அதனை பார்த்துக்கொண்டே நின்ற மீராவும் எதார்த்தமாக செல்ல பார்க்க தேவகி கைபிடித்து நிறுத்தினாள்.
“எங்க ஓடுற? உன் அக்கா புத்திடி உனக்கும். உன் உடம்புல நம்ம ரத்தம் தான ஓடுது?….” என்ற கேள்வியில் தேவகி பிடித்திருந்த கையை உதறினாள் மீரா.
“வாய்க்கு வந்தபடி பேசாதக்கா….” என்றவள்,
“இப்ப தான உள்ள போகனும்னு சொன்னாங்க. அதான் போறேன்…” என கோபமாய் கூறினாள் மீரா.
“என்னம்மா இங்க வந்தும் அடிச்சுக்கறீங்க?…” என்ற சுடலைமுத்து,
“மீரா உனக்கு என்ன பேசனும்னு ஞாபகம் இருக்கு தான? இல்ல திரும்ப சொல்லனுமா?…” என்றார்.
“இருக்கு பெரியப்பா….” மீரா தலையசைக்க,
“படிச்ச பொண்ணு, புரிஞ்சிருக்கும். நம்ம குடும்பத்தோட மானம், மரியாதை எல்லாம் இப்ப உன் கையில தான். பார்த்துக்கோ….” சுடலைமுத்து இறைஞ்சுதல் போல மறைமுகமாக மிரட்டவும் செய்தார்.
“மீரா, நமக்கு நம்ம குடும்பம் தான் முக்கியம். உன் அக்கா போனவ போயிட்டா. இருக்கறவங்களை காப்பாத்தனும். பார்த்துக்கோம்மா. வக்கீல் சொன்ன மாதிரி பேசு…” செல்வபாண்டி தளர்வுடன் சொல்ல தன் தந்தையின் கெஞ்சுதலில் கண்ணீருடன் பார்த்தாள்.
பரிதாபம் தான். அன்று நடந்தது என்ன என இன்னும் தெளிவாக தெரியாதவர்களில் தன் தந்தையும் ஒருவராகிற்றே.
தான் எழுந்து வரும் பொழுது இன்னும் அயர்ந்த உறக்கத்தில் தான் அவரும் இருந்தார். எழுப்பியதும் தான் தான்.
எத்தனை அழுகை, கண்ணீர். நினைக்கையில் நெஞ்சமெல்லாம் ரணமாய் காந்தியது மீராவிற்கு.
மற்ற யாருக்காகவும் இல்லை. செல்வபாண்டிக்காக பேச ஒப்புக்கொண்டாள் மீரா.
இந்தமுறை விசாரணை முதலில் இருந்ததை போல கண்துடைப்பாக இருக்க போவதில்லை என்பது நிச்சயம்.
தலையசைத்து சம்மதம் சொல்லியவள் நின்றிருந்த விதத்தில் தேவகிக்கு திருப்தி இல்லை.
“இங்க பாருடி, நீ எதாச்சும் மாத்தி பேசின அது அவங்களுக்கு சாதகமா போச்சுன்னா நானும் என் மகளும் உயிரோட இருக்கமாட்டோம் பார்த்துக்கோ….” என மிரட்டினாள் தேவகி.
“அதான் நாம எதுவும் செய்யலையேக்கா. எதுக்கு இவ்வளோ யோசிக்கிற நீ? நான் நடந்ததை அப்படியே சொன்னா மட்டும் இது கொலையாகிடுமா? ஏன்க்கா?…”
“என்ன பேசற மீரா? வன்மம் வச்சு பழி தீர்க்கன்னே பன்றான் உன் அக்கா புருஷன். எனக்கு என்னமோ அந்த ஏசிபியை காசு குடுத்து விலைக்கு வாங்கிட்டான் போல தோணுது. போதாததுக்கு ரவிசந்திரனுக்கு வேற ஆகாதவனாம். போதாதா?…” என்றார் சுடலைமுத்து.
மீரா அதற்கு மேல் அங்கே எதுவும் சொல்ல முடியாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டினாள்.
“நேரமாகிருச்சு ஸார்…” என வழக்கறிஞர் மீண்டும் சொல்லவும் வளாகத்திற்குள்ளே காவல்துறை வேன் வந்து நின்றது.
“தம்பி, அங்க பாரு. அதுக்குள்ளே இருக்கறது மாமா தான?….” என கேட்ட தேவகி அதனை உறுதிப்படுத்திக்கொண்டாள்.
கூட்டமாக அந்த வேனை நெருங்கும் முன் இடையில் வந்து நின்றான் நெடுஞ்செழியன்.
“ஸார் என் புருஷன்….” தேவகி சொல்ல,
“இல்லைன்னு சொல்லலையேம்மா. இப்ப அவன் குற்றவாளி. பார்க்க முடியாது….” என மறுத்தான்.
