“கோர்ட் விசாரணைல நீங்க ஏன் ஸார் எதையுமே காமிக்கலை? அதுவும் தேவகி பேசினது எல்லாம் ஆதாரம் தான். அதான் மனசை குடைஞ்சுட்டே இருக்கு…” என்றான் கோபிநாத்.
“சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஒரே வார்த்தையில இவர் என்னை மிரட்டி சொல்லவச்சார்ன்னு அவங்க சொல்லலாம். பதட்டத்துல தெரியாம பேசிட்டேன்னு சொல்லலாம். இப்படி நடக்கும் தானே கோபிநாத்?….”
“ஆமா ஸார். ஆனா தேவகி நைட்ல திரும்ப வீட்டுக்கு வந்திருந்தாங்களே? (Tramadol) கூடவே குமரகுருவும். அந்த வீடியோ?….”
“வீட்டுல யாருக்கோ உடம்பு முடியலை. அதனால் வந்து துணைக்கு இருந்தோம்னு சொல்லியிருக்கலாம். சின்ன விஷயம். சட்டுன்னு திசை மாறிட்டா அடுத்து நாம வலுவான ஆதாரம் குடுக்கற வரைக்கும் இது நம்ம பக்கம் பலவீனமா போயிடும்…” நெடுஞ்செழியன் சொல்ல,
“இதை நான் யோசிக்கலை ஸார். தப்பா நினைக்காதீங்க…” கோபிநாத் தான் அவசரப்பட்டதை எண்ணி சங்கடத்துடன் பார்த்தான்.
“இதுல என்ன இருக்கு கோபிநாத்? அடுத்த வேலையை பார்ப்போம்….”
“ஓகே ஸார். ஆனா அந்த மீரா பேசினது தான். எப்படி மாத்தி சொல்லிருக்கும்?…”
“அவங்கவங்க குடும்பம் தான் முதல்ல முக்கியம். நமக்கு நியாயம், தர்மம் எல்லாத்துக்கும் முன்னாடி நம்மோட குடும்பம் தான் முதல்ல. அவங்க பக்கம் தான் முதல்ல மனசு சாயும். அப்படி இருக்கும் போது தப்பு இருக்குமான்னு யோசிக்க தோணாது…”
“படிச்ச பொண்ணு. ஒரு டாக்டர். இது கூடவா தெரியாது. அவங்க குடும்பம் பத்தி தெரிஞ்சும் யோசிக்காதது தான் நெருடலா இருக்கு ஸார்….” கோபிநாத்தால் ஏற்க முடியவில்லை.
“படிப்புக்கும், பாசத்துக்கும் என்ன சம்பந்தம் கோபிநாத்? உங்க பிள்ளை இன்னொரு வீட்டு கண்ணாடியை உடைச்சான்னு யாராவது சொன்ன உடனே நம்பிருவீங்களா?…”
“இல்லை ஸார். ஆனா கேள்வி கேட்பேன்…”
“கேட்பீங்க தான். ஆனா சொல்லும் போது நம்ம பிள்ளையான்னு தான் முதல்ல தோணும். அது நம்ம பிள்ளை மேல நாம வச்சிருக்கற நம்பிக்கை. அப்படியே உடைச்சிருந்தாலும் அது தெரியாம தான் பட்டிருக்கும்ன்னு நமக்கு நாமே சமாதானம் சொல்லிப்போம். இப்ப நிறைய பெற்றோர்கள் அப்படித்தான் இருக்காங்க….” என்ற நெடுஞ்செழியன்,
“உடனே கூப்பிட்டு கண்டிக்கிறதும், இல்லை கண்டிக்காமலே விடறதும் நம்மோட நம்பிக்கையில் ஆரம்பிக்குது. மீராவும் அந்த மாதிரி தான். அக்கா இறந்துட்டாங்க. ஆனா விபத்துன்னு அவங்க குடும்பம் எல்லாம் சேர்ந்து சொல்லும் போதும், அவங்க பார்த்த நிகழ்வுகளை வச்சும் நம்பறாங்க…”
“அதுக்காக மாத்தி சொல்லலாமா ஸார்? அதை வச்சு யோசிக்கலாமே அந்த பொண்ணு. ஏன் மாத்தி சொல்ல சொல்றாங்க? தப்பு பண்ணலைன்னா அப்படி சொல்லவேண்டிய அவசியம் என்னன்னு நினைக்க வேண்டாமா?….” கோபிநாத் நெடுஞ்செழியனிடம் கேட்க,
“கோபிநாத் ஒரு விஷயம் நீங்க ஒரு பார்வையில் மட்டும் பார்க்கறீங்க. அவங்க ஏன் அதை செய்யலைன்னு கோபம் வருது. மீரா எதனால மாத்தி சொல்லியிருக்கலாம்ன்னு யோசிக்க உங்களால முடியலை. இது தான் மீராவுக்கும். குமாரகுருவோட கைதும் இதுக்கு காரணமா இருக்கலாம்…”
“புரியலை ஸார்….” என தயக்கமாக இருந்தாலும் கேட்டுவிட்டான்.
