவு வராது….” என சொல்லி வந்துவிட்டான்.
மகளும், தாயும் தயாராக இருக்க ஐந்து நிமிடத்தில் வருவதாக சொல்லி உள்ளே சென்றவன் மின்னஞ்சலில் இருந்தவற்றை எல்லாம் தனியாய் எடுத்துக்கொண்டான்.
சொல்லியது போலவே உடை மாற்றி ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டான்.
“பரிதி அமைதியா இரு. அஜி திட்ட போறா. கார் ஓட்டும் போது இப்படி உணர்ச்சிவசப்படலாமா?….” என மகனை எதை சொல்லி இழுத்து பிடித்தால் நிதானிப்பானோ அதை சொல்லி தட்டிக்கொடுத்தார்.
“ஆமா, அவளுக்கு நான் வேகமா ஓட்டினா பிடிக்காது. ஆனா அஜி மட்டும் யுஎஸ் ரோட்ல ரொம்ப வேகமா ட்ரைவ் பண்ணுவா. அவக்கிட்ட எப்பவும் கன்ட்ரோல் இருக்குமாம்….”
பெருமிதத்துடன் மனைவியின் வீரதீரசாகசங்களை விவரிக்க ஆரம்பித்திருந்தான் பரிதி.
“அதுவும் நிஜம் தானம்மா? அவளை மாதிரி எதையும் கையாள எனக்கு வராது. ஆனா ஒன்னொன்னும் சொல்லி குடுத்துட்டு போயிருக்கா….” என்றான்.
பரிதியின் பேச்சில் அவளில்லாத வலியும் ஊடுருவியிருக்க தாய்க்காக மகன் காண்பித்துக்கொள்ளவில்லை.
மகனுக்காக சுந்தரவல்லியும் அந்த வலியை கவனித்ததாக கண்டுகொள்ளவில்லை.
பார்வைக்கு புலப்படாத அந்த வலிகள் தொண்டைக்குள் இறங்கிய விஷமாக உயிரை திருகி எடுத்துக்கொண்டிருந்தது.
“எங்க போறோம் பரிதி? அதை அஞ்சலிகிட்ட கேட்கவே இல்லையே?…” சுந்தரவல்லி அப்போது தான் கேட்க,
“அம்மா இந்த வீடியோவை நெடுஞ்செழியன் ஸாருக்கு அனுப்பினா மட்டும் போதுமா? லோக்கல் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் குடுத்து வைக்கனும்…” என சொல்லி அந்த பகுதியின் காவல் நிலையத்தின் அருகே காரை நிறுத்தினான்.
நெடுஞ்செழியனுக்கு முதலில் அந்த வீடியோவை தனது போனில் இருந்து அனுப்பிவிட்டு அவன் பார்த்துவிட்டதன் அறிகுறி தெரியவும் அழைப்பு விடுத்தான்.
“இப்போ தான் பார்த்தேன் பரிதி. யாருன்னு விசாரிச்சிடுவோம்…”
“ஸார், நான் இங்க பக்கத்துல இருக்கற ஸ்டேஷன் முன்னாடி தான் இருக்கேன். ஒரு கம்ப்ளைன்ட் குடுத்திடலாமேன்னு வந்துட்டேன்…”
“நல்லது, நானே சொல்லனும்னு இருந்தேன். ஸ்டேஷன் நம்பர் என்ன?….” என கேட்டுக்கொண்டவன்,
“நீங்க கால் கட் பண்ணிட்டு உள்ள போங்க. இப்ப பேசிடறேன்…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான் நெடுஞ்செழியன்.
“அம்மா நீங்க கார்லயே இருங்க. அஞ்சலி தூங்கட்டும். நான் போய்ட்டு வரேன்…” என சொல்லி கார் சாவியை அவரின் கையில் கொடுத்தவன்,
“யாராவது பக்கத்துல வரது மாதிரி இருந்தா உடனே லாக் பண்ணிடுங்க. ஸ்டேஷன் பக்கம் வச்சு எதுவும் ஆகாது. ஆனாலும் ஜாக்கிரதையா இருக்கனுமே?….”
“பரிதி நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற?….” என கேட்டவர் மகனின் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்துவிட்டார்.
“நான் யோசிச்சு தானே ஆகனும்? சரி வரேன்ம்மா…” என உள்ளே சென்றான்.
“நீங்க தான் இளம்பரிதியா?…” என அவன் உள்ளே வரவுமே இன்ஸ்பெக்டர் காதில் வைத்திருந்த தொலைபேசியுடன் கேட்க,
“ஆமா ஸார்…” என்றான்.
“நீங்க உட்காருங்க. ஏசிபி நெடுஞ்செழியன் ஸார் தான் பேசிட்டிருக்கார்…” என அவனை அமர சொல்லியவர் மௌனமாக நெடுஞ்செழியன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார்.
“சரிங்க ஸார், கண்டிப்பா நான் பார்க்கறேன். அவங்க யார்ன்னு இப்பவே தேட சொல்றேன்….” என சொல்லிவிட்டு,
“பேசுங்க…” என பரிதியிடம் தொலைபேசியை நீட்டவும் வாங்கினான்.
“சொல்லுங்க ஸார்….” என பரிதியின் குரல் கேட்கவும்,
“நான் எல்லா விஷயமும் சொல்லிட்டேன் பரிதி. நீங்க எனக்கு அனுப்பின அந்த வீடியோவை அவருக்கும் அனுப்புங்க…”
“பென்ட்ரைவ்ல போட்டு கொண்டு வந்திருக்கேன் ஸார்…” என்றான் பரிதி.
“சரி, அதை குடுத்திட்டு, புகார் எழுதி குடுத்திட்டு கிளம்புங்க…” என்ற நெடுஞ்செழியன்,
“அத்தனை சீக்கிரம் அந்த பசங்க தப்பிச்சு போக முடியாது. கண்டிப்பா மதுரையை சேர்ந்தவங்களா இருக்க வாய்ப்பில்லை. திரும்ப மாட்டிக்க நினைக்கமாட்டாங்க. அதனால வேற இடத்துல தான் ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. நீங்க பயப்பட வேண்டாம் பரிதி…”