“என்னவேணாலும் சொல்லிக்கோங்க ஸார். எங்களை பார்க்க விடுங்க….” தேவகி நகரமாட்டேன் என்பதை போல அங்கே சத்தமாய் சொல்ல,
“உள்ள விசாரணைக்கு கூப்பிடுவாங்க. அப்ப கூட்டிட்டு வரேன். இப்ப நீங்க போகலாம்….” என்றவனை மீரா முடியாமல் உள்ளே இருந்தவனை பார்த்துக்கொண்டே நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர்.
“இவனுக்கு ஒரு சாவு வரமாட்டிக்குதே? இந்த கேஸ் முடியட்டும். இவனுக்கு இருக்கு. மாமா வெளில வரவும் பொட்டலம் போட்டுவிட சொல்றேன். ஆட்டமா ஆடறான்….” தேவகி பேசிக்கொண்டே வர,
“என்ன பேச்சு இதெல்லாம்? அமைதியா இருக்கமாட்டியா?….” செல்வபாண்டி சத்தம் போடவும்,
“என் நிலைமை யாருக்கு புரியுது? என் புருஷனை தான புடிச்சு வச்சிருக்காங்க. மத்த நேரம் எல்லாம் இவங்களுக்கு அவர் தேவை? இப்ப மட்டும்…”
“தேவகி….” சுடலைமுத்து சொல்லவும் அமைதியானாள்.
உள்ளே அவர்களின் மறுதிசையில் அமர்ந்திருந்தனர் பரிதியும், சுந்தரவல்லியும் அஞ்சலியுடன்.
கார்த்திகேயனின் மனைவி அஞ்சலியை நீதிமன்றத்திற்கு வேண்டாம் என்று சொல்ல,
“என் பொண்ணுக்கு எல்லாமே தெரியும் மேம். நான் பார்த்துக்கறேன்….” என சொல்லிவிட்டான்.
எப்படியும் விசாரணையில் அவளுமே இருக்க அழைத்து வராமல் இருக்கமுடியாது என்பது ஒருபக்கம் இருந்தாலும், தன்னுடன் மட்டுமே அவர்களின் பாதுகாப்பு என்பதிலும் உறுதியாக இருந்தான் பரிதி.
விசாரணை துவங்கியது. வழக்கம் போல வழக்கின் சாராம்சம் சொல்லப்பட்டு சந்தேகத்திற்குரியவர்களை வரிசையாக விசாரணைக்கு அழைத்து விசாரித்தனர்.
நெடுஞ்செழியனிடம் சொல்லியதை தான் அப்படியே அட்சு பிசகாமல் நீதிபதியின் முன்னிலையிலும் ஒப்புவித்தனர் சுடலைமுத்து, செல்வபாண்டி, நல்லதம்பி அனைவரும்.
எங்கு நூல் பிடித்து அவன் விசாரணையை துவங்குவதாக இருந்தானோ அதுவே இல்லை என்று மாற்றிவிட்டனரே.
அறியாமை என்னும் இருள் அவர்களை சூழ்ந்திருக்க இது தானே அவனுக்கும் தேவையாக இருந்தது.
தான் கட்டியிருந்த கயிற்றின் பிடியை இன்னும் தளர்வுடன் விட்டவன் தோளை குலுக்கிக்கொண்டான்.
இறுதியாக இது யூகத்தின் பெயரில் தொடுக்கப்பட்ட வழக்கு எனும் வாதத்தை முன்வைத்து சுடலைமுத்துவின் வழக்கறிஞர் முடித்தார்.
அடுத்ததாக நெடுஞ்செழியன் அழைக்கப்பட விசாரணையின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக கூறியவன் அன்றைய காணொளிகள் எதையும் அப்போது சமர்ப்பிக்கவில்லை.
இருபக்கமும் வழக்கை ஆராய்ந்ததில் வழக்கின் மறுவிசாரணை அடுத்து இரண்டு வாரம் கழித்து என்று உறுதி செய்தனர்.
அந்த வழக்கின் பொழுது அன்றைய சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே நீதிமன்றத்திற்கு வந்தாகவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முதல் விசாரணை எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது. அதுவே சுடலைமுத்து, நல்லதம்பி, குமரகுருவை பெருமையில் திளைக்க செய்தது.
“முதல் தடவையே மண்ணை கவ்வியாச்சா? வேணாம் ஸார். பேசாம போயிருங்க. இந்த கேஸ், கடைசி வரை இப்படித்தான். உங்களால ஒன்னும் பண்ண முடியாது….” நல்லதம்பி நெடுஞ்செழியன் முன்பு கொக்கரிக்க,
“முதல் விசாரணை தான் முடிஞ்சிருக்கு. அடுத்த விசாரணையில பார்ப்போம்….” என்று ஆர்ப்பாட்டமின்றி கூறினான் நெடுஞ்செழியன்.
“மொத்தமா தோத்துட்டு தான் போவேன்னு அடம் புடிக்கறீங்களே?….” என எள்ளல் தெறிக்க சொல்லியவன் நடையில் எதையோ சாதித்த மிதப்பு.
மீரா நிமிரவே இல்லை. தேவகி அவளை தரதரவென இழுத்துக்கொண்டு சென்றாள்.
