நீதிமன்றவளாகத்தில் தன் காருக்கு அருகே கார்த்திகேயனுடன் நின்று பேசிக்கொண்டிருந்தான் இளம்பரிதி.
“நம்ம வழக்கு வர இன்னும் ஒருமணி நேரம் இருக்கு பரிதி. அதுவரைக்கும் அம்மாவை ஏன் இங்கயே நிக்க வைக்கனும்? கார்க்குள்ள உட்கார சொல்லுங்க….” என்றார் கார்த்திகேயன்.
சுந்தரவல்லி அஞ்சலியிடம் மெல்லிய குரலில் அவள் கேட்பதற்கு பதில் கூறிக்கொண்டு இருந்தார்.
இத்தனைக்கும் இடையில் அவரின் பார்வை தூரத்தில் நின்றிருந்த மீராவையும், அவளுடன் நின்ற குடும்பத்தையும் கவனித்துக்கொண்டது.
சுடலைமுத்து, செல்வபாண்டி, நல்லதம்பி, மீரா, தேவகி என்று அந்த ஐவர் மட்டுமே வந்திருந்தனர்.
“குமரகுரு வந்த மாதிரி தெரியலையே பரிதி?….” மகனிடம் சுந்தரவல்லி யோசனையுடன் கேட்டார்.
“நேத்தே சொல்ல மறந்துபோய்ட்டேன்ம்மா. அவனை ரிமாண்ட் பண்ணிருக்காங்களாம். அவன் நடத்தற கடையில் கலப்பட சரக்கு வியாபாரம் பண்ணினதாவும்…” என சொல்லியவன் அஞ்சலியை பார்த்துவிட்டு,
“அங்கயே காய்ச்சி விக்கிறதாகவும் யாரோ புகார் குடுத்திருக்காங்க. அதை கைப்பற்றிய ஆதாரமும் இருக்காம். அதனால குமரகுரு நெடுஞ்செழியன் ஸார் கூட தான் வருவான். இப்ப அவன் வேற ஒரு வழக்கில் குற்றவாளி…” என்றான் பரிதி.
சுந்தரவல்லி முகத்தில் ஒவ்வாத தன்மை. அஞ்சலிக்கு புரியவில்லை என்பதால் சாதாரணமாக நின்றிருந்தாள்.
எப்படி ஒரு குடும்பத்தில் அஜிதா போல ஒரு பெண் என எண்ணிக்கொண்டவர் பார்வை அங்கே அவர்களை தான் பார்த்தது.
மீராவின் கண்கள் இவர்களை தவிரவேறு எங்கும் திரும்பவில்லை. ஏக்கமும், கண்ணீருமாக பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.
அந்த பார்வை சுந்தரவல்லி மனதை பிசைய கொலைவெறி கூட்டத்தில் புள்ளிமான் சிக்கி இருப்பதை போல தான் தோன்றியது.
“பரிதி, நான் உள்ள இருக்கேன்…” என காருக்குள் அமர்ந்துகொண்டார் சுந்தரவல்லி.
மீராவின் பரிதாபமான தோற்றமும், அவள் சாயலும் அஜிதாவை தான் ஞாபகப்படுத்தியது.
மகனை தேடி வந்த அன்று அஜிதாவின் பயம் கலந்த அந்த பார்வை இதோ இந்த கலக்கத்தை தானே பிரதிபலித்தது.
அது சுந்தரவல்லிக்கு வேதனையை தந்தாலும் இந்த பெண் இல்லாவிட்டால் இன்று தன் குடும்பம் குடும்பமாக இருந்திருக்கும் என எழும் நினைவை தவிர்க்க முடியவில்லை.
மீராவின் மீதான பரிதாபமும், கோபமும் மருமகளை நினைவுப்படுத்தும் அந்த முக சாயலும் சுந்தரவல்லிக்கு தொய்வை உண்டாக்கியது.