“இதுவரை அவங்க ஒயின்ஷாப் கைது நடவடிக்கைக்கே போனதில்லை. இந்த கைது அவங்களுக்கு அஜிதா வழக்கு காரணமா நடந்திருக்கும்ன்னு நம்புவாங்க. நம்பற மாதிரி சொல்லியிருப்பாங்க. அப்போ முதல்ல மீராவுக்கு இதுல தப்பு இருக்கும் போல, அதனால கைது பண்ணியிருக்காங்க அப்படின்னு நம்புவாங்களா?…”
“இப்ப புரியுது ஸார்? நான் வந்து….” என குறைந்துவிட்ட சுதியுடன் கோபிநாத் கூறவும்,
“அதுதான், வீட்டுல சொல்லியிருப்பாங்க. குற்றத்தை நிரூபிக்க நாம இப்படி பொய் வழக்கு போடறோம்ன்னு சொல்லி குடும்பமானம், கௌரவம்ன்னு பேசியிருப்பாங்க. மீராவும் என்ன செய்வாங்க? முதல்ல குடும்பம்ன்னு தான் யோசிப்பாங்க. ஒருவகையில அவங்க சூழ்நிலை கைதி தான்…” என்ற நெடுஞ்செழியன்,
“அடுத்த வேலையை பார்ப்போம் கோபிநாத். கேட்டு தெரிஞ்சுக்கறதுல தப்பில்லை. தயக்கம் இருக்க கூடாது. எல்லாருக்கும் எல்லாமே தெரியனும்னு அவசியமில்லை. ஆனா தெரிஞ்சுக்க வாய்ப்பிருந்தும் செய்யாம இருக்கறது தான் தப்பு….” என முறுவலித்தான்.
அதன் பின் அந்த பதிவுகளில் அஜிதா இறப்பின் முதல் இருநாட்களை கவனித்ததில் வேறு எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
நடந்தது எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. நெடுஞ்செழியன் முகத்தில் தீவிர சிந்தனை.
“சந்தேகப்படற மாதிரி புதுசா யாருமே வரலையே ஸார்….” என்றான் அவனும்.
“ஆமாம், அஜிதா மீராவோட காலேஜ்க்கு வரவும் தான் மீராவுக்கே அக்கா வந்திருக்கிறது தெரிஞ்சது. அப்போ அவங்க வீட்டுக்கு அன்னைக்கு தான் விஷயத்தை சொல்லியிருக்கனும்…” நெடுஞ்செழியன் பேசவும்,
“அன்னைக்கு அந்த நிகழ்ச்சி மதியம் தான் நடந்திருக்கு. அப்போ தான் அஜிதாவும் அங்க போயிருக்காங்க. அப்போ அதுக்கப்பறம் தான் வீட்டுக்கு சொல்லியிருக்காங்க. மீரா வாக்குமூலத்திலையும் அதுதான் இருக்கு…” என கோபிநாத் கூறினான்.
“அப்போ இது முன்கூட்டியே திட்டமிட்டது இல்லை. ஆனா அவங்க மனசுல அஜிதா எப்ப வந்தாலும் இதை செய்யனும்ன்ற எண்ணம் மட்டும் இருந்திருக்கு. அது தான் உண்மை. அவ்வளவும் வன்மம்…”
கசப்புடன் சொல்லியவன் முகத்தின் மாற்றத்தில் கோபிநாத் ஆமோதிப்பான பார்வை பார்த்தான்.