குமரகுரு வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருந்தான் தன் வழக்கு சம்பந்தமாக தன்னை வெளியில் எடுப்பதை பற்றி.
“இன்னும் பத்து நாள் விசாரணைன்னு சொல்றான். என்னை முதல்ல வெளில கொண்டுவாயா. உள்ள வச்சு உசுரை வாங்கிட்டு இருக்கான். என்ன பண்ண போறானோன்னு இருக்கு….” பதட்டம் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.
“என் அனுமதி இல்லாம எப்படி இவனோட பேசுவீங்க வக்கீல் ஸார்? இந்த சட்டம் கூட உங்களுக்கு தெரியாதா? இவனுக்கு தெரியாது தான். உங்களுக்கு எங்க போச்சு….” என்றவன் வார்த்தைகளை நிறுத்தி,
“உங்க சட்டம்….” என முடித்தான் நெடுஞ்செழியன்.
“ஸார் வார்த்தைகளை அளந்து பேசுங்க. நீங்க என்ன சொல்ல வந்து நிறுத்துனீங்கன்னு தெரியாத அளவுக்கு சின்ன பையன் இல்லை நான்…..” வழக்கறிஞர் கோபமாக சொல்ல,
“இது என் காவல்ல இருக்கற இந்த குற்றவாளியோட பேசறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கனும். என் வட்டத்துக்குள்ள வந்தா நான் ஆடத்தான் செய்வேன். போறீங்களா? இல்ல இன்னும் மரியாதையா சொல்லனுமா?…”
“திரும்ப திரும்ப குற்றவாளின்னு ஏன் சொல்றீங்க ஏசிபி ஸார்? இன்னும் எதுவும் நிரூபிக்கப்படலை…”
“அப்போ நிரூபிச்சிட்டு பேசலாம்ன்னு சொல்றீங்க. நீங்க சொல்றதும் சரி தான்…”
“நான் உங்களை எங்க பார்க்கனுமோ அங்க பார்க்கறேன்….” என சொல்லிவிட்டு அவர் செல்லவும்,
“என்ன ஒயின்ஸ், சென்னை ரவுடிங்க எல்லாம் பழக்கம் போல? இங்க வரை கை நீண்டிருக்கே?….” நெடுஞ்செழியன் குமாரகுருவிடம் கேட்கவும் அவனுக்கு பீதியில் மயக்கம் வராத குறைதான்.
“எங்க இருந்து எங்க வரை கோடு போட்டிருக்க நீ? வா உனக்கு ரோடு போடறேன்…” என அவனை வேனில் ஏற்றிவிட்டான் நெடுஞ்செழியன்.
அதன் பின்னரே பரிதியின் பக்கம் வர கார்த்திகேயனிடம் பேசிக்கொண்டிருந்த பரிதி முகத்தில் நம்பிக்கையின்மை.
“எதிர்பார்த்த மாதிரி எதுவுமே நடக்கலையே ஸார். சொன்னதையே தான் சொல்றாங்க இப்பவும்…” என பரிதி கூற,
“நாம கேட்டதும் உண்மையை சொல்லனுமா பரிதி? அவங்க காலம் தாழ்த்தறது அவங்களுக்கு பெரிய பாதகமா முடியும். இப்ப தானே ஆரம்பிச்சிருக்கு. உடனே முடிஞ்சிருமா?….” என்றான் நெடுஞ்செழியன்.
“நம்பிக்கை வரமாட்டேன்றது ஸார். எப்படி போறாங்க பாருங்க?….”
“போகட்டும். போகவிட்டு தான் புடிக்கனும். இந்த விசாரணை எலிக்கு பொரி வைக்கிறது மாதிரி இல்லை. இதுங்க எலியும் இல்லை. வெடி வைக்கனும். கண்ணிவெடி…” என்றான் நெடுஞ்செழியன்.
“ஸார்…”
“அதுக்காக தான் இப்ப குமரகுருவை வேற வழக்குல தூக்கிருக்கேன். இன்னும் ரெண்டு வாரம் இருக்கே? மலையை புரட்டிட மாட்டோமா?….” என சொல்லியவன்,
“உங்க பொண்ணு பார்த்துட்டு நிக்கறாங்க. அறிமுகப்படுத்தலாமே?….” என சொல்லி தானே தன்னை அஞ்சலியிடமும், சுந்தரவல்லியிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டான் நெடுஞ்செழியன்.
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை இகழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டே சென்ற சுடலைமுத்துவின் முகத்தில் இறுமாப்பு.
மறுவிசாரணை புது விசாரணையாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளும் அளவிற்கு அந்த மூடர்களுக்கு இருக்கும் மூர்க்கத்தின் அளவிற்கு மூளை இல்லாது போயிருந்தது.
அவர்களுக்கு தெரியவில்லை. கண்ணிவெடி பதித்து வைத்து அவர்களின் காலடி அழுத்தத்திற்கு காத்திருக்கிறான் நெடுஞ்செழியன் என்று.