செல்வி வாங்கிய பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்க, செல்வி இப்போதெல்லாம் யாரிடமும் பேசுவதில்லை. அவளுக்குள்ளேயே இறுகிப் போயிருந்தாள்.
கதிரவன் இறந்ததில் இருந்து, மாதவன் கொஞ்சம் அனுசரனையாக நடந்து கொண்டான்.என்னதான் பிடிக்காமல் இருந்தாலும், ஒரே தந்தையின் ரத்தம் என்பதை செல்வியின் நிலை கண்டு, தன்னுடைய மனம் துடித்த போது, உணர்ந்து கொண்டான் மாதவன். அமுதாவின் விஷயத்தில் கொஞ்சம் மாறியிருந்தவன், கதிரவனின் இறப்பில் முற்றிலும் மாறிப் போனான். ஆனால் அதை உடனடியா வெளிப் படுத்தத்தான் அவனுக்குத் தெரியவில்லை.
நாளாக நாளாக பேச்சுக்குள் குறையும் என்று பார்த்தால், எதுவும் குறைந்தபாடில்லை. கதிரவன் இறந்து பத்து நாட்கள் ஆகியும் இதே பேச்சுக்கள் காதிற்கு வர, செல்வி வெளியே வருவதையே தவிர்த்தாள். அந்த வயதில் அவளுக்குண்டான பக்குவம் அது மட்டுமே.
ஆனால் வயிற்றில் இருக்கும் கருவின் மீது அனைவரும் பழி சொல்லுவதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை. அவளைப் பெற்ற தாயாக, மங்கையின் மனத் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எந்த தாயும் பார்க்கவே கூடாத காட்சி, எந்த தாயும் கேட்கவே கூடாத கேள்விகள்.. இப்படி மங்கையும் மனதளவில் மிகவும் நொடிந்து போயிருந்தார். மாறனும், கயலும் என்ன செய்வதென்று தெரியாமல், செல்வியின் அருகிலேயே இருக்க, ராஜாங்கம் மட்டுமே கொஞ்சம் திடமாக நடமாடிக் கொண்டிருந்தார்.
அதியசமாக அன்று சாந்தாவும் அங்கு வந்திருந்தார். செல்வியின் இந்த நிலைமையைப் பார்த்து, ஒரு பெண்ணாக அவருக்கும் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதையெல்லாம் வெளியே காட்டிவிடும் அளவிற்கு நல்லவரா என்றால் இல்லை.
“இன்னும் இப்படியே உட்கார்ந்து என்ன செய்யுறது..? வயித்துல வந்த உடனே இவ்வளவு பேச்சு.. இன்னும் அந்த புள்ளை பிறந்து, வளர்ந்தா எவ்வளவு பேச்சு வாங்குமோ.. அவளுக்கென்ன வயசா போய்டுச்சு..இப்ப இந்த பிள்ளையைப் பெத்து வளர்க்க ஆரம்பிச்சா, அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குறதவே மறந்திடுவா. பேசாம கருவை கலைச்சு போடுங்க மங்கை..” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்ல, மங்கையின் நிலைமையில் இருந்து யோசிக்கும் போது அதுவே சரியென்று பட்டது.
அதற்கு உரிமையான தாத்தாவே, அதை பிசாசு என்று சொன்ன பிறகு, அந்த குழந்தை நல்லபடியாக பிறந்தாலும், அதை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். அந்த குழந்தையின் மீது சுமத்தப்பட்ட பழி சொல்லும், குழந்தையின் தாயின் மீது சுமத்தப்பட்ட பழி சொல்லும், காலத்திற்கும் அப்படியே தான் நிற்கும்.
காலத்திற்கும் என் மகள் இப்படி கண்ணீரோடு வாழனுமா..? இல்லை, கருவை கலைச்சிட்டு, இன்னொரு வாழ்க்கையை தேடிக்கணுமா..? என்று மங்கை மனதிற்குள் பட்டிமன்றம் நடத்த, செல்வியின் அம்மாதான் அதில் ஜெயித்தார். அவளுடைய எதிர்கால வாழ்க்கை தான் அவருக்கு சரியென்று பட்டது.
“வேண்டாம் மங்கை..! செல்விக்கு இப்போ தான் பெரிய இழப்பு நடந்து முடிஞ்சிருக்கு. இப்போ அந்த கருவையும் கலைக்க சொன்னா, பிள்ள தாங்காது..” என்று முதன் முறையாக, செல்வியின் பக்கம் நின்று பேசினார் ராஜாங்கம்.