“என்ன மனுஷங்களோ ஸார். பார்க்கனும்னு வர சொல்லி இப்படி பண்ணியிருக்காங்க. அதோட இந்த குமரகுரு எவ்வளவு துணிச்சல் இருந்தா ஆள் ஏற்பாடு செஞ்சு இளம்பரிதியை நோட்டம் விட அனுப்பியிருப்பான்…” என்றான் கோபிநாத்.
“அதுக்கு மட்டுமா? அவங்களுக்கு இடைஞ்சலா இருந்தா பரிதியையும் ஏதாவது செஞ்சிட்டே போக வாய்ப்பிருக்கு….” என சொல்லிய நெடுஞ்செழியன்,
“கோபிநாத் அந்த கடையில இருக்கற பசங்களை விசாரிக்க வர சொல்லியிருந்தேனே?….”
“அப்பவே வந்தாச்சு ஸார். பின்னாடி உள்ள அறையில இருக்க வைக்க சொல்லியிருந்தேன்….”
“சரி வாங்க போகலாம்…” என எழுந்துகொண்டான் நெடுஞ்செழியன்.
நான்கு பேர் இருந்தனர் அந்த அறையில். அனைவருமே குமரகுரு ஒயின்ஷாப்பில் வேலை செய்பவர்கள். ஒருவகையில் அவனுக்கு நெருக்கமும் கூட.
சிறுவனில் இருந்து வயதான பெரியவர் வரை இருக்க அனைவரின் முகத்திலும் அச்சம் மிகுந்திருந்தது.
ஒவ்வொருவரின் பெயரில் இருந்து எத்தனை வருடங்கள் வேலை செய்கின்றனர் என்பது வரை தனித்தனியாக அமர்த்தி விசாரித்துக்கொண்டான்.
கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் பதில்கள் உடனே வந்தது. எந்த இடத்திலும் தேக்கமின்றி வர அதில் ஒருவனை தவிர மற்றவரை அனுப்பிவிட்டான் நெடுஞ்செழியன்.
“ஸார் இவன் குமரகுருவோட ஆளா இருப்பானா?….” கோபிநாத்திற்கே சந்தேகம்.
“சரியா சொன்னீங்க. ஆனா இவன் இல்லை. வெளில போன மூணு பேர்ல அந்த சின்ன பையனா கூட இருக்கலாம். காத்திருப்போம்…” என சொல்லிய நெடுஞ்செழியன் அந்த மூவரையும் கண்காணிக்க அனுப்பி வைத்தான்.
“ஸார் எனக்கு எதுவுமே தெரியாது ஸார். நான் உண்டு என் வேலை உண்டுன்னு தான் இருப்பேன். எந்த வம்பு வழக்குக்கும் போகமாட்டேன் ஸார்…” என்ற ரமேஷ் என்பவனின் அழுகையில்,
“அப்ப அந்த மூணு பேர்ல யார் குமரகுரு கூட அதிகமா இருப்பா?….”
“சரவணன் தான் இருப்பான். அவனை தான் அதிகமா அவரோட பார்த்திருக்கேன். வீட்டுல முக்கியமான எந்த ஒரு வேலைன்னாலும் அவனை தான் முதல்ல அனுப்பிவைப்பார்…” என ரமேஷ்.
“குமாரகுருவோட மாமனார் வீட்டுல நடந்த சாவுக்கு நீங்க யாரெல்லாம் போனீங்க?….” நெடுஞ்செழியன் கேட்க,
“அதான் சொன்னேனே ஸார், எல்லாருமே தான் போயிருந்தோம். அங்க பந்தல் போட, சேர் எடுத்து போட இப்படி வேலைக்கு எங்களை தான் கூப்பிட்டிருந்தார். அந்த வீட்டை சுத்தம் பண்ணி தீப்புடிச்ச ரூம்க்கு உடனே வெள்ளையடிக்க எல்லாம் சரவணன் தான் செஞ்சான்….”
“சரவணன் செஞ்சானா? இதை நீ முதல்ல சொல்லலையே ரமேஷ்?…” என நெடுஞ்செழியன் கேட்டதும் ரமேஷ் பயந்து பார்த்தான்.
