ஜானுவுக்கு நடப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் கணக்குப்படி எல்லாம் சரியாக நடந்து இருந்தால் அவள் இந்நேரம் இங்கு இருந்து தப்பித்து பாதி தூரமாவது சென்று இருக்கலாம்.
எல்லாம் இந்த திடீர் திருடனால் வந்த வினை. இந்த அறிவு கெட்டவனுக்கு திருடுவதற்கு வேற வீடே கிடைக்கவில்லையா. சரி அட்லீஸ்ட் ஒரு அரை மணி நேரம் சென்று வந்து இருக்கக் கூடாதா? அவள் செல்லும் நேரம் பார்த்து வந்து விட்டானே!”.. என்று மனதுக்குள் முனகியவள்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. “சார்.. நீங்க தப்பான இடத்துக்கு திருட வந்துட்டீங்க. எங்க அப்பா மினிஸ்டர். நிறைய லஞ்சம் வாங்கி இருப்பார்னு தப்புக் கணக்கு போட்டு வந்துருக்கீங்க.
ஆனா எங்க அப்பா அப்படிப்பட்டவர் இல்லை. லஞ்சம் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத பச்சை மண்ணு. சுருக்கமா சொல்லனு்ம்னா நாங்க சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம். நீங்க எதிர்பார்த்து வந்த எதுவுமே உங்களுக்கு இங்கே மிஞ்சாது. “.. என்று ஜானு சொல்ல..
“நீங்க சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிற குடும்பமா.. “ என்றவன் அந்த பிரம்மாண்டமான அறையைத் தன் கண்களைச் சுழற்றி அளவிட்டான்.
எலிசபெத் மகாராணிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அத்தனை சொகுசு வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.
அவள் உடைகளே இரு பெரிய அறைகளில் அடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
அவன் பார்வை மூலம் அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டவள்.. “இது எல்லாம் சும்மா யாராவது பரிசாகக் கொடுத்தது. இதைj தவிர தங்கம், வைரம் அப்படின்னு எதுவும் இங்க இல்லை. நீங்க பேசாம இதே சந்துல பத்து வீடு தள்ளி இன்னும் பெரிய பங்களா இருக்கு. அது வேற யாரும் இல்ல. அந்த கேரளா ஜூவல்லரி கடைக்காரங்க வீடு.
நீங்க எதிர்பார்க்கிறதை விட அங்கே நிறைய கிடைக்கும். அவங்க வீட்ல வேலை பார்க்கிற பெண்ணே தினம் கீழே கிடக்கிற ரெண்டு பவுனாவது எடுத்துட்டு போயிடும்னா பாருங்களேன்.”.. என்று ஜானு அடுக்க..
ஜானு அருகில் குனிந்த விக்னேஷோ “அப்படியா ஜானு!!.. எனக்கு ஒரு ஐடியா.. நீ வேனா ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்றியா?. நானும் சார் கூட ஒரு ரவுன்ட் போயிட்டு வரவா..” என்று விக்னேஷ் கேட்க..
அவளோ அவனைப் பார்வையால் எரித்து விட்டு, அந்த புதியவனைப் பார்க்க..
“ம்.. எனக்கு என்ன வேணும், எங்க இருந்து வேணும்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். அது எல்லாம் நீ சொல்லக் கூடாது.”.. என்று அவன் ஒரு மாதிரிக் குரலில் சொல்ல..
“ஹலோ நீங்க வந்து நிக்கிறது எங்க வீடு!! மறந்துடாதீங்க”.. என்று அவள் நினைவு படுத்த..
“வெல்.. அது எத்தனை நாளைக்குன்னு பார்க்கலாம்”.. என்று ஒரு ஏளனப் புன்னகை பூத்தான்..
“வாட்.. “ என்று அவள் புரியாமல் கேட்க.