“அவ வயித்துல வளர்றது அவங்க வீட்டு வாரிசுங்க. அதைப் பத்தி அவங்களே கவலைப் படலை. செல்வி இதை நல்ல முறையில பெத்து வளர்த்தாலும், சொத்துக்காகன்னு வாய் கூசாம பேசுவாங்க. கடைசி வரைக்கும் எம்மக மட்டும் இப்படியே கண்ணீரோட இருக்கனுமா..?” என்றார் மங்கை.
செல்வி தூங்கிவிட்டாள் என்று நினைத்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அச்சுப் பிசகாமல் அவள் காதில் விழுந்தது.
அவளுடைய கரங்கள் தானாக வயிற்றைத் தடவிக் கொண்டது.
“எனக்கு முதல் பிள்ளை ஆம்பள பிள்ளை தாண்டி பிறக்கும்..! அதுவும் உன்னை மாதிரியே..? நீ நடக்குதா இல்லையான்னு பாரு..” என்று கதிரவன் சொன்ன வார்த்தைகள் அவள் கண் முன் நிழலாட, வேதனை நெஞ்சை அடைத்தது.
‘செல்வி..! நீ இங்கயே இருந்தன்னா.. இந்த ஊரும், இங்க இருக்கவங்களும் உன்னையும் உன் குழந்தையையும் பேசியே கொன்னுடுவாங்க. அம்மா இப்பவே இந்த குழந்தை வேண்டாம் அப்படின்ற முடிவுக்கு வந்துட்டாங்க. இந்த குழந்தை வேணுமா? வேண்டாமான்னு நான் தான் முடிவு பண்ணனும்..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், தீர யோசித்து ஒரு முடிவை எடுத்தாள்.
“என்னோட முடிவைத் தேடி நான் போறேன். யாரும் என்னைத் தேட வேண்டாம். உயிருடன் இருந்தால் ஒரு நாள் திரும்பி வருகிறேன்..” என்று எழுதி வைத்து விட்டு கிளம்பிவிட்டாள்.
எந்த தைரியத்தில் கிளம்பினாள் என்று அவளுக்குத் தெரியாது. கையில் அவள் கணவனுடைய எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டாள். அவளுக்காக அவன் வங்கிக் கணக்கில் போட்ட பணம் லட்சக் கணக்கில் இருந்தது. அதுவும் அன்று மதுரைக்கு சென்று வந்த பின்னர் தான் அதிகமாக போட்டிருந்தான். எதற்கு அப்படி செய்தான் என்று அவனுக்கும் தெரியாது, செல்விக்கும் தெரியாது.
சென்னையில் அவளுக்கு ரோகிணியைத் தவிர யாரையும் அதிகம் தெரியாது. அவளிடம் நடந்த எல்லா உண்மையையும் சொல்லியே உதவி கேட்டாள். தனியாக வீடு எடுத்து தங்கினாள். அவளுக்கு துணையாக ஒரு வயதான பெண்மணியை வேலைக்கு வைத்துக் கொண்டாள். கதிர் இருந்தால், குழந்தைக்கு என்னென்ன செய்திருப்பானோ, அனைத்தையும் அவளாக இருந்து செய்து கொண்டாள். அவளைப் பொறுத்தவரை, கதிர் அவளுக்காக கொடுத்து விட்டு சென்றிருக்கும் பரிசு என்றே அந்த குழந்தையை நினைத்தாள்.
குழந்தையை பெற்றெடுக்கும் நேரம், மங்கையின் நியாபகம் வராமல் இல்லை. ஆனால், அனைத்தையும் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டாள். ரோகிணி என்ற ஒற்றை ஜீவன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இப்படி கடினமான பாதைகளை அவள் கடந்து வந்திருக்க முடியாது.
அகரன் பிறந்த பிறகு தான்.. அவளுக்கு சோதனை காலமே. குழந்தையின் ஒவ்வொரு செய்கையிலும் அவள் கதிரவனைக் கண்டாள். அவன் அவளைப் போல் இருந்தாலும், குணம் எல்லாம் அப்படியே கதிரைப் போலவே இருந்தான். அகரன் அவனுடைய அப்பாவை அதிகமாக செல்விக்கு நியாபகப் படுத்த, கையில் இருக்கும் பணம் கரைவதற்குள் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அதுமட்டுமில்லாமல்.. கதிரவனின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, அவளுக்கு ஒரு வேலை தேவையாய் இருந்தது. இரவில் கொஞ்சமாவது தூங்க, அவளுக்கு கொஞ்சம் உடல் அலுப்பு தேவைப்பட்டது. கவனத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.