“நான் கூப்பிடறேன் பரிதி. இன்னொரு வழக்கு இருக்கு. வரேன்…” என்று கார்த்திகேயன் கிளம்ப,
“நான் இங்கயே இருக்கேன் ஸார்….” அவரை அனுப்பினான்.
“இருக்கறது பெரிசில்லை பரிதி. கவனமா இருக்கனும். அவங்களா பேச வந்தாலும் பொறுமையா இருங்க….” என சொல்லிவிட்டு தனக்கு தன்னிடம் கீழ் பயிற்சியில் இருக்கும் ஒருவனை பரிதிக்கு அருகில் இருத்திவிட்டு கிளம்பினார் கார்த்திகேயன்.
“நீ உள்ள பாட்டியோட உக்கார்ந்திருக்கலாமே அஞ்சலி?….” மகளிடம் பரிதி வினவ,
“இல்லைப்பா. உங்க கூடவே இருக்கேன்…” என்ற மகள்,
“நான் இங்க உக்காரட்டுமா?….” என்றதும் காரின் மேல் தூக்கி அமர வைத்தான்.
உள்ளே என்ன கேட்பார்கள் என மேலோட்டமாக பரிதி சொல்ல தலையாட்டி கேட்டுக்கொண்டாள் அஞ்சலி.
இடையிடையே மெல்லிய முறுவலும், அஞ்சலி பரிதியின் கன்னம் பிடித்து கொஞ்சுவதும் என பார்க்க கவித்துவமாக இருந்தது மீராவிற்கு.
பரிதி அஞ்சலியிடம் பேசுவதும், புன்னகைப்பதுமாக இருக்க அதனை பார்த்துக்கொண்டிருந்த மீராவிற்கும் இதத்தை தந்தது.
‘இந்த மாமா இப்படி கூட சிரிப்பாங்களா? பார்த்த அன்னைல இருந்து கோபம் தான்’ என எண்ணிக்கொண்டவளுக்கு அவர்களை தன்னுடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தாயின் அன்பும், தமக்கையின் அன்பும் அள்ள அள்ள குறையாததாக இருந்தாலும் வீட்டு ஆண்களிடம் கண்டிப்பும், அதிகாரமும் மட்டுமே.
தன்னை பெருமைக்கு மருத்துவப்படிப்பை படிக்க வைத்தனர். அதனை தவிர்த்து வேறு எந்தவித அரவணைப்பும் இருந்ததில்லை.
இப்போது இந்த காட்சியில் மனது முழுதாய் லயித்துவிட மகளுக்கு என்னவோ எடுத்து புகட்டினான் பரிதி.
இப்படியே மீரா எத்தனை நேரம் பார்த்தபடி நின்றிருந்தாளோ? அஞ்சலியின் அசையா பார்வை இப்போது மீராவிடம்.
ஏற்கனவே தாயின் இறப்பில், மதுரையில் நடந்த விசாரணையில் மீராவை கண்டிருந்தாலும் கவனித்து பார்க்கவில்லை அஞ்சலி.
“இவங்க பார்க்க கொஞ்சம் அம்மா மாதிரி இருக்காங்க இல்லையாப்பா?….” என கேட்ட அஞ்சலி,
“நம்மளை தான் பார்த்துட்டு இருக்காங்க. அழறாங்க போல?…” என்றதும் பரிதி திரும்பி மீராவை பார்த்தான்.
ஒரு நொடி பார்வையில் ஒருவரை பார்வையால் எரித்து பஸ்பமாக்க முடியும் என்றால் அது பரிதியால் மட்டுமே என்பதை போலிருந்தது அந்த பார்வை.
“ஒருத்தரை போல ஏழுபேர் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க அஞ்சலிம்மா. ஆனா எல்லாரும் ஒருத்தராக முடியாதே? அஜிதா சாயல் யாருக்கு இருந்தாலும் அவங்க அஜிதா மாதிரி நல்லவங்களா இருக்கமாட்டாங்க அஞ்சலி….” என்றான் பரிதி.