“ வாஸ்துப்படி உங்க அப்பா பீரோவை இந்த அறையில் தான வைத்து இருக்கணும் என்றவன் அவள் அறையின் ஒவ்வொரு வார்டு ரோப் ஆக திறக்க, அது அவள் உள்ளாடைகள் இருக்கும் இடம்.
அவளுக்கு சங்கடத்துடன் கோபம் பீரிட்டு வர..
அவனைத் தடுத்து மறித்து நின்றவள் “ஹே மிஸ்டர்.. ஒரு பொம்பளைப் பிள்ளை செல்ஃப்ல அவள் அனுமதி இல்லாமல் உருட்டுறியே உனக்கு வெட்கமா இல்லை. “.. என்று அவள் அவனுக்கு குறுக்கே நிற்க..
“நீ இப்ப விலகுறியா.. இல்ல உன் ஆளு மேல கத்தியை வீசவா”.. என்று அவன் மிரட்ட.. அடுத்த நொடியே அவள் விலகிக் கொண்டாள்.
அந்த கதவைத் திறந்ததுமே, அவள் தடுத்ததன் நோக்கம் புரிந்தாலும்.. அவன் அதை எல்லாம் பெரிதாக எண்ண வில்லை. அனைத்தையும் ஒரு கையால் ஒதுக்கித் தள்ளியவன் அங்கு எதுவும் மறைவான செல்ஃப் இருக்கிறதா என்று உருட்டிப் பார்த்தான்.
அடுத்ததாக அவள் உடைகள் அடுக்கி இருந்த அறை, அவள் கட்டில் அடியில் இருந்த டிராயர், என்று அனைத்தையும் தேடி முடித்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
“சார் நான் தான் முதல்லே சொன்னேன் ல “.. என்று அவள் சொல்ல..
அவனோ தன் கோபத்தை அடக்கியபடி.. “ஷட் அப்”.. என்ற கத்தலில் அவள் வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அவன் முகம் இப்போது முன்பை விட இருமடங்கு கடுகடுவென மாறி இருந்தது. எங்கே இருக்கும் என்று யோசித்தவன் விடை தெரியாமல் அந்த அறையை வட்டம் இட்டான்.
பின் சட்டென ஜானுவை அவள் கையைப் பற்றி அவன் அருகில் நிறுத்தி வைத்தவன். இந்த ரூமுக்கு உங்க அப்பா வருவாங்களா” .. என்று வினவ..
இது என்ன சார் கேள்வி. இது அவர் கட்டுன வீடு!!.. நான் அவர் பொண்ணு.!!.. என்னைப் பார்க்க வர மாட்டாரா?” என்று அவள் கேட்க.
. “சும்மா வளவளன்னு பேசாத.. இந்த ரூமுக்கு வந்தா அவர் எங்க போவார் எங்க நிப்பார் எங்க உட்காருவார் என்று அதை மட்டும் சொல்லு”.. என்று அவன் அழுத்தமாகக் கேட்க.
இவன் என்ன திருட வந்து இருக்கானா? இல்ல பிக் பாஸ் ஷோக்கு கண்டென்ட் எழுத வந்து இருக்கானா??. எங்க நிப்பாரு எங்க தூங்குவார் ன்னு ரிப்போர்ட் கேக்குறான் என்று நினைத்த அவளோ மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசி விட..
“ இந்த கவுண்டர் கொடுக்குற வேலை எல்லாம் வச்சுக்காம நான் கேட்டதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லு”.. என்று அவன் மிரட்ட..
எங்க அப்பா பொதுவாக தூங்கப் போறதுக்கு முன்னாடி என் ரூமுக்கு வருவார். அவருக்கு எப்பவும் நான் போடுற கிரீன் டீ ரொம்ப பிடிக்கும். அவர் என்னை கிரீன் டீ போட்டு வரச் சொல்லி இங்கேயே காத்து இருப்பார்.
“சரி.. அப்புறம்”.. என்று அவன் கேட்க.