அன்பு அப்போது தான் தொழில் தொடங்கியிருந்த நேரம்…அவனுடைய கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்தாள் செல்வி. அவள் திருமணம் ஆனவளா இல்லையா என்று யாரும் அவளிடம் கேட்டதும் இல்லை.. அவளே வழிய சென்று யாரிடமும் பகிர்ந்து கொண்டதுமில்லை. அவளைப் பொறுத்தவரை, அகரன் மட்டுமே அவள் உலகம். அதைத் தாண்டி அவள் வேறு எதையும் இப்போது வரை யோசித்தது இல்லை..
மற்ற குழந்தைகள் போல் இல்லாமல், அகரன் எதற்கும் பிடிவாதம் பிடிக்காமல், அவளை எந்த விதத்திலும் கஷ்ட்டப் படுத்தாமல் வளர்ந்தான். பிறப்பிலேயே அகரன் அப்படித்தான் இருந்தான்.
இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தவளுக்கு, ஏனோ அந்த நாளிற்கே சென்ற மாதிரியான துக்கம் மனதிற்குள்.
“செல்வியக்கா..!” என்று மாறன் தேடிக் கொண்டு வர, வேகமாய் கண்ணைத் துடைத்தாள்.
“இங்க என்னக்கா பண்ற..? எவ்வளவு நேரம் ஆச்சு பாரு..! வா..” என்றான் மாறன்.
இத்தனை நாட்கள் அவள் மீது அக்கரைப் பட அவள் மட்டும் தானே இருந்தாள். இப்போது தம்பியாய் அவன் பொறுப்பாய் பேச, இசையின் மனதிற்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
“இதோ வரேன் மாறா..” என்றபடி கீழே சென்றாள்.
மாதவனுடன் பேச வந்த அன்பு, பேசி முடித்த பின்பு.. அவனை கீழே அனுப்பிவிட்டு இருளை வெறித்துக் கொண்டிருக்க, அப்போது தான் இசையைப் பார்த்தான். அவள் ஏதோ எண்ணங்களில் உழல்வது அவள் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை அவள் அவ்வப்போது துடைக்கும் போதே தெரிந்தது.
அவளின் அருகில் சென்று அவள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று துடித்த கைகளை அடக்கிக் கொண்டு, அதே இருளில் நின்றிருந்தான் அன்புச்செழியன்.
மாறன் வந்து அவளை அழைத்து சென்ற பிறகு தான், அன்பும் கீழே வந்தான்.
“எங்க போன செல்வி..? அகரன் இடையில ரெண்டு தடவை எந்திருச்சு உன்னை கேட்டுட்டான்..!” என்று மங்கை சொல்ல, அவர் இயல்பாய் அவளுடன் பேச முயல்வது தெரிந்தது இசைக்கு. மங்கையின் கோபம் தீர்ந்த பிறகு, அவர் எப்போதும் இப்படித்தான் பேசுவார்.
“சும்மா.. கொஞ்ச நேரம் மொட்டை மாடில நின்னுட்டு இருந்தேன்ம்மா..” என்றாள்.
“காய்ச்சல் வந்த உடம்பு.. இப்படி பனியில போய் நின்னா மறுபடியும் காய்ச்சல் வராதா..? அதுலயும் இந்த ஊர்ல ஏகப்பட்ட கொசு வேற..?” என்று அவர் புலம்ப, இத்தனை வருடங்கள் கழித்து அவரின் வாயால் கேட்ட திட்டுக்கள் கூட அவளுக்கு சுகமாகத்தான் இருந்தது.
“அம்மா..! நான் கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கவா..” என்று அவள் கேட்ட விதத்தில் அழுதே விட்டார் மங்கை.
“என்னடி ஆச்சு உனக்கு..? ஏண்டி இப்படி இருக்க..?” என்றார்.
“கதிர் என்னைய இப்படி விட்டுட்டு போனது தப்புத்தானம்மா..” என்றவள் அழுது கொண்டே அவரைக் கட்டிக் கொள்ள,
“இத்தனை வருஷம் ஆகியும், இன்னும் அவனை நினைச்சுட்டு இருக்கியாடி..” என்ற மங்கையும் அவளுடன் சேர்ந்து அழத் தொடங்கினார். இத்தனை நாள் மனதிற்குள் தானாய் அழுத்திக் கொண்ட சுமைகள், தாயைக் கண்டவுடன் இறக்கி வைத்து விட்டாள்.
“உனக்குள்ள இப்படி ஒரு வைராக்கியம் இருக்கும்ன்னு நான் நினைக்கலைடி..” என்று மங்கை சொல்ல,
“நான் உன்னோட பொண்ணுமா..!” என்றாள் இசை.