“தெரியும்ப்பா. அவங்க அழுதாங்க. அதான் சொன்னேன்…” என்ற அஞ்சலி அதன் பின்னர் மீராவை பார்க்கவும் பரிதியிடம் பேசுவதுமாக இருக்க மீராவின் கால்கள் அவர்களை நோக்கி செல்ல துடித்தது.
“மீரா அங்கயே என்ன பார்வை?…” என்ற தேவகியின் கர்ண கொடூரமான குரலில் திடுக்கிட்டாள்.
“இல்லைக்கா, சும்மா பார்த்தேன்…” என்றவள்,
“அன்னைக்கு அஜிக்கா பொண்ணை பக்கத்துல கூட போய் பார்க்க முடியலை. இப்ப பார்க்கனும் போல இருக்கு….” என ஏதோ ஆசையில் சொல்லிவிட தேவகியின் முகம் பயங்கரமாக மாறியது.
“கொன்னு புதைச்சிருவேன் உன்னை. அவன் நம்மளை எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பனும்னு முடிவோட இருக்கான். நீ என்னன்னா உறவு கொண்டாட பார்க்கற? நம்ம குடும்பம் கஷ்டப்படுதேன்னு நினைச்சிருந்தா அந்த குட்டிச்சாத்தான பார்க்கனும்னு நினைச்சிருப்பியா?….”
“வாய்க்கு வந்தபடி பேசாதக்கா. உன் பொண்ணை விட ரெண்டுவயசு கம்மியா தான் இருப்பா. குழந்தையை போய் குட்டிச்சாத்தான்னு பேச எப்படி மனசு வருது உனக்கு?…” மீரா கண்ணீருடன் கேட்கவும்,
“அப்பா இவளை என்னன்னு கேளுங்க?….” என தேவகி தன் தகப்பனிடம் தங்கையை இழுத்துவிட்டாள்.
“என்ன? எதுக்கு அழுதுட்டு நிக்கிற மீரா?….” என்று சுடலைமுத்துவிற்கு முன் நல்லதம்பி கேட்க,
“ம்ம்ம்…” என்று தலையை ஆட்டியவள் கண்ணீருடன் குனிந்துகொண்டாள்.
ஒழுக்கம் என்ற இந்த வார்த்தையை வைத்து எத்தனை பேச்சுக்கள்? இப்போதும் அதில் என்ன தவறி போனேன் என கேட்க எண்ணியவள் பிரயோஜனமில்லை என விட்டுவிட்டாள்.
புடவை தலைப்பில் கண்களை துடைக்கவும் மகள் அருகே வந்தார் செல்வபாண்டி.
“அழாதம்மா, முதல்ல நமக்கு நம்ம குடும்பம் முக்கியம். அதை மனசுல வச்சுக்கோ. உன் அக்காவால தான் இன்னைக்கு உன் பெரியப்பா, அண்ணன் அவன் குடும்பம், அக்கா வீட்டுக்காரர் எல்லாரும் இங்க வந்து நிக்கிறோம். ஒரு விபத்தை கொலைன்னு காமிக்க அந்தாள் இவ்வளோ போராடுறான். உனக்கு நம்ம வீட்டு மேல அந்த பாசம் கூட இல்லையா மீரா?….”
செல்வபாண்டியின் உருக்கமான கேள்வியும், பேச்சும் மீராவை பாதித்தாலும் அதற்கென்று அக்காவின் பிள்ளை மீது அன்பு இல்லை என்றாகிவிடுமா?
தாயில்லா பெண், எனக்கு தாயை போலிருந்தவளின் பெண் என எண்ணியவளின் மனது கலங்கி நின்றது.
மீண்டும் பார்வை அஞ்சலி, பரிதியிடம் பாய நல்லதம்பிக்கு தங்கையை அறைந்துவிடும் வேகம்.