“அப்புறம் என்ன.. டீ காலியாகுற வரை எனக்கு கிளாஸ் எடுப்பார். இப்படி பண்ணனும், அப்படி பண்ணனும்னு நிறைய உபதேசம் பண்ணுவார்.”
“அதுக்கு அப்புறம்..”
“அப்புறம் என்ன.. குட் நைட் சொல்லிட்டு போய் விடுவார். “.. என்று அவள் முடிக்க..
“வெயிட்.. திரும்பச் சொல்லு. நீ டீ போட்டு வரும் போது உங்க அப்பா உன் ரூம்ல என்ன பண்ணிட்டு இருப்பாங்க”.. என்று அவன் அழுத்திக் கேட்க..
“ம்.. என்று சில நொடிகள் யோசித்தவள் சிலநேரம் இங்க உட்கார்ந்து ஏதாவது புக் வாசிப்பார். சில நேரம் அந்த கண்ணாடி முன்னாடி தான் தலை சீவிட்டு இருப்பார்.”.. என்று அவள் சொல்லி முடிக்க..
அவனுக்கு ஏதோ பொறி தட்டியது போலத் தோன்ற.. அடுத்த நொடியே அந்த கண்ணாடி முன் சென்று ஆராய்ந்தான். எதுவும் புதிதாக இல்லை. பெரிய கண்ணாடி அவ்வளவே. சோர்ந்து போனான்.
பின் அங்கு இருந்த புக் செல்ஃபை ஆராய்ந்தான். அனைத்தும் ஜோசியம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். இது எல்லாம் நீ படிப்பியா.. என்று அவன் கேட்க..
“ச்ச ச்ச.. இது எல்லாம் எங்க அப்பா உடையது. இதுவும் ஏதோ சென்டிமென்ட். ஏதோ ஜோசியர் எங்க அப்பா கிட்ட.. இந்த மூலையில சிரிக்கிற புத்தர் சிலை அப்புறம் சில புக்ஸ் அப்புறம் சில சிலைகள் வச்சா நல்ல யோகம் என்று சொல்லி இருக்கார்.
அதுக்காக எங்க அப்பா வச்ச குப்பை தான் இது எல்லாம். “.. என்று அவள் சொல்ல..
அவனோ அந்த செல்ஃபில் இருந்த அத்தனை சிலைகளையும் ஒதுக்கி விட்டு, ஒரு தட்டையும் கழட்டி கீழே வைத்தான். அந்த செல்பின் பின்னால் உள்ள சுவர் பகுதி மட்டும் வித்தியாசமாக இருந்தது. அவன் அதை கையால் தட்டிப் பார்க்க.. அது அவன் சந்தேகம் உண்மை என்பது போல் இரும்பு போல் ஒலித்தது.
இது தான் அவன் தேடி வந்த லாக்கர் என்பது ஆணித் தரமாக தோன்றியது. சுவர் போலவே தெரிந்தாலும் அந்த பின்னால் சுவருக்குள் அந்த இரும்பு லாக்கர் பதிக்கப் பட்டு இருந்தது. அந்த சுவற்றின் வண்ணம் போலவே அந்த லாக்கருக்கும் வர்ணம் பூசப்பட்டதால் யாராலும் அதை லாக்கர் என்றே கண்டு பிடிக்க முடியாத வகையில் வடிவமைக்கப் பட்டு இருந்தது.
சாவிக்கான துவாரம் இப்போது தெளிவாக தெரிந்தது. இது அத்தனையையும் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜானுவுக்கும் விக்னேஷுக்கும் பெரும் ஆச்சரியம்.
“என்ன ஜானு? உங்க அப்பா என்ன லூசா.. சுவருக்குப் போய் சாவி போடுற மாதிரி வச்சு இருக்காரு”.. என்று விக்னேஷ் கேட்க..