“உண்மைய சொல்லிட்டா தண்டனை குறையும். ஒழுங்கா ஜெயில்ல போய் களி திங்காத. அப்பறம் உன் குடும்பம் தான் இங்க நீ இல்லாம சீரழியும். பார்த்துக்கோ…” கோபிநாத் அவனை எச்சரித்து சொல்லவும் ரமேஷ் இன்னும் பயந்தான்.
மற்ற மூவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் பிடித்திருக்க பயத்தில் உடல் உதறியது.
“நீ என்ன மறைக்கிற ரமேஷ்?…” நெடுஞ்செழியன் கேட்கவும்,
“ஸார் எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் ஸார்….” மீண்டும் கண்ணீர் வந்துவிட்டது தன்னையும், தன் குடும்பத்தையும் நினைத்து.
“பொண்டாட்டி, மூணு குழந்தைங்க. அம்மா, அப்பா, தங்கச்சி. யோசிச்சுக்கோ…” கோபிநாத் இன்னும் அவனை அச்சமூட்டினான்.
“நீங்க முதல்ல கேட்கும் போது எனக்கு சரியா ஞாபகம் இல்லை ஸார். ரொம்ப மாசமாகி போச்சு. அதான் மறந்துட்டேன். ஆனா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஸார்…” என்றான் ரமேஷ் இறைஞ்சுதலுடன்.
“கோபிநாத் இவன்கிட்ட பேசற நேரம் நமக்கு விரயம். இந்த பையன் உண்மையை மறைக்கிறான்னு உள்ள தூக்கி போடுங்க. நான் ஒரு வேலையா வெளில போறேன்….” என சொல்லி கதவு வரை சென்றுவிட்டான்.
“ஸார் சார். நான் சொல்றதை கேளுங்க. எனக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லிடறேன்…” என ரமேஷ் கத்தி அழைக்கவும்,
“எதுவா இருந்தாலும் கோர்ட்ல சொல்லலாம் தம்பி. எனக்கு சும்மா சும்மா கேள்வி கேட்கிறது சுத்தமா பிடிக்காது. ஒருதடவை கேட்டா மொத்தமா உண்மை வரனும். நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட…” என சொல்லி நெடுஞ்செழியன்,
“கோபிநாத் பார்த்துக்கோங்க….” என்றான்.
“ஐயோ நான் சொல்லிடறேனே. நில்லுங்க ஸார்….” என்று இன்னும் சத்தமிட்டு அழவும் அருகே வந்தான் நெடுஞ்செழியன்.
“சரி டக்குன்னு சொல்லு….” என்று அந்த சேரில் அமரவும் ரமேஷ் சாட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டான்.
“நிஜமாவே எனக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை ஸார்…” மீண்டும் சொல்லியதையே ரமேஷ் சொல்ல,
“என்னடா விளையாடுறியா?….” என்று கோபிநாத் ரமேஷை அறைந்தான்.
“நிஜமாவே ஸார். முழுசா சொல்ல விடுங்க….” என்று அவனிடம் கெஞ்சியவன்,
“ஸார் நாங்க அங்க என்ன வேலை சொல்றாங்களோ அதை தான் செய்வோம். அன்னைக்கும் விடியக்காலை குமாரண்ணே போன் போட்டார். பந்தல் போட ஆளை கூட்டிட்டு வான்னு சொல்லவும் போனேன். நான் போறப்பவே அங்க சரவணன் இருந்தான். அவன் தான் அந்த வீட்டு பின்பக்கம் உடைச்சு போட்டுட்டு இருந்தான்….”
“என்னத உடைச்சான்? நீ பார்த்தியா?…” கோபிநாத் கேட்க,
“ஆமா ஸார். ஏசி மிசின் மாதிரி இருந்துச்சு. அது தான் எரிஞ்சது போல? கழட்டி சின்னதா உடைச்சிட்டு இருந்தாங்க. நான் கூட கேட்டேன். சரி செய்ய குடுக்கலாமேன்னு. திரும்ப வீட்டுல மாட்டினா அபசகுனமா இருக்கும். அதனால வேண்டாம்ன்னு சொன்னாங்களாம்….” என ரமேஷ் சொல்லவும் நெடுஞ்செழியன் கோபிநாத்தை பார்த்தான்.