இதையெல்லாம், தன்னுடைய அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் அன்பு. அவனுடைய அறையில் இருந்து பார்த்தால்.. அங்கிருக்கும் ஐந்து வீடுகளும் வரிசையாகத் தெரியும். அவர்கள் கதவை திறந்தே வைத்திருந்தனர்.
அவர்கள் பேசுவது சரியாக காதில் விழாவிட்டாலும் லேசாக காதில் விழுந்தது. அதிலும், இசையின் அழுகையைப் பார்த்த அன்பிற்கும் கண்கள் கலங்கியது.
“யாருடா நீ.. இவ உம்மேல வச்சிருக்க இவ்வளவு அன்புக்காகவது நீ உயிரோட இருந்திருக்கலாம்..!” என்று மனதிற்குள் கதிரவனை திட்டிக் கொண்டான் அன்புச்செழியன்.
இப்போதெல்லாம் இசையை பார்வையால் தொடர்ந்து கொண்டே இருந்தான் அன்பு. அவனையும் மீறி அவள் இருக்கும் இடம் தேடி தான் அவனுடைய பார்வை சென்றது. மாதவனிடம் விஷயத்தை சொன்ன நிம்மதியில் படுத்தவனுக்கு, இசையின் அழுத முகமே முகத்திற்கு முன்னால் வர, தூக்கம் இன்றி படுத்திருந்தான் அன்பு.
அங்கே மாதவனுக்கும் அதே நிலைமை தான். விஷயத்தை எப்படி செல்வியிடம் சொல்வது..? அதற்கு அவள் சம்மதம் சொல்வாளா..? என்ன செய்வது என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான்.
“தூங்காம என்ன பண்றிங்க..? தூங்குங்க..!” என்றாள் சங்கீதா.
மற்றவர்கள் அனைவரும் இசையின் வீட்டிலேயே தங்கிக் கொண்டனர். அதில் சாந்தாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
மனிதர்களுக்குள் எத்தனை ரகங்கள்..?
மறுநாள் விடியல், இசையின் வாழ்வில் வந்த விடியல்… ஆனால் அது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி வரும் ஒவ்வொரு விடியலும் அவளுக்கு நல்ல விடியலே.
“என்னைக் கட்டாயப் படுத்தாதிங்கம்மா..! என்னால வளையல் போட வர முடியாது. எதுக்கு..? அதுக்கும் ஒரு பேச்சு வரும்..?” என்று எவ்வளவோ முயன்று பார்த்தாள் இசை.
“நீதான் செய்யணும். மாதவனுக்காக செய் செல்வி. அவனும் அதைத் தான் விரும்புறான். நீ வீட்டை விட்டு வந்துட்டன்னு தெரிஞ்ச உடனே, அவன் என்ன பாடு பட்டான் தெரியுமா..? உன்னைத் தேடி அப்படி அலைஞ்சான்..! அப்பறம் அக்கா தொந்தரவு தாங்க முடியாமத்தான் வெளியில வேலைக்குப் போனான். அங்க இருந்தும் போன் போட்டு உன்னைப் பத்தி விசாரிக்க அவன் மறந்ததில்லை..” என்றார் மங்கை.
“சரிம்மா..! அதுக்காக இப்படி பேசியே கொல்லாதிங்க..” என்று இசை கும்பிடு போட, அவளுக்கு அருகில் வந்த அகரனும் அவளைப் போலவே கும்பிடு போட்டான்.
அதைப் பார்த்த அனைவருக்கும் சிரிப்பு வர,
“நல்லவேளை.. பிள்ளை உருவம் மட்டும் தான் உன்னை மாதிரி. அதனால சேட்டை கொஞ்சம் கம்மியா பண்றான்..!” என்றாள் கயல்.
“என்னடி கிண்டலா..?” என்றாள் இசை.
“சத்தியமான உண்மை தான் செல்வி..கிண்டலே தான்..!” என்றாள் கயல்.
இப்படி அவர்களுடன் வாயாடி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது.
அங்கு இருப்பவர்களுக்கு மட்டும், சமைக்க ஆரம்பித்தனர். மங்கை ஐந்து சாதம் செய்ய, இசை.. மேல் வேலைகளை செய்து கொடுத்தாள். அனைத்தையும் செய்து முடித்து, எடுத்துக் கொண்டு அன்பு வீட்டிற்கு சென்றனர்.