“எனக்கு ஒன்னுமே புரியல டா.. இந்த வீட்ல நாங்க இத்தனை வருஷமோ இருக்கோம். எனக்கு இப்படி ஒரு சீக்ரெட் பிளேஸ் இருக்கிற விஷயமே தெரியாது”.. என்று சொல்ல.
அந்த புதியவனோ கண்ணும் கருத்துமாக அந்த சாவிக் கொத்தை கையில் எடுத்தவன், ஒவ்வொரு சாவியாக முயற்சி செய்து கிட்டத்தட்ட ஆறாவது தடவையில் அந்த மர்மக் கதவைத் திறந்து இருந்தான்.
அந்த பீரோவில் தங்கக் கட்டிகளும் கட்டு கட்டாக பணம். சில பத்திரங்கள் என்று அடுக்கப் பட்டு இருந்ததன.
ஜானு அதிர்ச்சியில் வாய் அடைத்து நின்று விட்டாள். “அடப் பாவி நீலகண்டா.. ஒரு ஐபோன் வாங்கி தாங்கன்னு கெஞ்சியதுக்கு என்கிட்ட வசதி இல்லன்னு சொன்னியே அப்பா!!. இப்படி இத்தனை பணமும் என் கிட்ட தான் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா நான் என்னைக்கோ இதை எடுத்துட்டு போய் இருப்பேனே”.. என்று ஜானு ஏக்கமாய் பார்த்து இருக்க.
விக்னேஷோ.. “சார்.. ஜானு சொன்ன க்ளூவை வச்சு தான் நீங்க லாக்கர் கண்டு பிடிச்சீங்க.. சோ.. நாம ஒரு டீல் போட்டுக்கலாமா. உங்களுக்கு சிக்ஸ்டி பெர்செண்ட் எங்களுக்கு ஃபார்டி பெர்சென்ட்!!.. ஓகே யா “.. என்று கேட்க.
“பரவாயில்லையே.. விக்கி அப்ப அப்ப அசத்திடுறான்.”.. என்று ஜானு மெச்சிக் கொள்ள..
அந்த திருடனோ, அதில் இருந்த காகிதங்கள் டாகுமெண்ட்களை மட்டும் அவன் கொண்டு வந்து இருந்த பையில் அடுக்கி வைத்துக் கொண்டான்.
“ஜானு.. சாருக்கு எவ்வளவு பெரிய மனசு பாரு எல்லா ஷேரும் நமக்கே விட்டுக் கொடுத்துட்டுப் போறார்.”.. என்று விக்னேஷ் சொல்ல.
“நீ எடுத்துட்டு போலாம் ஆனா நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்ட பரவாயில்லை யா??”.. என்று அந்த புதியவன் கேட்டதில் இருவரும் ஆடி விட்டனர்.
அவனோ மற்ற எதையும் எடுக்காமல் அந்த செல்ஃப் இருந்த மாதிரியே பழையபடி வைத்து இருந்தான்.
அதே நேரம் போலீஸ் ஜீப் சைரன் சத்தத்துடன் வரும் ஓசை கேட்டது. மூவருக்குமே அதிர்ச்சி.
ஜானுவுக்கு கண்கள் கலங்கி கொண்டு வந்து விட்டன. அவள் மட்டும் இந்த வீட்டில் இருந்தால் அவள் தந்தை ஏற்பாடு செய்து இருக்கும் மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் விடிந்தால் திருமணம் ஆயிற்றே.
அந்த அசுரன் கைலாசத்தை கைப்பிடிப்பதை விட இந்த திருடனின் கத்தியால் வெட்டுப்பட்டு சாவதே மேல் என்று தோன்றியது.
கடந்த ஒரு வாரத்தில் அவள் வாழ்வு எப்படி எல்லாம் மாறி விட்டது? எத்தனை கனவுகளுடன் சந்தோசமாக வாழ்ந்த அவளை, சிறகு ஒடிந்த கிளியாக மாற்றி விட்டானே”.. என்று ஜானு வேதனையுடன் எண்ணினாள்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.