“அப்ப நேரம் என்ன இருக்கும்?…” கோபிநாத் மேலும் கேட்க,
“அதான் சொன்னேன்ல ஸார், அப்பத்தான் விடிஞ்சது. ஆறுல இருந்து ஒரு ஏழுமணிக்குள்ள தான் இருக்கும். சரியா நேரம் ஞாபகம் இல்லை ஸார்…” என்றவன்,
“நான் அங்க நின்னு கேட்டுட்டு இருக்கும் போது குமாரண்ணே வந்து என்னை அடிச்சிட்டார். என்ன சொன்னா எங்க வந்து நிக்கிற? எழவு நடந்து இன்னும் காரியமே நடக்கலை. போய் பந்தலை போட சொல்லி அங்க பாருடான்னு அடிச்சார்….” என்றான்.
“சரி இதை ஏன் நீ முதல்லையே சொல்லலை?….” நெடுஞ்செழியன் வினவ,
“முதல்லையே கேஸ்ன்னு சொல்லவும் பயம் தான். ஒருவேளை அப்படி இருக்குமோன்னு. அப்பறம் எதுவுமில்லைன்னு தீர்ப்பு வரவும் தப்பா நினைச்சிட்டோமோன்னு மனசை தேத்திக்கிட்டேன். இப்ப திரும்பவும் அது கொலைன்னு பேசிக்கும் போது பயந்துட்டேன்….”
“கொலைன்னு பேசிக்கறாங்களா?….” நெடுஞ்செழியன் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டான்.
“ஆமா ஸார். முதல்லையே அரசல்புரசலா பேசினாங்க. நமக்கு தெரியாததை என்ன பேச? அதான் பெருசா எடுத்துக்கலை. ஆனா அவங்ககிட்ட யாரும் கேட்க முடியாது. எல்லாருக்குமே ஒரு பயம். வாயை திறக்கமுடியாது….” என்றான் ரமேஷ்.
“சரி அந்த துண்டா வெட்டின ஏசியை என்ன பண்ணினாங்க? தெரியுமா?….” கோபிநாத் கேட்கவும்,
“இல்லை ஸார். பந்தல் பாதி போட்டுட்டு இருக்கும் போதே அந்த ரூம்ல இருந்த மெத்தை, தலையணை எல்லாம் தூக்கிட்டு போக சொல்லி சொன்னாங்க. குப்பைமேட்டுல வச்சு கொளுத்திவிட்டு வான்னு. நான் குட்டியானை வண்டியை எடுத்துட்டு அதுக்கு போயிட்டேன். திரும்ப வரதுக்குள்ள அவங்க மயானத்துக்கு போய்ட்டாங்க…” என சொல்லி முடித்தான் ரமேஷ்.
“அவ்வளவு தானா? அந்த உடைச்ச ஏசி துண்டுகளை என்ன செஞ்சாங்க?….” கோபிநாத் திரும்பவும் கேள்வி எழுப்ப,
“அது எனக்கு தெரியாது ஸார். தெரிஞ்சதை எல்லாம் சொல்லிட்டேன். என் புள்ளைங்க மேல சத்தியமா இது தான் ஸார் நடந்தது. அப்படியே சொல்லிட்டேன். முதல்ல நமக்கு எதுக்கு வம்புன்னு தான் எதுவும் சொல்லலை. என்னை நம்புங்க ஸார். வெளில விடுங்க ஸார்…” என்றான் ரமேஷ்.
“போகலாம், அதுக்குள்ளே ஏன் அவசரப்படற? இன்னும் ரெண்டு வாரம் மட்டும் நீ இங்க இருந்தா போதும். அதுக்கப்பறம் போகலாம்…” என சொல்லி நெடுஞ்செழியன் எழுந்துகொண்டான்.
“ஸார் அதான் சொல்லிட்டேனே? இதை நீங்க கோர்ட்ல கேட்டாலும் நான் சொல்றேன். என்னை விட்டுடுங்க ஸார்….” ரமேஷ் கெஞ்ச,
“இல்லை ரமேஷ். சின்ன சின்ன சாட்சியங்களும் எனக்கும் முக்கியம். அப்பறம் உனக்கு துணைக்கு நான் சரவணனை அனுப்பி வைக்கறேன். பயப்படாம இரு….” என சொல்லி வெளியேறிவிட்டான் நெடுஞ்செழியன்.