மங்கை வற்புறுத்த, இசை ஒரு மெல்லிய கரை வைத்த சில்க் காட்டன் புடவை அணிந்திருந்தாள். நெற்றியில் ஒரு சின்ன கருப்புப் பொட்டும், கைகளில் இருந்த அந்த சின்ன வளையலும்… அவளை அத்தனை பாந்தமாக காட்ட, அதைப் பார்த்த மங்கை மனதிற்குள் வெதும்பிப் போனார். எல்லா அம்மாக்களுக்கும் இருக்கும் எண்ணம் தானே அவருக்கும் இருக்கும்.
அன்பும் அன்று கொஞ்சம் சிரத்தை எடுத்து கிளம்பியிருந்தான். ரோகிணியும், கங்காவும் கூட வந்திருந்தனர்.
சங்கீதா பட்டுப் புடவையுடன் வந்து அமர, காதம்பரி அந்த பொருட்களை எல்லாம் பூஜை அறையில் வைத்து சாமியை கும்பிட்டு விட்டு எடுத்து வந்தார்.
“இன்னைக்கு செய்றது நாத்தனார் முறை தானே.. நீயே வந்து வளையல் போடுமா இசை..” என்றார் காதம்பரி.
“இல்லை சார் பரவாயில்லை..!” என்றாள் இசை. அவள் முகம் ஒரு நொடி மாறியதைத் தான் அவன் பார்த்து விட்டானே. மங்கைக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. அவரால் வாய் திறந்து பேசக் கூட முடியவில்லை.
“நான் தான் சொல்றேன்ல..! நீங்க வளையலைப் போடுங்க. இல்லையா யாருமே போட வேண்டாம்..” என்றான் கடின குரலில். அவனுடைய குரலில் முதன் முறையாக ஒரு கடினத்தை உணர்ந்தாள் இசை.
அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல், அவளே சங்கீதாவிற்கு வளையலை அணிவித்தாள். அவள் போட்ட பிறகு, ஒன்பது பேர் கணக்கிற்கு மற்றவர்கள் போட,
அனைவரும் சாப்பிட அமர, இசையும், மங்கையும் பரிமாறினர். மாதவனுக்கு அருகில் அகரனை அமர வைத்தாள் இசை. அவனுக்கு இலையில் சாப்பிடுவது பிடிக்கும். கொஞ்சம் சிந்தி சாப்பிடுவான்.
அன்பு, மாதவனைப் பார்த்து ஜாடை காட்ட, அகரனை அவன் அருகில் அமர வைத்தான் மாதவன்.
“அகர் குட்டிக்கு என்ன வேணும்..?” என்று இலையில் இருந்த ஒவ்வொன்றையும் காட்டி, அவன் கேட்டதை மட்டும் அவனுக்கு ஊட்டி விட்டு, தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அன்பு செழியன்.
இந்த காட்சியைப் பார்த்த இசைக்கு பக்கென்று இருந்தது. அவர்களிடம் இப்படி ஒரு பிணைப்பு ஏற்படுவதை அவள் விரும்பவில்லை என்று அவள் பார்வை சொன்னது. ஆனால் அன்பு, அவளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
யாருக்கும் தெரியாது என்று நினைத்து அன்பு இதை செய்து கொண்டிருக்க, பல்லவனின் பார்வையில் எல்லாமே தவறாமல் விழுந்தது. வளையல் போடும் போது, இசையின் மீது அவன் உரிமையாக பேசியதைப் போன்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவரின் பார்வை அன்பு மீதே இருந்தது. அகரனை அருகில் அமர வைத்தது முதல், அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது வரை பார்த்துக் கொண்டு தான் இருந்தார் பல்லவன்.
இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப் போட, அந்த கணக்கை சரி செய்து கொண்டிருந்தான் அன்புச்செழியன்.
“சாப்பாடு எல்லாமே நல்லா இருந்தது ஆன்ட்டி..! அப்படியே அந்த நாட்டுக் கோழிக் குழம்பும் கிடைச்சா நல்லா இருக்கும்..” என்றான் அன்பு போற போக்கில்.
இசை விக்கித்து நிற்க, விஷயம் தெரிந்த மாதவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
மங்கைக்கு எதுவோ புரிவதைப் போல் இருந்தது. அன்று அதிசயமாக சங்கீதா பேசாமல் இருந்தாள். அதற்கு காரணமும் மாதவன் தான். அன்று காலையிலேயே சொல்லியிருந்தான், தேவையில்லாமல் எதுவும் பேசினால் அப்படியே கிளம்பி சென்று விடுவேன் என்று. அதனாலேயே அமைதியாக இருந்து விட்டாள் சங்கீதா. ஆனால், அவளுக்கும் சேர்த்து சாந்தா பேசுவார் என்று அவள் நினைத்திருக்க, அன்பு இப்படி இடையில் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.