“விடுப்பா, பாசம். அதான் அப்படி பார்க்கறா. கிளம்பற வரைக்கும் தான். இருக்கட்டும்…” செல்வபாண்டி நல்லதம்பியை தடுத்துவிட்டார்.
மீராவுக்கு மனது இங்குமங்குமாய் தாவியது. அங்கே சென்று நின்று அருகில் அக்காவின் மகளை பார்த்து அள்ளி கொஞ்சிவிட்டு வரமாட்டோமா என்றிருந்தது.
பாபாசூட் உடையில் பாந்தமாக தலையாட்டி பேசிக்கொண்டிருந்த அஞ்சலி மேலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை.
அதுவும் அஞ்சலியும் அவளை பார்க்கவும் செய்ய உள்ளுக்குள் தவியாய் தவித்து போனாள் மீரா.
என்னால் தானே குழந்தைக்கு தாயில்லாமல் போனது என்னும் எண்ணம் மீராவிடம் மீண்டும் வலுக்க துவங்கியதுமே கூடவே தானே தாயாகி அவளை பார்த்துக்கொண்டால் என்ன என்னும் எண்ணமும் துளிர்த்துவிட்ட அந்த நிமிடம்,
“அடுத்தது நம்ம வழக்கு தான். உள்ள போகலாம்…” என்று வழக்கறிஞர் வந்துவிட்டார்.
வெந்நீரை வாரி இறைத்து முகத்தில் அடித்து ஊற்றியதை போல துடித்து போனாள் மீரா.
‘நடக்கக்கூடிய சாத்திய கூறுகள் அரை சதவீதம் கூட இல்லை என்றாலும், தன் நினைப்பை கண்டுகொண்டால் தன் குடும்பத்தினர் தன்னை விட்டு வைப்பார்களா?’ என்ற அச்சமும் மனதை கிடுகிடுக்க செய்தது.
“வந்திருப்பாங்கம்மா. வழக்கு நடக்கும் போது ஆஜர் படுத்தலாம்ன்னு நினைச்சிருப்பாங்க. அதுக்கு நாம எதுவும் செய்ய முடியாது….” என்றார் அவர்.
“என்ன அநியாயம்? வேணும்னே அந்தாள் செஞ்சிருக்கான். அவனை முதல்ல அந்த இடத்தை விட்டு மாத்தலாம்ன்னா முடியாதுன்னு சொல்றாங்களே?…” தேவகி புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
குமரகுருவை கைது செய்ததுடன் யாரையும் பார்க்க நெடுஞ்செழியன் அனுமதிக்கவே இல்லை.
அவனை கைது செய்து இத்தனை நாட்களாகியும் போராடி முயன்றும் பார்த்துவிட்டனர்.
மதுரை நீதிமன்றத்தில் குமரகுருவை ஒப்படைத்து அவன் மேல் போடப்பட்டிருந்த இன்னபிற வழக்குகளையும் ஆதாரத்துடன் சமர்ப்பித்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டான் நெடுஞ்செழியன்.
ஏற்கனவே குமாரகுருவிற்கு முன்ஜாமீன் எடுக்கப்பட்டிருக்க இப்படி நெடுஞ்செழியன் வேறு ஒரு வழக்கின் மூலம் கைது நடவடிக்கை எடுப்பான் என சுத்தமாக யாரும் எண்ணியிருக்கவில்லை.
அனைவரும் சுதாரிக்கும் முன் அனைத்தையும் நடத்தி முடித்து இப்போதைக்கு வெளியில் வரமுடியாத வகையில் குமரகுருவை சிக்கவைத்திருந்தான் நெடுஞ்செழியன்.