கோபிநாத் ரமேஷை பத்திரமாக காவலில் வைத்துவிட்டு நெடுஞ்செழியனை தேடி சென்றான்.
அவனறையில் அமர்ந்திருந்தவன் முகம் கடுமையாக இருந்தது. கோபத்தில் இருப்பது பார்த்ததுமே தெரிந்தது.
“ஸார்…” என கோபிநாத் அழைக்கவும்,
“எவ்வளவு துணிச்சலா ஒரு விஷயத்தை செஞ்சிருக்காங்க பார்த்தீங்களா கோபிநாத்? சுத்தி அத்தனை அக்கம்பக்கத்தில ஆள் இருந்தும் போலீஸ்க்கும் யாரும் சொல்லலை. விடியறதுக்குள்ள எல்லாம் செஞ்சு முடிச்சு தைரியமா நடமாடிட்டு இருக்காங்க….”
அவனின் குரலில் அனல் தெறித்தது. அதுவும் அவர்களுக்கு தங்கள் துறையிலேயே துணைபோகும் ஆட்கள் இருந்ததை எண்ணி வெட்கி போனான்.
“ஸாரி ஸார். இந்தளவுக்கு கேள்விகள் நாங்க போகும் போது இல்லை. எல்லாமே முடிஞ்சிருந்தது. பரிதி வந்து சொல்லும் போதும் அலட்சியமா தான் இருந்துட்டோம்…” என கோபிநாத்தும் அவமான உணர்வுடன் கூற,
“உங்களை சொல்லி மட்டும் என்ன பன்றது கோபிநாத்? இப்ப நம்மக்கிட்டையே அந்த சரவணன் எப்படி இதை மறைச்சிட்டு போயிருக்கான். அவனை தூக்குங்க…” என்ற நெடுஞ்செழியன் பரந்தாமனுக்கு அழைத்தான்.
“அங்க தான் ஸார் வந்துட்டு இருக்கேன்….” என சொல்லிய அடுத்த நிமிடம் பரந்தாமன் உள்ளே நுழைந்தார் தனது போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டே.
“என்ன பரந்தாமன் அந்த மூணு பேரும் எங்க போனாங்க?….” என்று கேட்க,
“சரவணனும், அந்த சின்ன பையனும் அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க. அந்த பெரியவர் திருநாவுக்கரசு மட்டும் நல்லதம்பியை பார்க்க அவங்களோட ஹோட்டலுக்கு போயிருக்கார். போனதுமே கொஞ்ச நேரத்துல வெளில வந்துட்டார். இன்னும் வீட்டுக்கு போகலை….” என தகவலை சொல்லவும்,
“சரி கவனமா பாருங்க. அவங்க யாரோ ஒருத்தர புடிச்சா கூட நமக்கு தேவையான சின்ன தகவலாவது கிடைக்கும்…” என்றான் நெடுஞ்செழியன்.
மீண்டும் பரந்தாமனுக்கு போன் வரவும் கோபிநாத்துடன் எழுந்துகொண்டான் நெடுஞ்செழியன்.
“ஸார் நல்லதம்பி ஹோட்டலுக்கு டாக்டர் வந்திருக்காராம்…” பரந்தாமன் சொல்லவும்,
“எந்த டாக்டர்?….” என கேட்டான் கோபிநாத்.
“அஜிதா இறப்பு ஏசி கசிவினால ஏற்பட்ட விபத்து தான்னு ரிப்போர்ட்ஸ் குடுத்தாரே அந்த டாக்டர் நமச்சிவாயம். அவர் தான்…” என்ற நெடுஞ்செழியன்,
“சுடலைமுத்து ஹோட்டல்ல சாப்பாடு எப்படி இருக்கும் பரந்தாமன்? வாங்களேன் போய் சாப்பிட்டு வருவோம்….” என கிளம்பிவிட்டான்.
“என்ன பரந்தாமன் ஸார்?….” கோபிநாத் கேட்க,
“ஸார் சாப்பிட போறார் ஸார். நீங்களும் வாங்க…” என்று சொல்லி சென்றார் நெடுஞ்செழியனின் பின்னால்.