ரவிசந்திரனுமே இதனை எதிர்பார்க்கவில்லை. அனைவரின் கவனமும் அஜிதாவின் வழக்கில் இருக்க அங்கே விட்டுப்பிடித்து வேறொரு வழியில் சத்தமில்லாமல் தூக்கியிருந்தவன் மேல் கொலைவெறி வலுத்தது.
“இப்ப எதுவும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அமைதியா இருங்க. இவன் இன்னும் என்ன பண்ணிவச்சிருக்கான்னு தெரியாம எதுலையும் கால் வைக்காதீங்கடா. சொன்னதை கேளுங்க….” என ரவிசந்திரன் அதட்டியிருந்தார் அனைவரையும்.
நல்லதம்பி தான் அடங்காமல் எதையாவது செய்து நெடுஞ்செழியனை முடக்கி போட முயல,
“இன்னொருதடவை என் பேச்சை கேட்கலைன்னா நானும் என்னவும் செய்ங்கன்னு விட்டுட்டு போய்டுவேன். நம்மாளுங்களாச்சே அப்படிங்கற ஒரு நினைப்பு தான் உங்களை காப்பாத்த பார்க்குது…” என அடக்கி வைத்திருந்தார்.
உடனே கோபிநாத்திற்கு அழைத்து வார்த்தைகளில் வரம்பில்லாமல் ரவிச்சந்திரன் பேச,
“எனக்கு இந்த விஷயம் அங்க கைது பண்ண போன பின்னாடி தான் ஸார் தெரியும். அவர் இருக்கும் போது எப்படி உங்களுக்கு தகவல் சொல்ல முடியும்?…” என்று சொல்லிவிட்டான் கோபிநாத்.
“இதுமட்டும் தானா? இல்லை வேற ஏதாவது விஷயம் இருக்கா?….” என கடுப்பாய் ரவிசந்திரன் கேட்க,
“எனக்கு தெரியலை ஸார். வேற எதுவும் தெரிஞ்சா உங்களுக்கு சொல்லாமலா? எங்களுக்கே இவர் வந்ததுல இருந்து குடைச்சல் குடுத்துட்டே இருக்கார். சீக்கிரம் மாத்திவிடுங்க இவரை….” என கோபிநாத் ரவிசந்திரனிடம் சொல்லிவிட்டான்.
“சரி, நான் பார்த்துக்கறேன்….” என்று அடங்கினார்.
கோபிநாத் முகத்தில் திருப்தி. அவமானத்தில் காயம்பட்ட அவன் மனது இதை எண்ணி சமாதானமானது.
“என்ன நடக்குதுன்னே தெரியாம நல்லா சுத்தட்டும்…” என சந்தோஷமாக சொல்லிக்கொண்டான் அவன் நெடுஞ்செழியனிடம்.
அதன் பின்னர் வழக்கறிஞர் வைத்தும் சுடலைமுத்துவும், செல்வபாண்டியும் குமரகுருவை பார்க்க வர, குமரகுரு வீட்டினரும், அவனின் பெற்றோர், தம்பியும் கூட வந்திருந்தனர்.
யாருக்கும் அசைந்துகொடுக்கவில்லை நெடுஞ்செழியன். பார்க்க அனுமதிக்கவும் இல்லை.
“சாட்சியங்களை கலைச்சிருவீங்கன்னு தோணுது. அதனால பார்க்க விடமுடியாது. எதுவா இருந்தாலும் விசாரணைக்கு கோர்ட்டுக்கு வரும் போது பாருங்க….”
“இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்…” என்ற சுடலைமுத்துவிற்கு,
“அதெல்லாம் முடியாது. உங்களால முடிஞ்சதை செஞ்சுக்கோங்க…” என்று சொல்லிவிட்டான்.
அவனை எதுவும் செய்யமுடியாத ஆத்திரமும், பழிவெறியும் இப்போது பரிதியின் மேலும் திரும்பி இருந்தது.
சுந்தரவல்லியுடன், மகளை கைபிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் இளம்பரிதி.